Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 2

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 2

“சிவகாமிய கூப்பிட்டதே எனக்கு பிடிக்கல.. இதுல நீ அவளை வேற போய் தனியா வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சியோ...” என்று மணிராதா, வனமாலியை கடிந்துகொண்டு இருக்க,

அவனோ “நீங்கள் என்னவோ பேசுங்கள்...” என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்..

“வனா... உன்னைத்தான் சொல்றேன்...” என,

அப்போது அங்கே வந்த கோவர்த்தணும், பமீலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, வந்தனாவோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.

“பாருடா.. சிவகாமி வீட்ல போய் கூப்பிட்டது பத்தலைன்னு அந்த கமலிய வேற போய் கூப்பிட்டு வந்திருக்கான்..” என்று சின்ன மகனிடம் மணிராதா புகர் செய்ய, கோவர்த்தனின் முகம் மாறியதோ இல்லையோ பமீலாவின் முகம் மாறிப்போனது..

‘கமலி...’ என்ற பெயரில் எப்போதுமே அவளுக்கு அச்சமுண்டு.. என்னதான் பமீலா வயதில் ஒன்றிருக்கு கமலியை விட மூத்தவள் என்றாலும், சிவகாமியின் மகள் கமலிக்கு தானே மகுடேஸ்வரன் குடும்பத்தில் முன்னுரிமை உண்டு.. இந்திராவின் மகள் பமீலாவிற்கு எப்போதுமே இரண்டாவது இடம்தானே..

இந்த உரிமை போராட்டம் எத்தனை ஆண்டுகளாய் நடந்துகொண்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் கமலியோ சிவகாமியோ தங்கள் உரிமையை நிலைநாட்டவென வந்துவிட கூடாது என்று எத்தனை பேரு அடி பொடி வேலைகள் செய்து இருக்கிறார்கள்.

இப்படி இந்திராவும் சரி, பமீலாவும் சரி, தாங்களே இங்கே எல்லாம். தங்களின் உரிமையே பிரதானமானது என்பதை உறுதி செய்துகொள்ள மணிராதா ஆடிய அத்தனை ஆட்டத்திற்கும் துணை போனார்களே..

அதில் ஒன்றுதான் கோவர்த்தன், பமீலா திருமணம்.

அதுவும் அவர்களுக்கு நிச்சயம் செய்து நடந்ததுவா என்ன?? இல்லையே இல்லையே..

மகுடேஸ்வரனிடம் முன்னமே மணிராதா கேட்டார்தான். பமீலாவை வனமாலிக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி.

அவரோ “விதி எனக்கு ரெண்டு குடும்பமாகிப் போச்சு.. ஒரு பொண்ண சொந்தத்துல கொடுத்துட்டு.. இன்னொரு பொண்ண அந்நியமா கொடுத்தா பிரச்னைதான் வரும். என் ரெண்டு பொண்ணுங்களையும் உன் பசங்களுக்கு கேளு.. ஒரேதா ரெண்டு கல்யாணம் செய்யலாம்.. இல்லையா ரெண்டுமே அந்நியமா போகட்டும்..” என்றுவிட,

‘என்னது... கமலியை தன் வீட்டிற்கு கொண்டு வருவதா?? அதுவும் எந்த சிவகாமியை வேண்டாம் என்று ஒதுக்கினோமோ அந்த சிவகாமியின் மகளை தன் வீட்டு மருமகளாய் ஏற்ப்பதா?? முடியாது...’ என்றுதான் மணிராதாவிற்கு தோன்ற, வனமாலிக்கு வெளியே பெண் தேட தொடங்கிவிட்டார்.

இதில் இந்திராவிற்கு வருத்தமே..

“என்ன அண்ணி...??” என்று கேட்க,

“நான் என்ன செய்றது?? அவன் ரெண்டு பொண்ணையும் கட்டுன்னு சொல்றான்... உன் பொண்ண கட்றேன் கட்டலை.. ஆனா அங்க அவ வீட்ல பேச மாட்டேன்..” என்றுவிட்டார் மணிராதா.

மகுடேஸ்வரனும் பெரிதாய் அதன்பின்னே இதில் எதுவும் அவர் விருப்பம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இதிலெல்லாம் ஒன்று உண்டு, வனமாலிக்கு பமீலாவை கட்டுவதில் எள்ளளவும் விருப்பமில்லை. அவளை பிடிக்காது என்றில்லை. ஆனால் அந்த திருமண பேச்சு பிடித்தமில்லை அவ்வளவே.

