தடையில்லை நதியே பாய்ந்தோடு
நதியோட்டம் – 3
கௌரவ் ஷக்திவேலுக்கும் ஹர்ஷிவ்தாவர்ஷினிக்கும் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக முறையில் எந்தவிதமான இடையூறுமின்றி நல்லபடியாக நடந்தது.
அனைத்தும் ஒரு கனவு போல நடந்து முடிந்து விட்டது. பரமேஷ்வரனால் இப்போதும் நடந்ததை நம்பவே முடியில்லை. எது நடக்கவே நடக்காது என நம்பிக்கையில்லாமல் இருந்தார்களோ? அந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்து தன் மகளை கைப்பற்ற ஒப்பற்ற ஒருவன் வருவான் என நினைத்தும் பார்க்கவில்லை.
பரமேஷ்வரனுக்கு மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருக்குமே இந்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து மீள வழி ஏதும் புலப்படாமல் திளைத்து கொண்டிருக்கின்றார்கள். காலையில் நடந்த சம்பவத்தால் மகளின் திருமண விஷயத்தில் பரமேஷ்வரனிடமிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் அடியோடு அழிந்துவிட்டது. தன் மகள் அழித்துவிட்டாள் என மனம் குமைந்தவரால் அவளை கண்டிக்க வேண்டுமென்று அப்போது கூட தோன்றவில்லை.
அவினாஷின் குடும்பத்தினர் வெளியேறி விட்ட சிறிது நேரத்திலேயே பரமேஷ்வரனின் போனுக்கு அவினாஷின் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அதை காதுக்கு கொடுத்த அடுத்த நொடி பரமேஷ்வரனுக்கு பேச இடம் கொடுக்காமல் அவினாஷின் தந்தை பொரிய ஆரம்பித்தார்.
“என்ன பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க சார்? அவளுக்கு பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே? எதுக்காக என் பையனை மிரட்டனும்? பொண்ணா சார் அது? பாவம் என் பிள்ளை இன்னும் அந்த ஷாக்ல இருந்து வெளில வரலை. கல்யாண பேச்சை எடுத்தா கூட பயப்படுவான் போல. நீங்க தானே சார் விரும்பி வந்து சம்பந்தம் பேசினீங்க. ஓரளவுக்கு உங்க பொண்ணை பத்தியும் சொல்லத்தான் செய்தீங்க. ஆனாலும் இப்படி ஒரு பொண்ணா இருக்கும்னு நாங்க எதிர்பார்க்கலையே?...”
“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சாலும் பரவாயில்லை மிஸ்டர் பரமேஷ்வரன். உங்க பொண்ணு நார்மலா இல்லை. அப்நார்மலா இருக்கும் போல. அதனால பொண்ணை ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் எடுங்க. நல்ல வேலை நாங்க பிழைச்சோம். இல்லைனா அந்த பைத்தியத்தை எங்க தலையில தானே கட்டியிருப்பீங்க?...”
“டேய் போதும் நிறுத்துடா. நானும் போனா போகுது தப்பு என் பொண்ணு பக்கம்ன்றதால அமைதியா நீ பேசறதுக்கெல்லாம் காது கொடுத்தேன். அதுக்குன்னு என் பொண்ணையே நீ பைத்தியம்னு சொல்லுவியா?... இன்னொரு வார்த்தை எதாச்சும் பேசின நான் மனுஷனா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்...”
“நானா வழிய வந்து சம்பந்தம் பேசினதால நீ என்ன பேசினாலும் பொறுத்துபோவேன்னு நினச்சியா? அதுக்கு வேற ஆளை பாரு. நான் பரமேஷ்வரன்டா. என் கோவத்தை பத்தி நீ தெரிஞ்சுக்காம இருக்கிறது தான் உனக்கு நல்லது...”
“என் பொண்ணு மிரட்டினான்னு பயந்து நடுங்குற உன் பையன் முதல்ல ஆம்பளையான்னு பாரு. என் பொண்ணு சிங்கம்டா. சரியான தொடை நடுங்கிய பெத்து வச்சிருக்கிற உனக்கே இவ்வளோ ஆணவம்னா எந்த சூழ்நிலையையும் தைரியமா எதித்து நிக்கிற என் பொண்ணை நினச்சு நான் பெருமைப்படத்தான்டா செய்வேன். இன்னொரு முறை என் கண்ணுல பட்டுடாத. தொலைச்சிடுவேன், ஜாக்கிரதை...” என்று கர்ஜித்தவரை கண்டு அவரின் அருகிலிருந்தவர்கள் ஒரு அடி பின்னால நகந்துதான் நின்றார்கள்.
