வண்ணன் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அவன் அன்னையின் புலம்பல்கள் அவன் செவிகளில் விழுந்தது. இது வழக்கமாக நடப்பது தான். அவன் அன்னைக்கும் அவனுக்கும் ஏதேனும் சண்டை என்றால் இப்படித்தான் காலஞ்சென்ற ஜெயசீலனிடம் சில நேரம் புலம்பியே தன் ஆதங்கத்தைக் குறைத்துக்கொள்வார் கிரிஜா.
'நான் தப்பு பண்ணிட்டேன். இவனை நான் படிக்கவெச்சு இருக்கவே கூடாது. பி.இ முடிச்சதும் இங்க வந்து விவசாயத்தைப் பாருடானு சொல்லியிருக்கனும். இதுக்குத் தான் ஒரே பையன்னு செல்லம் கொடுக்க வேண்டாம்னு நான் தலைப்பாட அடிச்சிக்கிட்டேன். கேட்டாரா அந்த மனுஷன். இன்னைக்கு இவனை என் தலையில ஒப்படைச்சிட்டு அவர் பாட்டுக்கு நிம்மதியாப் போய்சேர்ந்துட்டார். நானில்லை இப்படி கிடந்தது அவதி படுறேன். எல்லாத்துலயும் ஒரு அலட்சியம். யாரையும் மதிக்கறதில்ல... இவனை நான் எப்படித்தான் திருத்தப்போறேனோ? அப்பனே ஈஸ்வரா எனக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்காதனு எல்லாம் பேராசை பிடிச்சு கேக்காம எப்பயும் போல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைக் கடந்து வரக்கூடிய மனோ தைரியத்தை மட்டும் கொடுடா அருணாச்சலேஸ்வரா. அண்ணாமலையானே...' என்று அவர் பாட்டிற்கு தன்னுடைய உள்ளக்குமுறலை எல்லாம் கைலாயநாதனிடம் கொட்டிவிட்டு திரும்ப அங்கே எப்போதும் போல் கைகளைக் கட்டிக்கொண்டு அவரையே வெறித்துக்கொண்டிருந்த தூரிகாவைக் கண்டதும் அவரையும் அறியாமல் அவர் இமைகளில் கண்ணீர் உருண்டோடியது.
"ஐயோ அத்தை! என்னாச்சு? ஏன் அழறீங்க?" என்று அவர் கண்ணீரைத் துடைத்தாள் தூரிகா.
அவள் கையைப் பிடித்துக்கொண்ட கிரிஜா,"அம்மாடி தங்கம், அவன் புத்திகெட்டுப் பேசுனதை எல்லாம் மனசுல வெச்சுகாதடா பட்டு. அவனுக்கு ஏதோ பேய் புடிச்ச மாதிரி என்னமோ கெட்டது அவனுக்குள்ள புகுந்து ஆட்டுவிக்குது... இல்ல அப்படி இல்ல. அவன் தெரிஞ்சு செய்யுறானா தெரியாம செய்யுறானான்னு எனக்குப் புரியலடா. சின்ன வயசுல கூட அப்படிப் பொறுப்பா நடந்துப்பான். இப்போல்லாம் எதிலும் ஒரு அலட்சியம். கொஞ்சம் கூட யோசிக்காம வார்த்தையை விட்டுடறான். சின்ன பையன்னா அப்போவே கன்னத்துல ரெண்டு வெச்சிருப்பேன். இப்படித் தோளுக்கு மேல வளர்ந்து இருக்கறவனை என்ன பண்றது? உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த வீடு... ச்சி ச்சி அதை வீடுன்னு எல்லாம் சொல்லி வீட்டை அசிங்கப்படுத்தக்கூடாது. அவன் தங்கியிருந்த இடம் முழுக்க தூசு குப்பை. எனக்கு அந்த வீட்டைப் பார்த்ததும் அப்படியொரு ஆத்திரம். இருபத்தி ஒன்பது ஆகுது. ஒரு வீட்டைச் சுத்தமா வெச்சிருக்க மாட்டானா? வீடு மட்டும் தான் அழுக்கா இருக்குனு நெனச்சேன். ஆனா வீடு மாதிரியே அவன் மனசும் அழுக்கா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. தயவுசெஞ்சு அவன் பேசுவதை மறந்திடுடா..." என்று தன்னுடைய கவலைகளை எல்லாம் இடம் பொருள் ஏவல் மறந்து தூரிகாவிடம் கொட்டினார் கிரிஜா.
