"நீதான் எந்தன் அந்தாதி"
அத்தியாயம்-23
யாரை இனி பார்க்கவே முடியாது யாரை இனி பார்க்கவே கூடாது என்று அபிநயா எண்ணி இருந்தாளோ அவனே ஆறடி சிலையாய் முன்னால் வந்து நிற்கவும் மொத்த சக்தியையும் இழந்து வேரறுந்த கொடிபோல் துவண்டு போய் நின்றாள்.
அளவான உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசையைக் கேட்பது அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது ஆகியவை மன அழுத்தத்தை குறைக்கும் விஷயங்கள் என்பதால் அவை எல்லாவற்றையும் பின்பற்றி கற்றுத் தேர்ந்து தன் மனதை ஒருமுகப்படுத்தி கட்டுக்குள் வைத்திருந்தாள். பிற்காலத்தில் இது போன்ற வேதனை தரக்கூடிய விஷயங்களை தாங்கிக்கொள்ள மனதில் திடம் வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம். ஆனால் அவை அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போனது என்பதுதான் உண்மை.
அவனை கண்ட அந்த ஒரு நொடி பொழுதில் அபிநயாவின் மனம் கண்ணாடிக் கோப்பையை கை நழுவ விட்டதுப்போல் ஆனது.
அந்த நேரத்தில் அறை கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் அபிநயாவின் "பி ஏ" சந்தானம்.
இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு,
" மேடம் கூப்பிட்டீங்களா...?" என்றார்.
"இல்லை...ஆமாம்... என்று தடுமாறியவள் தன்னையறியாமல் அழைப்பு மணியின் கை வைத்ததை அப்போதுதான் உணர்ந்தாள். ஒரே ஒரு நிமிடம் தன்னை நிலைப்படித்திக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தவள் எதிர் இருக்கையில் அவனை அமரும்படி சொன்னாள்.
தன்னிச்சையாக அபிநயாவின் கை நெற்றியை அழுத்த,
"மேடம் காபி கொண்டுவர சொல்லட்டுமா...?"
”ம்ம்...ரெண்டு காபி, எப்போதும் போல ஒன்னு அரை சக்கரை.."
" மேடத்துக்கு அரை சக்கரை , சார் உங்களுக்கு...?"
"எனக்கு சக்கரை கொஞ்சம் தூக்கலாகவே போட்டு எடுத்துட்டு வாங்க..." அவன் சொன்னதை கேட்டவளுக்கு சற்று யோசனையாகவே இருந்தது.
இவளோடு பழகிய நாட்களில் இருவரும் ஒன்றாக எங்கு சென்றாலும் தேநீர் அருந்துவது வழக்கம். இவளுக்கு காப்பி தான் மிகவும் பிடிக்கும் என்று தெரிந்தபிறகு அவனுடைய விருப்பம் காபியாகிப் போனது.
எப்பொழுதுமே அவன் அரை சர்க்கரைதான். தூக்கலாக போட்டால் காபியின் சுவை மாறி விடும் என்பான். இவளும் அப்படியே பழகி கொண்டதால் இன்றுவரை அது மாறாமல் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் அவனுடைய சுவைதான் மாறிப்போனது. சுவை மட்டுமா வாழ்க்கையும் கூடத்தான் என்று எண்ணியவளுக்கு தொண்டை அடைத்தது.
அந்த 'பிஏ' கதவை சாத்தி விட்டு வெளியில் போகும் வரை அமைதியாக இருந்தவள்,
”சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க உங்க மனுவை நான் இன்னும் படிக்கல..."
அவனுடைய முகத்தை ஏறிட்டு பேசும் தைரியம் இல்லாததால் பேனாவை உருட்டியபடி பேசினாள்.
"அந்த மனுவை ஒரு முறை முழுசா படிக்கணும் படிச்சாதான் அதோட வலி என்னனு புரியும்..." என்றான்.
சிறு தலையசைப் போடு டேபிள் மேலிருந்த இரண்டாவது மனுவை கையில் எடுத்தாள்.
"வாழ்த்துக்கள் திருமணம் முடிவாகி விட்டது என்று கேள்விப்பட்டேன்." என்றான்.
அடுத்த நிமிடம்...
இதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் ஆதங்கம் அழுகை அன்பு பாசம் காதல் எல்லாமே மடை திறந்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்தது. கண்கள் குளம் கட்டி நிற்க தலையை உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேராக சந்தித்தாள்.
