Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழையின் சாரலில்..

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
மழையின் சாரலில்..




அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அவரே தான் ! அந்த பரந்து விரிந்த பள்ளிக்கூட மைதானத்தின் ஓரமாய் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருக்கிறார். அவளால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மீண்டும் உற்றுப் பார்த்தாள். அவளது நினைவு நரம்புகளுக்குள் விளைந்து கிடந்த அந்த முகத்தை அவளால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன ?

ஸ்கூல் முடிந்து பையனை கூட்டிக்கொண்டு போக பெரும்பாலும் அவளின் கணவர் தான் வருவார். அவ்வப்போது அபூர்வமாய் அவள் வருவதுண்டு. ஆனால் இதுவரை இவரைச் சந்தித்ததில்லை. இங்கே அவருக்கு என்ன வேலை ?

ஸ்கூல்ல வாத்தியாரா சேந்துட்டாரா ? இல்லை அவரும் ஒரு பேரன்டா ? யோசித்துக் கொண்டே இருந்த அவளின் மனதுக்குள் மெல்லிய பெருமூச்சோடு நினைவுகள் ஊர்வலமாய் நுழைந்தன.

ஆயிற்று நீண்ட நெடிய பதினெட்டு வருடங்கள். பள்ளிக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தான் அந்த முகத்தை முதன் முதலாகப் பார்த்தாள் !

“யாருடி அவரு.. ஸ்மார்ட்டா இருக்காரு.. லேடீஸ் ஸ்கூல்ல அவருக்கென்ன வேலை ?”

“தெரியலடி.. ஏதாச்சும் குரியர் பாயா இருக்கும்…”

“போடி.. இவ்ளோ ஸ்டைலா இருக்காரு.. அவரைப் போயி குரியர் பாய்… சொறியர் பாய்ன்னு”

“ஓஹோ… அப்போ எதுக்கு என்கிட்டே கேக்கறே.. நீயே போய் கண்டுபிடி” என்று சொல்லிவிட்டு தோழி விடுக்கென திரும்பிப் போய்விட்டாள்.

அவள் சிரித்தாள் . அவளுடைய கண்ணாடி மனசுக்குள் ஏதோ ஒரு சின்ன கலவரம் !

அவள் இசைப்பிரியா !

பெயருக்கேற்றார் போல இசையின் இழைகளில் கிடப்பவள். அவளுடைய குரலுக்குள் கொஞ்சம் குயிலின் அம்சமும் உண்டு, கொஞ்சம் வயலின் தன்மையும் உண்டு. இரவு நேர மௌனத்தின் தாழ்வாரங்களில் அவளது குரல் மென்மையாய் ஒலிப்பது தெய்வீக அனுபவம்.

அத்தோடு அவளுடைய பிரியத்தின் பட்டியலில் இருந்த இன்னொரு விஷயம் டிராயிங். படம் வரைவதென்றால் அவளுக்கு உலகம் மறந்து விடும். தன் முன்னால் இருக்கின்ற காகிதமே உலகமாய் மாறிவிடும். அந்தக் காகிதத்தில் அவளுடைய கற்பனைக் கோடுகள் புதிய உலகத்தைப் படைக்கத் துவங்கும். கதாபாத்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பென்சில் கோடுகளின் வழியாக பிரசவித்துக் குதிக்கும்

அப்படி பதினொன்றாம் வகுப்பில் ஒரு டிராயிங் போட்டி நடந்தது. ஆனால் இசையின் பெயர் அதில் இடம் பெறவில்லை. இசைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

நேராக தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றாள் இசை.

‘சார்… என்னோட பெயரை போட்டியில கண்டிப்பா சேக்கணும் சார்… எத்தனை பரிசு வாங்கியிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்’

‘ஓ..உன் பேரு இல்லையாம்மா? நான் டிராயிங் சார் கிட்டே சொல்றேன்’ சொல்லிக்கொண்டே ஒரு பெல்லை அமுக்க அட்டென்டர் எட்டிப்பார்த்தார்.

‘யப்பா.. டிராயிங் சார் டீச்சர்ஸ் ரூம்ல இருப்பாரு கூட்டிட்டு வா’

இசைக்கு மனதில் கோபம் தீரவில்லை. தன்னை எப்படி அவர் நிராகரிக்கலாம் ? இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்காமல் விடப்போவதில்லை என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போதுதான் அவர் உள்ளே நுழைந்தார்.