ஆக மணிராதா, தேடி அலைந்து, அவர்களின் குடும்பம், ஆஸ்தி, அந்தஸ்து என்று அனைத்திற்கும் தகுந்தவாறு கீர்த்தனா என்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க, வனமாலிக்கு அப்போது மறுக்கும் காரணம் வரவில்லை. ஆக சரியென்றுவிட்டான்.

ஒரே மாதத்தில் திருமணம்..

அனைத்துமே ஜரூராய் தடபுடலாய் ஏற்பாடு ஆக, மகுடேஸ்வரனுக்காக சிவகாமியை வேண்டா வெறுப்பாய் அழைத்திருந்தார் மணிராதா. ஆனால் வனமாலியோ “அத்தை நீங்களும் கமலியும் கண்டிப்பா வரணும்” என்றழைக்க,

“கமலிக்கு எப்படின்னு தெரியலை வனா.. ஆனா நான் கண்டிப்பா வருவேன்..” என்றுவிட்டார் சிவகாமி.

யார் தடுத்தாலும், யார் இடையில் வந்திருந்தாலும், மகுடேஸ்வரன் குடும்பத்து மூத்த மருமகளாய், மகுடேஸ்வரனின் முதல் மனைவியாய் அனைத்தையும் முன் நின்று செய்தது சிவகாமியே.. உறவுகள் முன்னிலையில், அதுவும் தன் முதல் மகனின் திருமணம் என்கையில் மணிராதாவால் வாயே திறக்க முடியவில்லை. இந்திரா கண்ணை கசக்க,

“இங்க பாரு இந்திரா.. நீ ஏன் கவலைப் படுற.. இந்த ஒருநாள்.. அப்புறம் அவ எதுக்கு வரப்போறா?? இல்லை நான்தான் கூப்பிட போறேனா?? நீயும் போய் கூட நில்லு.. ஏன் நீ தள்ளி வந்து நிக்கிற??” என்று மணிராதா சமாதானம் செய்ய,

அனைத்தையும் கண்டும் கேட்டும் இருந்தாலும் சிவகாமி எதையும் வெளிக்காட்டவில்லை.

அனைவரும் வனமாலி - கீர்த்தனா திருமணத்தை மகிழ்வாகவே எதிர்நோக்க, அந்தோ பரிதாபம் திருமண நாளின் விடியலில் மணப்பெண் மண்டபத்தில் இல்லை என்பது அனைவர்க்கும் தெரிய வர, யாவருமே ஸ்தம்பித்துதான் நின்றனர்.

என்ன?? ஏது?? எப்படி?? என்று பெண் வீட்டினரை பிடித்து உலுக்க, அதன்பின்னே தான் தெரிந்தது இது கீர்த்தனாவிற்கான கட்டாயத் திருமணம் என்பது.

‘ஐயோ..!!! இப்படியா என் குடும்ப மானம் போகணும்...’ என்று மணிராதா ஒப்பாரி வைக்க, வனமாலியோ அப்படியே நின்றுவிட்டான். மேற்கொண்டு என்ன?? என்ற கேள்விக்கு பதிலே அப்போது அவனிடம் இல்லை. இதை இப்பெண் முதலிலேயே என்னிடம் சொல்லியிருந்தால் இத்தனை தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் அவனுக்கு.

கோவர்த்தனோ அண்ணனுக்கு ஆதரவாய் நிற்க, மகுடேஸ்வரனும் இந்திராவும் மணிராதாவை சமாதானம் செய்ய, சிவகாமியோ அனைத்தையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார். அடுத்து என்ன நடக்கும் என்ற யூகம் அவர் மனதில் இருந்ததுவோ என்னவோ.

அவர் சென்று பேசினாலும் மொத்த கோபத்தையும் மணிராதா அவர் மீது திருப்புவார் என்று தெரியும் ஆக, எதுவும் பேசாமல் அப்படியே நிற்க, மணிராதாவிற்கு அழுது புலம்புகையில் சற்று தள்ளியிருந்த பமீலா கண்ணில் பட, சடுதியில் புத்தியில் ஒரு மின்னல்வெட்டு..

‘கடவுளே எல்லாத்தையும் நல்லதா நடத்திக்கொடு...’ என்று கண்களை துடைத்தவர்,

“மகுடா... இப்ப நீதான் ஒரு முடிவுக்கு வரணும்டா...” என்றார் தம்பியிடம் கையெடுத்து கும்பிட்டு.

