24. (Final) இவன் வசம் வாராயோ!
தன் கையாலேயே தைத்த, டிசைனர் பிளவுசை போட்டு பச்சைப் பட்டுடுத்தி, அதற்கேற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு மல்லிகைப் பூவும் ரோஜாப்பூவும் சேர்த்து வைத்துத் தைத்த ஜடை வைத்துப் பின்னிக் கொண்டு, கண்ணாடி வளையல்களுடன் கூட வளர்மதி கொடுத்த தங்க வளையல்களையும் அணிந்து கொண்டு எழில் தேவதையாய் நடந்து வந்த நிரஞ்ஜனாவைப் பார்த்து ஊரே வியந்தது.
"யப்பா தமிளு.. உம் பொஞ்சாதி என்னா அளகு.. நீ இத்தன காலம் காத்துகிட்டிருந்தது வீண் போகலப்பா.." என்று ஒரு நடுத்தர வயது ஆள் வந்து தமிழின் காதில் சொல்லிவிட்டுப் போக,
"ஹூம்.. எல்லா கொள்ளிக் கண்ணும் எம் பொண்ணு மேலதான்.." என்று சொல்லிக் கொண்டே நிரஞ்சனாவின் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்தாள் வளர்மதி.
முத்தழகி, பாலா திரிபுரசுந்தரியின் மறு உருவமோ என்று எண்ணும்படி நிரஞ்சனா தைத்துக் கொடுத்த பட்டுப் பாவாடை சட்டையில் குட்டி தேவதையாய் அவளுடைய தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தளிர் நடை போட்டு வந்தாள்.
"இப்டி நடந்தா தங்கத்துக்கு கால் வலிக்குமே.." என்று சொல்லி ஈஸ்வர பாண்டி தன் பேத்தியைத் தூக்கிக் கொண்டார்.
சொக்கலிங்கம் நிரஞ்சனாவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்க, மதுரமும் வளர்மதியும் முகம் கொள்ளாப் பூரிப்புடன் தமிழைப் பார்க்க, அவனோ தன் படிப்பும் பணியும் கொடுத்த மிடுக்குடன் இருப்பவன் இப்போது மனதுக்கினியவளுடன் கைகோர்க்கவிருக்கும் மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, வானுலகிலிருந்து இறங்கி வந்த கந்தர்வனைப் போன்ற தோற்றத்துடன் கம்பீரமாக நடந்து வந்தான்.
அழகுக்கு அழகு சேர்ப்பது போல அலங்கரித்துக் கொண்டிருந்த கயலும் அவளுக்குச் சற்றும் குறைவில்லாத அழகுடன் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த முகிலும் மனம் முழுக்க மகிழ்வுடன் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தனர்.
அந்த ஊரின் எல்லையிலுள்ள மாரியம்மன் கோவிலில் அனைவரும் ஒன்று கூடியிருக்க, மணமேடையில் தமிழும் அவனருகில் நிரஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இவர்களின் திருமண விழாவைக் கண்டு வாழ்த்துவதற்காக தமிழின் அலுவலகத் தோழி ரக்ஷணாவும் ஜேக்கும் வந்திருந்தனர்.
"ஹே தமிழ்! இந்த பொண்ண தேடிதான.. நம்ம ட்ருச்சிக்கு போனோம்.. ஃபைனலி யூ ஃபௌண்ட் ஹர்.. க்ரேட் டா.." என்றாள்.
"தேங்க்ஸ் ரக்ஷணா.." என்றான் தமிழ்.
நிரஞ்சனா நல்வாழ்வின் வாசலில் அடியெடுத்து வைப்பதைக் கண்டு வாழ்த்த தேவகி டீச்சர் வந்திருந்தாள்.
"மேடம்.." என்று நிரஞ்சனா தேவகியின் கையைப் பிடித்துக் கொள்ள,
"ஷ்.. கண் கலங்கக் கூடாது.. நீ பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவுக்கு வரப் போகுது.. சும்மா அழக் கூடாது.. அப்றம் கண் மை கரைஞ்சி மேக்கப் வீணாய்டும்.. சந்தோஷமா இரு.. இது மாதிரி ஒரு குடும்பத்தில நீ மருமகளா வாழப் போறன்னு நெனக்கும் போதே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. சந்தோஷமா இரு ரஞ்சனி!" என்றாள் தேவகி.
"மேடம்.. ஆனா.. ரொம்ப பயமா இருக்கு மேடம்.."
