excellent
Niceநதியோட்டம் – 16
எங்கே சென்றிருப்பாளோ? என்ன செய்கிறாளோ? எதுவும் ஆபத்தா? என்ன விவரமென்று ஒன்றும் புரியாமல், அடுத்து என்ன செய்யவேண்டுமென தெரியாமல் பைத்தியம் போல அவளின் பெயரையே பிதற்றிக்கொண்டிருந்தான்.
மகனின் இந்த நிலையை கண்டு புருஷோத்தமனின் இதயம் பாசத்தில் துடித்தது. ஹர்ஷூ அவனது வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இந்த நிலை தன் மகனுக்கு வந்திருக்காதே என எண்ணாமல் அவரால் இருக்கமுடியவில்லை.
போலீஸ் உதவியை நாடலாம் என நினைக்கும் போதே சேகரும் வந்துவிட ஷக்தியை பார்த்து அதிர்ந்துபோனான்.
“டேய் ஷக்தி, ஏண்டா மச்சான் இப்படி உட்கார்ந்திருக்க. ஷக்தி இங்க பாரு...” என அசைத்து அழைக்கவும் பாய்ந்து சேகரை அணைத்துகொண்டான் ஷக்தி. அதிலேயே அவனது அலைப்புருதலும் தவிப்பும் புரிந்துபோக முதலில் ஷக்தியை நிதானமாக்கவேண்டும் என நினைத்தான் சேகர்.
தன்னிடமிருந்து அவனை பிரித்தவன், “ஷக்தி இப்படி நீயே கலங்கி போனா எப்படி? முதல உன்னை நீ ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நிதானமா யோசி. போலீஸ்க்கு போனா வீணான பேச்சுக்களும் சந்தேகங்களும் கிளம்பும். அதனால நம்மால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்வோம்...” என்றவன்,
“அப்பா, நீங்க சொல்லுங்க. ஹர்ஷூ எத்தனை மணிக்கு வெளில கிளம்பினா. உங்ககிட்ட என்ன சொல்லிட்டு போனா?. நடந்த எல்லாத்தையும் சொல்லுங்க. எதாச்சும் விஷயம் கிடைக்கும்...” சரியாக யோசித்து கேட்டான் சேகர்.
உடனே மடைதிறந்த வெள்ளம் போல காலையில் ஹர்ஷூவை பார்த்ததிலிருந்து பரமேஷ்வரன் அழைத்ததிலிருந்து இப்போது நடந்த வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடிக்க அதை கேட்டுகொண்டிருந்த ஷக்தியின் மூளை சுறுசுறுப்படைந்தது.
“டாட், நீங்க மாமாக்கிட்ட திரும்பவும் பேசினீங்களா?. எப்போ பேசினீங்க? என்ன பேசினீங்க? சரியா சொல்லுங்க...” எனவும் புருஷோத்தமன்,
“ஆமாம் ஷக்தி. அவனே மதியம் ஒரு பன்னிரெண்டு மணிக்கு போன் செய்து ஹர்ஷூ எங்கன்னு கேட்டான். நானும் எதுக்கு அவனை சங்கடப்படுத்தனும்னு தூங்கறான்னு சொன்னேன். அப்போதான் அவனுக்கு நிம்மதியா இருந்தது. வேற ஒன்னும் அதுக்கப்றமா பேசலை...” என முடித்தார்.
அவனது மனம் அப்படியும் இருக்குமோ என நினைத்து சேகரிடம் தன் சந்தேகத்தை கூற சேகரும் ஏற்பாடு செய்தான். ஷக்தியின் உமாமகேஷ்வரனுக்கு நன்றி கூறி அனுப்பிவிட்டு தந்தையிடம் சொல்லிவிட்டு சேகரோடு கிளம்ப ஆயத்தமானான்.
நிஷாந்திற்கும் அழைத்துப்பார்த்தான். அவனது மொபைலும் சுவிட்ச் ஆஃபில் இருக்க தன்னுடைய யூகத்திற்காக பெரியவர்களை சங்கடப்படுத்த வேண்டாமென நினைத்துக்கொண்டிருக்க அவனது சந்தேகத்தை உறுதி செய்வதை போல வந்தது திருவேங்கடத்தின் அழைப்பு.
