அத்தியாயம்: 9
விக்கியின் வார்த்தைகளில் தேங்கி நின்ற விஸ்வநாதன், ‘என்ன?’ என்பதுபோல் சேரனைப் பார்த்தார்.
அவனோ விஸ்வநாதனின் புறம் திரும்பாமலே இருந்தான்.
லோகுவும் அமைதியின்றி நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
விக்கியின் ஆட்கள் வெளியே சென்று தேட தொடங்கினர்.
அப்பொழுது எதேச்சையாக விக்கியின் கண்கள் மருத்தவமனையின் சுவற்றில் இருந்த கடிகாரத்தில் படிந்து மீண்டன.
நேரம் அதிகாலை ஐந்து மணி முப்பது நொடிகளை காட்டியது அந்த கடிகாரம்.
விக்கி சில நொடிகள் ஏதோ ஏதோ யோசித்தான். திரும்பி தன் ஆட்களிடம் பேச எத்தனிக்கையில், சகாயத்தின் அறையிலிருந்து செவிலியர் வெளியே வந்தார்.
“டாக்டர்! பேசன்ட் கண் விழிச்சிட்டாங்க.” என்றார் செவிலியர்.
சற்றும் தாமதியாமல் தன் ஆட்களை அழைத்தான் விக்கி. “சேரா! தேட போனவனுங்களை உள்ளே கூப்பிடு..!”
சேரனும் ஒரு பெருமூச்சு விட்டபடியே அவர்களை அழைக்க சென்றான்.
“யோவ்! வைத்தி! நீ இப்போ போய் அவனைப் பார்க்கற.. அந்த சகாயத்துக்கு இனிமே மயக்கம் வரக்கூடாது.. ஏன்னா நான் பேசப் போற விஷயம் அப்படி.. அதெல்லாம் உனக்கு தேவையில்லை..
சகாயம் எனக்கு பதில் சொல்லும்போது முழு சுயநினைவோட தான் இருக்கணும்.. திரும்பி அவனுக்கு மயக்கம் கியக்கம் வந்துச்சு, உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் வைத்தி.. போ! உன்ன படிக்க வச்சது நல்லதாபோச்சுன்னு நான் நினைக்கற அளவுக்கு உன்னோட வைத்தியம் இருக்கணும்.. என்ன வைத்தி, நான் சொல்லறது புரியுதா?” என்று மருத்துவரிடம் கொதித்தான் விக்கி.
மருத்துவரோ ‘ஏண்டா! இவனை அழைத்தோம்?’ என்று மனதில் நொந்துக் கொண்டபடியே சகாயத்தை பரிசோதிக்க சென்றார்.
தன் ஆட்கள் சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு அவர்களையே அனைவரிடமும் ‘யாரையும் தேட வேண்டாம்’ என்று சொல்லுமாறு பணித்துவிட்டு மருத்துவமனையினுள் புகுந்தான் சேரன்.
“என்ன சேரா! நம்ம ஆளுங்க கிட்ட சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேனுங்ண்ணா!!.”
“இந்தாய்யா பிரஸ்ஸு!! இப்போ நாங்க இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பியாகனும்.. உன்னோட வந்தவுங்களை நீயே கூப்பிட்டா உனக்கும் நல்லது.. அவங்களுக்கும் நல்லது.. “ என்றான் விக்கி.
அதுவரை அங்கு நடப்பவற்றை ஒரு வித பயத்துடனும், ‘சமீராவும், மாவட்ட ஆட்சியரும் விக்கியிடம் மாட்டாமல் இருக்கவேண்டும்’ என்ற வேண்டுதலுடன் அமைதியாக நின்றுக்கொண்டிருந்த விஸ்வநாதன் விக்கியின் கேள்வியால் அதிர்ந்தார்.
“என் கூட யாரும் வரலை.” என்றார் விஸ்வநாதன் நிமிர்வுடன்.
“ஓ! அப்படியா? உன் கூட யாருமே வரலைன்னா எதுக்குய்யா அந்த நர்சம்மா உன்னையவே பார்த்துட்டு இருந்தது..?” என்று கேள்வி கேட்டான்.
