வரம் 3

Advertisement

Writer girl

Well-known member
Member
அந்த மகிழ்ச்சியுடனேயே தன்னுடைய உடன்பிறந்த சகோதரனுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்தாள் வண்ணமதி.

அதை அறிந்ததும்,”அக்கா தான் கூப்பிட்டு இருக்காங்கப்பா”என்று ஏற்றுக் காதில் வைத்தான் மகிழம்பூவன்.

“ஹலோ மகிழு!”என உற்சாகமாக கேட்ட சகோதரியிடம்,

“ஹலோ சொல்லுக்கா”என்று தானும் புன்னகையுடன் பேச,

“ஊருக்குக் கிளம்புறதுக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா?”என்று அவனிடம் விசாரித்தாள் வண்ணமதி.

“இன்னும் இல்லக்கா. முதல் நாள் புக் பண்ணாலே போதும். இந்த டைமில் டிரெயினில் கூட்டம் இருக்காது”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

“அப்போ சரி. அப்படியே எனக்கும் சேர்த்துப் புக் பண்ணுடா”என்றவளிடம்,

“நீயும் எங்க கூட வர்றியா? அப்போ, குட்டிப் பையனை யார் பார்த்துக்குவா?”என்று வினவ,

“அதெல்லாம் செந்திலை என் அத்தைப் பார்த்துப்பாங்க. அவங்க கிட்டே பேசிட்டுத் தான் உனக்கு ஃபோன் செஞ்சேன்”எனத் தம்பிக்குப் பதிலளித்தாள் வண்ணமதி.

“நல்லா வெவரமா தான் இருக்கே நீயு!”என்று அவளைக் கேலி செய்து சிரிக்க,

“அதை விடு. நீ எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுவியா? மாட்டியா?”எனக் கேட்ட தமக்கையிடம்,

“கண்டிப்பாகப் போட்றேன்க்கா. நீயும் உன் துணியை எல்லாம் எடுத்து வச்சித் தயாராக இரு”என்றவனோ,

பின்னர் ஞாபகம் வந்தவனாக,”ஆமாம். நீ ஏன்க்கா அங்கே வரனும்னு இப்படி ஆர்வமாக இருக்க?”என்று சந்தேகத்துடன் வினவினான் மகிழம்பூவன்.

அதில் சட்டென்று திடுக்கிட்டுப் போய்ச் சடுதியில், தன்னைச் சமாளித்துக் கொண்டு,”அஃது… நானும் அங்கே போய் அவங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல? அத்தை, மாமாவைப் பார்க்க ஆசையாக இருக்கு. அதான்”என்று கூறிச் சமாளித்தாள் வண்ணமதி.

“ஓஹ்! சரிக்கா”

அதற்குப் பிறகுத், தங்களது ரயில் பயணத்திற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்து விட்டுத் தெரிவிப்பதாக கூறி அழைப்பை வைத்து விட்டு, அவள் தங்களுடன் ஊருக்கு வருவதைப் பற்றிய செய்தியைத் தன் தந்தையிடம் அறிவிக்க,

அவரோ,”ஆமா மகிழு. மதியும் நம்மக் கூட வர்றதும் நல்ல விஷயம் தான்”என்றுரைத்து விட்டார்.

தன் அறைக் கட்டிலில் படுத்துக் கொண்டுத், தனது செல்பேசியில் இருந்த சஹஸ்ராவின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டான் மகிழம்பூவன்.

ஏனெனில் அவனுக்குச் சிறு வயது முதலே அவள் மீது பிடித்தம் இருந்தது.

அது வளர, வளரக் காதலாகவும் உருவெடுத்து விட்டிருக்க, அந்தச் சமயத்தில் தான், அவளுக்குத் தன் மீதும், தன்னுடைய சகோதரியின் மீதும் இருந்த கோபம் இன்னுமே குறையவில்லை என்பதை அறிந்து கொண்டான் மகிழம்பூவன்.

அதனாலும், தனது நிறத்தின் காரணத்தினாலும் அவளை விட்டுத் தள்ளியே இருந்து விட்டான்.