அம்மா இப்படி சொன்னதுமே வனமாலிக்குப் புரிந்து போனது அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது.. அடுத்த நொடி சுதாரித்தவன், “ம்மா.. ஒரு நிமிஷம்.. மாமா அவர் முடிவை சொல்றதுக்கு முன்ன நான் சொல்லிடறேன்..” என்றவன்,

அவன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிவிட்டு “இனி நான் கல்யாணம் பத்தி யோசிக்க எல்லாம் ரொம்ப நாளாகும்..” என்றுவிட்டு மண்டபம் விட்டே கிளம்பிவிட்டான்.

“டேய் வனா.. நில்லுடா.. அம்மா சொல்றதை கேளுடா..” என்று மணிராதா பதறி எழ, வனமாலியோ நில்லாது சென்றேவிட, அது மணிராதாவிற்கு பெரும் அவமானமாய் போய்விட்டது.

அவர்களின் உறவுகள் பெரிது.. எல்லாம் பெரிய பெரிய ஆட்களும் கூட, அனைவரையும் அழைத்து விசேச வீடாய் இல்லாது இப்படி வெறும் வீடாய் திரும்ப அனுப்பினால் நாளைக்கு பின்னே என்னாகும்?? ‘இவங்க வீட்லே எப்பவும் இப்படிதான்...’ என்ற ஒரு எண்ணம் வராதா??

அதுவுமில்லாது, உறவுகளில் ஒருசிலர் ‘சிவகாமி விசயத்துல நீ நியாயமா இருந்திருக்கணும்..’ என்று இவர் காதுபடவே பேசுவதும் உண்டே..

இதெல்லாம் ஒன்று சேர, மணிராதா மனதினுள்ளே ஒரு பயம் கூட வந்துவிட்டது. எங்கே சிவகாமியின் கண்ணீர் துளிகள் தன் குடும்பத்தில் பிரளயத்தினை கொடுத்திடுமோ என்று..

‘இல்லை இல்லை..’ என்று தன்னை தானே உலுக்கியவர் “கோவர்த்தனா!!!” என்று இளைய மகனை அழைக்க, எப்போதுமே அம்மாவின் பிள்ளைதானே, மணிராதாவின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டான்.

மகுடேஸ்வரனோ “அக்கா.. இவ்வளோ அவசரமா செய்யனுமா??” என,

“நீ சம்மதிக்கலைன்னா.. நான் உயிரோட வீடு வர மாட்டேன்...” என்று மணிராதா பிடிவாதம் செய்ய,

இந்திராவோ “என்னங்க இதான் நடக்கணும்னு இருக்கு..” என்று ஊக்க, மகுடேஸ்வரன் முடிவெடுக்க முடியாது சிவகாமியைப் பார்த்தார்.

தன் கணவரின் பார்வை தன் பக்கம் திரும்பிய பின்னேதான், “சந்தோசமா செஞ்சு குடுங்க...” என்று அத்தனை நேரம் மௌனியாய் இருந்த சிவகாமி வாய் திறக்க, அதன் பின்னே நடந்தது தான் பமீலா கோவர்த்தன் திருமணம்.

ஆனால் அதன் பிறகுதான், இந்திராவின் நிலை மற்றும், பமீலாவின் நிலை அங்கே ஸ்திரமாகிவிட, சிவகாமி முற்றிலும் அனைத்திலும் இருந்தும் ஒதுக்கப்பட்டார்.

சிவகாமி மீது அத்தனை காழ்ப்புணர்வா மணிராதாவிற்கு?? அத்தனை பகையா?? அதன் காரணம் தான் என்ன? என்று கேட்டால் காரணம் எதுவுமே இல்லை.. சிலரை பிடிப்பதற்கு காரணம் எப்படி தேவையில்லையோ, அதே போலவே சிலரை பிடிக்காது போவதற்கும் காரணங்கள் தேவையில்லை.

மணிராதாவை, மதுரையில் திருமணம் செய்து கொடுத்து, கணவரை இழந்து, மூன்று பிள்ளைகளோடு தனியே நிற்க, என்னதான் சொத்து பணம் வசதி என்று இருந்தாலும் ஆள் பலம் வேண்டுமில்லையா, ஆக சிவகாசிக்கே திரும்பிவிட்டார்.

ஒரே வீட்டில் வேண்டாம் என்று, பிறந்த வீட்டிற்கு அருகிலேயே நான்கைந்து வீடுகள் தள்ளியே மணிராதா சொந்தமாகவே வீடு வாங்கி இருந்துவிட்டார். என்னதான் தனி வீடென்றாலும், முக்கால்வாசி நேரம் பிறந்தவீட்டில் இருக்க, மகுடேஸ்வரனுக்கு திருமணம் செய்யும் காலமும் வந்தது.