"என்ன பயம்?" என்று அதட்டினாள் தேவகி.
"இது சரி வராதுல்ல மேடம்.."
"எல்லாம் சரியா வரும் ரஞ்சனி. அமைதியா உக்காரு.. பாரு.. இந்த ஊரே இந்த குடும்பத்து மேல எவ்ளோ மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்காங்கன்னு.. இப்ப நீ எதாவது தத்து பித்துன்னு உளறிகிட்டிருந்தா.. அவங்களுக்குதான் அவமானம்.. அவங்க மேல மரியாதை இருக்கு.. அவங்க நல்லா இருக்கணும்னு நெனச்சா அமைதியா உக்காரு.." என்று புத்தி சொன்னாள் தேவகி.
நிரஞ்சனா தேவகியின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக அமர்ந்தாள்.
சோ.. நீ என்ன வெச்சி நடத்தற ட்ராமாவ இன்னும் முடிக்கல.. அப்டிதானே கடவுளே.. நடத்து நடத்து.. எனக்கு இப்டிதான் நடக்கணும்னு நீ நெனக்கும் போது என்னால என்ன செய்ய முடியும்..
அப்டீன்னா இந்த உதவியாவது செய் கடவுளே.. இந்த கல்யாணத்தினால எனக்கு நன்மை கிடைக்கிதோ இல்லையோ.. அவருக்கு நிறைய நன்மைய குடு கடவுளே.. அதையாச்சும் செய் கடவுளே.. ப்ளீஸ்.. என்று நிரஞ்சனா கடவுளிடம் புதிய மனு ஒன்றைப் போடத் தொடங்கினாள்.
எல்லாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க, குட்டையைக் குழப்புவதற்கும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்.
"ஏந் தமிழு.. இந்த புள்ள நம்ம கயலு பெத்தது.. அந்தப் புள்ள யாருப்பா.. உம் பொஞ்சாதி பெத்ததுன்னு சொல்றாங்களே.. அப்டியா.. அந்தப் புள்ள.. எப்டி.. ம்.. ம்.. அப்டியா.. இல்ல.. ம்.. ம்.. இப்டியா.. எப்டிப்பா.." என்று ஒரு விவகாரம் பிடித்தவன் குரலில் தகுந்த ஏற்ற இறக்கத்துடன் கண்ணை உருட்டி தலையை ஆட்டி முகத்தை கோணலாக சுருக்கிக் கேட்டு வைக்க, அவனுடைய கைத்தடிகள் சிலர் கொல்லென்று சிரித்து வைத்தனர்.
சொக்கலிங்கத்துக்கும் ஈஸ்வர பாண்டிக்கும் கோபம் பொத்துக் கொண்டு வர, முகில் அந்த ஆளின் சட்டையைப் பிடித்துவிட்டான்.
நிரஞ்சனாவின் கண்களிலிருந்து கண்ணீர் துளி ஒன்று தமிழின் கையில் விழ, கயல் அவளுடைய கண்ணைத் துடைத்து மேக்கப்பை சரி செய்தாள்.
"பேசறவங்க ஆயிரம் பேசட்டும். அதுக்கெல்லாம் அழுதா நம்மளால இந்த உலகத்தில சந்தோஷமா வாழவே முடியாது.. நீ யார் என்னன்னு எங்களுக்கு தெரியும்.. அப்றம் ஏன் நீ கண்டவங்க சொல்றதுக்கும் கண் கலங்கற.." என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவளை அதட்டினாள்.
தமிழ் தன் கையில் விழுந்த நிரஞ்சனாவின் கண்ணீரைத் தன் நெஞ்சின் மேல் தடவிக் கொண்டு, முகிலைப் பார்த்து,
"வேண்டாம் முகில்.. பேசாம இரு.." என்று கூறினான்.
முகில் அவனை முறைத்தபடியே சட்டையை விட்டான்.
"ஹூம்.. மச்சானுக்கு நல்ல பொண்ண தேட முடியல.. இவருக்கு எம் மேல கோவம் வேற வருதாமா.." என்றான் நக்கலாக.
ஈஸ்வர பாண்டி தன் மகனைப் பார்த்து,
"முகிலு.. அந்த வீச்சருவாள எடுடா.." என்று குரல் கொடுக்க,
வம்பு பேசியவன் கூட்டதில் நைசாக நழுவினான்.