அழைப்பை ஏற்றவன் இங்கிருக்கும் நிலவரத்தை அவருக்கு தெரியப்படுத்தாமல் வரவழைத்து கொண்ட இயல்பான குரலில்,
“சொல்லுங்க மாமா, எப்படி இருக்கீங்க? அத்தை நல்லா இருக்காங்களா?...” என்றான்.
“அதெல்லாம் எல்லாரும் நல்லா தான் இருக்கோம். ஏண்டா மத்யானத்துல இருந்து உனக்கு கூப்பிடறேன். உன்னோட லைன் கிடைக்கவே இல்லை. எப்போ ஊருக்கு வந்த? வந்தவன் வீட்டுக்கு இன்னும் வரலை...” எனவும் குழம்பியவன்,
“மாமா என்ன சொல்றீங்க?. நான் இங்க ஆபீஸ்ல இருந்து இப்போதான் வீட்டுக்கு வந்தேன்...”
“ஓஹ், நீ வரலையா? சரி, அதைவிடு. ஹர்ஷூவை பார்த்ததும் நீயும் வந்திருப்பன்னு நினச்சேன். அவளை மட்டும் அனுப்பிருக்க போல?...” என்றவர் உடனே,
“உன்னை யாரு இன்னைக்கு இங்க ஹர்ஷூவை தனியா அனுப்ப சொன்னது? நிஷாந்தோட அவளை இன்னைக்கு இங்க பார்த்ததும் எனக்கு கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு. அதான். சரி. நீ எப்போ வர ஊருக்கு?...”
அவரின் பேச்சில் அவர் கூறிய இன்றைக்கு என்ற வார்த்தையில் அவனது சந்தேகம் வலுத்தது. ஏற்கனவே பரமேஷ்வரனின் பேச்சில் எழுந்த சந்தேகம் இப்போது திருவேங்கடத்தின் கூற்றில் உறுதியானது.
அப்போ இவருக்கும் ஏதோ விஷயம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என நினைத்தவன் அவரிடம் உடனே வருவதாக கூறிவிட்டு ப்ருத்வியை பற்றியும் விசாரித்துவிட்டு வைத்துவிட்டான்.
அடுத்த இரண்டரை மணி நேரத்தில் கோவையில் ஹர்ஷூவின் வீட்டில் இருந்தான் ஷக்தி. அவனுடன் சேகரும். அந்த இரண்டரை மணி நேரமும் அவன் தவித்த தவிப்பு வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவில் இருந்தது.
ஹர்ஷூவின் மேல் அதுவரை இருந்த காதலை கோபமெனும் மேகம் சூழ்ந்துகொள்ள கொஞ்சம் கொஞ்சமாக தனது நிதானத்தை இழந்துகொண்டிருந்தான்.
அணைபோட்டு வைத்திருக்கும் ஆத்திரம் எப்போது வேண்டுமானாலும் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறலாம் என்னும் அளவிற்கு அவனது கோவம் பல்கி பெருகிக்கொண்டிருந்தது.
திடீரென்று வந்து நிற்கும் மாப்பிள்ளையை பார்த்து திகைத்துப்போன பரணி அவனிடம் என்ன கேட்டும் பதிலில்லாமல் போக உடனே பரமேஷ்வரனுக்கு தகவலை கூறி விரைந்து வருமாறு சொல்லிவிட்டார்.
ஹாலில் உள்ள சோபாவில் தலை கலைந்து நலுங்கிய உடையில் இறுக்கமான பாவனையோடு அமர்ந்திருந்த அவனது தோற்றமே பரணிக்கு உள்ளூர ஒரு நடுக்கத்தை குடுத்திருந்தது.
அவனிடம் பேச அஞ்சி ஒதுங்கியே நின்றார் பரணி. வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமர்ந்திருந்த ஷக்தி பரமேஷ்வரன் வந்த பிறகு சேகர் அவர்கள் குடும்பத்தோடு பேசட்டும் தான் ஒதுங்கியிருப்போக என எண்ணி கேட்டிற்கு வெளியில் போய் நின்றுகொண்டான்.
பதட்டத்தில் வேகமாக வந்திருப்பார் போல. அவரது முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையே சொல்லியது.
