Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் - 15

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-15
வேழவேந்தனின் சித்தப்பா சொன்ன தகவலின்படி அடுத்த கட்டமாக அந்த மாவட்ட கலைக்டரை தொடர்பு கொண்டு பேசினாள். அந்த ஊர் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது ஒன்று செய்யவேண்டும் அதற்கு உங்களுடைய பர்மிஷன் தேவை என்று கூறினாள். அவர்களும் அதற்கு உடனே சம்மதித்தார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தனியாக போவதை விட நாளை மறு நாள் அந்த ஊரில் நடக்கும் விழாவுக்கு என்னை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். அதனால் அன்று என்னுடன் வந்தால் உங்க விருப்பமும் நிறைவேறும் விழாவில் கலந்துக்கொண்டது போலவும் இருக்கும் என்று அவர்கள் சொல்ல அபிநயாவுக்கு அதுவும் சரியாக தோன்றியது.


அதேப்போல இரண்டு நாட்களுக்கு பிறகு வேழவேந்தனின் சொந்த கிராமத்துக்கு செல்வதென முடிவெடுத்தார்கள். அப்போதான் கார்த்திக்கிடமிருந்து அபிநயாவுக்கு கால் வந்தது. சிறு முக சுளிப்போடு போனை கட் பண்ணினாள். மீண்டும் கால் வரவே புரிந்துக்கொண்ட குமரேசன்,

“ஏதாவது முக்கியமான போன்காலா இருக்கப்போவுது பேசுங்க நான் வெளியில் வெயிட் பண்ணுறேன்.” என்ற குமரேசன் காரில் இருந்து இறங்கி சற்று தூரம் தள்ளிப்போய் நின்றுக்கொண்டான்.

“சாரி...ஒரு பை மினிட்ஸ் பேசிட்டு வந்துடுறேன்” என்றவள் வேண்டா வெறுப்பாக போனை ஆன் பண்ணி,

“ஹலோ...சொல்லுங்க கார்த்திக்”

“எங்க இருக்கீங்க அபி? ஆன்டிக்கு கால் பண்ணினேன் சென்னையில் இருக்குறதா சொன்னாங்க அதான் எங்க இருக்கீங்கன்னு...“

“ஏன் என்ன விஷயம்?”

“கொஞ்சம் பேசணும்”

“ம்ம்...சொல்லுங்க?”

“ஒன்னு கேட்கலாமா? தப்பா எடுத்துக்க கூடாது.”

“அப்படின்னா தப்பா எதுவும் கேட்காதீங்க...”
மறுமுனை அமைதியாக இருந்தது.

“ஹல்லோ....என்னாச்சி?”

“ஒண்ணுமில்லே அபி...நீங்க சென்னைக்கு அபிஷியலா வந்திருக்கீங்களா? பர்ஸ்னலா வந்திருக்கீங்களா தெரிஞ்சிக்கலாமா?”

“பர்ஸ்னல்தான்...ஒருத்தரை தேடி வந்திருக்கேன்...”

“ஓகே...ஓகே...வந்த வேலை முடிஞ்சிடிச்சா?”

“ஏன்...கேட்குறீங்க நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ண போறீங்களா?”

“ம்ம்..கண்டிப்பா பண்றேன், நீங்க கேட்டு பண்ணாம இருப்பேனா?”

“ஓ...தேங்க்ஸ் என்னால முடியலன்னா உங்ககிட்ட கேட்குறேன் ஓகே...”

“ஓகே...அபி இன்னொரு விஷயம் சென்னைக்கு வந்திருக்கீங்க எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கலாமே...ஐ மீன் அம்மாவும் சென்னையில்தான் இருக்குறாங்க அவங்களை மீட் பண்ண வைக்கலாமேன்னு பார்த்தேன்.” ஆதங்கத்துடன் கூறினான்.

சற்று நேரம் அமைதிகாத்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய்,

“நாளைக்கு மறுநாள் ஒரு இடத்துக்கு போறேன். போயிட்டு வந்து கால் பண்ணுறேன்.” என்று போனை கட் பண்ணினாள்.

தூரத்து மர நிழலில் நின்றிருந்த குமரேசனை அழைத்தாள்.