ஆனால் அவளைத் தூரத்தில் இருந்து ரசிக்க மட்டும் தவறவே மாட்டான மகிழம்பூவன்.

அவனது மாமா ரமணனோ தன்னுடைய குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்று அங்கு நிரந்தரமாக தங்கி விட்டதில்,

இனிமேல் சஹஸ்ராவைப் பார்க்கும் வாய்ப்புக் குறைவு என்றெண்ணிய போது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

எப்போதாவது, ஊருக்குப் போய் அவர்களைப் பார்த்து விட்டு வந்தாலும் கூடத், தன்னவளைத் தினமும் பார்ப்பதைப் போன்ற நிம்மதி மகிழம்பூவனுக்குக் கிடைக்கவே இல்லை.

இப்போது,”நான் அங்கே வந்தாலும் நீ என்னை ஒரு ஆளாகவே மதிக்கப் போவதில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை. நான் உன்னை நேரில் பார்க்கனும். எப்பவும் போல், உன்னைத் தள்ளி இருந்து பார்த்துட்டால் இன்னும் கொஞ்ச நாட்களைக் கடத்திடுவேன்”என்று அவளது பிம்பத்திடம் சொல்லி முடித்து விட்டுத் தன் விழிகளை மூடி உறக்கத்தை மேற்கொண்டான்.

அதே நேரத்தில், தங்களது வீட்டின், வரவேற்புக் கூடத்தில்,”நம்மப் பையனுக்கும், சஹஸ்ராவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம்னு உங்க அண்ணன் கிட்ட சத்தியம் வாங்கிட்டு நீ பாட்டுக்கு நிம்மதியாகச் சொர்க்கத்துக்குப் போயிட்ட. ஆனால் இந்தக் கல்யாணத்தை எப்படி நடந்துறதுன்னு எனக்குச் சத்தியமாக எந்த யோசனையும் வரலை மல்லிம்மா. நம்மப் பையன், என்ன தான், வெளியே சாதாரணமாக நடத்துக்கிட்டாலும் அவனுக்குச் சஹஸ்ராவைக் கட்டிக்கனும்ற ஆசை நெஞ்சு நிறைய பரவிக் கெடக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சி இருந்தும் என்னால் எதுவுமே செய்ய முடியலைன்னு ரொம்ப வருத்தமாக இருக்கு மல்லி. நம்மப் பையனோட ஏக்கத்துக்கும், என்னோட போராட்டத்துக்கும் இப்போ ஒரு முடிவு கிடைக்கும்னு நம்புறேன்!”எனத் தன் மன பாரத்தை அவரிடம் மானசீகமாகப் பகிர்ந்து விட்டுத் தானும் உறங்கிப் போனார் பால்ராஜ்.

ஆனால் இவர்களது மனதைக் கலங்கடித்துக் கொண்டிருந்த சஹஸ்ராவோ, தனது கால்களில் நகப் பூச்சைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளது அறைக்குள் நுழைந்து,“சஹா! நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்“என்றார் கஸ்தூரி.

“ம்மா! என்னோட ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடி கதவைத் தட்டிட்டு வாங்கன்னு உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றது?”என்று குறைபட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.

“போடி இவளே! உனக்கு இவ்வளவு பிரைவசி கொடுத்து தான் நீ எங்ககிட்ட எதையுமே சொல்ல மாட்டேங்குற! ஆனாலும் நான் உன் பிரைவசியை எப்பவுமே மதிப்பேன். இப்போ ஏதோ யோசனையில் மறந்துட்டு உள்ளே வந்துட்டேன். அதுக்காக உங்கிட்ட கேட்கனுமா சொல்லு?”என்று சலித்துக் கொள்ள,

“ம்ஹூம். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா. அடுத்த தடவை வரும் போது கதவைத் தட்டிட்டு வாங்க. எங்கிட்ட என்னப் பேச வந்திருக்கீங்க?”என்றவளிடம்,

அவள் இப்போது மகிழ்ச்சியாக நகப்பூச்சைப் போட்டுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய விண்ணப்பத்தைக் கூறினால் அதற்குக் கண்டிப்பாக செவிமடுப்பாள் என்ற நப்பாசையில் பேச ஆரம்பித்தார் கஸ்தூரி.