“வாங்க மாப்பிள்ளை...” என மரியாதையோடு அழைத்த அவருக்கு அதற்கு மேலே பேச இடமளிக்காமல்,
“எங்கே உங்க பொண்ணு?...” என கேட்டதும் பரணியும் பரமேஷ்வரனும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
அந்நேரம் செல்வமும், சரஸ்வதியும் எதார்த்தமாக அங்கே வர ஷக்தியின் வருகை அவர்களுக்கும் ஆச்சர்யம். ஆனாலும் வந்ததுமே புரிந்தது எதுவோ பிரச்சனை என்று.
காரணம் எதுவாக இருக்குமென யோசிக்க அவர்களுக்கு தேவையில்லாமல் போனது. நிஷாந்தையும், ஹர்ஷூவை பற்றி அறிந்தவர்களாகிற்றே. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றனர்.
பரமேஷ்வரனும், பரணியும், “தன் மகள் இந்த நாளை மறக்கவில்லையா? கடந்த வருடங்களை போல இந்த வருடமும் அங்கே சென்றுவிட்டளா?...” என ஒரே போல எண்ணியவர்கள் பெண்ணை நினைத்து பெருமை கொள்வதா, வருத்தம் கொள்வதா என தெரியாமல் கலங்கி நின்றனர்.
“இன்னைக்கு ஹர்ஷூ இங்க வரேன்னு எதுவும் சொன்னாளான்னு எதுக்காக கேட்டீங்க? அப்போ ஹர்ஷிவ்தா இங்க இன்னைக்கு வருவான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதுக்கான அவசியம் என்ன?...” அவனது கேள்வியின் கூர்மை அவர்களை குத்தி கிழித்தது.
அதே நேரம், “கௌரவ்...” என்ற தீனமான குரலில் திரும்பி பார்த்தவன் அங்கே வாசலில் ஹர்ஷூ நிற்பதை கண்டதும் அவளை நோக்கி ஓடினான். உடன் நிஷாந்தும் அவளை கைத்தாங்கலாக பிடித்துகொண்டிருந்தான்.
அவனின் பிடியை விட்டு விலகி ஹர்ஷூவும் தட்டுத்தடுமாறி ஓடி வந்து பாய்ந்து ஷக்தியை கட்டிகொண்டாள். இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணீரோடு இறுக்கிக்கொள்ள ஒருகணம் தான் அடுத்த நொடி அவளை தன்னிடமிருந்து பிரித்து பளாரென ஒரு அறை விட்டான்.
அனைவரும் அதில் அதிர்ந்து போய் பார்க்க பரணி பொங்கிவிட்டார். எத்தனை தைரியம் இவனுக்கு என் மகளை என் முன்னாள் கைநீட்டி அடிக்க என மனம் குமைந்தவர்,
“ஷக்தி...” என பெருங்குரலெடுத்து கத்த இதுவரை மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு மறு பேச்சு பேசாத பரணியின் இந்த விளிப்பில் ஷக்தியை தவிர அனைவரும் பதறினர்.
ஷக்தியால் பரணியின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் ஹர்ஷூவை கண்டதுமே அதுவரை இருந்த தவிப்பு அனைத்தும் கோவமாக உருவெடுத்து அறைந்துவிட்டான். ஆனாலும் ஷக்தி தனது கீழ்த்தரமான செயலில் அவனே வெட்கிபோயிருந்தான்.
“கௌரவ். உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன். அதுக்காக என்னை அடிக்காத. ரொம்ப வலிக்குது...” என கன்னத்தை தடவிக்கொண்டு மீண்டும் அவனை கட்டிக்கொள்ள,
“பைத்தியக்காரி. என்னை இப்படி அலைய வச்சிட்டியேடி. உன்னோட பைத்தியக்காரத்தனத்தால என்னை நீ லூசாக்கியிருப்ப...”என தன் பங்குக்கு தானும் அவளை அணைத்துக்கொண்டான். இனி உன்னை விட்டு ஒரு ஷணமும் பிரியமாட்டேன் என்பது போல.
மெல்லிய புன்னகையோடு, “நான் பைத்தியக்காரின்னு ரொம்ப சீக்கிரமா கண்டுபிடிச்சுட்ட கௌரவ். ஆமாம் உன்மேல நான் பைத்தியமா இருக்கேன்...” என்றவளால் அதற்கு மேல் நிற்கமுடியாமல் துவள அவளை கைகளில் அள்ளிக்கொண்டு பக்கத்திலிருக்கும் அறையில் படுக்க வைத்துவிட்டு நிஷாந்திடம் பேச வெளியில் வந்தான் ஷக்தி.