முதல் பெண்ணே சிவகாமி தான். பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்தும் விட்டது. அழகு.. படிப்பு.. வசதி.. நகை நட்டு சீர் வரிசை என்று மட்டுமல்லாது சொத்து பத்தோடு வரும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. ஆக அத்தனை நாள் வீட்டில் தனக்கே முன்னுரிமை என்றிருந்த மணிராதாவிற்கு சிவகாமியின் வரவு ஒரு அதிர்வை கொடுக்க,

சிறிது சிறிதாய் வீட்டினில் சண்டைகள் சச்சரவுகள் என்று எழும்பிக்கொண்டே இருந்தன. மகுடேஸ்வரனோ சிவகாமி மீது உயிரே வைத்திருக்க, அந்த வீட்டினில் கொஞ்சம் கொஞ்சமாய் சிவகாமியின் முடிவுகளே பிரதானாமாகின.

மணிராதா ஏதாவது சொன்னால் கூட “சிவாக்கிட்ட சொல்லேன் க்கா..” என்பார் மகுடேஸ்வரன்.

வஞ்சமும், பகையும் நொடிப் பொழுதில் தோன்றுபவை தான். ஆனால் மறைய வெகு காலங்கள் ஆகுமே. அதுபோலவே மணிராதா மனதில் சிவகாமி மீது காரணமேயில்லாத வஞ்சம் ஒன்று வளர்ந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் அவர்கள் ஊரில் தியேட்டர் ஒன்று விலைக்கு வர, மணிராதா “அதை விலை பேசு மகுடா..” என்றுசொல்ல, வீட்டினர் யாருக்கும் அதில் உடன்பாடில்லை.

“அக்கா அது கொஞ்சம் பிரச்சனையான இடம் க்கா..” என்று மகுடேஸ்வரன் மறுக்க,

“உனக்கு வேணாட்டி எனக்கு வாங்கு..” என்றார்.
 
சிவாகமியோ சும்மா இருக்காது “அண்ணி இப்போதானே வனா பேர்ல ஒரு இடம் வாங்கினீங்க... கொஞ்ச நாள் போகட்டுமே நிதானமா செய்யலாமே..” என்று சொல்ல, இதோ இதோ நான் பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று ஆடியே தீர்த்துவிட்டார் மணிராதா.

‘நான் என்னவோ செய்றேன்.. உனக்கென்ன.. நீ வந்த வேலை மட்டும் பாரு.. நானும் என் தம்பியும் பேசினா நீ ஏன் நடுவில வர...’ என்று இன்னளவு இல்லை..

சிவகாமியும் சரி மகுடேஸ்வரனும் சரி, அதிர்ந்து பார்க்க, வீட்டுப் பெரியவர்களோ “நீ இனிமே அவ விசயத்துல தலையிடாத..” என்றுவிட, அன்று மணிராதா விசயத்தில் வாய் மூடியவர் தான் சிவகாமி இன்று வரைக்கும் எதுவும் பேசினார் இல்லை.

அதற்கு காரணம் அன்றும் இன்றும் என்றுமே மகுடேஸ்வரன் தான். அவர் ஒருவர் மீது வைத்த நேசமும் நம்பிக்கையுமே, இன்றளவும் கூட சிவகாமியை வாய் மூடி இருக்க செய்துவிட்டது தன் வாழ்வையே வேறொருத்தி கையில் மணிராதா தூக்கிக் கொடுக்கையில் கூட, சிவகாமி அமைதியாய் தான் இருந்தார்.

அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்னைகள்.. ஒவ்வொரு விசயத்திற்கும் மணிராதா சிவகாமியை காரணம் சொல்ல, இப்படி அப்படியென்று மகுடேஸ்வரன் சிவகாமி திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் சென்றுவிட, குழந்தைகள் எதுவுமில்லை எனவும், அடுத்து அது ஒரு பேச்சாய் இருந்தது.

இப்போது எத்தனை மருத்துவ வசதிகள், ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு அதெல்லாம் இருந்ததுவா?? இருந்திருக்கும் ஆனால் அத்தனை பரிச்சயம் இல்லையே.. ஆக சிவகாமி கலங்கி நிற்கும் நிலை.