பக்கத்தில் இருந்து பரமேஷ்வரன் போனில் பேசியதை கேட்டதுக்கே இப்படி என்றால் அவினாஷின் அப்பாவை பற்றி சொல்லவா வேண்டும்? ட்ரைவரிடம் ஹோட்டலில் உள்ள லக்கேஜை ஆள் அனுப்பி எடுத்துக்கொள்ளலாம் என்றும், வேறெங்கும் வண்டியை நிறுத்தாமல் ஊரைப்பார்த்து விடமாறும் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டாலும் அவரது உடலில் உதறல் மிச்சமிருக்கத்தான் செய்தது.
இங்கே பரமேஷ்வரனோ கொதித்துப்போய் அமர்ந்திருந்தார். “தன் பெண்ணை, தான் செல்லமாக சீராட்டி, அவளது மனம் நோக கூடாதென்று சிறு கண்டிப்பை கூட காட்டாமல் தன் உயிராய் வளர்த்தவளை பைத்தியம் என்று சொல்லிவிட்டானே...” என்று நினைக்க நினைக்க முகத்தின் சினம் கூடிக்கொண்டே சென்றது.
அவரது இந்த ஆவேசம் நல்லதற்கல்ல என்று பரணி அவரை அமைதிபடுத்த நெருங்க பரமேஷ்வரனோ, “பரணி ப்ளீஸ். எதுவும் சொல்லாதே. கொஞ்சம் குடிக்க தண்ணி தாயேன்...” என கேட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்துகொண்டவர் நெஞ்சை நீவிவிட்டுகொண்டார்.
அதை பார்த்த நிஷாந்த், “பெரியப்பா, என்னாச்சு?... என்ன பண்ணுது?... ஹாஸ்பிட்டல் போகலாமா?...” என பயந்து போய் கேட்கவும்,
“இல்லடாப்பா. எனக்கொண்ணுமில்ல. அந்த பரதேசி என் பொண்ணை சைக்யாட்ரிஸ்ட் கிட்ட காட்ட சொல்றான்டா. என் பொண்ணுக்கு பைத்தியமாம். அவ அப்நார்மலா இருக்காலாம். எவ்வளவு தைரியமிருந்தா அவன் அப்படி சொல்லுவான்?. என் பொண்ணு எனக்கு தாய்டா. எங்கம்மாவை போய்...”என்று உடைந்து போய் பேச பேச, அவினாஷின் தந்தையை இப்போதே புரட்டி எடுக்கவேண்டுமென்ற ஆவேசத்தில் நிஷாந்தின் கை முஷ்டி இறுகியது. என்னதான் ஹர்ஷூ செய்தது தவறென்றாலும் பைத்தியமென்று அவன் எப்படி சொல்லலாம் என்ற எண்ணம் தான் நிஷாந்திற்கு.
தண்ணீருடன் வந்த பரணி, “அவங்களை சொல்லி என்னங்க பிரயோஜனம்? நம்ம பொண்ணு மேலையும் தப்பு இருக்கத்தானே செய்யுது...” என பட்டென்று சொல்ல,
“அதுக்கு என்ன வேணும்னாலும் பேசுவாங்களா?... என் பொண்ணை பேச அவனுக்கு என்ன உரிமை இருக்கு?...” என்று மீண்டும் எகிறியவர், “பரணி, கொஞ்சம் என்னை அமைதியா இருக்க விட்டேன்...”என கெஞ்சும் குரலில் சொல்லி தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு கண்களை மூடி பின்னால் சாய்ந்துகொண்டார்.
அரைமணி நேரத்தில் களையிழந்து போயிருந்த வீட்டை சுற்றி பார்வையிட்ட பரணியும் சோர்ந்து போய் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக சரஸ்வதியும். சிறிது நேரத்தில் பரமேஷ்வரனின் மொபைலில் மீண்டும் அழைப்பு வர ஒருவித அலுப்போடு அதை எடுத்து பார்த்தவரின் புருவம் முடிச்சிட்டது.
