பாகம் – 11
இடம்: அர்ஜூன் வீடு
நேரம் : ஆனந்தமான காலம்
ஆப் பண்ண மறந்த டி.வியிலிருந்து பாட்டு ஓடிக்கொண்டிருந்தது
‘கடல் நீலத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்ட காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜீன மச்சம் சொல்லும்
என்னைச் சேர்பவன் யாரோ
அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?’’
இப்படி ஒரு பாடலைக் கேட்டால் எப்படி தூக்கம் வரும்?
“அம்மு” என்றழைத்தேன்.
..............................
“தூக்கம் வரல, உன் கால் மேல கால் போட்டுக்கவா”
............................
‘அர்ஜுனா, மெளனம்ன்னா சம்மதம்ன்னு அர்த்தம்ன்னு யாரோ ஞானி சொல்லிருக்காரே, உனக்கு தெரியாதா’ என்றது மனசாட்சி.
“ஆமால்ல’ என்றபடி,
மெதுவாய் என் கால்களை அவள் மீது வைத்தேன். வந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் பறந்து, புத்தி விழித்துக்கொண்டது. மனதுக்கு பிடித்து பெண் கையருகில் இருக்கும்போது, கண்மூடித் தூங்க நான் என்ன முட்டாளா?
என் கைகளை அவள் இடுப்பின்மீது வைத்தேன். அம்மு கூச்சத்தில் தவிப்பது இன்னும் என்னை முன்னேறத் தூண்டியது. அவள் தேகத்தில் கோலமிட துவங்கினேன். சும்மா சொல்லக்கூடாது, தேக்கு மரத் தேகம்தான்.
எனக்குள்ளிருந்த ஆண்மை விழித்துக்கொண்டதும், இறுக்கி அணைத்தேன். அவளின் வெட்கச்சூடு என் உச்சந்தலை வரைப் பரவியது. இனி என்னைக் கட்டுப்படுத்த என்னாலே முடியாது. அவள் பின்னங்கழுத்தில் துவங்கிய முத்தம், மெல்ல மெல்ல முன்னேறி, நெற்றி கண்கள் எனப் படர்ந்து இறுதியில் உதட்டில் முடிந்தது.
இமைமூடி, என் காதல் அனைத்தையும் விரல்களில் கொட்டி, அவளின் அழகுகளோடு நான் விளையாடிய நேரம் “எந்திரிங்க” என்றாள்.
‘பிளீஸ்டி இன்னும் கொஞ்ச நேரம்ன்னு’ நான் சொல்வதை காதில் வாங்காமல் மறுபடியும் “எந்திரிங்க, எந்திரிங்க “ என்று என்னை உலுக்க ஆரம்பித்தாள்.
முக்கியமான நேரத்தில் முரண்டுபிடிக்கிறாளே’ என்று யோசிக்குமுன்னே தலையனையை எடுத்து என்னை அடிக்கத் துவங்கினாள்.
மோகன நிலை கலைந்து, கண்களைத் திறந்து பார்த்தால்,
‘’எந்திரிங்க. என் வீட்டுக்குப் போகனும், சமைக்கனும், குட்டிக்கு பால் குடுக்கனும், நான் குளிக்கனும், டைம் ஆகுது, எந்திரிங்க முதல்ல’’ என்று தலையனையால் என்னை அடித்து எழுப்பிக்கொண்டிருந்தாள் அமுதினி.
‘’அடச்சீ... கனவுல கூட என்னை சந்தோஷமா இருக்க விடமாட்டியா? ‘’ என்று முணகினேன்.
‘’ஆங், நீங்க கனவு கண்டுகிட்டே இருங்க, நாங்க கிளம்புறோம்’’ என்றபடி முறைத்தாள்.
அமுதினியை எனக்குப் பிடிக்கும். ஆனால் தப்பான எண்ணத்தில் பார்த்ததில்லை. எதுக்கு இப்படி ஒரு கனவு வந்ததென நான் யோசித்தேன்.
‘’நான் இங்க பேசிட்டு இருக்கேன், நீங்க எந்த உலகத்தில் இருக்கீங்க? ‘’ என்றாள் அவள்.
‘ஒரு சூப்பர் கனவு கண்டேன், சரியா முக்கியமான நேரத்தில் என்னை எழுப்பி விட்டிட்ட’’ என்றேன்.
‘’அப்படியா, கனவுல என்ன பார்த்தீங்க’’ என்றாள் ஆர்வமாக.
‘’ம்ம், கல்யாணத்துக்கு முன்னாடி எதைப் பார்க்க கூடாதோ அதைப் பார்த்தேன்’’ என்றேன்.
‘’ங்கே’ என்று முழிப்பவளைக் கண்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
கோபத்தில் அவள், தலையனையால் மீண்டும் என்னை அடிக்கத் துவங்கினாள். அதற்குள் நாங்கள் போட்ட சத்தத்தில் லயாக்குட்டி எழுந்துவிட, அம்மு பால் கரைத்து தந்தாள். நானும் தயாராகிவிட்டபிறகு மூவரும் அமுதினி வீட்டிற்குச் சென்றோம். குட்டியை என்னிடம் தந்துவிட்டு, குளித்து உடை மாற்றி, சமைத்து முடித்தாள். அந்தக்கனவுக்குப் பிறகு, என்னால் அவளை சகஜமாகப் பார்க்க முடியவில்லை. திருட்டுத்தனமாக சைட் அடித்தேன்.