"அந்தாளுக்கு வெவரம் பத்தல.. அதான் வீச்சரிவாள எடுன்னு நீங்க சொன்னதும் பய நழுவிட்டான்.. ஆனா எனக்கு அப்டியில்ல.. இவ வண்டவாளம் மொத்தமும் தெரியும்..
மக்களே.. எல்லாம் நல்லா கேட்டுக்கங்க.. இவ ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. இவ புருசன்.. இவளுக்கு வயித்தில ஒரு புள்ளைய குடுத்துட்டு இவள கை கழுவிட்டு வுட்டுட்டு ஓடிட்டான்.. அந்த ஓடிப் போன புருசனுக்குப் பிறந்ததுதான் இந்தப் புள்ள.. அது மட்டுமில்ல.. இவ ஆறு மாசமா சென்னையில உங்க ஊர் பெரிய மனுஷன் வீட்லதான் இருந்தா.. அப்ப இந்த மாப்ள பையன இவ மடக்கிப் போட்டுட்டா.. யாருக்குத் தெரியும்.. வயித்தில வந்துடுச்சோ என்னமோ.. அதான் கல்யாணம் கட்டிக்கறாங்க போல.." என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசிக் கொண்டு அங்கு வந்தது நிரஞ்சனாவின் அம்மா ராஜாத்தியேதான்.
"யார் நீங்க.. ஏன் இப்டில்லாம் எங்க ஊர் பையன் மேல அபாண்டமா பழி போடறீங்க.." என்று கேட்டார் ஒரு பெரிய மனிதர்.
"சார்.. நாங்க யார்ன்னு அவளக் கேளுங்க சார்.. பெத்த அம்மாவையும் கூடப் பொறந்த அண்ணையும் இல்லன்னு சொல்லச் சொல்லுங்க சார்.." என்றான் நரேன்.
அவர்களுடன் வந்த பைரவி தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
இதைக் கேட்ட நிரஞ்சனா, நன்றி கடவுளே.. இவங்கள வெச்சே இந்த கல்யாணத்த நிறுத்திடுவேன்.. என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழ முற்பட,
இவள் இப்படி எதையாவது செய்வாள் என்று ஊகித்த தமிழ், அவளுடைய கையைப் பிடித்து அமர வைத்தான்.
"அவங்க அப்டிதான் உளறிகிட்டிருப்பாங்க.. நீ உக்காரு நிரஞ்சனா.. காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னு கேட்டா காரியம்தான் பெரிசு.. நமக்கு இப்ப நம்ம கல்யாணம்தான் முக்கியம்.. யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசட்டும்.. அமைதியா இரு.." என்று அன்புடன் கண்டிப்பு கலந்து சொல்லி விட்டு முகிலைப் பார்த்தான்.
"ஐயரே.. ஆளாளுக்கு அப்டிதான் பேசிட்டே இருப்பாங்க.. நீங்க ஆரம்பிங்க.. முகூர்த்தத்துக்கு நேரமாகுது பாருங்க.." என்று ஓங்கிக் குரல் கொடுத்தான்.
நிரஞ்சனாவால் தமிழை எதிர்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.
கடவுளே.. கடைசி வரைக்கும் எனக்கு நீ உதவியே செய்யாம என்ன ஏமாத்திட்டியே.. என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.
ஐயர் மந்திரங்கள் ஓதி தாலிச்சரட்டினை எடுத்து தமிழின் கையில் கொடுக்க, தமிழ் அதை வாங்கி நிரஞ்சனாவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான்.
பெற்றோரும் உற்றாரும் உறவினர்களும் நண்பர்களும் அட்சதையும் வாச மலர்களும் தூவி வாழ்த்தினர்.
திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்ததும் புதுமணத்தம்பதியர் இருவரும் கோவிலைச் சுற்றி வந்து அம்மனை வணங்கினர்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு தடபுடலான விருந்து தயாராகியிருக்க அனைவரும் விருந்துண்ண அழைக்கப்பட, உறவினர்களின் மேற்பார்வையில் பந்தி தொடங்கியது.
முகிலும் கயலும் அனைவரையும் விருந்துண்ண அழைத்துப் போய் அமர வைத்தனர். ரக்ஷணா, ஜேக் இருவரையும் கயல் அழைத்துப் போக, தேவகி டீச்சரை முகில் அழைத்துப் போனான்.
ராஜாத்தியும் நரேனும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எங்கோ பார்த்தபடி நின்றிருக்க, நிரஞ்சனாவும் தமிழும் அவர்களின் அருகில் வந்தார்கள்.