அந்த ஸ்மார்ட் இளைஞர் ! இசையின் கண்ணாடி இதயம் சட்டென கண்சிமிட்டியது.

‘சார்… இவங்க இசை.. நல்லா வரைவாங்க.. இவங்க பெயரையும் காம்பெட்டிஷன்ல சேத்துக்கங்க’ தலைமை ஆசிரியர் சொன்னார்.

‘சரி சார்… இவங்க குவாலிஃபை ரவுண்ட்ல ஆப்சென்ட் சார்.. அதான் சேக்கல’

‘பரவாயில்லை சார்…ஷி ஈஸ் டேலன்டட்..’

‘ஓகே சார்.. நான் புதுசு இல்லையா.. அதான் தெரியல’

இசையின் கோபமெல்லாம் சட்டென காணாமல் போயிருந்தது. ‘சார்.. பரவாயில்லை சார்… நான் அன்னிக்கு வராதது என் தப்புதான் சார்… மன்னிச்சிடுங்க’

மனதில் நினைத்திருந்ததற்கு நேர் எதிரான வார்த்தைகள் மென்மையாய் இசையிடமிருந்து வந்தன.

அன்றிலிருந்து இசையின் இலட்சியம் டிராயிங் என்பதை விட, டிராயிங் சாருடன் நட்பு பாராட்டுவது என்றாகிவிட்டது.

பதினொன்றாம் வகுப்பில் டிராயிங் கிடையாது. இருந்தாலும் அடிக்கடி தனது டிராயிங் புக்கை எடுத்துக் கொண்டு சாரைப் பார்க்கலாம் என போவாள். இருந்தாலும் தயக்கம் தடுக்கும்.

எப்போதும் ராஜ் சார் வருகிறாரா ? என்பது தான் மனசில் ஓடும் சிந்தனையாய் இருக்கும். கண்கள் மானின் கண்களைப் போல அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

இவளுடைய கண்ணிமைகளில் தொற்றிக் கிடந்த பால்யக் காதலை அவரும் கண்டிருந்தார். ஆனாலும் காணாதது போல அவர் நடித்து அமைதியாக போய்விடுவார்.

‘எப்படியாச்சும் சாரோட வீடை கண்டு பிடிக்கணும்டி…’

‘ஓ.. தெரியாதா ? அவரு நம்ம கோனார் கடைக்கு போற தெருவுக்கு பக்கத்துல எங்கயோ தான்டி வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்காரு’

‘தேங்க்ஸ்டி..’ சொல்லிக்கொண்டு சைக்கிளை விருட்டென கோனார் கடையை நோக்கித் திருப்பினாள் இசை. பல நாள் தேடலுக்குப் பின் அவரது வீட்டையும் கண்டுபிடித்தாள்.

அதன்பின் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் பால் வாங்க வேண்டுமென்றாலும் கூட, தூரத்தில் இருக்கும் கோனார் கடை வீதியைச் சுற்றி தான் போவாள். அவர் அவ்வப்போது மாடியில் தென்படுவார். அந்த தரிசனமே போதுமானதாய் இருந்தது அவளுக்கு.

பள்ளிக்கூடத்துக்கு தினமும் தாமதமாய் வருவாள். அந்த நேரத்தில் தான் சைக்கிள் ஸ்டேன்ட் பக்கத்தில் இருக்கும் மரத்தடியில் அமர்ந்து அவர் வரைந்து கொண்டிருக்கும் தருணம்.

அவரை அரைக்கண்ணால் நோட்டம் இடுவதற்காகவே தாமதமாகப் போவாள் இசை. அதை அவர் கவனித்தே தான் இருந்தார்.

நாள்கள் செல்லச் செல்ல இசையின் மனதுக்குள் இருந்த பால்யக் காதல் பருவமடையத் துவங்கியது. அவளது நினைவுகளில் திரிந்த மாஸ்டர் கனவுகளுக்குள்ளும் நுழையத் துவங்கினார்.

பால்யத்தின் கலர் கனவுகளில் அவர் தான் படம் வரைந்து கொண்டிருந்தார். இனம் புரியாத ஒரு இன்பத் திளைப்பில் இசையின் இதயம் துடித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது.

