Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனியின் தேடியுணைச் சரணடைந்தேன் - 1

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் ப்ரண்ட்ஸ்..
கனவுப்பட்டறை கதை தொழிற்சாலை யில் என் கதையின் முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
நன்றி..





தேடி உன்னை சரணடைந்தேன்


வதனி

வெற்றிமாறன் - வனமங்கை






அத்தியாயம் -1

“நம்பிக்கைகள் உடைந்த இடத்தில்
மன்னிப்பு என்பது வெறும்

வார்த்தை மட்டும் தான்….”
“பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” என்ற ஐயரின் வார்தையைக் கேட்டிருந்த வெற்றிமாறனின் உடல் இறுகிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன் வரை இப்படி ஒரு திருமணம் நடக்கும், அதுவும் தனக்கு என்றுக் கனவிலும் அவன் நினைக்கவில்லை.

எண்ணங்கள் எங்கெங்கோப் பயணித்தாலும், கையும், வாயும் தானாக ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்து, அக்கினியில் நெய்யை விட்டுக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் தன் அருகே வந்து நின்ற மருதாணிப் பாதங்களைப் பார்த்தவனுக்கு என்ன முயன்றும் அங்கே அமர முடியவில்லை. வெடுக்கென நிமிர்ந்தவன் அவளை உறுத்து விழிக்க, அதில் மங்கையின் மனம் வெகுவாக காயப்பட்டது.

ஏற்கனவே விழவா எனக் காத்திருந்த நீர்மணிகள் அவனின் விழி உறுத்தலில் தானாக ஒரு பாதை அமைத்துக் கீழிறங்கி வெற்றியின் கையைத் தொட்டு சிதறியது.

பெண்ணின் விழி நீரைப் பார்த்தவனுக்கு, அந்த அழுகை எதற்காக என்றுப் புரிய அங்கிருந்தே தனக்கு எதிரேச் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஆச்சியை நோக்கி முறைத்தான். அவரோ அவனது முறைப்பைக் கண்டு கொள்ளாமல் சாந்தமாக ஒரு புன்னகையை அவனை நோக்கிக் கொடுத்தார்.

ஆச்சியின் முகத்தில் இருந்த அந்த புன்னகைக்கு ஈடாக எது வேண்டுமானாலும் செய்யலாம் அதில் இந்தத் திருமணமும் அடங்கட்டும், என நினைத்தவன் அதன் பிறகு எதையும் கண்டு கொள்ளவில்லை. தன்னைப் போல அனைத்தும் நடந்தது.

ஊரே மெச்சும்படியான ஒரு பெரிய வீட்டின் திருமணம். அதை ஒட்டிய சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்திருந்தனர்.

வாசலில் நிற்க வைத்து விட்டு, ஆச்சி உள் நோக்கி “மணி..” என்றுக் குரல் கொடுக்க, குழந்தைத் தனமும் குறும்புத் தனமும் மிகுந்த ஒரு குமரிப் பெண் கையில் ஆரத்தித் தட்டுடன் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள். அவளது கடல் நீல நிறப் பட்டுப்புடவை அத்தனை அழகாக இருந்தது. அதிலும் ஒரு கையில் ஆரத்தியும், மறு கையில் புடவையின் கொசுவத்தையும் பிடித்துக் கொண்டு அவள் ஓடி வந்த அழகை பாட்டியோடு சேர்ந்து மணமக்களும் ரசித்துப் பார்த்திருந்தனர்.

“கண்ணு.. கண்ணு.. பார்த்து.. பார்த்து.. வா… எதுக்கு இப்படி ஓடியாற, விழுந்து வாறப் போற…” எனக் கண்டித்த ஆச்சியை விட்டு, நேராக மணமக்களிடம் சென்றவள், “வெற்றிண்ணா நான் சொன்னது மாதிரி தானே நடந்தது. அதனால நான் கேட்டதை நீ தரணும் சரியா. இனிமேலாச்சும் சோகமா சுத்தாம, “நான் ராஜா.. நான் ராஜான்னு கெத்தா சுத்தனும்…” என வாயடிக்க,

“ச்சு சும்மா இருடி, எப்போ எதைப் பேசணும்னு தெரியாதா…” என அவளை கட்டுப்படுத்த, வெற்றியை விட்டு மங்கையிடம் வந்தாள் வெற்றியின் ஒற்றைத் தங்கை, அவனது இளவரசி மணிமொழி…