தனக்கென்று இருக்கும் ஒரே ஜீவனான பொன்வண்ணன் தன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்று கனவுக்கோட்டை கட்டியிருந்த கிரிஜாவுக்கு தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒவ்வொரு செங்கலாய் உருவியெறிந்து கொண்டிருந்தான் அந்த சிவில் என்ஜினீயர். கடந்த பதினைந்து நாட்கள் கிரிஜாவின் வாழ்வில் ஒரு அக்கி பரீட்சையே.
நான்கைந்து நாட்களாக கடுமையான வயிற்றுவலி ஜுரம் என்று வண்ணன் சொல்லவும் இங்கிருந்த கிரிஜாவுக்குத் தான் உயிரே இல்லை. அன்றிரவு வண்ணனின் குரலில் இருந்த சோர்வும் வலியும் கிரிஜாவை அதிகம் வலிக்கச்செய்தது. உடனே அன்றிரவு கோவைக்குப் புறப்பட்டார். இரவில் அவரைத் தனியாக அனுப்ப மனமில்லாத தூரிகா அவருக்குத் துணையாக சேலம் வரை பயணித்து அவரை பத்திரமாக பேருந்து ஏற்றி அனுப்பினாள். இரவு நேரத்தில் அவரை வழியனுப்பவும் ஆண்துணை இல்லாத அளவிற்கு தான் அவர்களின் நிலை இருந்தது.
சேலத்திலிருந்து கோவைக்குப் பேருந்தைப் பிடித்ததும் தான் நள்ளிரவில் தூரிகாவை இப்படித் தனியாக விடுகிறோமே என்ற எண்ணமே கிரிஜாவுக்குத் தோன்றியது.
"நான் போய்க்கிறேன் அத்தை. நீங்க பயப்படாம பத்திரமா ஊருக்குப் போங்க. அவருக்கு ஒன்னும் ஆகாது. நான் வெள்ளிமலை சிவனுக்கு விளக்கேத்தி வேண்டிக்குறேன். உங்ககூட இப்போ வரணும்னு எனக்கும் மனசு அடிச்சிக்கிட்டாலும் வீட்ல அப்பாவும் சூர்யாவும் மட்டும் தான் இருக்காங்கனு நினைக்கும் போது வர முடியாத சூழ்நிலை அத்தை. ஒன்னும் ஆகாது. ஜெயசீலன் மாமா உங்க கூடவே இருப்பாரு. தைரியமா போங்க..." என்ற தூரிகாவின் வார்த்தை தான் அன்றைய இரவில் கிரிஜாவுக்கான நம்பிக்கையே!
அன்றைய இரவைக் கடத்திவிட்டால் போதும் என்று எண்ணிய கிரிஜாவுக்கு கோவை சென்று இறங்கியதும் இடியென இறங்கியது அந்தச் செய்தி. பொன்வண்ணனை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அவனது கொலீக்கும் அறைத்தோழனுமான சுதாகரன் சொல்லி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
என்னதான் கிரிஜாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாலும் இரவில் பேருந்து இல்லாமல் நிர்கதியில் தவித்தாள் தூரிகா. இரவில் கையில் எந்த உடமைகளும் இல்லாமல் பேருந்திற்காகக் காத்திருந்தவளை 'அந்த' மாதிரியான பெண் என்று அணுக முற்பட்டது சில அற்பப்பிறவிகள். நள்ளிரவில் என்று ஒரு பெண் சுதந்திரமாக சாலையில் நடக்கிறாளோ அன்று தான் இந்தியா தன் சுதந்திரத்தை அடைந்ததாக அர்த்தம் என்று சொன்ன காந்திக்கு அப்படியொரு நாள் வரவாய்ப்பே இல்லை என்று தெரியாமல் போனது தான் துரதிர்ஷ்டத்தின் உச்சம்! ஒருவழியாக பேருந்து கிடைத்து அதில் ஏறி அமர்ந்ததும் தான் அவளுக்கு சீரான மூச்சுக்காற்றே வந்தது.
