அத்தியாயம்: 15
மருத்துவமனையில் இருந்த சமீராவின் ஆழ்ந்த தூக்கத்தை அந்த ஜன்னலில் தெரிந்த வெளிச்சம் கலைத்தது.. கண்கள் தூக்கத்தை விட மறுக்க, மனமோ அது எதனால் வந்த வெளிச்சம் என்று பார்க்க சொன்னது..
கண்களை லேசாக தட்டி தட்டி விழித்தவள், ஜன்னலை நோக்கி பார்வையை திருப்பினாள் சமீரா.. அந்த வெளிச்சம் இப்பொழுது இல்லை.. அதனால் மெதுவாக எழுந்து நடந்து, ஜன்னலின் அருகே சென்றுப் பார்த்தாள்..
அங்கிருந்த சாலையோர விளக்கின் வெளிச்சத்தில், ஒரு கார் இவளின் கண்களுக்கு புலப்பட்டது..
ஜன்னலில் இருந்து திரும்பி கோவிந்தையும், சமர்த்தையும் பார்த்தாள்.. இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்..
அந்த நள்ளிரவில் கோவை மாநகரமே தூங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மருத்துவமனைக்குள் நுழைந்திருந்த காரை சிறிது யோசித்தபடியே பார்த்திருந்தாள்..
அதிலும் அந்த கார் மருத்துவமனையின் பின் வாசலில் நின்றிருந்தது, அவளின் யோசிப்பை அதிகரிக்க செய்தது..
அவளின் பத்திரிக்கை அறிவு அங்கு சென்றுப் பார்க்க சொன்னது..
அதனால் அந்த அறையை விட்டு வெளியே வந்தவளின் கண்களுக்கு, அமர்ந்தவாக்கிலேயே உறங்கி கொண்டிருந்த செவிலியர் இருவரை தவிர வேறு யாரும் தென்படாததால், அங்கிருந்த பின் பக்க படியில் வேகமாக இறங்க தொடங்கினாள்..
அந்த காரில் நோயாளிகள் யாரேனும் இருந்திருந்தால், அந்த நோயாளிக்காக இந்நேரம் மருத்துவமனை ஊழியர்கள், ஒரு ஸ்ட்ரச்சரோ, இல்லை வீல் ச்சேரையோ எடுத்து வந்திருப்பார்கள்.. குறைந்த பட்சம், அதிலிருந்து நோயாளியை நடத்தியாவது அழைத்து வந்திருப்பார்கள்..
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.. அதைப்பற்றி தெரிந்துக்கொண்டே ஆகவேண்டும் என்ற ஆர்வம் சமீராவிற்கு தலை தூக்கியது.. அதனால் வேகமாக படி இறங்கி சென்றாள்..
கடைசிப்படியை அடைந்ததும், சுவற்றின் பின்னே ஒளிந்துக்கொண்டு, லேசாக தலையை மட்டும் நீட்டிப் பார்த்தாள்.. அங்கேயும் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றாள்..
ஒரு வேனின் பின்னால் ஒளிந்துக்கொண்டு, அங்கு வந்திருந்த காரை நோட்டம் விட்டாள் சமீரா.
சமர்த்துடன் இருந்தபோது, அவனை தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை.. சமர்த்துடன், தனியே இருக்க கிடைத்த நிமிடங்களை, ரசித்து அனுபவித்திருந்தாள் சமீரா.
கோவிந்த் வந்த பிறகு தரையில் படுத்து, உறங்குவது போல் பாசாங்கு செய்யும் போது தான், சமர்த் அடிப்பட்டு கிடக்கும் போது காவல் நிலையத்திற்கு அழைத்து சொல்லியும் ஒருவருமே வரவில்லையே..!! என்று புரிந்தது..
‘இங்கு இந்த மாவட்டத்தின் ஆட்சியர் அடிபட்டு கிடக்கிறார்..!!’ என்று சொல்லியும் ஒருவருமே வராதது, அவளுக்கு சற்று பயத்தை கொடுத்தது.. இதில் ஏதோ சதி இருப்பதாகவும் பட்டது..‘ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பிரஜைகளின் நிலை என்னவாக கூடும்.’ என்றும் சிந்தித்தபடியே உறங்கிவிட்டாள்..
ஜன்னலில் தெரிந்த ஒளியில் அவளின் புலன்கள் விழித்துக்கொண்டதால், இதோ இப்பொழுது, அந்த காரில் உள்ளவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்..
அந்த காரில் இருந்து இறங்கியவன் விக்கி..!!
விக்கியைப் பார்த்து சற்று அதிர்ந்த சமீரா, அந்த காருக்கு அடுத்து இருந்த மற்றொரு காரின் பின்னால் நன்றாக ஒளிந்துக்கொண்டு, அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்..
“டேய்..!! அவன் எந்த ரூம்ல இருக்கான்னு போய் பாரு..” என்ற விக்கியின் குரலில் நடுங்கினாள் சமீரா..
விக்கி சமர்த்தை தான் தேடுகிறான் என்று புரிந்துக்கொண்டாள்..
“அண்ணே..!! இப்போ உள்ளார போனா சரியா இருக்கும்மாண்ணே..!! போலீசு வந்ததுமே போலாமே..!!” என்றான் விக்கியினுடன் வந்தவன்..
“உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு தொழில் பண்ண வந்தனே..!!” என்று தலையில் அடித்துக்கொண்டான் விக்கி..
“அந்த போலீசுக்கு போனாவது போடேண்டா..!!” – விக்கி.
“இதோண்ணே..!!” என்று அவனின் கையில் இருந்த அலைபேசியை இயக்க தொடங்கினான்.. அதற்குள்ளாகவே ஒரு இருச் சக்கரவாகனம் அங்கே வந்து நின்றது.. அந்த வண்டியில் வந்தவர்கள் இரு காவலர்கள்..
அவர்களின் உடையைக்கொண்டு, வந்த இருவருமே இன்ஸ்பெக்டர்கள் என்பதைப் புரிந்துக்கொண்டாள் சமீரா..
“இங்க பாரு விக்கி உன் வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்பற வழிய பாரு..!!” என்று சொன்னார் ஒரு காவலர்..
“சரி..சரி..!! இன்ஸு..!! ரொம்ப அலட்டிக்காத.. எந்த ரூம்புல இருக்கான் அந்த நாயி..!!” என்றான் விக்கி..
விக்கியின் தகாத வார்த்தைகளை கேட்டு பல்லைக்கடித்தாள் சமீரா..!!
“நீ முன்னாடி போ விக்கி..!! யாராவது ஏதாவது கேட்டா, நாங்க பார்த்துக்கிறோம்..”
“ம்ம் சரி.. இன்ஸு..!!” – விக்கி.
அவர்களின் பின்னே எப்படி செல்வது என்று புரியவில்லை சமீராவிற்கு.. சில நொடிகள் யோசித்தாள்..
எழுந்து வரும்போதே சமர்த்தின் அலைபேசியை எடுத்து வந்திருந்தாள்.. அதில் இருந்து கோவிந்திற்கு அழைப்பு விடுத்தாள்..
தூக்க கலக்கத்திலேயே அலைபேசியை எடுத்தான் கோவிந்த்.. அதில் அவனுடைய அம்மா சுமித்ரா அழைத்திருந்தார். ‘இன்னும் சற்று நேரத்தில் அங்கே வந்துவிடுவோம்’ என்று சொன்ன சுமித்ரா, சமர்த்தின் உடல் நிலையையும் கேட்டறிந்தாள்..
சமீராவிற்கு கோவிந்தின் அலைபேசியில் இருந்து என்கேஜ்ட் டோன் கேட்டதும் கடுப்புடன், அலைபேசியை அணைத்தாள். திரும்ப திரும்ப கோவிந்தின் எண்ணிற்கு அழைக்க முயற்சித்தாள்.
சுமித்ராவினுடன் பேசிக்கொண்டிருந்த கோவிந்தின் காதுகளுக்கு, மற்றும் ஒரு கால் வரும் டோன் கேட்டு, சுமித்ராவிடம் போனை வைப்பதாக சொல்லிவிட்டு, யாரிடம் இருந்து கால் வருகிறது என்று பார்த்தான்.. அதில் சமர்த்தின் புகைப்படம் ஒளிர்ந்ததைக் கண்டதும், சமர்த்தை திரும்பி பார்த்தான். அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பது புரிந்தது.. பின், சமீரா படுத்திருந்த இடத்தைப் பார்த்தன்.. அந்த இடத்தின் வெறுமை, அவளின் அழைப்பை வேகமாக ஏற்க வைத்தது..
“மீரா..!! எங்க இருக்க? எனி ப்ராப்ளம்?”
“லிசன் மிஸ்டர்..!! செக் யூவர் மெசெஜ்..!! ஐ கான்ட் டாக் நவ்..!!” என்று அவசரமாக கூறிவிட்டு, அலைபேசியை அணைத்தாள் சமீரா..
அவளின் அவசரம் கோவிந்தின் கண்களிலிருந்து தூக்கத்தை விரட்டியது..
விக்கியின் வரவை கோவிந்திடம் தெரியப்படுத்தியவள், அந்த அறையின் கதவை நன்றாக தாழ் போட்டுக்கொள்ள சொன்னாள்..
மேலும் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்கவேண்டாம், காவலர்களும் விக்கியின் ஆட்கள் தான் என்பதையும் தெரியப்படுத்தினாள் சமீரா.
அவளின் பாதுகாப்பை கேட்டறிந்த கோவிந்த், தன் அன்னை இன்னும் சற்று நேரத்தில் அங்கே வந்துவிடுவார் என்பதை தெரியப்படுத்தியவன், அவர்களுடன் சமர்த்தின் அறைக்கே திரும்ப வருமாறு வேண்டினான்..
சமீராவும் மறுப்பேதும் சொல்லாமல், கோவிந்தின் அன்னைக்காக (சுமித்ராவிற்காக) காத்திருக்க ஆரம்பித்தாள்..
முன் வாசலில் சமீரா நிற்பதாக சுமித்ராவிற்கு தகவல் சொன்னான் கோவிந்த்.. இந்த இரவு நேரத்தில் தனியே அவளை நிற்க வைத்ததற்கு கடிந்துக்கொண்டவரிடம், சுருக்கமாக நிலைமையை எடுத்துக்கூறினான்..