“அதை அவங்க கிட்ட தான் நீ கேக்கணும் விக்கி.” என்றார் விஸ்வநாதன்.
இவர்களின் சம்பாஷணையை மருத்துவமனையின் பின் பக்கத்திலிருந்த ஒரு மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சமர்த்.
விக்கி தன் ஆட்களிடம் அவர்களை தேட சொல்லும் போதே எங்கும் ஓடி சென்று தப்பிக்க முடியாது என்றறிந்ததால் கிளைகள் நிறைய இருந்த ஒரு மரத்தின் மீது வேகமாக ஏறி அடர்த்தியான கிளைகளால் தன்னை மறைத்து நின்றுக்கொண்டே மருத்துவமனையினுள் நடப்பவற்றை கவனித்தான்.
சமீராவும் அதேபோல் மரத்தின் மீது ஏறுவதைப் பார்த்த சமர்த், சிறிய புன்முறுவலுடனேயே விக்கி மற்றும் விஸ்வநாதன் பேசுபவற்றை கேட்க தொடங்கினான்.
விக்கியின் ஆட்கள் தங்களை தேடாமல் மருத்துவமனையினுள் செல்வதை கவனித்த சமீரா, ஏறியிருந்த மரத்திலிருந்து இறங்கினாள். மிக வேகமாக மருத்துவமனையின் பின் பக்கம் வந்து சமர்த் ஏறியிருந்த மரத்தின் மீது ஏற தொடங்கினாள்.
“நான் சொல்வதை எதுவும் கேட்க கூடாதுங்கற முடிவுல தான் இன்னும் இருக்கியா மீரா?” என்ற சமர்த்தை திரும்பிப் பார்த்த சமீரா, ஒன்றும் பேசாமல் இருக்குமாறு கைகளால் ஜாடை செய்துவிட்டு, உள்ளே நடப்பவற்றை கவனிக்கும்மாறு கண்களாலேயே ஜாடை செய்தவளைப் பார்த்து பல்லைக் கடித்தான் சமர்த்.
‘இப்போவாவது வாயை திறந்து ஏதாவது பேசறாளா? பகவானே! இவளால தான இப்போ இப்படி மரத்து மேலே தொங்கிண்டு இருக்கேன்.. எல்லாம் என் நேரம்.’ என்று சமர்த்தின் மனது நொந்துக்கொண்டாலும், அவள் பாதுக்காப்பாக தான் மரத்தின் மீது அமர்ந்திருக்கிறாளா? என்றும் கவனித்துக்கொண்டன அவனின் கண்கள்.
“பிரஸ்ஸு என் பொறுமைய ரொம்ப சோதிக்கற? இப்போ உன் கூட்டாளிங்கள கூப்பிட போறியா இல்லையா?” என்ற விக்கிக்கு கோபம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
“விக்கி நான் மட்டும் தான் வந்தேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்வது?” என்று பதில் கேள்வி கேட்டார் விஸ்வநாதன்.
“அடேய்!! உன்னைய” என்று கோபமாக அழைத்த விக்கி, அடுத்த நொடியே தன் துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட தொடங்கினான்.
“பிரஸ்ஸு!! உனக்கு இன்னும் இந்த விக்கியப் பத்தி தெரியலை.” என்று சொல்லிக்கொண்டே சுட்டான்.
அந்த சத்தத்தில் அதுவரை ஏதோ ஒரு வித மயக்கதிலிருந்த சகாயத்தின் மயக்கம் முழுதாக நீங்கியது.
சகாயத்துடன் வெளியே வந்த மருத்துவர், அங்கு உடம்பெங்கும் குண்டடிபட்டு கிடந்த விஸ்வநாதனைப் பயத்துடன் பார்த்தார்.
மருத்துவ அறிவு ‘ஏதாவது செய்து அவரை காப்பாற்று..!’ என்று அறிவுறுத்தினாலும், விக்கியின் மீது இருக்கும் பயம் அதிகரித்ததால் கைகளால் வாயை இருக்க மூடிக்கொண்டு அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த மருத்துவர்.