அன்று மருத்துவமனையில் வண்ணனைக் கண்டவர் அவனை ஈன்றெடுத்த நொடிகளில் அடைந்த வேதனைகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அடைந்தார். ஜான்டீஸ் சற்று முற்றி விட்டது என்றும் இருபத்தி நான்கு மணிநேரத்திற்குப் பிறகு தான் எதுவும் கூறமுடியும் என்றும் மருத்துவர்கள் கைவிரித்து விட அதிகாலையில் தூரிகாவிற்கு அழைத்து 'கோ'வென்று அழுது தீர்த்தார் கிரிஜா.
அவருக்காக அனுதினமும் ஆறுகால பூஜையும் செய்து ஈசனை வேண்டிக்கொண்டிருந்தாள் தூரிகா. பின்னே உயிரின் அருமையை அவள் நன்கு அறிந்திருந்தாளே! தன் மகனின் தந்தையையும் தன் அன்னையையும் அடுத்தடுத்து பறிகொடுத்து இன்று அறுபது வயதில் வயோதிகம் அடைந்து தள்ளாடும் தந்தையையும் ஆறு வயதில் பால்யம் மாறாமல் இருக்கும் மகனையும் வைத்துக்கொண்டு அவர்களுக்காகவே அல்லும் பகலும் உழைக்கும் தூரிகாவிற்கா உயிரின் அருமை தெரியாது?
கடந்தகாலத்தின் நினைவுகளில் அவர்கள் இருவரும் மூழ்கியிருக்க அப்போது தூரிகாவைத் தேடி வந்தான் அவள் மகன் சூர்யா.
"அம்மா எனக்கு இன்னைக்கு ஸ்கூல் இருக்கு. என்னைக் குளிப்பாட்டலயா?" என்றவாறு ஓடிவந்தான்.
அவனது வருகையில் நிகழ்காலத்திற்கு வந்த கிரிஜாவும் தூரிகாவும் மௌனமாக இருக்க,
"பாட்டி, ஊர்ல இருந்து மாமா வந்துட்டாரா?" என்றவன் சுற்றிமுற்றி வண்ணனைத் தேடினான்.
"அப்போ முறுக்கும் ஜாமூனும் செஞ்சிருப்பீங்களே?" என்று கேட்ட சூர்யாவை முறைத்தாள் தூரிகா.
"டேய் என்ன பழக்கம் இது? இப்படித்தான் கேப்பையா?" என்று தூரிகா அவனை அதட்ட,
"உனக்கு முறுக்கும் ஜாமூனும் வேணுமா?" என்று அவன் உயரத்திற்கு குனிந்து கேட்ட கிரிஜாவுக்கு தலையாட்ட விருப்பமிருந்தாலும் அருகிலிருக்கும் தன் அன்னையை எண்ணி பயந்து நின்றான் சூர்யா.
"வா போய் குளிக்கலாம்..." என்று தூரிகா அவனை இழுத்ததிலே அவள் அடுத்து செய்யப்போகும் செயலை அறிந்த கிரிஜா,
"தூரி, என்கிட்ட தானே அவன் கேக்குறான்? என்கிட்ட அவனுக்குக் கேக்க எல்லா உரிமையும் இருக்கு. அங்க போய் அவனை ஏதும் அடிக்கவோ திட்டவோ கூடாது. புரியுதா?" என்று கேட்ட கிரிஜாவின் குரலில் உரிமையான மிரட்டல் இருந்தது.
"சூர்யா குட்டி சாயந்திரம் வீட்டுக்கு வரும் போது பாட்டி உனக்கு ஜாமூனும் முறுக்கும் செஞ்சு வெச்சிருப்பேனாம். சரியா?" என்றவர்,
"அவனை ஏதாவது செஞ்சனு தெரிஞ்சது அவ்வளவுதான் பார்த்துக்கோ" என்று மீண்டுமொரு முறை தூரிகாவை எச்சரித்து அனுப்பினார் கிரிஜா.
