Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

27. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நாதன் வந்த போது நிகழ்ந்த அரிய நிகழ்வு போல இன்றும் ஏதாவது நடக்குமா என ஆவலாக குமரவேல் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.

தனா அருவியில் நின்றிருந்தான். நீலகண்டர் சூரியனை வணங்கி கொண்டிருந்தார். ரத்தினம் அங்கேயே முத்திரை பிடித்து சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து விட்டார். குமரவேல் சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, தனா நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு மேலே மரக்கிளையில் அதன் உடலை சுருக்கி வைத்து ஆடிய படி தனாவையே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு நாகம்.

ஆம் அன்று நாதன் கண்ட அதே நாகம்.

நாதன் வருகையில், சீரிய நாகம், இன்று அமைதியாக அமர்ந்து தனாவையே பார்த்துக் கொண்டிருந்தது. யாரும் அதை கவனிக்கவே இல்லை.

நேரம் செல்ல, புல்லருவியில் எல்லோரும் நீராடி விட்டு பயணத்தை தொடர்ந்தனர். எங்கும் ஓய்வெடுக்க வில்லை. எப்படியும் அந்த இடத்திற்குச் சீக்கிரமாக சென்று விட வேண்டும் என எல்லோரும் வேகமாகவே நடந்தார்கள்.

வேலன் மட்டும் கொஞ்சம் சோர்வாக நடந்து வந்தார். இரண்டாம் மேட்டை கடந்து மூன்றாம் மேட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, தனா, ஒன்றைக் கண்டான். உடனேயே, ரத்தினத்திடமும் நீலகண்டரிடமும் அதை காண்பிக்க, மற்றவர்களும் அதை பார்க்க பிரமித்து விட்டனர்.

தனா கண்டது, ஓர் சித்தமுனியைத் தான். அவர் பாதி மனித உருவிலும், மீது நாக உருவிலும் இருக்க,அதைக் கண்டு தான் இவர்கள் நின்று விட்டனர்.

குமரவேலோ, இன்றும் ஒரு அற்புதத்தை பார்த்துட்டேன். என் வாழ்க்கையில நான் பேரு பெற்று போய்ட்டேன். ஈசனே... என அங்கேயே விழுந்து வணங்கி எழ, எல்லோரும் அதையே செய்தனர்.

இப்போது உச்சி பொழுதுக்கு முன்பாகவே மூன்றாம் மேட்டை அடந்தாயிற்று. அன்று போல இன்று தேடுவதற்கு நேரம் செலவாக வில்லை. ஏனெனில் அன்று நாதனுடன் குகையை விட்டு வெளிவரும் போது அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக குறிப்பெடுத்துக் கொண்டுதான் வந்தார் குமரவேல்.

அந்த குகையின் வழியை பற்றி மீண்டும் எல்லோருக்கும் ஒருமுறை சொல்லிவிட்டு, முதலில் குமரவேல், அடுத்து வேலன்,தனா, நீலகண்டர், ரத்தினம் என எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இடைவெளியுடன் உள்ளே நகரத் தொடங்கினர். இன்று சூரிய வெளிச்சம் இருப்பதால் விளக்குக்கு வேலையில்லாமல் போனது.

குனிந்து செல்லும் பாதை முடிந்து, இப்போது சற்று நிமிர்ந்து சென்று நாகங்கள் ஜீவசமாதி அடைந்து இருக்கும் இடத்திற்கும் வந்து விட்டனர்.

அங்கிருந்து உள்ளே செல்ல அனுமதி வேண்டும் என்று எல்லோரும் அப்படியே நிற்க, அவர்கள் இதற்கு முன் பார்த்த சித்தமுனி,

இப்படி என் வழியை மறைத்துக் கொண்டு நீங்கள் நின்றால், நான் எங்கனம் என் இருப்பிடம் செல்வேன். ம்ம் வழியை விட்டு விலகி நில்லுங்கள்.

பின்னே திரும்பி,.... இவர்கள் எல்லோரும் ஆ.... என்று பார்த்துக் கொண்டிருக்க, அவர் ஜீவ சமாதி அடைந்த நாகங்களைத் தாண்டி வேறு புறம் சென்று விட்டார்.

இப்போது உள்ளிருந்து

ம்ம்.... வந்துவிட்டீர்கள் அல்லவா. பின் எதற்குத் தாமதம். முன்னேறி வாருங்கள். என்ற அதே கோபக் குரல்.

உள்ளே முன்பு பார்த்த அந்த பெரியவர் தான் அமர்ந்திருந்தார்.

வணக்கம் சாமி என எல்லோரும் கும்பிட, தனாவை மட்டும் முன்னே அழைத்தார்.