மகுடேஸ்வரன் இதை பெரிதாய் எண்ணவில்லை. ஆனால் சிவகாமியால் அப்படியிருக்க முடியவில்லை. உடலில் குறைகள் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் குழந்தை இல்லையே என்ற எண்ணத்தில், மணிராதா இன்னமும் கொஞ்சம் நெய் விட்டார்.

சிவகாமி காது படவே “இத்தனை பெரிய குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணாமா???” என்று ஆரம்பிக்க,

சரியாய் அதே நேரம் மணிராதா மற்றும் மகுடேஸ்வரனின் அம்மா இறைவனடி சேர, மணிராதாவின் கை அங்கே ஓங்கியது. அப்பாவும் உடல்நல கேட்டில் விழுந்துவிட, வீட்டில் இருந்த அந்த மகிழ்ச்சியான செழிப்பான சூழல் இல்லை. வசதிகள் இருந்தும் சந்தோசமில்லை.

மகுடேஸ்வரனோ “அக்கா எங்களுக்கு குழந்தையே இல்லைன்னாலும் பரவாயில்லை.. இப்போ என்ன உன் பசங்க இல்லையா..” என்று அவர்கள் மீது பாசம் காட்ட,

கோவர்த்தனை விட, வனமாலி இந்த அத்தை மாமாவோடு அதிகம் ஓட்டினான். வந்தனாவோ யார் பேசினாலும், கொஞ்சினாலும் ஒட்டிக்கொள்ளும் ரகம். சிவகாமி இவர்களை என்னதான் சொந்த பிள்ளைகளாக நடத்தினாலும், அதிலும் ஒரு குற்றம் குறை என்று வர, தங்கள் அப்பாவின் உடல்நிலையை மணிராதா தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டார்.

“அப்பா... தம்பிக்கு இன்னொரு கல்யாணம் செய்யலாம்...” என்று ஆரம்பித்து, மெது மெதுவே அதுவே சரியான முடிவு என்பதாய் அவரை உணரவைத்து,

பின் மகுடேஸ்வரனை அழைத்து இருவரும் பேச, மகுடேஸ்வரன் ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்விசயம் அறிந்த சிவகாமியோ திகைத்த கண்ணீர் விழிகளோடு நிற்க, சிவகாமி பிறந்த வீட்டினரோ, அதெப்படி இதெப்படி என்று கிட்டத்தட்ட ஒருமாத கால அளவு பஞ்சாயத்துக்கள் ஓடியது. மகுடேஸ்வரன் உறுதியாய் மறுத்துவிட, அடுத்த மூளை சலவை சிவகாமியிடம்.

‘வாக்கப்பட்டு வந்த குடும்பத்து மேல அக்கறை இருக்கா??’

‘இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணாமா..??’

‘இவ்வளோ சுயநலமா??’

‘பாவம் அப்பா.. கடைசி நேரத்துல பேரன் பேத்தி பாக்க வேணாமா??’

‘என் தம்பி மனசுக்குள்ளயே போட்டு மறுகுறானே...’

என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் சொல்ல சொல்ல, அடுத்த ஓராண்டில் சிவகாமி தன்னை மனதளவில் தயார்படுத்திக்கொண்டார், மகுடேஸ்வரனுக்கு தன் சம்மதத்தோடு இன்னொரு திருமணம் செய்ய.

முதலில் சிவகாமி வீட்டினர் இதனை மறுத்தாலும், “நானே சொல்றேனே.... அவர் என்னை விட்டுடவா போறார்.. இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணாமா??” என்று அனைவரின் வாயை அடைத்தாலும், மகுடேஸ்வரனை சம்மதம் சொல்ல வைக்க அவரால் முடியவில்லை.

தினம் தினம் ஒரு களேபரம் தான் நடக்கும். கண்ணீர்.. அழுகை.. சண்டை.. கோபம்.. கெஞ்சல் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் நிகழ, பேரன் பேத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மனிதரோ தன்னுடையே கடைசி நாட்களை எண்ணத் தொடங்க,

“மகுடா.. இதென்னா வழக்கத்துல இல்லாததா.. சிவகாமிதான் எப்பவுமே இங்க மூத்த மருமக.. இதுக்கப்புறம் அவளுக்கு குழந்தை பிறந்தா வேணாம் சொல்வோமா என்ன?? ஆனா.. உனக்கு வயசு கூடிட்டே போகுதா இல்லையா?? எனக்காக மகுடா... சம்மதம் சொல்லேன் டா..” என்று அந்த மனிதர் நடுங்கும் கரங்களோடு மகனின் கரத்தினை பற்றிக் கேட்க,

கண்ணில் மட்டுமே உயிரை தேக்கி வைத்திக்கும் அப்பாவின் பேச்சினை அந்த சூழலில் மகுடேஸ்வரனால் மீறவே முடியவில்லை.