இருபத்தி ஆறு வயதில் தனியொருத்தியாக தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் இவளுக்கு இருக்கும் பொறுப்பிலும் கடமையிலும் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாமல் இருக்கும் வண்ணனை நினைக்கையில் அவருக்கு மேலும் கோவம் வந்தது.
அப்போது காதில் ஹெட் போனுடன் ரிஹானாவின் 'லிவ் யுவர் லைஃ' பாடலை பாடியவாறே கேட்டுக்கொண்டிருந்தான்.
You're gonna be, a shinin' star
In fancy clothes, and fancy car-ars
And then you'll see, you're gonna go far
'Cause everyone knows, just who ya are-are
So live your life (Hey! Ay ay ay)
You steady chasin' that paper, just live your life
(Oh! Ay ay ay)
Ain't got no time for no haters, just live your life
(Hey! Ay ay ay)
No tellin' where it'll take ya, just live your life
(Oh! Ay ay ay)
'Cause I'm a paper chaser, just livin' my life
(Ay) my life (Oh) My life (Ay) my life (Oh)
Just livin' my life (Ay) my life (Oh)
My life (Ay) my life (Oh) just livin' my life
அன்று முழுவதும் காதில் ஹெட் போனுடனே திரிந்த வண்ணனைக் கண்டு எரிச்சலடைந்த கிரிஜா மாலையில் அவனை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டி அவனை அழைக்க,
"ம்மா அதான் டாக்டரே எல்லாம் சரியாகிடுச்சினு சொல்லிட்டாரே? இத்தனைக்கும் அவர் எம்.டி முடித்தவர்..." என்ற வண்ணனுக்கு வழக்கம் போல் முறைப்பை பதிலாகத் தர,
"வரேன். ஆவுனா முறைக்க வேண்டியது. இவர் சரியாகிடுச்சினு சொன்னா நான் திரும்ப கோவைக்கே போலாமில்ல?"
"அப்படியொரு எண்ணமிருந்தா அதை இப்போவே மூட்டைக் கட்டிடு"
"நீ என்ன நெனச்சிட்டு இருக்க? இந்த வருஷத்துல இன்னும் ரெண்டு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு. நான் அதை ஒழுங்கா செஞ்சா எனக்கு ப்ரமோஷன் கூட ட்ரான்ஸ்பரும் கிடைக்கும்" என்ற வண்ணனிடம் அதிர்ச்சியான முகபாவத்தை அளித்த கிரிஜா,
"என்ன சொல்ற நீ? அப்போ நீ இன்னும் அந்த வேலையை விடலயா?"
"அதெல்லாம் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு தான் வந்தேன். ஆனா நான் வேலையை விடுறேன்னு சொன்னதும் எங்க எச் ஆர் என்னைக் கூப்பிட்டு இன்னும் ஆறு மாசம் வரை என்னை டைம் எடுத்துக்க சொல்லி அதுக்குள்ள என்னை எப்போ வேணுனாலும் வந்து பார்க்கச் சொன்னார். நீ அழுது போட்ட ஒரு டிராமாக்காக தான் நான் உடனே வந்தேன். அதனால் தான் என் பைக் சில திங்க்ஸ் எல்லாம் அங்கேயே விட்டுட்டு வந்திருக்கேன். போதுமா?" என்று அவனும் எரிச்சலில் குரல் உயர்த்தினான்.
"உன்னை இப்போதைக்கு நான் எங்கேயும் அனுப்பறதா இல்ல. அதை மட்டும் நல்லா மனசுல ஞாபகம் வெச்சுக்கோ. இப்போ வைத்தியரைப் பார்க்க போலாம் கிளம்பு..." என்று அவர் சொல்ல வண்ணனுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை.