அதற்கு காதுகொடுத்தவரின் முகத்தில் அதுவரை இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் மறைந்து நொடிக்கு நொடி பரவசம் கூடிக்கொண்டே போனது. அதை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
பேசி முடித்தவர், “நான் ஒரு முக்கியமான விஷயமா வெளில போறேன். உங்க உங்க ரெண்டு பேர்க்கிட்டையும் கிட்ட வந்து சொல்றேன். நிஷாந்த் நீ என்னோட கூட வா. போய் என்னோட காரை எடு. இப்போ வந்திடறேன்...” என்றவர் தன்னுடைய அறைக்கு சென்றவர் ஒரு கவரோடு வெளியில் வந்து பரணியிடமும், சரஸ்வதியிடமும் ஒரு தலையசைப்போடு வெளியேறிவிட்டார்.
அவரது முகத்தை பார்த்தால் சந்தோஷமான விஷயமாகத்தான் தெரிகிறது. போகும் காரியம் செவ்வனே கைகூட ஆண்டவனை பிராத்தித்தபடி அமர்ந்துவிட்டனர் சரஸ்வதியும், பரணியும்.
நிஷாந்த் வழியில் என்னவென கேட்டும் பரமேஷ்வரனால் பதில் கூட சொல்லமுடியவில்லை. கார் நேராக அந்த ஹோட்டல் வளாகத்திற்குள் சென்று நின்றதும் அவசரமாக இறங்கியவர் நிஷாந்த்தோடு வேகமாக உள்ளே சென்று சுற்றுமுற்றும் யாரையோ தேடினார்.
“டேய் ஈஷ்வரா, எப்டிடா இருக்க?...” என்ற சந்தோஷ கூக்குரலோடு புருஷோத்தமன் பின்னால் இருந்து கட்டிக்கொள்ள அவரோடு தன் தந்தை செல்வமும் இருப்பதை கேள்வியோடு பார்த்தான் நிஷாந்த்.
“சோமா, நான் நல்லா இருக்கேண்டா. என்னால இப்பவும் நம்பமுடியலை நீ போன்ல சொன்னது நிஜமான்னு. அப்டியே ஓடிவந்துட்டேன். அண்ணா நீ முன்னாடியே வந்துட்டியா?...” என்றதும் அதற்கு புன்னகையை பதிலாக தந்த செல்வத்தினை கண்டுவிட்டு,
“இது என் அண்ணன் பையன் நிஷாந்த்...” என அவனையும் அறிமுகப்படுத்திவிட்டு தன் நண்பனின் பின்னால் அலைப்புறும் கண்களோடு துழாவினார்.
“நிஷாந்த் நல்லா வளர்ந்துட்டான். ஈஷ்வரா, நீ தேடுற ஆள் உள்ள தான் இருக்கான். வா. நீயும் வாப்பா...” என சிரிப்போடு அந்த ஹோட்டலின் பின்னால் உள்ள கார்டன் ரெஸ்டாரென்ட் பக்கமாக நடையை கூட்டினார் புருஷோத்தமன்.
நிஷாந்திற்கு புருஷோத்தமன் யாரென்று ஓரளவிற்கு தெரியும். பரமேஷ்வரனின் பால்ய சிநேகிதநென்றும் தெரியும். ஆனால் இப்போதைய திடீர் வரவும், தன் தந்தையின் வருகையும், தன் பெரியப்பாவின் அபரிமிதமான மகிழ்வும் எதற்கென்று தான் புரிந்தும் புரியாமல் குழப்பியது.
அங்கே ஒரு டேபிளில் மெனுகார்டில் விழிகளை மேயவிட்டிருந்தவனை நெருங்கிய புருஷோத்தமன், “ஷக்தி...” என அழைக்கவும் நிமிர்ந்தான் கௌரவ் ஷக்திவேல்.
அவர்களை பார்த்து பளீர் என புன்னகைத்தவன், “வாங்க மாமா, எப்டி இருக்கீங்க?... பார்த்து ரெண்டு வருஷம் இருக்கும்ல?...” என உரிமையாக கேட்டவனை வியந்து பார்த்த நிஷாந்தை பார்த்து,
“வா நிஷாந்த். எப்டி இருக்க?...” என அவனை கட்டித்தழுவி விசாரித்துவிட்டு அவனின் காதில், “எப்டி இருக்கா என் சண்டிராணி?...” என்று முணுமுணுக்க அவனை அதிர்ச்சியோடு பார்த்தான் நிஷாந்த்.
அவனை பார்த்து கண்ணடித்தவன், “அப்பறம் மாமா, அப்பா எல்லாம் சொன்னாங்களா? இருந்தாலும் நானும் சொல்றேன். எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க பரிபூரண சம்மதம்...” என சொல்லவும் பரமேஷ்வரனின் அகமும், முகமும் சந்தோஷத்தில் பொங்கியது.
அந்த சிரிப்பிலேயே நிஷாந்திற்கு புரிந்து போனது. பரமேஷ்வரனுக்கு இதில் முழுசம்மதம் என்று. அதனால் அவசரமாக இடைபுகுந்த நிஷாந்த், “பெரியப்பா அவசரப்படாதீங்க. நம்ம ஹர்ஷூக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க...” என்று ஹர்ஷிவ்தாவின் குணத்தையும் மனதில் வைத்துகொண்டு தான் கேட்டான்.
“நிஷாந்த், நீ அமைதியா இரு. இது நம்ம ஹர்ஷூவோட வாழ்க்கை. பெரியவங்க நாங்க பேசி முடிவெடுப்போம்...” என அதட்டினார் செல்வம்.
ஒரு கணம் யோசனைக்குள்ளான பரமேஷ்வரனின் முகத்தை பார்த்த ஷக்தி, “மாமா, நீங்க அப்பாகூட கிளம்புங்க. அப்பா மத்த விஷயங்களை விவரமா உங்ககிட்ட சொல்லுவாங்க. உங்க திருப்திக்காக உங்க குடும்ப ஜோசியர்க்கிட்ட முதல்ல போய் ஜாதகபொருத்தம் பாருங்க. நானும் நிஷாந்தும் ஷாப்பிங் போய்ட்டு மாமா வீட்டுக்கு போய்டறோம். ஈவ்னிங் வீட்ல மீட் பண்ணலாம்...” என்று அவரை தன் தந்தையோடு அனுப்பி வைத்த ஷக்தி நிஷாந்தின் புறம் திரும்பி புன்னகைத்தான்.
நிஷாந்த்தோ அவனுக்கு புன்னகையை பதிலளிக்காமல் இன்னும் தன் ஆராயும் பார்வையையே தொடர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஷக்தியின் இந்த நடவடிக்கைக்கான காரணம் அவசியம் தெரியவேண்டி இருந்தது. அவனின் எண்ணவோட்டம் புரிந்தது போல ஷக்தி,
“என்ன நிஷாந்த்,கல்யாணம் நடக்கனும்னா பொண்ணுக்கிட்ட சம்மதம் கேட்கனும்னு உங்க பெரியப்பாகிட்ட சொன்னது போல, கல்யாணத்தை நிறுத்தனும்னா உங்க பெரியப்பாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னும் அந்த சண்டிராணிக்கிட்ட சொல்லமாட்டீங்களோ? அவ சொன்னானு உடனே கத்தியோட ஹோட்டலுக்கு கிளம்பி வந்திடறதா?...”என கூர்மையான பார்வையோடு முகத்தில் எந்தவிதமான உணர்வையும் வெளிக்காட்டாமல் அதே சமயம் அழுத்தமாக கேட்டான்.
நிஷாந்திற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. தங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும் என யோசிக்கவும் மறந்தவனாக கொஞ்சம் பயத்தோடும், எச்சரிக்கை உணர்வோடும் ஷக்தியை பார்த்தான்.
அவனோ உதட்டில் உறைந்த புன்னகையோடு நிஷாந்தின் பயத்தை உணர்ந்தவன் போல, “பயப்படாதே. நான் யார்க்கிட்டயுமே சொல்லலை. சொல்லவும் மாட்டேன். எனக்கு உங்க வீட்டு பெண்ணை பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டு பெண் கேட்கிறதுல என்ன தப்பு? சொல்லு. அவளோட விருப்பத்தைன்னு பார்த்தா இந்த ஜென்மத்துல கல்யாணம் செய்துப்பான்னு எனக்கு தோணலை. அதுக்கு காரணம் என்னனும் எனக்கு தேவையில்லை. எனக்கு பிடிச்சிருக்கு. தட்ஸ் ஆல். நான் அவளை நல்லா பார்த்துப்பேன்...”என்று அத்தோடு முடித்துக்கொண்டான்.
நிஷாந்தின் மனமோ அங்குமிங்கும் அலைபாய்ந்து சிறிது யோசித்து குழம்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து ஹர்ஷிவ்தாவின் வாழ்க்கைக்கு இது சரியான தீர்வு என்று உணர்ந்து கொண்டவன் ஷக்தியை பார்த்து நட்பாக புன்னகை பூத்து தன் சம்மதத்தை தெரிவித்தான். அதோடு மறக்காமல் பரமேஷ்வரனுக்கு ஹர்ஷிவ்தா செய்துகொடுத்த சத்தியத்தை பற்றியும் ஷக்திக்கு உதவுமென்று கூறி வைத்தான்.
அதாகப்பட்டது, தன் பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்வேனென்றும், அதே நேரம் மாப்பிள்ளை தன்னை வேண்டாமென்று சொன்னாலே தவிர தானாக ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் தான் திருமணம் வேண்டாமென்று சொல்லமாட்டேன் என்றும் பரமேஷ்வரனுக்கு வாக்களித்திருக்கிறாள் ஹர்ஷிவ்தாவர்ஷினி.
“இந்த வாக்கை வச்சு வர மாப்பிள்ளைங்களை எல்லாம் மிரட்டி விரட்டிட்டு இருக்கா. பெரியப்பா கூட எதுக்காக பொண்ணு கேட்டு வரவங்களை பத்தி விசாரிக்கிறதும்? மாப்பிள்ளைக்கிட்ட மிரட்டலா கேள்வி கேட்கிறதும் சரியில்லைன்னு அவ கிட்ட சொன்னதுக்கு எனக்கு பொருத்தமானவரா இல்லையான்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? கேள்விக்கு பயந்துக்கிட்டு பொண்ணு வேண்டாம்னு போனா நானா பொறுப்புன்னு சொல்லி உங்க வாக்கை நான் என்னைக்கு மீறமாட்டேன்னு ஒரு மேல் பூச்சு வேற போடறா...” என நொந்துகொண்டான்.
“ஹா...ஹா..ஹா.. உன்னோட ப்ரெண்ட் சரியான ஆள்தான். உங்க பெரியப்பாவை சரியா லாக் பண்ணிருக்கா. அதனாலதான் மாப்பிள்ளையை இவளே அட்டாக் செய்யறா. ஆனா அவளோட இந்த சத்தியமே அவளுக்கு இந்த விஷயத்துல எதிரா நிற்கபோகுது பாரு...” என்று சிரிக்க அப்போதும் நிஷாந்த்,
“இல்லை அத்தான். எனக்கென்னமோ பயமாதான் இருக்கு. அவ எப்போ எப்படி ரியாக்ட் செய்வான்னே தெரியாது...” என யோசனையோடே கூறவும் தான் பார்த்துகொள்வதாக அவனுக்கு நம்பிக்கையூட்டிய ஷக்தி நிஷாந்தின் அத்தான் என்ற உரிமையான அழைப்பில் நெகிழ்ந்திருந்தான்.
“சரி வா, போய் நிச்சயதார்த்தத்துக்கு புடவை நகையெல்லாம் வாங்கலாம்....” என ஷக்தி எழவும் அவனின் நம்பிக்கையை பார்த்து வாயை பிளந்தான் நிஷாந்த்.
“ஆனாலும் உங்களுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் அத்தான். கொஞ்சம் தைரியத்தையும் மிச்சம் வைங்க. நிச்சயதார்த்தம்னு முடிவே பண்ணிட்டீங்களா? கொஞ்சம் யோசிங்களேன்...”
“எங்கப்பாவுக்காகதான் இன்னைக்கு நிச்சயதார்த்தம். இல்லைனா இன்னைக்கே கல்யாணத்தை முடிச்சிடுவேன். ஓவர் ஸ்பீடு அவரோட உடம்புக்கு ஆகாதுன்னு சொன்னதால கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். அதுமில்லாம அந்த சண்டிராணிக்கு யோசிக்க டைமே குடுக்க கூடாது. சரியான கிரிமினல்...” என ரசனையாக கூறியவனை பிரமிப்பாக பார்த்தான் நிஷாந்த்.