“அண்ணி நீங்க சொல்லுங்க, உங்க மேரேஜ் முடிஞ்சா எனக்கு கிப்ட் தரனும் சொல்லிருக்கேன். அண்ணனும் சரி சொன்னான். இப்போ இல்லைங்குறான்…” எனக் குற்றப் பத்திரிக்கை வாசிக்க, மங்கைக்கு அவளை அப்படியே பிடித்தது. நாத்தனாரின் குற்றத்தை விசாரித்து விடும் வேகம் பிறக்க, அவளிடமே, “நீ என்னக் கேட்ட” என்றாள்… பெரியதாக என்ன கேட்டிருக்கப் போகிறாள் என்ற எண்ணம் கொடுத்தத் தைரியம் தான் அது.

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து யாரிடமும் பேசிடாத அண்ணித் தன்னிடம் பேசியதும் மகிழ்ந்து போனவள், “அது வந்து அண்ணி, அது வந்து அடுத்த வருஷமே என்னை அத்தையாக்கிடனும்னு சொன்னேன்…” என வெடிக்குண்டைத் தூக்கித் தலையில் போட,

சுற்றி நின்றிருந்தவர்கள் கொல்லென்றுச் சிரிக்க, வெற்றியின் உடல் இறுகி விட, மங்கையின் முகம் சிவந்து போனது. அது வெட்கத்தினாலோ இல்லை கோபத்தினாலோ அது சிவனுக்கே வெளிச்சம்…

பேரனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தைக் கண்ட ஆச்சி, “மணி வம்பளக்காம ஆரத்தி எடுத்து உள்ளேக் கூப்பிடு…” என அதட்டலிட,

“சரி ஆச்சி..” என்றவள், வேறு பேசாமல், ஆரத்தி எடுத்து இருவருக்கும் திலகமிட்டு, உள்ளே விட்டாள். அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து, சில மணி நேரங்களிலேயே அவர்கள் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட, ஆச்சியின் மனம் அத்தனை ஆசுவாசப்பட்டது.

எங்கேத் தன் பேரன் தனக்கென ஒரு வாழ்க்கையை வாழாமலேப் போய் விடுவானோ என்றுப் பயந்து போனவருக்கு, அதிர்ஷ்டத்தின் அதிர்ஷ்டமாக ஒரு வாய்ப்புக் கிடைக்கவும், அதை அப்படியேப் பிடித்து, வேண்டாமென ஒற்றைக் காலில் நின்றவனை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி என இந்தத் திருமணத்தை, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் முடித்திருந்தார் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்படும் அமுதவள்ளி நாச்சியார்…

காரைக்குடியில் இருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆலங்குடி கிராமம்… எத்தனை எத்தனைப் புதுமைகள் நம்மை ஆக்கிரமித்து அலங்கரித்தாலும், சற்றும் பழமை மாறாமல் அமைந்திருந்தது ஆலங்குடி… அதற்குக் காரணம் அமுதவல்லி நாச்சியாரின் பண்ணைக் குடும்பம் என்று சொன்னால் மிகையில்லை…

அமுதவல்லி ஆச்சியின் கணவர் சுந்தரவடிவேலு. இவர்களுக்கு இரண்டு பெண்கள். சுபத்ரா, சுமித்ரா என இரட்டையர்கள். இவர்களுக்கு மூத்தவன் பாலமுருகன். பெண்கள் இருவருக்கும் தஞ்சாவூர், திருச்சி எனப் பக்கத்திலேயே திருமணம் முடித்தவர், மகனுக்கு மட்டும் கோயம்புத்தூரில் இருந்து வனிதாவைக் கொண்டு வந்தார்… ஆரம்பத்தில் நல்ல மருமகள் தான் வனிதா…

வனிதா அழகி என்பதை விட பேரழகியாக இருந்தார். எப்போதும் மற்றவர்கள் அவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவரிடம் ஒரு காரியம் சாதிக்க வேண்டும் என்றால், வனிதாவின் அழகைப் பற்றி ஓரிரு வார்த்தைப் பேசினால் போதும், மகுடிக்கு மயங்கிய பாம்பாக மாறி அனைத்தையும் செய்து கொடுத்து விடுவார்… அழுகிப் போகும் உடலின் அழகுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பார்.