‘ஏய்… இசை… தெரியுமாடி விஷயம்.. உன்னோட ஆளுக்கு வேற கவர்மென்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்காம்… கிளம்பறாரு’ தோழி பற்ற வைத்தது கண்ணி வெடியாய் வெடித்தது.

கண்கள் சட்டென அருவியாய் கொட்ட தேம்பித் தேம்பி அழுத இசை நேரடியாக கான்டீன் பக்கம் ஓடினாள். ஓரமாய் இருந்த பெஞ்சில் அமர்ந்து கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.

தோழிக்கு பக் என்றாகி விட்டது. ஏண்டா சொன்னோம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்போது சட்டென அவர்கள் முன்னால் வந்து நின்றார் ராஜ் மாஸ்டர். இசையின் அருகில் வந்து அமர்ந்தார். இசையின் மனதுக்குள் பெருங்கடல் பொங்கி மறிந்தது. ஆனாலும் அதில் ஆனந்தம் இருக்கவில்லை.

மாஸ்டர் இசையில் கையை மெல்லமாய்ப் பற்றினார்.

அந்த முதல் தொடுதலின் ஸ்பரிசத்தில் அவளுக்குள் நான்கைந்து நயாகராக்கள் சரிந்தன. ஏழெட்டு இமைய மலைகள் தடுமாறி விழுந்தன.

“வருத்தப்படாதேம்மா .. எல்லாம் சரியாயிடும்’

ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். ஆனால் இசையின் மனதில் எதுவும் நிற்கவில்லை.

சில நாட்களிலேயே அவர் ஸ்கூலை நிறுத்தினார். அடுத்த சில நாட்களிலேயே அவர் வீட்டையும் காலி செய்து விட்டு போய்விட்டார்.

இசையின் மனதில் காதலின் வலி நிரம்பியது.

அவளுக்கு பள்ளிக்கூடத்திலேயே ரசிகர்கள் உண்டு. அவளுடைய குரலுக்கும், ஓவியத்துக்கும், ஒரு தேவதையாய் சிரிக்கும் அவளது புன்னகைக்கும் ! எதுவும் அவளை சலனப்படுத்தவில்லை.

ஒரு முறை தலைமை ஆசிரியை கூப்பிட்டு திட்டவும் செய்தார். ‘என்னம்மா லவ் லெட்டரெல்லாம் ஸ்கூலுக்கு வருது.. இதெல்லாம் நல்லதில்லை’ என்று !

‘நல்லதில்லேன்னா கிழிச்சு போடுங்க, எனக்கு எந்த லவ் லெட்டரும் வேண்டாம்’

‘என்ன திமிரா ? பத்தாம் கிளாஸ்ல 92 சதவீதம் மார்க்.. பதினொன்னாம் கிளாஸ்ல 62 சதவீதம்… படிக்கணும்ன்னு வரியா இல்லை தெனாவெட்டா பேச வரியா ?”

“மேம்… 12ம் கிளாஸ்ல 90 சதவீதத்துக்கு மேல மார்க் எடுக்கலேன்னா என்னை கேளுங்க நீங்க.. “ என சொல்லி விட்டு வீராப்பாய் வெளியே வந்தாள் இசை.

சொல்லி வைத்தார்போல் அடுத்த ஆண்டு 91 சதவீதம் மார்க் ! தலைமை ஆசிரியை தனியே கூப்பிட்டு அவளைப் பாராட்டினார்.

அதன்பின் கல்லூரி, வேலை, திருமணம் என வருடங்கள் தாவித் தாவி இன்று மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். இத்தனை வருடங்கள் அவருடைய நினைவு எத்தனையோ சந்தர்ப்பங்களில் வந்து போயிருக்கிறது.

அடிக்கடி சோசியல் மீடியா தளங்களில் அவருடைய பெயரைப் போட்டு தேடிப் பார்ப்பதுண்டு. ஆனால் சிக்கியதில்லை.

இப்போது !

இதோ கண்ணெதிரே அமர்ந்து கொண்டிருக்கிறார். இசை முடிவெடுத்தாள். போய் பேசிவிடுவோம். ! இத்தனை ஆண்டுகள் கழிந்து அவருடைய மனசு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இசை தான் இருந்த இடத்திலிரிந்து எழுந்து அவரை நோக்கிப் போனபோது மகன் ஓடிவந்து கட்டிக்கொண்டான்.