விளைவு.. அடுத்த ஒரே வாரத்தை மகுடேஸ்வரன் – இந்திரா திருமணம் நடந்தேறியது. நடத்திக்காட்டினார் மணிராதா. இந்திரா இவர்களின் அளவுக்கு வரவே முடியாத குடும்பத்து பெண். அவர்களின் வறுமை ஒன்றையே பிடியாய் கொண்டு, தன் கணவர் பக்கத்து தூரத்து உறவை வீட்டிற்கு மருமகளாய் கொண்டு வந்துவிட்டார் மணிராதா.

சிவகாமியும் முதலில் அதே வீட்டிலேயே இருக்க, மகுடேஸ்வரனோ இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துப் போனார். இதைக் கண்ட மணிராதாவோ “ஏன் சிவகாமி.. அவங்களுக்கு ஒரு நல்லது நடக்குற வரைக்கும் நீ ஏன் வெளிய இருக்கக் கூடாது??” என்று கேட்க, மீண்டும் அடுத்த பூகம்பம் வெடித்தது..

இந்திராவோ, மணிராதாவின் கைப் பாவையாகவே ஆகிவிட, அதன் பின்னே சிறிதொரு நாளில், இவர்களின் அப்பாவும் இறந்துவிட, அனைத்தும் முடியவும், வீட்டு சூழல் உணர்ந்து சிவகாமியே,

“கொஞ்ச நாள் நான் தனியா இருக்கேனே...” என்று சொல்லி அதே தெருவில் கொஞ்சம் தள்ளியிருந்த, சிவகாமிக்கு அவர்களின் அப்பா வீட்டில் கொடுத்த வீட்டில் போய் இருந்துகொண்டார்.

மகுடேஸ்வரன் என்ன சொல்லியும் சிவகாமி கேட்கவில்லை. கோபமாகக் கூட பேசிவிட்டார். ஆனால் சிவகாமி மசியவேயில்லை. சிவகாமி அச்சகத்திற்கு அப்போது இருந்து சிவகாமி பொறுப்பேற்றுக்கொள்ள, அடுத்து இந்திரா கர்பமுற, அந்த அந்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்..

“நான் சொன்னேனே.... பார்த்தியா...” என்று மணிராதா இந்திராவையும் மகுடேஸ்வரனையும் கொண்டாடி தீர்க்க, அப்படித்தான் பிறந்தாள் பமீலா..

இனி சிவகாமி இங்கே வரவே முடியாது என்று மணிராதவும் சரி, இந்திராவும் சரி நினைத்துக்கொண்டு இருக்க, யாருமே எதிர்பார்க்காது நிகழ்ந்த நிகழ்வு தான் சிவகாமி கர்ப்பம் தரித்து.

மகுடேஸ்வரனோ மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.. சந்தோஷத்தில் அழுதுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதுவோ அந்த பெரிய வீட்டில் இருந்த இரண்டு பெண்களும் பெரும் அடி.. மனதில் ஒரு பயம் கூட கொடுத்தது எனலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் சிவகாமி குழந்தையோடு இங்கே நுழையலாம் என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது.

ஆனால் சிவகாமி அன்றைக்கு பிறகு அந்த வீட்டிற்கு போகவுமில்லை. மகுடேஸ்வரன் எத்தனை முறை அழைத்தும், “வேணாங்க.. உங்களுக்குத் தான் சிரமம்...” என்று மறுத்தவர், பின் கடைசியாய் சென்றது மகுடேஸ்வரனின் மரணத்திற்கு தான்.

அதுவும் சென்ற ஆண்டு தான்.

இருபத்தி நான்கு வருடமாய் எந்த வீட்டின் வாசலை மிதிக்காது இருந்தாரோ, வெளியில் காட்டவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு வைராக்கியம் வைத்து இருந்தாரோ அதெல்லாம் தகர்த்து கமலியையும், சிவகாமியையும் அந்த வீட்டினுள் நுழைய செய்தது மகுடேஸ்வரனின் மரணம்..

யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு இது..
 
ச்ச... ஆனாலும் மணிராதா இப்படி வஞ்சம் பாராட்டி இருக்க வேண்டாம் சிவகாமி அம்மாவிடம். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க இறைவனின் விளையாட்டு வேறொன்றாக இருக்கிறது
 
Top