அன்று மருத்துவமனையில் வண்ணனைக் கண்டவர் நேராக டாக்டரிடம் சென்று விசாரிக்க அவரோ அவனது உணவுப் பழக்கம், இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தது மற்றும் சரிவர உறங்காமல் போனது முதல் போதுமான உடலுழைப்பு இல்லாதது வரை அனைத்தையும் சொல்லி அவனை சிறிது காலத்திற்கு முழு ஓய்விலும் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் அவனை தினமும் அரைமணிநேரமாவது நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார். அவர் முதலில் சொன்னது கிரிஜாவுக்குப் புரியாவிட்டாலும் இரண்டாவதாகச் சொன்னது நன்றாகவே புரிந்தது. கடந்த ஆறுவருடங்களாக இன்றைய சிலிண்டர் விலையைப் போல் உடலெடையானது ஏறிக்கொண்டே இருக்கிறது.
ஒரே மகன் என்பதாலும் ஏற்கனவே கணவனை ஒழுங்காக கவனித்துக்கொள்ளாததால் இழந்ததையும் எண்ணி குற்றயுணர்வில் தவிக்கும் கிரிஜா மிரட்டி அவனை ஊருக்கு அழைக்க அவனோ அந்த வேலையை விடப்போவதில்லை என்று உறுதியாக மறுத்துவிட இறுதியில் ஆற்றாமையால் அழுது கரையவும் அவன் நண்பன் சுதாகரன் அவரைத் தேற்றி அவருக்காக வண்ணனிடம் கெஞ்சி கொஞ்சி மிஞ்சி அவனை ஊருக்கு அனுப்பினான்.
இதில் தான் பொன்வண்ணனுக்கு கிரிஜா மேல் வருத்தமே. முப்பது வயதை நெருங்கும் அவனை இன்னும் சிறுபிள்ளையென எண்ணி ஒவ்வொரு விஷயத்திலும் அறிவுறுத்துவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரம் அதை நேரடியாக கிரிஜாவிடம் சொல்லவும் துணிவில்லை. துணிவில்லை என்பதைக் காட்டிலும் அவன் விரும்பவில்லை. அவனுக்குத் தெரிந்து அவன் தாயும் தந்தையும் ஒரு நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். பெரியதாகப் படிக்கவில்லை என்றாலும் கிரிஜா ஒரு தேர்ந்த சாமர்த்தியசாலி. அதனாலே அவர்கள் சம்பாதித்ததை ஜெயசீலன் இருக்கும் போதே எல்.ஐ.சி பாலிசி, கிராம அஞ்சல் சேமிப்புத் திட்டம் முதலிய சிறு சேமிப்புகளில் முதலீடு செய்திருந்தார்.
என்றோ சிறுக சிறுக சேமித்து வைத்ததெல்லாம் அவருக்குத் தேவையான நேரத்தில் பெரும் உதவியாக அமைந்தது. அதனாலே வண்ணனைக் கல்லூரியில் சேர்க்கும் போது ஏற்பட்ட கடனையும் நிலத்தின் மீது இருந்த கடனையும் எதிர்பாராமல் ஜெயசீலன் தவறிய வேளையில் அவருக்குச் செய்த மருத்துவ செலவு என்று அனைத்தும் ஜெயசீலன் மீது போட்டிருந்த உயிர் காப்பீட்டின் தொகையில் அடைத்து நிலத்தையும் மீட்டு வண்ணனையும் படிக்கவைத்து கையில் கொஞ்சம் பணத்துடன் ஓரளவுக்கு நல்ல நிலையிலே இருக்கிறார்.
கிரிஜாவின் இந்தச் சாமர்த்தியத்தை அவர் மூத்தாரான ஜெகதீஸனால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கிருக்கும் அதே அளவு நிலத்தைத்தான் தன் தம்பியும் வைத்திருந்தான். அதும் ஜெயசீலன் இறக்கும் தருவாயில் அவர்கள் வீடுகட்ட என்று வைத்திருந்த இடத்தை அவரிடம் விற்று தன்னை விட நிதி நிலையில் கீழே இருந்த தம்பியின் குடும்பம் இன்று இவ்வளவு நிறைவாக வாழ்வதில் பொறாமை.