நாச்சியாரின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறந்து விடும். அப்படித்தான் அமுதவல்லி நாச்சியாருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் என்றால், அவரது மகன் பாலமுருகனுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தனர்.

இரட்டைக் குழந்தைகள் என்றதும் வனிதாவை தரையில் விடாமல் தாங்கினார் நாச்சியார்… மருமகளை மகள் போல் பார்த்தார்… பிரசவத்திற்கும் கூட தன் வேலைத் தோட்டம் என அனைத்தையும் விட்டுவிட்டு மருமகளோடு கோயம்புத்தூரில் மூன்று மாதம் இருந்தார்…

வனிதா பௌர்னமி இரவின் பால் நிலா வலம் வரும் ஒர் நாளில் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க, அமுதவல்லி ஆச்சிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை… அதிலும் ஒரு பேரன் தன் கணவரின் உருவத்தை அப்படியே உரித்து வைத்தது போல் பிறந்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. வனிதாவைக் கொண்டாடித் தீர்த்தார்.

பாலமுருகனுக்கும் சந்தோஷம் தான். ஒரு ஆணின் முழுமை ஒரு குழந்தை தன்னை அப்பா என்றழைப்பதில் தானே இருக்கிறது. அந்த முழுமையான சந்தோஷத்தை ரசித்து அனுபவித்தார்…

ஆனால், வனிதாவின் மனநிலையோ வேறாக இருந்தது. பிறந்ததில் ஒரு குழந்தை அவளைப் போலவேக் கொள்ளை அழகு. மற்றொன்று அவளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அழகு… தன் மாமனாரைப் போன்று நிறம் கருமை என்றும் இல்லாமல் வெழுப்பு என்றும் இல்லாமல் ஒரு புது நிறத்தில் இருக்க, அந்தக்குழந்தையை தூக்கக் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை…

அதன் பிறகு தாய் என்ற சொல்லுக்கு இழுக்கு ஏற்படும் படியாக நடந்து கொண்டாள்… குழந்தை அழுதால் அழட்டும் என விட்டு யாரேனும் சத்தம் போட்டாள் மட்டுமே வேண்டா வெறுப்பாக பால் கொடுக்க ஆரம்பித்தாள். தாயணைப்புக்கும், அன்புக்கும் குழந்தையை பரிதவிக்க வைத்தாள்… அழகென்ற மாயை அவளை மொத்தமும் கொடுமைக்காரியாக மாற்றியிருந்தது…

பெயர் சூட்டும் விழாவில் தொடங்கி அடுத்து வந்த ஒவ்வொரு நிகழ்விலும் அச்சிசுவை வனிதா ஒதுக்கி வைத்தார்…

இரட்டை என்பதால் ஒரே நேரத்தில் இருவருக்கும் பால் கொடுக்க முடியாது என்பதால் இப்படி செய்கிறாளோ என நினைத்திருந்த அமுதவல்லிக்கும், வனிதாவின் ஒதுக்கம் புரிந்து விட, தன் கணவனின் ஜாடையில் இருந்த மகனை ஒதுக்குகிறாளே என மலையளவுக் கோபம் பொங்கினாலும், வயதும் அது கொடுத்த முதிர்வும் அவரை யோசிக்க வைத்தது…

பிறகு மெல்ல மெல்ல வனிதாவின் செயல்களைக் கண்காணிக்க ஆரம்பித்தவர், அவள் தன் மூத்த பேரனிடம் காட்டும் வெறுப்பைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்து மகனை அழைத்துப் பேசினார்…

இரட்டையில் முதலாமவன் வெற்றிமாறன் இரண்டாவது புகழ்வானன். பத்து வருட இடைவெளியில் பிறந்த தேவதைப் பெண் மணிமொழி… அந்தக் குடும்பத்தின் இளவரசி. வெற்றியும் புகழும் அவளைத் தரையில் விட்டதில்லை… அத்தனை பாசம்…

“பாலா உன் பொண்டாட்டி செய்றதை நீ பார்த்தும் ஒன்னும் சொல்லாம இருக்குறதை நினைச்சா வருத்தமா இருக்குடா…” என நேரடியாக பேச,