‘மம்மீ…. லெட்ஸ் கோ’

‘வெயிட் டா.. அதோ ஒரு அங்கிள் இருக்காங்கல்ல, அவங்களை பாத்து பேசிட்டு போலாம்’

‘ஓ..அந்த அங்கிளா.. அனாமிகா வோட டாடி… ‘

‘அனாமிகா ?’

‘எஸ் மாம்… மை கிளாஸ் மேட்.. குளோஸ் பிரண்ட்…’ பையன் சொல்லிக்கொண்டே போக இசையின் உதடுகள் புன்னகைத்தன.

எதையோ தீவிரமாய் வரைந்து கொண்டிருந்த ராஜை நோக்கிப் போனாள்.

‘ராஜ் மாஸ்டர்…’

ராஜ் நிமிர்ந்து பார்த்தார். திடுக்கிட்டார். சட்டென எழுந்தார்.

‘நீ.. நீ..’

‘சேம் இசை மாஸ்டர்… உங்களுக்கு இம்சை குடுத்துட்டே இருப்பேனே.. அந்த காலத்துல… ‘ இசை சிரித்தாள்.

‘வாவ்… ரொம்ப சந்தோசம்.. எப்படி இருக்கீங்க’

‘ஐம் ஃபைன் மாஸ்டர்… தோ.. ஹி ஈஸ் மை சன்.. அனாமிகா கிளாஸ் தான்… சர்ப்ரைஸ் இல்லையா’ இசை சிரித்தாள்.

‘யா.. யா.. ரியலி… ‘ ராஜ் சிரித்தார். அவருடைய கண்கள் இசையின் விழிகளை தொட்டுத் தொட்டு விலகின.

‘மாம்… லெட்ஸ் கோ…’ பையன் இழுத்துக் கொண்டே இருந்தான்.

‘சரி.. மாஸ்டர்… நான் கிளம்பறேன். ஒரு நாள் பொண்ணையும் வைஃபையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க’

‘கண்டிப்பா… கண்டிப்பா’ ராஜ் சொன்னார்.

இசை புன்னகைத்துக் கொண்டே திரும்பினாள். அவளுடைய மனதில் ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சி நிரம்பியது. ஒரு பறவையாய் மெல்ல மெல்ல அசைந்து விலகினாள்.

ராஜ் பின்னாலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இசை.. உனக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது உனக்கு கிடைச்சுதா தெரியல. உனக்கு என்மேல் இருப்பது காதலாய் இருந்தால் அந்த வாரத்தில் ஏதோ ஒரு நாள் எனக்குப் பிடித்த உன்னுடைய மஞ்சள் கலர் கம்மல் போட்டுட்டு வர சொல்லி எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ரகசியமா உன்னோட காதை பாத்துட்டே இருப்பேன்.

நீ முதல் நாளே மஞ்சள் கம்மலோட வருவேன்னு நினைச்சேன். ஆனா ஒருவாரத்துல ஒரு நாள் கூட மஞ்சள் கம்மலோட நீ வரல. மனசு உடைஞ்சு போச்சு. உன் படிப்பு எல்லாம் முடிஞ்சப்புறம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கனவு கண்டேன். ஒரு வாத்தியாரா இருக்கும்போ அதெல்லாம் சொல்ல முடியாதுன்னு தான் நான் ரிசைன் பண்ணினப்புறம் லெட்டர் போட்டேன்.

உன் சிரிப்பு என் மனசுல ஏற்படுத்தின காயம் கொஞ்ச நஞ்சமல்ல. உன் கிட்டே இன்னும் அதே ஈர்ப்பு இருக்கு’

ராஜின் மனம் நினைவுகளின் சிக்கெடுத்துக் கொண்டிருக்கையில் வந்து நின்றாள். அனாமிகா ! ஒரு விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த அனாமிகாவுக்கு கடந்த ஒன்பது வருடங்களாக ராஜ் தான் அப்பா ! ராஜுக்கு பள்ளிக்கூட நினைவுகள் தான் குடும்பம் ! அந்த நினைவுகளோடு திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தார் ராஜ்
மாஸ்டர்.
 
அடப்பாவமே
ராஜ் மாஸ்டர் கல்யாணமே செஞ்சுக்கலையா?
சூப்பர் சிறுகதை
 
Last edited:
Top