நான் சிரித்தால் தீபாவளி - 1.
அரையின் அங்குலம் ஒவ்வொன்றும்கனவுகளைச் சுமக்க கலக்கத்தை கண்ணில்தேக்கியபடி அவள்! முதலிரவு அறை, எப்பேற்ப்பட்டவரையும் பரவசப்படுத்தும் புது மணத்தம்பதிகளின் முதல் நாள் படுக்கை அறை!
ஆனால், அது அகல்யாவைப்படுத்தவே செய்தது!
மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள் கண்களை நாலாபுறமும் சுற்றினாள்...
மல்லிக்கைச் சரமும், பிச்சிப்பூ சரமும் சுற்றியும் தொங்கின.
கட்டிலின் அருகே டேபிள் போட்டு அதில் பாதி பலகாரக்கடையும் மீதி பழக்கடையும் அமைந்திருந்தனர். தேபின் ஓரமாய் பால்செம்பு, தம்ளர், தண்ணீர்ஜாடி, மாற்று உடைகள், துண்டு...
தலையைத் திருப்பிப் படுக்கையைப் பார்த்தாள்.
படுக்கையே தெரியாத அளவு ரோஜாப் பூக்கள் கிடந்தன.
அறையிலிருந்த எதுவுமே, அகல்யாவின் மனநிலையோடு பொருந்திப் போகவில்லை... எரிச்சலுடன் ஒரு பூச்சரத்தை பிய்த்து எறிந்தாள். வாழைப்பழம் ஒன்றை எடுத்து, தோலுரித்து பழத்தை வாயில் போட்டவள், தோலை தரையில் வீசினாள்...
முறுக்கு ஒன்றை எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தவள், படுக்கையில் மல்லாந்து படுத்தாள். நினைவுகள் பின்னோக்கி சுழன்றன.
இன்று அகல்வாவின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும், தாலிக்கு சொந்தமானவன் தாயுமானவன். உறவினர் கிழம் ஒன்றுதான், இந்த வரனை அப்பாவிடம் பில்ட் அப் கொடுத்து சொல்லி தலையில் கட்டிவிட அதைப்பிடித்துக் கொண்டு இந்த வரனுக்காக மகளிடம் அப்பா வக்காலத்து வேறு வாங்கினார்.
“அப்பா... கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்கப்பா... பையனை எனக்கு சுத்தமாய் பிடிக்கலை...” – அகல்யா
“ஏன் பிடிக்கல? ஒரு காரணம் சொல்லு”
“நூறு இருக்கு...”
“எனக்கு அவனைப் புடிச்சதுக்கும் காரணமிருக்கு”
“கல்யாணம் எனக்கா?? உங்களுக்காப்பா??”
“உனக்குத்தான்டா... நான் உன்னோட இடத்துல இருந்துதான் இந்த மாப்பிள்ளையை டிக் பண்ணியிருக்கேன்...”
“இல்லவே இல்ல... முதல்ல எனக்கு அவன் பேரே பிடிக்கல... அதென்னப்பா இந்த காலத்துல போயி தாயுமானவன்னு??”
“பையனோட தாத்தா பேரை அவருக்கு வச்ச்சிருக்காங்க உனக்கென்ன?? வீட்டில செல்லமா தயான்னு தான் கூப்பிடுறாங்க...”
“ம்ஹூம்... இதுக்கு அதுவே பரவாயில்ல... தயாகொய்யான்னுகிட்டு... எம்.பி.ஏ. படிச்சிருக்காங்கறீங்க... படிச்ச பையன் ஒரு வேலை வெட்டிக்குப் போகக் கூடாதா??”
“அதனாலென்ன?? இப்ப ஸ்வீட் ஸ்டாலை கவனிச்சிட்டிருக்காரு...” சொந்த தொழில் தாம்மா கௌரவம்... ஒருத்தன் கிட்டேயும் கையேந்தி நிக்க வேண்டாம் பாரு...”
“நீங்க எப்படி பாலிஷா சொன்னாலும்... அது மிட்டாய் கடை தானே...” என்று உதடு பிதுக்கி, கைகளை விரித்துப் பழித்தாள் அகல்யா...”
“சரி... நீ பொல்லாத பேங்குல வேலை பாக்குறியே... என்ன சம்பளம் வாங்கறே??”
“தெரியாதா உங்களுக்கு??”
“அட! பதில் சொல்லும்மா...”
“முப்பதாயிரம்”
“ம்ம்... இந்தப் பையன் மாசம் ஒரு லட்ச ரூபா லாபமே எடுக்கிறார் தெரியுமா??”
“அப்பா... பணம் இருக்குன்னு கல்யாணம் பண்ணிக்க முடியுமா??”
“வேர் என்ன இல்ல! ஆளு பாக்கறதுக்கு வாட்ட சாட்டமா புது நிறமா நல்லா இருக்காரு! படிப்பு, தொழில், வருமானம் எல்லாமிருக்கு... ஒழுக்கமான பையன்! நல்ல குடும்பம்!” என்று சொல்லிக் கொண்டே போனார் நடேசன்.
“என்னமோப்பா எனக்கு பிடிக்கல!”
“ஆங்! காரணமில்லாம நீ மொரண்டு பிடிக்கறதுக்கெல்லாம் நான் ஆளில்ல! ஜோசியர் உங்க ரெண்டு பேருக்கும் லைப் நல்லாயிருக்கும்ன்னு சொல்லியிருக்காரு! இதான் மாப்பிள்ள...
போயி ஆக வேண்டியதைப் பாரு... வெட்டியா பேசிக்கிருக்காம...”என்று முடிந்த முடிவாய்ச் சொல்லிவிட்டார் நடேசன்.
அப்பா எப்பொழுதுமே இப்படித்தான்...
சாதாரண விஷயங்களில், குடும்பத்தை சுதந்திரமாக விடக்கூடியவர், முக்கியமான விஷயங்களில் தனது முடிவைத்தான் செயல்படுத்துவார்.
பெரும்பாலும், அது சரியாகவே இருக்கும்... ஆனால், கல்யாண விஷயத்தில் அப்படித் தோன்றவில்லை அகல்யாவிற்கு! அப்பா தனது உணர்வுகளை மதிக்கவில்லை என்றே அவளுக்குத் தோன்றியது!
அகல்யாவின் அம்மா தவறிப்போய் மூன்று வருடங்களாகிறது... அகல்யாவிற்கு வங்கிப் பணிக்கான உத்தரவு வீட்டுக்கு வந்தபோது அவள் அம்மா உத்தரவு வாங்கிக் கொண்டு மேல்லோகம் சென்றுவிட்டாள்...
தம்பி நந்தா கல்லூரி மாணவன்...அவனிடத்தில் சிபாரிசை எதிர்பார்க்க முடியாது... ஆகையால், அகல்யா வேறு வழியின்றி மணமேடையில் அமர, இதோமுதலிரவு அறை வரை வந்தாயிற்று... ‘இனி தான் என் விளையாட்டு ஆரம்பமாகப் போகிறது...’
அகல்யா படுக்கையில் ஆத்திரத்துடன்... எழுந்து அமர்ந்த போது, முதலிரவு அறைக்குள்ளே கதவைத்திறந்து கொண்டு நுழைந்தான் தாயுமானவன்...
நீ மின்னலா இடியா
என முடிவு செய்வதற்குள்
முந்தனைக்குள் வந்து
ஒளிந்து கொண்டாய்...