வெளியில் இருந்து கவனித்த அம்மாவிற்கேத் தெரியும் போது, கூடவே இருக்கும் அவருக்குத் தெரியாதா? அதிலும் தன் தந்தையின் மறு உருவாமாகப் பிறந்த மகனை மனைவி ஒதுக்குகிறாள் என்றுத் தாயிடம் எப்படி சொல்வார்… மனைவியிடம் பல முறைப் பேசி புரிய வைக்க முயன்றார், முடியவில்லை… பல நாள் இருவருக்கும் உண்டான வாக்குவாதத்தில் பாதிக்கப்பட்டது என்னவோ வெற்றி தான்…

ஆம்…. பாலா இதைப் பற்றி பேச ஆரம்பித்தாலே வெற்றிக்குப் பால் கொடுக்காமல் அழ விட்டு விடுவார். இதற்குப் பயந்தும், குழந்தை அழுதால் தாய்க்கும் தெரிந்து விடுமோ என்ற பதட்டத்திலும் எதுவும் சொல்லாமல் சொல்ல முடியாமல் தத்தளித்தார் எனலாம்… இன்று அமுதவல்லி கேட்கவும் அவரால் அப்படியே இருக்க முடியவில்லை.

தாய்மடி தேடும் சிசுவாக மாறிப் போனார்… மனைவியின் செயல்களை மெல்லியக் குரலில் கூற அமுதவல்லிக்கு வருத்தமும் கோபமும் பேரலையாக உண்டாக, ஆனால் சத்தம் போட்டு அதனால் ஒரு பிரச்சனை என்று உருவானால் அதில் பேரனின் எதிர்காலமும் மகனின் நிம்மதியான வாழ்வும் சூனியமாக விடும் நிலை கண் முன் வர, எட்டுமாதக் குழந்தையான வெற்றியைத் தன்னோடு வைத்துக் கொண்டு மகனை கோயம்புத்தூரில் ஒரு மில்லை விலை பேசி அங்கு அனுப்பி வைத்தார் மொத்தமாக…

மகள்கள் ஏன் எதற்கு என்று பலக் கேள்விகள் கேட்க, “நேரம் சரியில்லை” என்று ஒற்றை வரியில் பதில் கொடுத்து, முரண்டுப் பிடித்த மகனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்… ஆனால் வனிதாவோ ஒரு மகனை விட்டுப் பிரிகிறோம் என்றத் தவிப்பும் துடிப்பும் கொஞ்சமும் இல்லாமல் இங்கிருந்துப் போய் விட்டால் போதும் என்பது போல் இருந்தார்.. அதுவரை வனிதாவின் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் மரியாதையும் சுத்தமாக விட்டுப் போனது அமுதவல்லிக்கு…

அடுத்து அவரின் மொத்த உலகமும் வெற்றி என்றாகி விட, அவனைத் தன் கண்ணாகப் பார்த்துக் கொண்டார்… தனக்குப் பிறகு தன் ராஜ்யத்தை ஆளும் ராஜாவாக மாற்றினார்…

“அம்மா அது தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே என்ன யோசனையா இருக்கீங்க…” என பாலன் கேட்க அதுவரைக் கடந்த காலத்தில் நடந்தவற்றை யோசித்துக் கொண்டிருந்த ஆச்சி மகனிடம் திரும்பி, “புகழ் எங்க இருக்கான்னுத் தெரியலயே பாலா, அவனைத் தேடச் சொல்லு, உன் பொஞ்சாதி என்ன பண்றா?” எனவும்,

“அம்மா அந்த ஓடிப் போனவனைப் பத்தி இனி யாரும் பேசக் கூடாது… நம்ம குடும்ப மானத்தையே மொத்தமாக வாங்கிட்டுப் போயிட்டானே அவனைத் தலையிலத் தூக்கி வச்சுக் கொண்டாடினா இல்ல இப்போ அனுபவிக்கட்டும், அவங்க வீட்டு ஆளுங்க முன்னாடியே அசிங்கப் பட்டுட்டா இனிமேலாவது திருந்துறாளான்னு பார்ப்போம்…” எனக் கோபமாகப் பேச, அம்மாவும் அண்ணனும் தீவிரமாக ஏதோ பேசுவதை உணர்ந்து சுமியும் சுபியும் அருகே வந்து, “என்னண்ணா” எனக் கேட்க,

உங்க அண்ணனுக்கு என்ன? புகழைப் பத்தி பேசாதேன்னு சொல்றான்… புள்ள எங்கப் போய் எப்படிக் கஷ்டப்படுதோ…” என மீண்டும் ஆரம்பிக்க,