ஜெயசீலனின் பெற்றோர் அண்ணன் தம்பி இருவருக்கும் அடுத்தடுத்து வயல்களையும் வீடு கட்ட நிலத்தையும் வழங்கி இருந்தார்கள். அவர்களின் பெற்றோர் இறந்ததும் ஏற்பட்ட ஒரு சின்ன மனவருத்தத்தில் அவர்களுடன் இருக்க பிடிக்காமல் தனியாக வாடகைக்கு வந்து விட்டார்கள். அவர்கள் வாடகைக்கு வந்த இடமோ தூரிகாவின் தந்தையுடையது. பின்னாளில் அதை ஜெயசீலன் வாங்கி விட்டார். இதை இப்படிச் சொல்வதைக் காட்டிலும் ஒரு அவசர தேவைக்காக சங்கர சரவணன்(தூரிகாவின் தந்தை) விற்க நினைக்கும் போது ஜெயசீலன் அதை வாங்கிக்கொண்டார்.
சங்கர சரவணனும் ஜெயசீலனும் பால்ய காலத்து தோழர்கள். தங்களுக்கு இருந்த கடன் சுமையின் காரணமாக சங்கர சரவணனின் இளம் வயதிலே அவர் தந்தை குடும்பத்தோடு வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து சென்று விட அந்த நிலத்தையும் சில வருடங்களுக்கு ஜெயசீலனின் தந்தையே உழுது அதற்கான குத்தகை தொகையை அவர்களிடம் கொடுத்து வந்தார்.
பல இடங்களில் வேலை செய்து சம்பாதித்து பிள்ளைகளைப் பள்ளி படிப்பு படிக்கவைத்து சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் வெள்ளிமலைக்கு வந்து விட்டார் சரவணன். தங்கள் கடமை எல்லாம் முடிந்தது என்று ஓய்வெடுக்க நினைக்கையில் மீண்டும் அவர்கள் தலையில் சுமையாக தூரிகாவும் சூர்யாவும் வந்து விட இதோ வாழ்க்கை சக்கரம் மீண்டும் சுழலத் தொடங்கிவிட்டது.
மனைவியும் தன்னை விட்டுச் சென்றுவிட தூரிகாவுக்கும் சூர்யாவுக்கும் பெரியதாக எதையும் சேர்த்தும் வைக்க முடியாமல் இருந்ததை எல்லாம் கிட்டத்தட்ட இழக்கும் தருவாயில் சட்டையில் ஒட்டிய சிவிங்கமாய்(chewing gum) வாழ்க்கை இழுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சராசரி தந்தையாய் தூரிகாவின் வாழ்க்கையில் ஒரு நல்லது வேண்டி காத்துக்கொண்டிருக்கிறார் சரவணன்.
அந்த நாளுக்குப் பிறகு நிஹாரிகாவின் தோழிகள் வண்ணனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் முனைப்பில் இறங்கிவிட அந்தோ பாவம் அவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் வண்ணன் எங்கு பணிபுரிகிறான் என்று கண்டுபிடிப்பதற்குள்ளே போதும் போதும் என்று ஆகிவிட்டது. காரணம் வண்ணன் சஞ்சீவி கன்ஸ்ட்ரக்சன்ஸ் மேற்கொண்டுள்ள பணியில் தீவிரமாக வேலைசெய்து கொண்டிருந்தான். பொதுவாக ஒரு ப்ராஜெக்ட்டிற்கு தேவையான பிளான் போட்டுக்கொடுப்பதோடு அவன் வேலை முடிந்து விடும். அவனது பணி முழுவதும் ஆபிஸ் சம்மந்தப்பட்டது தான். ஆனால் அம்முறை அவனே நேரடியாக சைட் இன்ஸ்பெக்சன் செய்ய வேண்டியதாயிற்று.
ஒரு மாத காலம் அவர்கள் ஆடிக்கொண்டிருந்த அந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் அன்று மாலை பார்க்கிங் ஏரியாவில் முடிவுக்கு வந்தது. தன்னுடைய காரில் வந்த நிஹாரிகா அங்கே பைக்கை எடுக்கும் வண்ணனைக் கண்டுகொண்டாள். வேகமாக அவனை நோக்கி காரை செலுத்தியவள் அவன் பைக்கை இடிக்குமாறு சென்று விட அவசரத்தில் பைக்கை நகர்த்த முற்பட்டவன் கீழே விழுந்து விட்டான். அந்நேரம் பார்த்து அங்கே பலர் கூடியிருக்க வண்ணனுக்கு ஒரு எம்பேரேசிங் சூழ்நிலை உண்டானது.