"அப்டியே உங்கம்மா மாதிரியே நாடகமாடி இந்த பையன் வாழ்க்கைய கெடுத்துட்ட.. நீங்க ஏமாந்துட்டீங்க தம்பி.. இவல்லாம் குடும்பத்துக்கு ஏத்தவ இல்ல.. குடிய கெடுக்கறவ.." என்று வாய்க்கு வந்தபடி பேச,
"கொஞ்சம் நிறுத்தறீங்களா.." என்று கோபமாகக் கத்தினான் தமிழ்.
"சார்.. உங்களுக்குத் தெரியாது சார்.. இவ எங்கப்பாவுக்கு பொறக்கவேல்ல.. ஆனா எம். நிரஞ்சனான்னு இனிஷியல மட்டும் உரிமையோட போட்டுகிட்டா.. அதோட வலி என்னன்னு அவரு பெத்த புள்ள எனக்குதான் சார் தெரியும்.." என்று உளறினான் நரேன்.
"எனக்கு தெரியும் மிஸ்டர் நரேன்! இவ உங்கப்பாவோட இனிஷியல வேணும்னே போட்டுக்கல.. உங்கப்பாதான் இவள தன் மகளா ஏத்துக்கிட்டு தன் இனிஷியல இவளுக்கு கொடுத்திருக்கார்.. அத இவ இப்ப வரை மதிக்கறா.. எப்பவும் மதிப்பா.. இவ மனசில உங்கப்பா இப்ப வரை வாழ்ந்துகிட்டுதான் இருக்கார்.. ஆனா அவரு உயிரோட இருக்கும் போதே அவரை உதாசீனப்படுத்தி சாகடிச்சது நீங்களும் உங்கம்மாவும்.. உங்களால அவர் எப்பவோ நடை பிணமா ஆகிட்டாரு.. ஆனா இவளுக்காக உயிர் வாழ்ந்தார்.. அதனாலயே இவ மனசில இன்னும் வாழ்ந்துகிட்டிருக்கார்..
அவரு பெத்த புள்ளன்னு சொல்லிக்கறீங்களே.. அவரோட ரத்தம்தானே உங்க உடம்பில ஓடுது.. அப்ப அவரோட நல்ல மனசு உங்களுக்கு ஏன் இல்லாம போச்சு.. அவரோட ரத்தம் இவ உடம்பில ஓடல.. ஆனாலும் எம். நிரஞ்சனான்னு பெருமையா சொல்லிக்க இவளுக்கு எல்லா தகுதியும் இருக்கு..
ஆனா உங்களுக்கு.. அவரோட மகனா எம். நரேந்திரன்னு சொல்லிக்கற அளவுக்கு அவர் பெயர காப்பாத்தற மாதிரி நீங்க இது வரைக்கும் என்ன செய்தீங்க..
அவர மாதிரி நிபந்தனையில்லாத அன்பு செலுத்த முடியுமா உங்களால.. உங்க தங்கச்சிதானே இவ.. இவ மேல பாசம் வேண்டாம்.. மனிதாபிமானமாவது இருந்துச்சா.. ஐயோ பாவம்.. இவளும் ஒரு மனுஷிதானேன்னு ஒரு முறையாவது யோசிச்சி பாத்தீங்களா..
இவங்கம்மா உங்கம்மாவுக்கு துரோகம் செய்துட்டதா சொல்றீங்களே.. அது உங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுல.. புருஷன் பொண்டாட்டி சண்டை.. அத நீங்க ஏன் உங்க தலையில தூக்கி சுமந்தீங்க..
உங்கப்பா இவம்மாவுக்கு தாலி கட்டலன்னாலும் இவ உங்களுக்கு தங்கச்சி தானே.. உங்க தங்கச்சி மேல உங்களுக்கு பாசம் ஏன் இல்லாம போச்சு..
உங்கப்பாவோட பெயரை வெறுமே இனிஷியலா போட்டுகிட்டா அவரோட புள்ளையா ஆக மாட்டீங்க.. அவரோட நல்ல குணம் உங்களுக்கும் இருக்கணும்.. அப்பதான் அவர் பெயரை நீங்க காப்பாத்தறீங்கன்னு அர்த்தம்..
அப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்கு இப்டி ஒரு புள்ள..