“அம்மா போதும், அடுத்து நடக்க வேண்டியதைப் பாருங்க, சுபி நீ அவங்க கிளம்பறதுக்கு எல்லா ஏற்பாடும் ஆகிடுச்சா பாரு, சுமிம்மா உன் அண்ணி அங்க போகக் கூடாது அது உன் பொறுப்பு… அங்கப் போயும் வெற்றியை எதுவும் சொல்லிட்டா, அவன் யாருக்கும் சொல்லாமக் கிளம்பி வந்துடுவான். சும்மாவே பிடிக்காதக் கட்டாயக் கல்யாணம். அதையே எப்படி பொறுத்துப் போறான்னுத் தெரியல, இவ வேற புகழ் போனக் கோபத்துல, வெற்றியை கஷ்டப்படுத்திடப் போறா…” எனப் பதட்டமாகக் கூற,

“அண்ணா அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். வெற்றிக் கூட நானும் அவரும் போறோம். அங்க எந்தப் பிரச்சனையும் வராது… அண்ணி தான் ஒரு மாதிரி மத்தப்படி அவங்க வீட்டு ஆளுங்க நல்லவங்க தான்.. புகழ் இல்லைனதும் சூழ்நிலையைப் புரிஞ்சு நமக்காக இறங்கி வந்தாங்களே, அதுவே பெரிய விஷயம்…” என சுமி சொல்ல,

“ஏய் என்னடி சொல்ற? வெற்றியும் அவங்க மக வயித்துப் பேரன் தான். போனாப் போகுதுன்னு எல்லாம் சம்மதம் சொல்லியிருக்கத் தேவை இல்லை… அண்ணியோட அப்பாவுக்கும் உண்மை சுட்டிருக்கும். அது தான் எந்தப் பிரச்சனையும் செய்யாம இந்தக் கல்யாணத்துக்கு சரி சொல்லி, அவரோடத் தப்பை சரி செய்திருக்கார்..” எனத் தன் மருமகனை மட்டமாக நினைத்துப் பேசி விட்டாளே எனக் கோபம் பொத்துக் கொண்டு வந்ததில், தன் அக்காவைத் திட்டித் தீர்த்து விட்டாள்…

“அடி அறிவு கெட்டவளே, என்னடிப் பேசுற, எம் மருமகன நான் எப்ப மட்டமா பேசினேன். நான் பெத்துக்கலன்னாலும் அவன் தான்டி என் மகன். அவனைப் போய் பேசுவேனா, போடி புத்திக்கெட்டவளே…” என இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்வதை ஆச்சியும் பாலனும் சிரிப்புடன் பார்த்திருந்தனர்…

சுமிக்கு இரண்டும் பெண்கள் தான். இருவரும் வெற்றியை விட மூத்தவர்கள். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து, ஒருத்தி மலேசியாவிலும், மற்றொருத்தி யாழ்பாணத்திலும் இருக்க, ஆண் பிள்ளை இல்லாத வீட்டில் அவனே அனைத்துமாகிப் போனான்…

சுபிக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இருவர்… மூத்தது ஆண், இளையவள் பெண். மூத்தவன் பிறந்து 13 வருடங்கள் கழித்து பிறந்த பெண் இலக்கியா… இருவரும் வெற்றிக்கு இளையவர்கள் தான்… சுமிக்கு குழந்தைப் பிறந்து 5 ஆண்டுகள் கழித்து தான் சுபிக்குப் பிறந்தான் திருக்குமரன்… குமரனுக்கு ரோல் மாடலே வெற்றி தான்… வெற்றி என்ன செய்தாலும் அப்படியேக் குமரனும் செய்வான். தாய்ப்பாசம் தான் கிடைக்கவில்லையேத் தவிர,அத்தைகளின் உலகமே அவனாகிப் போனான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணங்களில் இருக்க, மணமக்கள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. அதுவரை வெற்றியும், மங்கையும் அருகருகே இருந்தாலும், ஒரு பார்வையும் இல்லை. ஒரு வார்த்தையும் இல்லை. மௌனங்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்க யத்தனித்தனர்.

சரணடைவோம்...
 
உங்களுடைய "தேடியுனை
சரணடைந்தேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், வதனி டியர்
 
Last edited:
Top