தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை ஆராதனா துரையின் வருவதோ புது வசந்தம் எனது பார்வையில். மது வசதியான வீட்டின் செல்லப் பெண். காதல் காரணமாக அவமானப்பட்டு அம்மாவின் ஆதரவு குறைவதுடன் அவளின் அண்ணன் தங்கைக்கு துணை நிற்காமல் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட உறவினர்கள் அவமானப்படுத்திட அவள் அப்பா பல முயற்சிகள் செய்தும் திருமணம் தடைபடுகிறது. மதுவின் அப்பா சுந்தரம் தனக்கு நன்றிக் கடன்பட்ட கரிகாலனை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார். கரிகாலன் சாதாரண குடும்பத்தில் அண்ணன், அக்கா உடன் பிறந்த கடைசி பையன். அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவன் குடும்பத்திற்கு கடமைப்பட்டவனாக எல்லோருக்கும் நல்லது செய்யும் நல்லவன். ஒழுங்கான வீடு கூட இல்லாமல் இருப்பதால் மது மற்றும் அவள் அம்மா மீனாட்சி இருவரும் விரும்பாத திருமணம். மதுவைப் பற்றிய உண்மையை தெரிந்தும் திருமணம் செய்யும் கரிகாலன் மனைவியின் மீது வைக்கும் அன்பு அவளையும் அவன் மீது அன்பு வைக்க வைக்கிறது. ஆனால் கரிகாலன் மனைவிக்கு செய்வது அவன் அம்மா மற்றும் வீட்டினருக்கு கசப்பை ஏற்படுத்துகிறது. இந்த மனக் கசப்பு சீர்வரிசை காரணமாக பெரிதாகி இருவரையும் பிரிக்கிறது. பெற்றோர் வீட்டில் அண்ணியால் உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தும் நிகழ்வுகளை அவள் அம்மாவும் ஆதரிக்க கணவனை தேடி அவன் வேலை செய்யும் ஊருக்கு செல்கிறாள். அந்த ஊரும் அவள் பெற்ற பல அனுபவங்களும் அவள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தனது யதார்த்தமான நடையில் தந்திருக்கிறார் ஆராதனா. இவரது எழுத்தில் இரண்டாம் கதை இது. யதார்த்தமான குடும்ப அரசியலை அழகான எழுத்து நடையில் தந்திருக்கிறார். நிறைவில் சொன்ன கருத்து உணவை எப்படி வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பது போல வாழ்க்கையையும் வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பது அருமையான பதிவு. கரிகாலன் போன்ற துணை கிடைப்பது அரிது. அரிதிலும் அரிது அதை சரியாக புரிந்து தன் வாழ்க்கையை கொண்டு செல்லும் மது. இரு கதாபாத்திரங்களும் அருமையான பாத்திரப் படைப்பு. கருப்பாயி மாமியார்தனத்தின் இலக்கணம் கொண்ட மாமியார். யதார்த்தமான கதாபாத்திரங்கள். வாழ்த்துகள் மா.