சகாயாமோ, “விக்கி முதல்ல நாம இந்த இடத்திலிருந்து போகலாம் வா..!” என்று அழைத்தான்.
“யோவ் சகாயம்! வாய மூடிட்டு பேசாம இரு..!” என்ற விக்கி தன் கூட்டாளிகளிடம் திரும்பி, “நாம இப்போ உடனே கிளம்பியாகனும்.. இவன் கூட இந்த வைத்தியையும் ஏத்திக்கிட்டு கிளம்புங்க..” என்று சகாயத்தையும் மருத்துவரையும் கைகளால் சுட்டி காட்டிவிட்டு அறையில் இருக்கும் செவிலியரிடம் பேச சென்றான்.
“இந்தா பாரு நர்சம்மா! உன்னை சுட்டு தள்ள எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது.. இங்க நடந்ததை ஏதாவது வெளில சொல்லணும் நினைச்ச நீயும் உன் குடும்பமும் இருக்கிற இடம் யாருக்குமே தெரியாம போயிடும்.. புரிஞ்சு நடந்துக்க..” என்று அப்பெண்ணை மிரட்டி விட்டு வெளியேறினான் விக்கி.
“சேரா! காரை எடுக்க சொல்லு.. அந்த ஊமையனை இங்கயே இருக்க சொல்லு.. அவன் கூட நம்ம மாரியையும் இருக்க சொல்லு.. என்ற விக்கி அருகில் இருந்த மாரியிடம் “இந்த துப்பாக்கிய பிடி மாரி.. நேரா போலீஸ் கிட்ட போய் சரணடைஞ்சுடு.. மீதிய எல்லாம் நம்ம வக்கீல வச்சு நான் பார்த்துக்கிறேன்.. சரியா...!” என்றான்.
மாரியும் ‘சரி’ என்பதாக தலையாட்டியதும் அவனின் தோளை தட்டி கொடுத்தவாறே தயாராக இருந்த காரில் கிளம்பினான் விக்கி.
விக்கியால் ஊமையன் என்று அழைக்கப்பட்ட லோகு மிக வேகமாக விஸ்வநாதனின் அருகில் சென்று அவரின் மூக்கில் கை வைத்துப் பார்த்தான். விஸ்வநாதனின் உடல் மட்டுமே அங்கிருக்க, உயிர் எப்போதோ அவரை விட்டு பிரிந்திருந்தது.
மரத்தின் மீது இருந்த சமீரா விஸ்வநாதன் குண்டடிப்பட்டதும் வாயை திறந்து கத்த முற்பட்டாள்.
ஒரு நொடியும் தாமதிக்காத சமர்த் அவளை இறுக அணைத்துக்கொண்டு தன் கையால் அவளின் வாயை அழுந்த மூடினான்.
அதில் சில நொடிகள் சமீரா திமிறியதால் சமர்த்தின் மற்றொரு கையில் இருந்த சமீராவின் அலைபேசி கீழே விழுந்து உடைந்தது..
லோகு விஸ்வநாதனின் உடலை தூக்க முயற்சி செய்ய, அதைப் பார்த்த மாரி, “நீ பாடிய பார்த்துக்கோ.. நான் டேசனுக்கு போயிட்டு வாரேன்..” என்று சொல்லிவிட்டு சென்றான்.
மாரி செல்லும் வரை அமைதியாக இருந்த லோகு, விஸ்வநாதனை கட்டிக்கொண்டு அழுதான்.
விக்கியின் ஆட்கள் எல்லோரும் சென்றுவிட்டதை அறிந்த சமர்த் அவர்களில் யாரேனும் திரும்புவதற்குள் இவ்விடத்தை விட்டு சென்றாக வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
“மீரா சீக்கீரம் இறங்கு.. நாம உடனே இந்த இடத்தை விட்டு கிளம்பியாகணும்.. ம்ம் சீக்கீரம்..”