இரண்டு நாட்களாக இந்த அலுவலகத்துக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன் உங்களை பார்க்க முடியவில்லை. நேற்றுதான் உங்களுடைய பர்சனல் அசிஸ்டன்ட் உங்களுக்கு எங்கேஜிமெண்ட் என்று சொன்னார். அதனால் ஒரு வாழ்த்து சொல்லலாம் என்று தோன்றியது. உங்களுடைய பர்சனல் விஷயத்தில் தலையிட்டது தப்பாக நினைத்தால் இனிமேல் அதைப்பற்றி பேச மாட்டேன். என்று முடித்தான்.
காதல் என்பது இரு மனங்களுக்கு இடைப்பட்டது அதை வேண்டுமானால் பர்சனல் என்று சொல்லலாம். ஆனால் கல்யாணம் அப்படி அல்ல அது ஒரு அங்கீகாரம். சமுதாயத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கக்கூடிய ஒரு அங்கீகாரம் அந்த அங்கீகாரத்தை தான் நான் உங்களிடம் எதிர் பார்த்தேன். எனக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லாத உங்களுக்கு என்னுடைய சொந்த விஷயத்தைப் பற்றி பேசவும் உரிமை இல்லை என்று மனம் வேதனைப்பட்டது.
இனி என்ன சொல்லி என்ன பயன் எல்லாமே நடந்து முடிந்ததுக்கு பிறகு அதை பற்றி பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.
இப்போது நான் இந்த மாவட்ட ஆட்சியாளர். என்னுடைய பதவியும் அதை சார்ந்த என்னுடைய பணிகளும் தான் எனக்கு முக்கியம். என்னைத்தேடி வருபவருக்கு உதவிகள் செய்வது தான் என்னுடைய கடமை. அதற்காகத்தான் அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது. அதிலிருந்து நான் எள்ளளவும் தடம் மாறக் கூடாது என்ற எண்ணத்தோடு டேபிள் மேல் இருந்த அந்த கவரை கையில் எடுத்தாள்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்த பழைமையான சிலைகளை வெளிநாட்டுகளுக்கு கடத்தி சென்றதாக, முருகவேல் என்பவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யபட்டன.
சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகவேல் , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்க அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தோம்.
அந்த மனுவில், சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் அவர் முன்பு இருந்த கோவை சிறையில் இல்லை என்பதால், தனது சொந்த செலவில், இதய நோய்க்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தோம்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மனுவில் குறிப்பிடப்பட்ட செய்திக்கு பாதகமாக நடந்து கொண்டதுதான் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றானது.
அப்படி அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் கடத்தல் வழக்கில் சாட்சிகள் கலைந்துவிடும் அல்லது பொய்யான சாட்சிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டு அதில் வெற்றியும் கண்டார்கள்.
இதனால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட என்னுடைய அப்பா முருகவேல் தற்போது சரியான சிகிச்சை இன்றி ஜெயிலில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்.
அவர் மேல் குற்றம் இன்னும் நிரூபிக்கப்படாததால் அது சம்பந்தமான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் இவ்வளவு நாள் அவரை ஜெயிலில் வைத்திருந்தது தப்பு என்று வாதிட்டு அவரை வெளியில் எடுக்க முயன்று கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க அரசையே சாரும் அதுமட்டுமல்லாமல் பொய்யான வழக்கில்தான் அவர் உள்ளே சென்றார் என்ற விஷயம் நிரூபிக்கப்பட்டால் அவர் இத்தனை வருடம் ஜெயிலில் இருந்ததற்கு நஷ்ட ஈடாகவும் மன உளைச்சல் ஏற்பட்ட காரணத்திற்காகவும் சேர்த்து 50 லட்சம் ரூபாயை அரசாங்கம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மனுவை நான்கு பேரிடம் கொடுத்திருக்கிறோம்.
1.முதலமைச்சர்.
2. சிறு தொழில் முனைவோர் சங்கம்.
3. மாவட்ட ஆட்சியாளர்.
4.மனித உரிமை ஆணையம்.
மாவட்ட ஆட்சியாளரான தாங்கள் தயவு கூர்ந்து அவருடைய வழக்கை நல்ல அரசாங்க வக்கீல் மூலமாக விரைவாக விசாரிக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் அவருக்குத் தேவையான தரமான சிகிச்சையை ஜெயில் நிர்வாகம் கொடுக்க வலியுறுத்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
வேழவேந்தன்.( முருக வேலுவின் மகன்)
மனுவை முழுவதுமாகப் படித்து விட்டு நிமிர்ந்தபோது காபியோடு உள்ளே வந்தாள் அந்த பணிப்பெண்.
இருவருக்கும் காபியை கொடுத்துவிட்டு அந்தப் பெண் வெளியேறும் வரை அமைதி காத்திருந்தாள் அபிநயா.
காபி கப்பை எடுத்து ஒரு வாய் உறிஞ்சியபோது தான் அதில் சர்க்கரை தூக்கலாக இருப்பது இவளுக்கு தெரிந்தது. கப் மாறி இருக்க வேண்டும் என்று எண்ணியபடி அவனை ஏறிட்டாள்.