இப்ப நான் சொல்றது கூட உங்களுக்கு தப்பாதான் தோணும்.. ஆனா நாளைக்கு உங்களுக்கு பொறக்கப் போற குழந்தை உங்க கிட்ட வராம, உங்கள அப்பான்னு கூப்பிடாம இருந்தாதான் உங்கப்பா அனுபவிச்ச வலி என்னன்னு உங்களுக்கு புரியும்.." என்று நரேனிடம் கூறிய தமிழ், ராஜாத்தியிடம் திரும்பினான்.
"உங்ககிட்ட பேசல்லாம் எனக்கு எந்த அவசியமும் இல்ல.. ஆனா இப்ப வரைக்கும் நிரஞ்சனா உங்களதான் அம்மான்னு நெனச்சிகிட்டிருக்கா.. இவளப் பெத்த அம்மாவுக்கு கிடைக்காத பாக்கியம், உங்கள அம்மான்னு இவ கூப்பிடற பாக்கியத்த ஆண்டவன் உங்களுக்கு ஏன் குடுத்தானோ..
உங்க புருஷன் உங்க பொறந்த வீட்டு மனுஷங்களுக்காக செய்த தியாகத்த கூட உங்களால புரிஞ்சிக்க முடியல.. அவரு உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருந்தா உங்க தங்கச்சிக்கு எந்த கெட்ட பெயரும் வந்துடக் கூடாதுன்னு நெனச்சிருப்பாரு..
வேற எவனாவது இருந்தா.. உங்களையும் உங்க தங்கச்சியையும் உங்க குடும்பத்தையும் தப்பா பேசிப் பேசியே காலம் முழுக்க உங்கள கொடுமை படுத்தியிருப்பான்.. ஆனா அவரு உங்க குடும்பத்துக்கு நன்மை செய்யப் போய் தன் வாழ்க்கையையே இழந்துட்டார்..
ஆனா நீங்க எவ்ளோ கோவப்பட்டாலும் புள்ளைய பிரிச்சி வெச்சாலும் வார்த்தையால நோகடிச்சாலும் உங்கள விட்டுப் பிரிய அவர் நெனக்கல..
கடைசியா உங்க தப்பான வார்த்தைதான் அவரோட உயிரப் பறிச்சது..
வாழறப்பவும் சரி.. சாகறப்பவும் சரி.. அவர் செத்தப்பறமும் சரி.. உங்க புருஷனை நீங்க கடைசி வரை புரிஞ்சிக்கவேயில்ல.. உங்க தங்கச்சியையும் புரிஞ்சிக்கல.. உங்களையே அம்மான்னு நம்பிட்டிருக்கற இவளையும் நீங்க புரிஞ்சிக்க விரும்பல.. உங்க புள்ள வாழ்க்கையையும் உங்க தப்பான எண்ணங்களால கெடுத்துட்டீங்க.. அவனோட அப்பாகிட்டேந்து அவனப் பிரிச்ச பாவம் உங்கள சும்மா விடாது..
நீங்க செய்த பாவத்தை விட இவ எந்த பாவத்தையும் செய்யல.. சொல்லப் போனா புண்ணியம்தான் செய்துட்டிருக்கா இவளால இப்ப அந்த புண்ணியத்தில கொஞ்சம் எனக்கும் பங்கு வரப் போகுது..
போங்க.. இனிமேல நீங்க திருந்தி யாரையும் காப்பாத்த போறதில்ல.. அப்டியே எங்கியாவது போய் யாரையாவது பாத்து சாபம் வுட்டுகிட்டு கிடங்க.. பாக்கறவங்கல்லாம் கல்லால அடிக்கட்டும்.." என்று சொல்லிவிட்டு நிரஞ்சனாவின் கையை உரிமையுடன் பிடித்துக் கொண்டு விருந்துண்ணச் சென்றான்.
"அவன் கிடக்கான்.. புதுசா கல்யாணம் கட்டிருக்கான்ல.. அதான்.. புதுப் பொண்டாட்டி மோகத்தில.. அவ என்னமோ தேவகன்னிகைன்னு நெனச்சிகிட்டு உளறிட்டுப் போறான்.. நீ வாடா.." என்று தன் மகனின் கையைப் பிடித்தாள் ராஜாத்தி.
"கைய வுடுமா.." என்று தன் தாயின் கையை உதறினான் நரேன்.
"டேய்.. என்னடா.." என்று அதிர்ந்து போய் ராஜாத்தி கேட்க,
"என்ன வார்த்தை சொன்னாரு.. கேட்டல்ல.. அப்பா ரத்தம்தானே என் உடம்பில ஓடுது.. அப்டீன்னா என் மனசில எவ்ளோ அன்பு இருக்கணும்னு.. அவரு சொன்னது அத்தனையும் உண்மை..