“உன் மாமாவும், அவர் பிள்ளைங்களும் இங்கே வரப் போறாங்கன்னு உனக்குத் தெரியும் தானே?”

அதைக் கேட்டவுடன், தனது முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க,

“ம்ஹ்ம். தெரியும்மா”என அவருக்குப் பதிலளித்தாள் சஹஸ்ரா.

“அவங்க இங்கே வந்து தங்கிட்டு ஊருக்குக் கிளம்புற வரைக்கும் நீ அவங்க கிட்ட நல்லா நடந்துக்கனும், அவங்களை நீ நல்லா நடத்தனும்! அவங்களை அவமதிக்கிற மாதிரி எதுவும் செய்யக் கூடாது. இந்த ஒரு தடவை எங்கப் பேச்சைக் கேளு சஹா”என்று அவளிடம் கோரிக்கை விடுத்தார் கஸ்தூரி.

அதில் வெண்மை நிறம் கொண்டவளது முகம் கோவைப் பழச் சிவப்பிற்கு மாறி விட்டிருந்தது.

“ம்மா…”என்று தனது குரலை உயர்த்தினாள் சஹஸ்ரா.

“என்னடி? நான் சொல்வதை முதல்ல பொறுமையாக கேட்டுட்டு அப்பறம் பேசு!”என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கஸ்தூரி.

“சரிம்மா. சொல்லுங்க”என்று கூறித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்,

“அவங்க அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. அதனால்…”என்றவரை இடைமறித்து,

“அதனால், நான் அவங்க மனசுக் கஷ்டப்பட்றா மாதிரி எதுவும் பேசக் கூடாது. அதை தானே அடுத்து சொல்லப் போறீங்க?”எனத் தன் பிடித்தமின்மையை முகத்தில் மறைக்காமல் வெளிப்படுத்தினாள் சஹஸ்ரா.

“ஆமாம். அதை நான் மட்டுமில்லை உங்கப்பாவும் எதிர்பார்க்கிறார்!”என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்தார் கஸ்தூரி.

தனது தந்தையை எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் சமாளித்து விடலாம். ஆனால் அவரது தங்கை மற்றும் தங்கையின் பிள்ளைகள் விஷயத்தில் அவ்வளவு எளிதில் அவரைச் சமாளித்து விட முடியாது!

அதனாலேயே, தன் தாய் கூறிய விஷயத்திற்கு அவளால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை.

ஆகவே,”ஒகேம்மா. நான் அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன்! அதே மாதிரி, அந்த வண்ணத்துக்கிட்டேயும் என்னைச் சீண்டிப் பார்க்கக் கூடாதுன்னு சொல்லி வைங்க! இல்லைன்னா நானும் அவளுக்குப் பதில் பேசுவேன்!”என்று அவருக்கு உறுதி அளித்தாள் சஹஸ்ரா.

“சரி. நீ எங்க கூட வந்து சாப்பிடு”என்றவரிடம், சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்லி அனுப்பி விட்டுத் தனது கால்களில் நகப்பூச்சைப் போட்டு முடிக்கும் வேலையில் இறங்கினாள்.

தன் மனைவி மட்டும் வருவதைக் கண்டு,”சஹா எங்கம்மா?”என விசாரித்தார் ரமணன்.

“நெயில் பாலீஸைப் போட்டு முடிச்சிட்டு வர்றாளாம்ங்க”என்றார் கஸ்தூரி.

“அவகிட்டே நான் சொன்னதை சொல்லிட்டியா?”