சாப்பிடும் போது, ‘அம்மு’ என்று அழைத்தேன்.
‘’சொல்லுங்க’’
‘’உனக்குத்தேவையானதை எடுத்துக்கோ, என் வீட்டுக்கே போய்டலாம். குட்டிமா கூட அங்கியே இரு’’ என்றேன்.
‘’இல்ல, இங்கதான் எனக்கு வசதி. லயாவை சமாளிச்சுக்குவேன்’’ என்றாள்.
‘’சொன்னாக் கேளு அம்மு, குளிக்கும் போது, சமைக்கும் போது அவளை எப்படி பார்த்துக்குவ, என் வீடுன்னா நானும் இருப்பேன், ரெண்டு பேரும் மாறி மாறி பார்த்துக்கலாம்.’
அதுவும் இல்லாமல், இது உன் பிரெண்ட்டோட அக்கா வீடு, ஒரு குழந்தையோடு நீ இருந்தா பக்கத்தில் இருக்கறவங்க என்ன நினைப்பாங்க? எத்தனைப் பேரிடம் என் பிரெண்ட் குழந்தைன்னு சொல்லுவ? என்று அவளைக் குழப்பி விட்டேன்.
‘’அப்ப நீங்க வர்றப்பவும் தப்பாத்தானே நினைச்சிருப்பாங்க?’’ என்றாள்.
‘’அது, அது வந்து, என்னை உன்னோட பாய் பிரெண்டுன்னு நினைச்சிருப்பாங்க. இப்ப நமக்கு குழந்தை பிறந்திருச்சுன்னு நினைப்பாங்க’’ என்று சமாளித்தேன்.
‘’ நீங்க, என் பாய்பிரெண்ட்? கேட்கும் போதே, என் காதில் யாரோ அமிலத்தை கொட்டியது போல எரிகிறதே, அய்யகோ, இறைவா, இந்த காதுகளின் கேட்கும் திறமையை நீயே எடுத்துக் கொள் ’’ என்று அநியாயத்துக்கு கேலி செய்தாலும் என் வீட்டில் வந்து தங்கும் ஐடியாவை ஏற்றுக் கொண்டாள் அமுதினி.
‘’சரி இப்ப நான் பிளான் சொல்றேன்’’ என்றாள்.
‘’எது, நம்ம பேமிலி பிளானா?’’ என்று வம்புக்கு இழுத்தேன்.
‘’கண்றாவியான ஜோக், சிரிக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை’ என்றவள் வேலை நேரத்தில் குட்டியை எப்படி பார்த்துக்கொள்வது என்று விவரித்தாள்.
என் ஷிப்ட் நேரத்துக்கு நான் ஹாஸ்பிட்டல் சென்று வருவேன். அமுதினியும் லயாவும் என் வீட்டில் இருப்பார்கள். கடையில் தேவை இருக்கும் போது, அம்மு, குட்டியையும் கூட்டிச் செல்வாள்.
ஆல்பர்ட் டாஷாவையும், என்னையையும் நல்ல நண்பர்களாக, கடையிலிருப்பவர்களுக்கு அமுதினி, அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள். ஏன், ஊரில் இருக்கும் பெற்றோர்களுக்குக் கூட, டாஷாவைப் பற்றி சொல்லியிருக்கிறாள். ஆக எங்களது திட்டத்தை கொஞ்சம் வெட்டி, கொஞ்சம் நீட்டி ஆளுக்கு ஏற்றார்ப்போல் சொல்லி சமாளிக்கலாம். யாரும் அவளை தப்பாக நினைக்கப்போவதில்லை.
இப்போது நாங்கள் ஒரு ரெடிமேட் வாழ்க்கைக்குத் தயாரானோம். அமுதினி காலையில் எழுந்து சமைத்து, குட்டிக்கு தேவையானதைச் செய்து, என்னை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைப்பாள். மதியம்வாக்கில் குட்டியோடுக் கடைக்குச் சொல்வாள். லயாவின் கொழுகொழு அழகில் மயங்கிய கடை ஆட்கள், அவளை மாறி மாறித் தூக்கிவைத்துப் பார்த்துக்கொள்வார்கள்.
எனக்கு ஷிப்ட் முடிந்ததும் அல்லது அமுதினியின் வேலை முடியும்வரை, நான் காத்திருந்து, அவர்களை அழைத்துவருவேன். இரவில் எதாவது சினிமா படம் போட்டு பார்த்தபடியே இருவரும் தூங்க போவோம்.
இந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது. ஏதோ எனக்கு சிறகுகள் முளைத்தது போல, ஒரு குடும்பத்தலைவன் போல, இன்னும் சிலபல போல உணர்வுகளுடன் நாட்கள் ஆனந்தமாய் நகர்ந்தது.
காதல் வளரும்