நான் பண்ணின மாதிரியே நாளைக்கு என் குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடாம போனா.. என்னால அத தாங்கவே முடியாது.. அப்பாவாவது அத சகிச்சிகிட்டு உயிர் வாழ்ந்தார்.. நா அடுத்த நிமிஷமே செத்துடுவேன்.. எனக்கு என் குழந்தை முக்கியம்..
அதனால இனிமே நா உன் கூட இருக்க மாட்டேன்.. எனக்கு என் குழந்தையும் என் பொண்டாட்டியும் என் வாழ்க்கையும்தான் முக்கியம்.. நீ வா பைரவி.." என்று கூறி விட்டு மேடிட்ட வயிற்றுடன் நிற்கும் தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால நடக்க,
"ஏங்க.. திரும்பவும் தப்பு பண்ணாதீங்க.. பெத்த அம்மாவ வயசான காலத்தில கைவிட்டா அந்தப் பாவம் நம்மள சும்மா விடாது.." என்று பைரவி புத்தி சொன்னாள்.
"சரி! ஆனா இனிமே அவங்க நம்ம வீட்ல எதையும் யாரையும் தப்பா பேசவே கூடாது.. வாய மூடிகிட்டு போட்டத தின்னுகிட்டு மூலையில இருக்கறதுன்னா நம்ம கூட வரட்டும்.. இல்லன்னா எங்கியாவது போகட்டும்.. எனக்கு கவலையில்ல.." என்றான் நரேன்.
ஒரே நிமிடத்தில் தன் வாழ்வு இப்படி மாறிப் போனதைக் கண்ட ராஜாத்தி பெருங்குரலில் எதையோ கூற வர,
"இததான் சொன்னேன்.. நீ என் கூட வரணும்னா வாய மூடிட்டிருந்தாதான் வர முடியும்.. இல்லன்னா.." என்று நரேன் கோபமாகக் கூற, ராஜாத்தி கப் சிப்பென்று தன் வாயைப் பொத்திக் கொண்டு அவன் பின்னால் சென்றாள்.
நரேன் நேராக தமிழிடம் சென்றான்.
"சார்.. என்ன மன்னிச்சிடுங்க.. இவ்ளோ நாள் கண்ணிருந்தும் குருடா இருந்துட்டேன்.. தலவலியும் சங்கடமும் தனக்கு வந்தாதான் தெரியும்ன்னு சொல்வாங்க.. எனக்கு வந்துடுமோங்கற பயத்திலயே நா பண்ணின தப்பை புரிஞ்சிகிட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. ரஞ்சனி.. என்ன மன்னிச்சிடு.." என்று அவன் மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு, தன் கழுத்திலிருந்து இரண்டு பவுன் சங்கிலி ஒன்றை எடுத்து தன் தங்கையின் கையில் கொடுத்தான்.
இதைப் பார்த்த ராஜாத்தி திரும்பவும் கத்தத் தொடங்க, அவளை முறைத்து அடக்கிவிட்டு நிரஞ்சனாவிடம் பேசினான்.
"உன் கல்யாணத்துக்கு இந்த அண்ணனால முடிஞ்ச சீதனம்.. இப்போதைக்கு இத வெச்சிக்க.. உனக்கு பிறந்த வீட்டு சீதனம் சீக்கிரமே அனுப்பி வெக்கிறேன்.." என்று கூறிவிட்டு நகர்ந்தவனை கைபிடித்து நிறுத்தினான் தமிழ்.
என்ன என்பது போலப் பார்த்தவனிடம்,
"என்ன மச்சான்.. பொறந்த வீட்டு சீதனம்லாம் குடுத்துட்டு கை நனைக்காம போறீங்க.. அப்ப எங்க உறவு வேணாமா.. சாப்பிட்டு போங்க மச்சான்.." என்று உரிமையுடன் கூறிய தமிழை கண்ணீருடன் தழுவிக் கொண்டான் நரேன்.
"ரொம்ப தேங்க்ஸ் மாப்ள.." என்று சொல்லிவிட்டு பந்தியில் மனைவியையும் தாயையும் அழைத்துக் கொண்டு அமர்ந்தான்.
பைரவிக்கு மனமெல்லாம் பூரித்தது.
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. அவர திருத்திட்டீங்க.. எனக்கு அது போதும்.." என்று சொல்லிவிட்டு விருந்துண்ணச் சென்றாள்.
- ctd...