நீ தான் அந்த நாதனின் கடைப்புத்திரன் சரிதானா.

ஆமா சாமி.

ம்ம். உனக்கு உன் அன்னையின் ஆத்மபலன் கிடைத்தது புரிந்து இதோ குமரவேலனின் வாரிசையும் மணந்து இவ்விடம் வந்திருக்கிறாய் சரியா.

ம்ம் ஆமா சாமி.

எல்லாம் எம்பெருமான் ஈசனின் கட்டளை.

ஆனால் நீ அந்த உருவத்தை அழிக்கும் முன் ஓர் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். தயாராக இருக்கிறாயா?

என் குடும்பத்துக்காக என் உயிரையும் கொடுப்பேன் சாமி.

ம்ம்.. வேண்டாம்.. அது இனி உன் உயிர் மட்டுமல்ல, உன் மனைவியையும் சார்ந்தது. அவளன்றி இனியொரு முறை இவ்வார்த்தைகளை உதிர்க்காதே.

அந்த உருவத்தை நீ அழிக்க வேண்டும் எனில் அதன் ஆக்கத்தையும் நீ அடி முதல் நுனி வரை கண்டுகொள்ள வேண்டும்.

இன்று நேற்று அல்ல, அந்த உருவம் உருவாகி பல நூற்றாண்டு கடந்து விட்டது.

இப்போதிருக்கும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அழிக்க பல ஆயுதங்களை பயன்படுத்துவது போல, அன்று ஒரு நாட்டையும் அரசையும் அழிக்க, உருவாக்கப்பட்டது தான் இப்பிடியாகப்பட்ட தீய உருவங்கள்.

தீய வழியில் மந்திரங்களை கற்ற பிறவிகள், இம்மாதிரி தீய உருவங்களை அவர்களை எதிர்க்கும் மனிதர்களுக்காகத் தான் முதலில் உருவாக்கினர். பின் தங்களுக்கு வேண்டாத குடும்பத்தை அழிக்க, ஊரை அழிக்க என்று ஆரம்பித்து பின் ஓர் அரசாட்சியை அழிக்க என்றும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு அரசாட்சியை குறுக்கு வழியில் அடைய எண்ணிய மற்றொரு அரசு, இம்மாதிரி உருவங்களை பயன்படுத்தி அதை செய்தும் காட்டினார்கள். பல உயிர்கள் மாய்ந்து போனது. ஒவ்வொரு முறையும் கட்டுக்குள் வைக்கப்பட்டு சிறை செய்யப்படும் இந்த உருவங்கள், மீண்டும் தலை தூக்கி பல இன்னல்களை உண்டாக்குகின்றன.

மனிதனை மனிதனாக வாழ்விப்பதற்கு வகை செய்யும் மதமும், மனிதனை பண்புள்ளவனாக வாழ செய்யும் தெய்வ நம்பிக்கையும், மனிதனின் ஆன்மாவை ஆராய்ந்து பரமாத்மாவோடு ஐக்கியமடைய செய்யும் வழிபாடும், பக்தியும், தியானமும், யோகமும், யாகமும் இருக்கும் வரை இந்த உருவங்களால் தலை தூக்க முடியாது.

மும்முறை கட்டுக்குள் வைக்கப்பட்ட இந்த உருவம் இனி இப்புவியில் இருப்பதற்குத் தகுதியற்றது என அழிக்கும் வழிவகையை உருவாக்கிவிட்டார், எம்பெருமான் ஈசன்.

நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், சரி, தீமைகளுக்கும் சரி நாமே பொறுப்பு. உன் அப்பனின் ஆசையில் விளைந்த தீமையே உன் வீட்டில் நடந்த இறப்புக்கு காரணம்.

இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் என உலக வாழ்வில் உள்ள அனைத்தையும் கடந்து எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் ஏகாந்த நிலையில் மட்டுமே உங்களால் அந்த உருவத்தை அழிக்க முடியும்.

சாமி.

ஆம்.. உன் மனைவி உடன் இருந்தால் மட்டுமே உன்னால் இவ்வுருவத்தை அழிக்க முடியும்.

அன்னையவளின் முழு ஆசி பெற்ற, அகரயாழினியும், பெற்றவளின் ஆத்மபலம் பெற்ற புத்திரனும் சேர்ந்து தான் அந்த தீய உருவத்தை அழிக்க வேண்டும். இதுவே உலகாளும் ஈசனின் முடிவு.

உன்னை நீயே தயார் செய்து கொள். இதோ இவன் உனக்குத் துணையாக இருப்பான்.


யார் அவன்???


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas....
 
Top