இங்கே நிஹாரிகாவுக்கோ வண்ணன் அடுத்து செய்யப்போகும் செயலை எண்ணி வருத்தமாக இருந்தது. ஒரு மாதமாகத் தேடிக்கொண்டிருந்தவனை திடீரென்று கண்டுவிட்ட ஆவலில் அவள் செய்தது அவளுக்கே எதிரியாகிப்போனது.
அது யாரென்று தெரியாமலே வண்ணன் அவள் கார் கண்ணாடியைத் தட்ட முகத்தைப் பாவம் போல் வைத்துக்கொண்டு அதைக் கீழே இறக்கினாள் நிஹாரிகா.
"நீ எப்பயுமே இப்படித்தான் லூசா? நான் கூட உன்னை அமாவாசை பௌர்ணமிக்கு மட்டும் தான் அப்படி இருப்பனு நெனச்சேன். அறிவுங்கறதே கிடையாதா உனக்கு? நான் கேட்டுட்டே இருக்கேன் நீ என்ன அமைதியா இருக்க?" என்று உறுமினான் பொன்வண்ணன்.
நாம் யார் முன்னே ஹீரோவாகத் தெரியவேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்கள் முன்னே ஜீரோவாகத் தோன்றும் நிலை போல் ஒரு அபத்த நிலை ஏதும் உண்டா?
"ஏய் உன்கிட்டத் தான் பேசிட்டு இருக்கேன்?" என்று சொடக்கிட்டான் வண்ணன்.
வேகமாக காரிலிருந்து இறங்கியவள் அவன் கரத்தைப் பற்றி,"எக்ஸ்ட்ரீம்லி சாரி. உங்களை நான் தேடிட்டு இருந்தேன். திடீர்னு உங்களைப் பார்த்ததும் ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன். இந்த வீக் எண்ட் நீங்க ஃப்ரீனா நாம வெளிய எங்கேயாவது மீட் பண்ணலாமா?" என்று கேட்டவளின் புருவம் சுருங்க,
"என்ன பேசணுமோ அதை இப்போவே" என்று வண்ணன் முடிக்கும் முன்னே,
"நம்ம ரெண்டு மீட்டிங்கும் ரொம்ப ஆக்வர்ட்(எதிர்கொள்வதற்குச் சிரமமான) சிட்டுவேஷன் ஆகிடுச்சு. ப்ளீஸ் ஒரு ப்லஷண்டான இடத்துல நாம மீட் பண்ணலாமே? ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கிட்டத்தட்ட மன்றாடினாள் நிஹாரிகா.
அந்தக் கடவுள் அடடா
ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும்
பெண்ணைக் கண்டால் உருகிட வைத்தானடி...
என்ன தான் கோ எட் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றிருந்தாலும் மறந்தும் கூட பெண் வாசனையை அறிந்திடாதவன் பொன்வண்ணன். அப்படிப்பட்டவனை ஒரு பெண் தனியே அழைக்கிறாள் என்றால் அவன் உணர்வுகளைச் சொல்லவா வேண்டும்?
"மீட் பண்ணலாம் தானே?" என்று மீண்டும் அதே கெ(கொ)ஞ்சலில் அவள் அழைக்க,
"எங்க? எப்ப?" என்றவனின் குரலில் அப்படியொரு ஏற்ற இறக்கமான டெசிபல்(ஒலியை அளக்கும் அலகு).
"இடத்தையும் நேரத்தையும் நான் உங்களுக்கு வாட்ஸ் அப் பண்ணுறேன்" என்றவள் காரில் ஏறி பின் ஞாபகம் வந்தவளாக(?),
"உங்க வாட்ஸ் அப் நம்பர் சொல்றிங்களா?" என்றாள்.
(மழை வருமோ?)
பாடல் வரிகள் நா முத்துக்குமார்