பெரியவர்கள் செய்த, செய்யும் தவறுக்கு சில நேரம் சிறியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு கடின சூழல் சந்திக்கும் நிலை வந்துவிடுகிறது. அந்த நிலை தான் கமலிக்கு.. இன்று நேற்றில்லை. அவள் பிறந்ததில் இருந்து.. இருபத்தி நான்கு வருடங்களாய்.
வனமாலியும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான்.. குடும்பத்தில் நடந்தவைகளை.. நடப்பவைகளை.. ஆனால் இனி நடப்பவதாவது நல்லதாய் நடக்கவேண்டும் என்பது மட்டும்தான் அவனுக்கு.. அதன்பொருட்டே இப்போது கமலியை தேடி வந்ததும்.
அதிலும் இந்த ஆறு மாதங்களாய் வனமாலியின் நடவடிக்கை அனைத்தும் வித்தியாசமாய் இருக்கிறது என்று வீட்டினர் அனைவரும் சொல்லிட, அதெல்லாம் அவன் பொறுட்படுத்துவதாகவே இல்லை.
‘யார்வேணா என்னவேணா சொல்லிக்கோங்க.. ஆனா எனக்கு எது நியாயமோ அதான் செய்வேன்.....’ என்றுவிட்டான் முடிவாய்.
ஆனால் அவன் முடிவுகளை செயல்படுத்த பெரும் தடையாய் இருப்பது கமலியே.. அவள் ஒருத்தியை சரி கட்டுவது என்பதே வனமாலிக்கு பெரும்பாடு...
குடும்பத்தில் அத்தனை பேரை சமாளிப்பவன்.. அவன் நடத்திக்கொண்டு இருக்கும் தொழில்களில் எத்தனை ஆட்களை சந்திக்கிறான்... எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறான்.. ஆனால் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் தான் இருக்கும் கமலியின் செயல்பாடுகள்.
இவள் இப்படிதான் செய்வாள் என்றே யூகித்து வந்தவன், அவன் நினைத்தது போலவே அவள் அமைதியாகவிட,
“வர புதன் கிழமை, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வந்தனாக்கு நிச்சயம்.. நம்ம மண்டபத்துல தான்.. கண்டிப்பா நீயும் அத்தையும் வரணும்..” என்றான் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தே..
“ம்ம்... எந்த மண்டபம்.. ஏன்னா உங்களுக்கு தான் ஆறு ஏழு கல்யாண மண்டபம் இருக்கே??” என்றாள் நக்கலாய்..
கமலிக்கு தெரியும், இவர்களின் குடும்பத்தில் ஒரு விசேசம் என்றால் அது எந்த மண்டபத்தில் நடக்கும் என்பது.
அப்படியிருந்தும் அவள் கேட்டது ஏன் என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை.. ‘நம்ம மண்டபத்துல...’ என்று சொல்லிவிட்டானாம். அதை குத்திக் காட்டவே அவள் அப்படியொரு கேள்வி கேட்டது.
“ஏன் உனக்குத் தெரியாதா???”
“ம்ம்ஹும்...” என்று தோள்களை குலுக்கிவிட்டு, பார்வையை கமலி அலட்சியமாய் திருப்ப, அதே நேரம் சிவகாமி
அழைத்துவிட்டார் அவளை..
அம்மாவிடம் இருந்து அழைப்பு என்றதுமே, வனமாலி முதலில் அங்கே சென்றுவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறான் என்பது புரிபட்டுவிட, வழக்கமாய் தன் கண் இடுக்கல் பார்வையை அவனை நோக்கி வீசியவள்,
“ஹலோ ம்மா...” என்றாள்.
“கமலி.. வனா அங்க வந்தானா???”
“ம்ம்..”
“கிளம்பிட்டானா??”
“ம்ம்ஹும்..”
“ஓ..!! பேசிட்டு இருக்கீங்களா???” என்று கேட்டவரின் குரலில் மெல்லிய நகை எட்டிப் பார்த்ததுவோ என்னவோ,
“இப்போ எதுக்கும்மா கால் பண்ண??” என்றாள் இவளோ குரலில் கடுப்பை தேக்கி.