அவனோ எந்தவித ரியாக்ஷனும் இன்றி காபியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.
"காபி மாறிவிட்டது என்று நினைக்கிறேன் எனக்கு சக்கரை அதிகமா இருக்கு...!" என்று எங்கேயோ பார்த்தபடி இவள் சொல்ல,
"எல்லாமே மாறிப் போய் தானே கிடக்கிறது வாழ்க்கையே மாறும் போது காபி கப் மாறுவது என்ன புது விஷயமா? என்றான் விரக்தியோடு.
அப்போது மேகலாவிடம் இருந்து கால் வந்தது. காலை அட்டெண்ட் பண்ணாமல் யோசித்துக் கொண்டிருக்க கட் பண்ணிவிட்டு திரும்பவும் கால் பண்ணினாள் மேகலா.
" ஒரு நிமிஷம் ஒரு பர்சனல் போன்.." என்று அவனிடம் முணுமுணுத்து விட்டு விட்டு போனை எடுத்துக் கொண்டு பால்கனியை நோக்கி சென்றாள்.
'ஹலோ மேகலா சொல்லுடி...ம்ம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணல. ஆமா... நானே உன்கிட்ட பேசலாம்னு நெனச்சேன் எனக்கு டைமே இல்ல ஆபீஸ்க்கு இப்பதான் வந்தேன். கொஞ்சம் ஃப்ரியா ஆயிட்டு பேசுறேன். ஓகே ஆமா ஆமா மோதிரம் போட்டார்... போட்டு இருக்கேன் உனக்கு வாட்ஸ்அப்ல அனுப்புறேன்.ஓகே அப்புறம் பேசுறேன் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன் அப்புறம் பேசுறேன்..பாய்..டீ"
மேகலாவோடு பேசி முடித்து விட்டு திரும்பவும் அவள் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்த போது அவனுடைய பார்வை அவளுடைய இடது கை விரலில் நிலைத்திருந்தது.
" மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமோ? என்ன வேலை பார்க்கிறார்...? என்றான்.
" போலீஸ் ஆபீஸர்..." சொல்லும்போதே குரல் கரகரத்தது.
"அப்போ ரொம்ப ரொம்ப பெரிய இடம் தான்..." அவன் பேச்சில் ஏளனம் தென்பட்டது.
ஆமாம் பெரிய இடம்தான், என்னை வேண்டாம் என்று ஓதிக்கியவர்களுக்கு மத்தியிலே நான் வாழ்ந்துக்காட்ட வேண்டாமா? அதற்காத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தேன். என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லத்தான் ஆசைப்பட்டாள். ஆனால் வாழ்க்கை வெளியில் தன் இணையோடு பறந்துக்கொண்டிருக்கும் அவனோடு போட்டிப்போட இவள் மனம் சம்மதிக்கவில்லை. தன் மனதுக்கு பிடித்தவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தத்தான் விரும்பியது அவளின் பேதை மனம்.
"மிஸ்டர் வேழவேந்தன் உங்களுடைய மனுவை படிச்சிட்டேன். அடுத்த கட்டமா என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன். என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்றேன். ஆனா அரசாங்கத்துக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாது. அரசுத்தரப்பில் வேற வக்கீலை நியமித்து இந்த கேஸ் நடத்த சொல்லலாம். எதுக்கும் நீங்க நாளைக்கு மார்னிங் வாங்க இது சம்பந்தமா மேலிடத்தில் பேசிட்டு உங்களுக்கு ஒரு நல்ல பதில் சொல்கிறேன்." என்றாள் அபிநயா.
" கண்டிப்பா நாளைக்கு வரேன் மேடம் நீங்க சொன்னா தினமும் வரக்கூட தயாராக இருக்கிறேன். ஏன்னா எங்க அப்பாவுடைய உடல்நலம் எனக்கு ரொம்ப முக்கியம்..." என்று சொல்லிவிட்டு வேழவேந்தன் அறையை விட்டு வெளியேறினான்.
ஒரு சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து இருந்தவள் பட்டென்று எழுந்து பால்கனி பக்கமாக போய் ஜன்னலைத் திறந்து வெளிப்புறத்தில் பார்வையை செலுத்தினாள். அங்கே அவன் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் பண்ணி கொண்டிருந்தான். இவள் பார்ப்பதை உணர்ந்தவன் போல் பட்டென்று திரும்ப இவளின் பார்வை இவனை நோக்கி இருப்பதை கவனித்தவன் உதட்டோர ஒரு ஏளன சிரிப்போடு அங்கிருந்து கிளம்பினான்.
Last edited: