Kamali vachi seyya pora pola.super sis
Nice Ep“என்ன அமைதியா நிக்கிறீங்க?? பதில் இல்லைல்ல... இருக்காது.. எப்படி இருக்கும்?? உங்களைப் பொறுத்தவரைக்கும் உங்களை யாரும் தப்பு சொல்லக் கூடாது.. அதனால மட்டுமே எங்களோட உறவு கொண்டாடுறீங்க...” என்றவள், இரண்டு அடி முன்னெடுத்து வைத்து,
“உங்கம்மா, எங்கம்மாக்கு பண்ணதை எல்லாம் திருப்பி செஞ்சாதானே அதோட வலி உங்க எல்லாருக்கும் புரியும்...” என்றவள் “என்ன திருப்பி செய்யட்டுமா??!!” என்றாள் ஆக்ரோசமாய்..
கமலி மனதில் இப்படியெல்லாம் எண்ணங்கள் இருக்கும் என்று சிவகாமிக்கே அதிர்ச்சிதான்... கோபமாய் பேசுவாள் தான், பின் சில விஷயங்கள் எடுத்து சொல்லி புரிய வைத்தாள், சரி என்றுவிட்டு அவளின் வேலையைப் பார்க்க போய்விடுவாள் என்றே இதுநாள் வரைக்கும் நினைத்திருந்தார். ஆனால் இன்றோ நேருக்கு நேரே வனமாலியிடம் கமலி இப்படி கேட்க அவரும்தான் அதிர்ந்து போனார்.
வனமாலியோ புரியாது பார்க்க, “என்ன புரியலையா??!!!” என்றவள் “வந்தனா கல்யாணத்தை நிறுத்திட்டா???!!! முடியாதுன்னு நினைக்காதீங்க... என்னால கண்டிப்பா முடியும்... அப்போ உங்க அம்மாவுக்கு எப்படியிருக்கும்...” என்று நக்கலாய் சிரித்தபடி கமலி கேட்க, வனமாலி மனதளவில் ஆடித்தான் போனான்..
‘அம்மாடியோ என்ன வார்த்தை இது...’ என்று அவன் திகைக்க, மனதினுள் லேசாய் ஓர் பயம்.. செய்து விடுவாளோ என்று.. ஏனெனில் அவன் முன்னே நின்றிருந்த இந்த கமலிக்கு அப்படியொரு திடம் இருந்தது.
ஆனால் சிவகாமியோ மகள் இறுதியாய் கூறிய வார்த்தைகள் கண்டு “கமலி...!!!”என்று அதட்டியவர், யாரும் நினைக்கும் முன்னமே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்துவிட்டார்..
“என்ன பேச்சு பேசற நீ... உன்னை இப்படிதான் நான் வளத்தேனா??” என்று சிவகாமி கோபமாய் கேட்க,
அம்மா அடித்த அதிர்ச்சியோடும், அதுவும் வனமாலி முன் அடித்த கோபத்தோடும், கண்கள் சிவந்து கண்ணீர் கோடுகளோடு கன்னத்தில் கை வைத்து சிவகாமியை உறுத்துப் பார்த்தாள்.
வனமாலிக்கோ ‘ஐயோ...’ என்ற உணர்வு... தான் இங்கு இப்போது வந்ததே சரியில்லையோ என்ற யோசனை.. கொஞ்சம் ஆறப்போட்டு இருக்கவேண்டுமோ என்ற எண்ணம்.. எல்லாம் தாண்டி கமலியின் இந்த தோற்றம். மனதை மிக மிக பாதிக்கச் செய்ய,
சிவகாமியோ “என்ன கமலி இது.. இப்படி ஒரு வார்த்தை வரலாமா??” என்றார் மகளிடம்..
அவளோ அம்மா கேட்டதிற்கு பதிலே சொல்லாது தன் முன் நின்ற வனமாலியைப் பார்த்தவள் “கமலி எல்லாத்துக்கும் நிச்சயம் பதில் கொடுப்பா...” என்றவள் அப்படியே கிளம்பிவிட்டாள்..
“கமலி...” என்று வனமாலி பின்னே போக,
“வனா விடு.. இப்போது எது பேசினாலும் அவளுக்கு புத்தில ஏறாது..” என்றவர், “அவ.. அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் வனா..” என்றுசொல்ல,
“ஐயோ அத்தை என்ன இது.. அவ கோவத்துல பேசுறா..” என்றான் ஆதங்கமாய்..
“கோபத்துலனாலும் என்ன சொல்றதுன்னு இல்லையா வனா... நேத்து அவ்வளோ சமாதானம் செஞ்சேன்..”
“ஹ்ம்ம் அம்மா பேசினதுக்கு கமலியும் தான் என்ன செய்வா அத்தை..” என்றவன், “உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்..” என்றும் சொல்ல,
“இல்ல வனா... கண்டிப்பா கமலி அப்படி எதுவும் செய்ய மாட்டா. அதுக்கு நான் பொறுப்பு...”என்றார் சிவகாமியும் உறுதியாய்..
“அத்தை ப்ளீஸ் நீங்க மனசுல எதுவும் போட்டுக்க வேணாம்.. கமலி பத்தி தான் தெரியுமே... அப்படியே அவ எது பண்ணாலும் அது நாங்க சந்திக்க வேண்டிய ஒண்ணுதான்...” என்றவன் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்ப, வனமாலியின் மனது உலைகளமாய் கொதித்துக்கொண்டு இருந்தது.
ஆனால் அதனை விட எரிமலையாய் வெடித்து சிதறிக்கொண்டு இருந்தது கமலியின் மனது.. அவள் வெளியிட்ட வார்த்தைகள் அவளுக்கே அதிர்ச்சிதான். நிச்சயம் அவள் அதை ஒரு கோபத்திலும் ஒரு வேகத்திலும் தான் சொன்னால். கண்டிப்பாய் வந்தனாவிற்கு பாதகம் நினைத்து அல்ல. வனமாலி மனதினில் ஒரு அதிர்வை உண்டு செய்யவே சொன்னாள். ஆனாலும் அம்மா அடித்தது அவளாள் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை..
அச்சகம் வந்தவளுக்கோ, மனம் அடங்க மறுக்க, எத்தனை முறை தண்ணீர் அருந்தியும் கூட அவளால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.. ஓ என்று கத்தி அழவேண்டும் போலவும் இருந்தது.. கண் முன்னே இருக்கும் வேலைகள் எல்லாம் எதுவுமே அவளுக்கு புரிபடவில்லை.
மணிராதா சொன்ன அந்த வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலிக்க, அவ்வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தம் அவளும் அறியாது அவளின் மனதினுள் ஒரு வன்மம் கொடுக்க. காதுகளை இறுக மூடிக்கொண்டாள்.
“நோ... நோ.. என் அம்மா என்னை அப்படி வளர்க்கல..” என்று அவளே சொல்லிக்கொள்ள,
“அப்போ.. அப்போ இவங்களை இப்படியே சும்மா விடப் போறியா??” என்று கேள்வி கேட்டு எடுத்து கொடுத்தது மனது..
‘கடவுளே....’ என்று நொந்தவளுக்கு, இவர்களை எல்லாம் சும்மா விடுவதா என்ற நினைப்பும் வர, கண்டிப்பாய் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவே தோன்றிவிட்டது.
‘இந்த கமலி யாருன்னு காட்டுறேன்.. என் உடம்புல ஓடுறதும் அதே ரத்தம் தானே.. எனக்கும் அதே பிடிவாதம்.. அதே வேகம் எல்லாம் இருக்கும் தானே.. காட்டுறேன்.. எங்கம்மாவோட வாழ்கைய இன்னொருத்தர் கைல தூக்கி கொடுத்தீங்க தானே.. இப்போ உங்க ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் என் கைல இருக்கு.. கமலி சிவகாமியோட பொண்ணு தான்.. ஆனா சிவகாமி மாதிரி அமைதியா இருக்க மாட்டா...’ என்று தனக்கு தானே பேசி முடிவெடுத்துக்கொண்டாள்.
அங்கே வனமாலியோ சிவகாமியின் வீட்டிலிருந்து தன் வீடு சென்றவன் வேகமாய் உள்ளே நுழைய “என்னடா மன்னிப்பு படலம் எல்லாம் முடிஞ்சதா??” என்றார் நக்கலாய் மணிராதா.
அவன் வந்த வேகத்தை விட அப்படியே நின்றவன், அவரை திரும்பிப் பார்க்க, “உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் அறிவே இருக்காதா.. அமைதியா தானே அவங்க இருக்காங்க.. அப்புறம் ஏன் அவங்களை இப்படி பேசணும்..” என்று கத்தினான்.
நடுவீட்டில் நின்று வனமாலி கத்த, உள்ளிருந்து பமீலா, வந்தனா எல்லாம் எழுந்து வந்துவிட்டனர். வந்தனாவைப் பார்த்தவனுக்கு மனதினில் என்ன தோன்றியதோ, கண்களை இறுக மூடி திறந்தவன்,
“வந்தனா கல்யாணத்தை நிறுத்துவேன் சொல்றா... செய்யட்டுமான்னு கேட்கிறா..” என்று வனமாலி சொல்ல,
“என்னது..?? என்ன?? என்ன சொன்ன..” என்று பதறிக்கொண்டு மணிராதா முன்னே வர,
“ஆமா.. அதே தான்.. வந்தனா கல்யாணத்தை நிறுத்திக் காட்டவான்னு கமலி கேட்கிறா.. நேத்து நீங்க பேசின பேச்சுக்கு.. அப்புறம் அத்தைக்கு நீங்க செஞ்சதுக்கு..” என்றும் சொல்ல,
வந்தனா முதலில் அதிர்ந்து பார்த்தாலும், பின் என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்ட அமைதியாய்ப் பார்க்க, மணிராதாவோ “அப்படியே சொன்னாளா??” என்றார் ஆடிப்போய்..
“ஆமா.. என்னால ஒரு வார்த்தை பதில் சொல்ல முடியலை.. ஏன் உங்களுக்கு எல்லாம் வாய் வச்சிட்டு சும்மாவே இருக்க முடியாதா??” என்று பமீலாவையும் சேர்த்து வனமாலி பேச,
“அடுத்தவளை பேசவிட்டு வந்து வேடிக்கைப் பார்த்துட்டு இங்க வந்து ஏன் குதிக்கணும்..” என்று அவளோ ஜாடை பேச,
“ஏய்... யார் அடுத்தவ?? வார்த்தைய அளந்து பேசு.. அவ நினைச்சா நீ உங்கம்மா எல்லாரும் இங்க இருக்கவே முடியாது..” என்றான் வனமாலியும் மிரட்டலாய்..
இதென்னடா.. அவள்தான் மிரட்டினால் என்றுவந்து இவன் கத்தினால் இப்போது இவனும் சேர்ந்துகொண்டு மிரட்டுகிறான் என்று பார்த்த மணிராதா,
“அவளை அப்படியே சும்மாவா விட்டு வந்த.. இரு நான் போறேன்.. என்கிட்டே வாய் சவடால் காட்டட்டும்..” என்று வேகமாய் கிளம்ப,
“ம்மா...” என்று வனமாலி கத்திய கத்தலில் திடுக்கிட்டு நின்றுவிட்டார்.
“போய் என்ன செய்ய போற.. இன்னும் பேசி அவளை கிளப்பி விட போறியா??”
“அதுக்காக என் பொண்ணு வாழ்க்கை..” என்று மணிராதா ஆரம்பிக்கையில்,
“அப்போ சிவகாமி அத்தை வாழ்க்கை மட்டும் உனக்கு வச்சு விளையாடுற பொருளா??” என்றான் ஆங்காரமாய்..
“வனா..!!!!”
“ச்சே.. நீங்க யாருமே திருந்த மாட்டீங்க.. இனி இந்த வீட்ல இருக்கிறதே வேஸ்ட்...” என்றவன், கிளம்பியவன் தான் இன்றுவரைக்கும் வீட்டிற்கு வரவில்லை..
வனமாலி வீட்டில் இல்லாது தியேட்டரில் தங்குவது கமலிக்கு தெரிந்து முகத்தினில் லேசாய் ஒரு திருப்தி.. ஆனாலும் சிவகாமியோடு இரண்டு நாட்களாய் அவளும் பேசவில்லை.. மணிராதவோ பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர்,
“கோவர்த்தனா அவன் எங்க இருக்கான்னு கேளு..” என்றுசொல்லி வனமாலியை சந்திக்கக் கிளம்பிவிட்டார்..
வாழ்க்கை ஒரு சோலி ஆட்டம் தான்.. சில நேரம் தாயம் விழுவதும் உண்டு.. பல நேரம் அணைத்து சோலிகளும் கவிழ்ந்து விழுவதும் உண்டு.. இங்கே யாருக்கு எதில் ஆதாயம்.. யாரை எது கவிழ்க்கும் என்பது அவரவர் செய்தவைகளும் செய்பவைகளுமே முடிவு செய்கின்றது..
தொடரும்.........