அத்தியாயம்: 14
இரயில்நிலையத்தின் அருகில் இருந்த ஒரு பிரபல மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தான் சமர்த்..
அருகில் சமீரா அவனையேப் பார்த்திருந்தபடி அமர்ந்திருந்தாள். அவளின் கண்களிலோ அவன் மீதான அளவில்லா காதல்...
அவனுக்கு பின்னந்தலையில் அடிபட்டிருந்ததால் சிறு அறுவைச்சிகிச்சை நடந்திருந்தது. அவனுடைய வண்டி அவனின் காலில் விழுந்ததால் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதற்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அறுவைசிகிச்சை முடிந்து அவனை அப்பொழுதுதான் தனி அறைக்குள் மாற்றியிருந்தனர் மருத்துவர்கள்.
சமீராவுடன் பயணம் செய்த வண்டியில் இருந்து கீழே விழுந்த சமர்த், சமீராவிற்கு அடிபடாதவாறு பார்த்துக்கொண்டான்..
அவள் இடையில் ஏற்கனவே இருந்த கையினால், அவளை அப்படியே தூக்கியவாறே வண்டியில் இருந்து விழுந்தான். சமர்த் கீழிருக்க, சமீரா அவன் மேல் விழுந்து இருந்தாள்.
சமீரா வேறு எந்தப்பக்கமும் விழுந்துவிடக் கூடாது என்று நினைத்திருந்த சமர்த், அவளை இறுக்க அணைத்துப் பிடித்திருந்தான். அதனால் சில சிறு சிறு சிராய்ப்புகள் தவிர வேறு எந்த அடியும் அவளுக்கு படவில்லை.
சமீரா ஒரு வயது குழந்தையாக இருந்த போது நடந்த பேருந்து விபத்தின் போது, குழந்தை மீராவுக்கு அடிபடாதவாறு தாய் பவித்ரா பார்த்துக்கொண்டாள். அந்த சம்பவம் சமீராவின் நினைவில் இருக்கும் என்று சொல்வது சிறிதளவும் நியாயமில்லை. அதைப்பற்றி அவளுக்கு புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் இப்பொழுது சமர்த், அவளுக்கு அடிபடாதவாறு தாங்கிபிடித்து அவளைக் காத்தது சமீராவிற்கு நன்றாக புரிந்தது. அந்த அணைப்பில் தாயின் கதகதப்பையும் நன்றாகவே உணர்ந்தாள்.
அதிலும் அவன் கீழே விழுந்ததும் அவளுக்கு ஏதும் அடிப்பட்டிருக்கிறதா என்று அவளை ஆராய்ந்துப் பார்த்து விட்டு மயங்கியது, அவளின் கண்களில் நீரை வரவழைத்தது..
அவன் மயங்கியவுடன் சிறிது நேரம் அவனின் தலையை அவளின் மடியில் சாய்த்து வைத்து, அவனின் அடர்ந்த சிகையில் கைகளை நுழைத்து கோதிக் கொடுத்தாள். நெற்றியில் கைவைத்து அவனின் புருவங்களை நீவி விட்டாள்.
சில வருடங்களாக அவனுடனே மனதளவில் பேசியே வாழ்க்கையை கழித்தவள் அவள்.. இன்று அவனின் அருகாமை, அவளின் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. அதனால் சமர்த்தை ரசித்துப் பார்த்திருந்தாள்.
அவன் மயங்கியிருப்பது எல்லாம் அவளின் மனதிற்கு புரிபடவேயில்லை.. அவனுக்கு உடனே மருத்துவ உதவி தேவை என்பதையும் அவள் புரிந்துக்கொள்ளவில்லை.
அவன் நெற்றியை தடவிக்கொடுத்த சமீராவின் கைகள் மேலும், அவனின் நாசி, உதடு, கன்னம் என்று முன்னேறின.
சிலபல நிமிடங்கள் சமீராவின் தடவல்கள் தொடர்ந்தன.. சில நிமிடங்கள் கழித்து சமீராவின் தொடை ஈரத்தை உணர்ந்ததால் சமீரா நடப்புக்கு திரும்பினாள்.
அந்த ஈரம் சமர்த்தின் தலையில் இருந்து வந்த உதிரம் என்பதை அறிந்து, அவனின் கைபேசியை எடுத்து ஆம்புலன்ஸ் சர்விஸுக்கு அழைத்தாள். பின் காவல் நிலையத்திற்கும் அழைத்து தகவல் சொல்லி விட்டு, ஆம்புலன்ஸ் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
அதுவரை அவளின் மடியிலேயே அவனை வைத்திருந்து, மேலும் உதிரம் வெளியேறிவிடாதவாறு அழுத்தி பிடிக்க முனைந்தாள். அதில் அவளுக்கு தோல்வியே கிட்டியதால் அவனின் தலையை தூக்கிப் பிடித்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
இவர்களின் வண்டி சென்றுக்கொண்டிருந்த அதே (அதி)வேகத்திலேயே கீழே விழுந்ததால் அதில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்று, அவர்களை துரத்தி வந்த வேனில் இருந்தவர்கள், அவர்களாகவே முடிவு செய்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
அந்த வண்டியின் அருகே சென்றுப் பார்க்க கூட வேனில் உள்ளவர்கள் முனையவில்லை.. உயிரை எடுக்க வந்தவர்களிடமிருந்து ‘உதவி’ என்ற செயல் கிடைக்கும் என்று சமீராவும் எதிர்பார்க்கவில்லை.
வார நாளாக இருந்ததால் அந்தப் பகுதியிலும் சில வாகனங்களே சென்றுக்கொண்டிருந்தது. அதுவும் இவர்களின் வண்டி கீழே விழுந்த போது அந்த ஆம்னிவேன் தவிர வேறு போக்குவரத்து வாகனங்கள் எதுவுமே செல்லவில்லை.
அந்த தனிமை சமீராவிற்கு மிகவும் வசதியாய் இருந்தது. சமர்த்தை ஆம்புலன்ஸ் வரும் வரை மடியிலேயே வைத்திருந்தாள்.
சிலபல நிமிடங்கள் காத்திருப்பிற்கு பிறகு வந்த ஆம்புலன்சில் சமர்த்துடன் அவளும் ஏறிக்கொண்டாள்.
சில முதலுதவிகள் சமர்த்திற்கு ஆம்புலன்சிலேயே செய்யப்பட்டு, பின் மருத்துவமனையில் அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டது.
அதுவரை சமீராவும் மருத்துவமனையிலேயே இருந்தாள்.
சமர்த்தின் அலைபேசிக்கு கோவிந்த் தொடர்புக்கொள்ளும் வரை தன்னை சமர்த்தின் துணையாகவே நினைத்திருந்தாள் சமீரா.
கோவிந்தின் அழைப்பில் சமீரா தன்னுணர்வுக்கு மீண்டாள், கூடவே அவளுடைய நிமிர்வும் மீண்டது.
கோவிந்தின் அழைப்பை ஏற்க முதலில் அவள் மனது இடம் அளிக்கவில்லை.. சமர்த்தின் அலைபேசியில் ஒளிர்ந்த கோவிந்தின் புகைப்படத்தையே சில நொடிகள் வெறித்திருந்து விட்டு, கடைசி வினாடியில் அதை எடுத்து காதுக்குக் கொடுத்தாள் சமீரா..
“ஆத்துக்கு போயிட்டியா டா சமீர்? நேக்கு ஆபீஸ்லேர்ந்து கால் வந்துடுத்து.. அதான் நோக்கு லேட்டா கால் பண்றேன்.. “ என்று சமீரா பேசுவதற்கு இடமளிக்காமலே தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் கோவிந்த்.
சற்று நேரத்திலேயே பொறுமையிழந்த சமீரா, “ஹ..ல்.லோ..ஓஓஓ..!!!” என்று சத்தமாக பல்லைக்கடித்தாள்..
சமர்த்தின் எண்ணிலிருந்து ஒரு பெண்ணின் குரலை சற்றும் எதிர்பார்த்திராத கோவிந்த், “ஹே..!! யார் பேசறது..?” என்று கேட்டான் வேகமாக..
“திஸ் இஸ் சமீரா..!!”