“சரி சரி.. நான் தான் அங்க அனுப்பி வச்சேன்.. பார்த்துக்கோ கமலி.. கண்டிப்பா நம்ம போகணும்...” என்று சிவகாமி பேசிக்கொண்டே இருக்க,
“ம்மா மதியம் வீட்டுக்கு வந்துப் பேசிக்கிறேன்..” என்று வைத்துவிட்டாள்.
அவள் பேசும் வரைக்கும் காத்திருந்தவனோ, “உன்னோட கடுப்பை எல்லாம் ஏன் அத்தை மேல காட்டுற கமலி.. அவங்க இத்தனை வருசமா பட்டது எல்லாம் போதாதா..” என,
“இனியும் அப்படி பட்டுட கூடாதுன்னு தான்..” என்றவள், “தென்.. அவங்க என் அம்மா.. எனக்கு இருக்க ஒரே சொந்தம்.. என்னோட கோபமோ கடுப்போ இல்லை பாசமோ அவங்கக்கிட்ட மட்டும் தான் நான் காட்ட முடியும்..” என்றாள் முன்னிருந்த கடுப்பையும் அதிகரித்து..
அவளையே ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்தவன், “ம்ம்ம்ம்...” என்று ஒரு யோசனையோடு தலையை ஆட்டி,
“சரி.. நீயும் கண்டிப்பா வரணும்..” என்றான் திரும்ப.
“ம்ம்ம் சொந்த பந்தத்துக்கு எல்லாம் நீங்க மட்டும்தான் போய் இன்வைட் பண்றீங்களா??!!”
“இல்லை.. ஆனா முக்கியமானவங்களுக்கு நானும் போய் இன்வைட் பண்றேன்...” என்று அவள் பாணியிலேயே பதிலை சொல்ல,
“ஓகே...” என்றவள் திரும்ப மௌனமாகிவிட,
“ம்ம்ச் கமலி.... உன்னோட வலி எல்லாம் எனக்கு புரியுது.. ஆனா நீ இப்படி இருந்து என்னாகப் போகுது சொல்லு??” என்றான் கொஞ்சம் தன்மையாய்..
அவனின் குரலில் தோன்றிய இந்த மாற்றம், அவளுக்கு புதிது. ஏனெனில் பல வருடங்கள் விடுதி வாசத்தில் கழித்தவள், ஊருக்கு வரும்போது மட்டுமே இவர்களை எல்லாம் காண நேரும். அதிலும் வனமாலியை மட்டுமே அவளின் வீட்டில் காண நேரும். சொந்தம் என்பதில் அதாவது அவர்களின் குடும்பத்தில் ரத்த சொந்தத்தில் அவன் மட்டுமே வந்து செல்பவன்.
மகுடேஸ்வரன் இருக்கையில் எப்போதுமே வனமாலி அங்கே வந்து செல்வான். இப்போதும் அப்படித்தான். ஆனாலும் அப்போதும் சரி இப்போதும் சரி அவனின் வருகையோ பேச்சோ எதுவும் கமலிக்கு பெரியதாய் இருக்காது. அப்படி இருந்துவிடவும் கூடாது என்பதிலும் அவள் உறுதியாய் இருந்தாள்.
ஆனால் இன்றோ, வனமாலி அவனின் பாணியில் அல்லாது கொஞ்சம் இறங்கிவந்து தன்மையாய் ஏன் கரிசனமாய் கூட பேசிட,
‘என்னதிது...’ என்றுதான் பார்த்து வைத்தாள் கமலி..
“உன்னோட எல்லா கருத்தும் சரிதான்... பட் அத்தையை கொஞ்சம் நினைச்சு பாரேன்...”
“என்னோட இல்லை.. எங்களோட வலி.. நானும் என் அம்மாவும் அனுபவிச்ச.. அனுபவிக்கிற இந்த வலி, யாராலும் புரிஞ்சுக்க முடியாது.. அம்மாவுக்கு இதெல்லாம் கடந்த முப்பது வருசமா.. அதாவது அவங்களுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து. ஆனா எனக்கு?? நான் பிறந்ததுல இருந்து..
அப்போ எனக்கு உணர்ந்திருக்காது. ஆனா விபரம் தெரிய தெரிய.. நான் பார்த்தது எல்லாம்...” என்று பேசிக்கொண்டே போனவள், இதெல்லாம் ஏன் இவனிடம் நான் சொல்லிட வேண்டும் என்ற எண்ணம் எழவும் அப்படியே வார்த்தைகளை விழுங்கி, கண்களை இறுக மூடிக்கொள்ள, அவளின் வேதனையை அப்படியே வனமாலியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
“என்னால புரிஞ்சுக்க முடியும் கமலி.. நான்...” என்று ஆரம்பித்தவனை, கைகளை நீட்டி அவனின் பேச்சை நிறுத்தியவள்,
“இன்வைட் பண்ண வந்தீங்க... முடிஞ்சதுல்ல...” என்றாள் கிளம்பு என்ற தோரணையில்..
எத்தனை சொன்னாலும் இவள் கேட்கப் போவதில்லை. இப்போது தானே இங்கே வந்து உட்காந்து இருக்கிறாள், போக போக எல்லாம் புரியும்.. முக்கியமாய் என்னை புரியும்.. அப்போது இவளின் மனதும் மாறும் என்று வழக்கம்போலவே தனக்குள் சொல்லிக்கொண்டவன்,
“ஆனா நீ அத்தையோட வரணும்...” என்று விரல் நீட்டி சொல்லிவிட்டு செல்ல, அமர்த்தலாய் பார்த்துகொண்டு இருந்தாள் கமலி.
வனமாலி கிளம்பிச் சென்ற ஐந்தாவது நிமிடம், எழுந்து வெளியே வந்தவள் சங்கிலிநாதனிடம் “பார்த்துக்கோங்க...” என்றுமட்டும் சொல்லிவிட்டு தான் காரில் கிளம்பிட,
“ஆண்டவா நீதான் இவங்களைப் பார்த்துக்கணும்.. இனியாவது ஒரு நல்லது செய்யேன் ப்பா...” என்று இறைவனை துணைக்கு அழைத்தார் சங்கிலிநாதன்.
கமலிக்கு காலையில் இருந்த அமைதி இப்போதில்லை. முற்றிலும் இல்லை.. ‘நான் கேட்டேனா?? இல்லை நான் கேட்டேனா?? இவங்க எல்லாம் வந்து கூப்பிடலைன்னு யார் அழுதா...’ எனும்போதே,
‘பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ இவங்க எல்லாம் நாம குடும்பம் டா... அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்...’ எனும் சிவகாமியின் குரல் அவளுள் ஒலிக்க,
“சொந்தமாம் சொந்தம்... எங்க போச்சு இந்த சொந்தம் எல்லாம் இத்தனை வருசமா.. ஒரே ஊர்ல.. ஒரே தெருவில இருந்தாலும் கூட எங்க போச்சு இதெல்லாம் இத்தனை வருசமா.. ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போகாம வராம.. என் அம்மாக்கு ஒண்ணுன்னா ஏன்னு கூட கேட்காம. ச்சே...” என்று கடிந்தவளின் கையில் ஸ்டியரிங் படாத பாடு பட்டது.
மகுடேஸ்வரன் – சிவகாமி தம்பதியினரின் அருந்தவ புதல்வியே கமலி.. வனமாலி மகுடேஸ்வரனின் உடன் பிறந்த அக்கா மணிராதாவின் மகன்.. தம்பி மற்றும் தன்கையுண்டு. வந்தனா, கோவர்த்தன்.. இரட்டையர்கள். கோவர்த்தன்.. அவன் மனைவி பமீலா..
பமீலா வேறாரும் இல்லை.. மகுடேஸ்வரன் – இந்திரா தம்பதியினரின் புதல்வி.. இந்திராவோ, மணிராதாவின் கணவன் வழி உறவு.. ஆக அனைவரும் ஒன்றுக்குள் ஒன்று..
சிவகாமி.. கமலி தவற...
உறவுகள்... பிணைப்போடு இருந்தால் அது யாவர்க்கும் நலம்.. பிணக்குகளோடு இருந்தால் அது யாருக்குத்தான் நலம்.. இவர்களுக்குள் இருக்கும் பிணக்குகள் எல்லாம் மாறி என்றுதான் ஒரு பிணைப்பு வரும்..
வனமாலியின் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றிபெறுமா?? இல்லை வழக்கம் போலவே கமலி அதனை சுலபமாய் உடைத்துவிட்டு, தானும் தன் தாயும் என்ற கூண்டில் இருந்துவிடுவாளா??
யாரறிவார்... காலம் மட்டுமே பதில் சொல்லும்..