“இப்போ தான் சொன்னேன். அவங்க மூனு பேரும் இங்கே வர்றது அவளுக்குப் பிடிக்கலைன்னு வெளிப்படையாகவே தெரிஞ்சது. ஆனாலும் உங்க வார்த்தைக்காக அவ அவங்க கிட்ட ஒழுங்கா நடந்துக்கிறாளாம். இந்த லட்சணத்தில் நாம இவளுக்கும், மகிழுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கிறதைப் பத்தி வேற பேசிட்டு இருக்கோம். அது தெரிஞ்சா இவ என்னப் பண்ணக் காத்திருக்காளோன்றதை நினைச்சாலே எனக்குப் பயமாக இருக்கு”என்றவரின் கைகளை ஆதூரமாக ஸ்பரிசித்து,

“அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்மா. அதைப் பத்தி தான், பால்ராஜ் வந்ததும் அவர்கிட பேசப் போறோமே? அப்பறம் என்னம்மா?”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களுடன் மகள் அங்கே பிரசன்னம் ஆகவும்,

தங்களது பேச்சை அத்தோடு நிறுத்தி விட்டு,”வாம்மா. நீ எப்போதாவது தான் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடுவ, அதிலேயும் இப்படி லேட்டாக வந்தால் எப்படி?”என அவளிடம் கனிவாக கேட்டார் ரமணன்.

“சாரிப்பா. நான் கம்பெனி வொர்க்கை முடிச்சிட்டு மத்தப் பர்சனல் வேலையையும் பார்த்துட்டு வர லேட் ஆயிடுச்சு”என்றவளிடம்,

“பரவாயில்லைம்மா. சாப்பிடு”என்று அம்மூவரும் தங்களது இரவு உணவை முடித்துக் கொண்டுத் தத்தமது அறைக்குள் நுழைந்து விட்டார்கள்.

“இந்த அப்பாவும், அம்மாவும் அந்த வண்ணம், பூவு விஷயத்தில் ரொம்ப ஓவராகத் தான் போறாங்க! அவங்களை நான் எதுவும் பேசிடக் கூடாதாம்! ம்ஹூம்! எனக்கும் வேற வேலை இல்லை பாரு!”எனத் தனது கூந்தலைச் சிலுப்பி விட்டுக் கொண்டுப் படுக்கையில் வீழ்ந்தாள் சஹஸ்ரா.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டுத் தனது மாட்டுத் தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருந்தான் மகிழம்பூவன்.

என்ன தான், இதற்கெல்லாம் ஆட்கள் வைத்திருந்தாலும் கூடச் சில நாட்களில் இந்த வேலையத் தானே எடுத்துச் செய்வான்.

அதிலேயே, தன் மகன் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடியும் அவனது தந்தையால்.

இப்போதும் கூட, அவனின் மனநிலையைப் புரிந்து, அவனது அருகில் சென்று,”இந்த தடவை நாம ஊருக்குப் போனதும் முதல் வேளையாக உங்க கல்யாணத்தைப் பத்தி மச்சான் கிட்டே பேசப் போறேன்ப்பா!”என்று உறுதியாக கூறினார் பால்ராஜ்.

அதில் விரக்திப் புன்னகையுடன்,”சஹாவுக்கு என்னைப் பிடிக்காதுப்பா. அப்பறம் எப்படி அவளோட சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கும்? உங்களுக்கும், மாமாவுக்கும் இது வேண்டாத வேலைன்னுத் தோணுதுப்பா”என்று அவரிடம் உரைத்தான் மகிழம்பூவன்.

“மனசைத் தளர விடாதேப்பா. உன்னை சஹாவுக்குக் கண்டிப்பாகப் பிடிச்சுப் போயிரும்”என அவனுக்கு நம்பிக்கை அளிக்க,

“அப்படி என்னை அவளுக்குப் பிடிச்சா சந்தோஷம் தான்ப்பா. ஆனால் அவ சம்மதம் இல்லாமல் எங்க கல்யாணம் நடக்கக் கூடாது! அதை மட்டும் நீங்களும், மாமா, அத்தையும் மனசில் வச்சுக்கோங்க!”என அவரை எச்சரித்து விட்டு மீண்டும் பால் கறக்கும் வேலையில் ஈடுபட்டான் மகிழம்பூவன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top