அத்தியாயம்: 13
தங்களிடம் அதிரடியாக விடைப் பெற்று கிளம்பியவளை செய்வதறியாது பார்த்திருந்தனர் அவர்கள்.. அவள் கிளம்புவாள் என்று ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பார்த்திருந்த கோவிந்த், அவள் இவ்வளவு விரைவாகவும், அதிரடியாகவும் கிளம்புவாள் என்று சற்றும் எதிர்ப்பார்த்தானில்லை..
அவள் வண்டியின் பின்னால் சென்று பேச முயன்ற சமர்த்திற்கு இறுக்கமான ஒரு பார்வையை பரிசாக தந்துவிட்டு வண்டியை மிக வேகமாக ஓட்டிச் சென்றாள் சமீரா.
காவலர்களிடம் அவளுடைய பெயர் மற்றும் தன்னைப் பெற்றவர்களின் விவரங்களை சொல்லும்போது கோவிந்திற்கு அலுவலக சம்பந்தமாக அலைபேசியில் அழைப்பு வந்திருந்ததால், அவனால் அவற்றை கவனிக்க முடியாமல் போனது..
சுருக்கமாக பேசி விட்டு வந்த கோவிந்திற்கு அவள் பணியிடத்தின் முழுவிலாசம் மற்றும் அவளின் முகவரி மட்டுமே கிடைத்ததால் அதை அவனுடைய அலைபேசியில் அவசர அவசரமாக பதிவு செய்திக்கொண்டான்.
சமர்த்திடம் மற்றொரு காவலர் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தபடியால் அவனாலும் அவளுடைய முழுப் பெயரின் விவரம் தெரிந்துக்கொள்ள முடியாமல் போனது.. அதைப் பற்றி அவனுக்கு துளியும் அக்கறை இருக்கவில்லை என்பதே உண்மை.
அவனைப் பொறுத்தவரை அவளுடைய அலைபேசி எண் தன்னிடம் இருப்பதே போதுமானது என்று எண்ணியிருந்தான். அதையும் அவள் எரித்துவிட்டு செல்லும் போது தான், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் சமர்த்..
“சமீர்..!! விடுடா எப்படியும் இந்த ஊர்ல தானே இருக்கப் போறா.. பார்த்துக்கலாம் விடு.. நான் எதுக்கும் ‘டெய்லி நியூஸ்’ல போய் விசாரிச்சுட்டு வரேன். மீராவைப் பார்க்க முடியாவிட்டாலும் அவளோட பிரண்டு(விமலா) இருப்பா இல்லை, அவாளைப் பார்த்து பேசிட்டு வரேன்.. நீ வொரி பண்ணிக்காம உன் வேலையை கவனி..” என்று கூறினான் கோவிந்த்.
“ஓகே கோவிந்த்..!! நாளைக்கு நைட் ட்ரைன்ல உனக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யவா?”
“ம்ம் ஓகே சமீர்..!! வா நாம குளிச்சுட்டு ஆத்துக்கு போலாம்.. நோக்கு டைம் ரொம்ப ஆயிடுத்து..” என்றபடியே இருவரும் குளிக்க சென்றனர்.
இருவரும் வீட்டிற்கு சென்றதும் சமர்த் அவனுடைய அலுவலக வேலையை கவனிக்க செல்ல, கோவிந்த் ‘டெய்லி நியூஸ்’ இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அங்கு அவனுக்கு வேண்டிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால் வீட்டிற்கே கிளம்பி சென்றான். அவனுக்கு சமீராவை எப்படி நெருங்குவது என்றே தெரியவில்லை.
இந்த வாரக் கடைசியில் கோவைக்கு திரும்ப வந்து சமீராவின் தோழியை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற உறுதியுடன் தான் இப்பொழுது வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.
அதற்குள்ளாகவே சமர்த் அவளை சந்தித்து விடுவான் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே..
மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்த சமர்த், அந்த மாவட்டத்தில் இருக்கும் சில காவல் துறை உயர் அதிகாரிகளை சந்திக்க விரும்பி அனைவரையும் மதியம் நடைபற இருக்கும் கூட்டத்திற்கு (meeting) அழைத்திருந்தான்.
“வணக்கம்! இந்த மாவட்டத்திற்கு நான் எப்படி புதிதோ அதேப் போல் தான் ஒரு ஆட்சியராக இருப்பதுவும் புதிது தான். இது எனக்கு முதல் அநுபவம். புதிதாக நான் இங்கே வந்திருப்பதால் உங்கள் அனைவரின் உதவியும், ஒத்துழைப்பும் எனக்கு எப்போதுமே தேவை.” என்று ஆரம்பித்தான் சமர்த்.
“கண்டிப்பாக எங்க ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதுமே கிடைக்கும் சார்..!!” என்றார் அங்கிருந்த அதிகாரி.
“நன்றி..!!” என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தான்.
சில நொடிகள் கழித்து, “இரண்டு நாட்கள் முன்னாடி வால்பாறை அருகே இருக்கும் மருத்துவமனையில் ஒரு பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்டது உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று பேசியவனை இடையிட்டார் மற்றொரு அதிகாரி.
“சார்..!! சுட்டவனே சரணடைஞ்சுட்டானே..!! கேசை சீக்கிரம் முடிச்சுடுவோம்..”
அவரையே பார்த்திருந்த சமர்த், “சார் ப்ளீஸ்..!! நான் பேசறதை முழுசா கேட்டுட்டு உங்களோட ஒபினியனை ஷேர் பண்ணிக்கங்க..” என்றான்.
“சாரி சார்..!!”
ஒரு சிறு தலையசைவில் அவரின் மன்னிப்பை ஏற்று மேலே தொடர்ந்தான் சமர்த்.
அந்த கொலையை சரண் அடைந்தவன் செய்யவில்லை என்றும் அந்த கொலையை செய்தவன் விக்கி என்பதை அவர்களிடம் பகிர்ந்துக்கொண்டவன், அன்று நடந்தவைகளை அவர்களிடம் ஆதி முதல் அந்தம் வரை கூறினான்.
அடுத்தடுத்து மூன்று கொலைகளை பார்த்திருந்ததால் சமீராவையும் ஏதாவது செய்து விடுவார்களோ என்று ஏற்கனவே பயந்திருந்தான் சமர்த்.
(லோகுவும் சேரனும் சாலையில் விபத்தால் மரணமடைந்தனர் என்று சொல்லப்பட்டிருந்தாலும் சமர்திற்கு அந்த விபத்தே திட்டமிட்டு நடந்ததோ என்ற சந்தேகம் இருந்ததால் அந்த மரணங்களையும் கொலை என்று நினைத்திருந்தான்.)
அதுவரை சகாயம் மற்றும் விக்கியின் விவரங்களை காவல் துறைக்கு கொண்டு செல்ல யோசித்திருந்தவனின் மனதில் சமீராவைக் குறித்த பயம் அதிகரித்ததால் சற்றும் தாமதியாமல் காவல் துறையினரின் உதவியை நாடினான் சமர்த்.