தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை தேவிகண்மணியின் ககனம் சேர்வாயா பௌர்ணமியே எனது பார்வையில். பூரணி தனது கல்லூரிக் காலத்தில் விரும்பிய காதலால் ஏற்படும் மோசமான நிகழ்வுகளால் அவளுக்கு கொஞ்சம் வயது வித்தியாசம் இருந்தாலும் அன்பான மனிதரான சிவத்துடன் திருமணம் நடக்கிறது . ஒரு விபத்தில் அவரை இழந்தாலும் அவரை தெய்வமாக நினைத்து வாழும் அவளை அவளது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் நன்றாக வைத்து இருக்கிறார்கள். அவளது அக்கா மகள் கமலியின் காதல் திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அவள் அக்கா மற்றும் அவளது மக்கள் விரும்புகிறார்கள். தன் அக்கா பெண் விரும்பி திருமணம் செய்து கொள்ளும் ராகுல் அவளது முன்னாள் காதலனான நடராஜனின் மகன் என்று தெரிந்தும் வேறு வழியின்றி அவர்களது குடும்பத்தின் இளையதலைமுறையான நாத்தனார் மகன் மற்றும் மச்சினர் மகள் ஆகியோருடன் திருமணத்திற்கு செல்கிறாள் பூரணி. அங்கு அவள் சந்திக்கும் நடராஜனின் மனைவி வனஜாவின் ஒன்றுவிட்ட சகோதரன் மனைவியை இழந்த நிரூபன் அவர்களுக்கு பல உதவிகளை செய்கிறான். பூரணியின் அக்கா மகள் என்பதால் வனஜா இந்த திருமணத்தை நிறுத்தி தன் அண்ணன் மகளை மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். கமலியின் நின்று போன திருமணம் பூரணியின் நாத்தனார் மகனுடன் நடக்கிறது. இன்றைய தலைமுறையினர் பூரணிக்கும் நிரூபனுக்கும் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். பழமைவாத கொள்கை உடைய பூரணியின் புகுந்த வீட்டினர். நிரூபனின் யாரும் இல்லாத சொத்தை அனுபவிக்கும் ஒன்றுவிட்ட சொந்தங்கள் மற்றும் வனஜா இந்தத் திருமணத்தை எதிர்க்கிறார்கள். இந்த நிலையில் நிரூபன் பூரணியுடனான திருமணத்தை விரும்ப, சுயமாக சிந்திக்கும் பூரணி தனது படிப்பை தொடர விரும்புகிறாள். இருவரின் எண்ணங்கள் ஈடேறியதா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார் தேவிகண்மணி. சிவம் ஐயா என்று மதிக்கத்தக்கவர் என்றால் நிரூபன் அன்பும் நேர்மையும் கொண்டவன். நேர்மறை எண்ணங்கள் கொண்ட ஆண்கள் சிலரைத் தவிர. வனஜா போன்ற சுயநலம் மிக்க பெண்ணும் இருக்கிறார்கள். பவளம் போன்ற பெருந்தன்மையான பெண்களும் உள்ளனர். அருமையான நேர்மறையான கதை. கோழையான சுயநலமான நடராஜன் கூட பூரணியின் நலனை விரும்புவது யதார்த்தமாக இருந்தது. வாழ்த்துகள் மா.