“நாளைக்கு மறுநாள் நம்ம பிளான்படி வேழவேந்தனின் ஊருக்கு போகலாம். இப்ப நான் ஸ்டே பண்ணியிருக்குற ஹோட்டல்ல ட்ராப் பண்ணிடுறீங்களா?”

“சரி...” என்று காரின் முன் இருக்கைக்கு சென்றான்.

அபிக்கு லேசாக தலை வலிப்பதுப்போல தோன்றவே காரின் பின் இருக்கையில் ஓய்வாய் சாய்ந்து அமர்ந்து கண்களை முடினாள்.

வேழவேந்தனின் சித்தப்பாவிடம் பேசியதில் அவர் சொன்ன விஷயம் இவ்வளவுதான். வேழவேந்தனின் அப்பா ஜெயிலில் இருப்பதாகவும் இந்த அவமானம் தாங்க முடியாமல் வேழவேந்தனும் அவங்க அம்மாவும் ஊரை விட்டு எங்கேயோ போய் தலைமறைவாக இருப்பதாகவும் அப்படி தலைமறைவாக இருப்பவன் அவங்க அப்பாவை மீட்ட பிறகுதான் ஊருக்குள் வருவேன் என்று சொன்னதாகவும் கூறினான். மேற்கொண்டு வேறு ஏதாவது தகவல் வேண்டுமென்றால் அவனுடைய கணவனை இழந்த சகோதரி அந்த ஊரில்தான் இருக்கிறாள். அவள் பெயர் குழலி. நீங்கள் அவளிடம் கேட்டால் ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அவளிடமிருந்து விஷயத்தை வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. வேறு ஏதாவது வழியில் முயற்சி செய்துப்பாருங்கள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்பிக்கை ஊட்டினார்.

குமரேசன் அவளை ஹோட்டலில் இறக்கிவிடும்போது ஒரு ஐடியா கூறினான். அவன் சொன்ன ஐடியா சரி என்று தோன்றவே அப்படியே செய்யலாம் என்றாள். அவன் கிளம்பும்வரை அமைதி காத்தவள் தன் செல் போனை எடுத்து அந்த ஊர் மாவட்ட ஆட்சியரை திரும்பவும் தொடர்புகொண்டு பேசினாள்.

அடுத்தநாள்...

அந்த மாவட்ட பெண் ஆட்சியரோடு அங்கு நடந்த ஒரு விழாவுக்கு தலைமை ஏற்க கிளம்பினாள் அபி. புதிதாக இன்னொரு கலைக்டரும் வந்ததால் ஊருக்கு ஏதோ நல்லது நடக்க போகிறது என்று ஊர் மக்கள் நம்பினார்கள். இரண்டு கார்களில் வந்திறங்கியவர்களை மக்கள் சூழ்ந்துக்கொண்டு தங்கள் குறைகளையும் தேவைகளையும் சொல்ல தொடங்கினார்கள். அப்போது ஒரு மனுவோடு அபியிடம் வந்து நின்றாள் அந்த ஊரை சார்ந்த ஒரு பெண்.

மனுவில் என்ன எழுதி இருக்கே என்பதை சொல் என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன் என்று உறுதியளித்தபிறகு அந்த பெண் தன் வாழ்வில் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.

நானுன் என் கணவனும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டோம் மேடம். ஒரு புன்னகையில் தான் எங்கள் உறவும், வாழ்வும், அனைத்தும் துவங்கியது. ஆம்! நீங்கள் பல திரைப்படங்களில் கண்ட அதே முதல் பார்வையிலேயே காதல் கதை தான் எங்களுடையதும். பார்த்ததும் காதல், புன்னகையில் முளைத்தது. அவர் ஒரு கட்டிட தொழிலாளி, நான் ஒரு கடையில் வேலை செய்து வந்தேன் அந்த நாட்களில்.


உணவு இடைவேளை!
உணவு இடைவேளை தான் எங்கள் காதல் நேரம். உணவு இடைவேளைக்கு நான் வீட்டிருக்கு திரும்பும் போது, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் மட்டுமே பார்த்து கொள்வோம். அவர் என்னை பார்த்து சிரித்தார், நானும் பதிலுக்கு சிரித்தேன். இன்று வரை நான் எதற்கு அவரை பார்த்து சிரித்தேன் என்பதற்கான காரணம் என்னிடம் இல்லை. இந்த ஒற்றை பார்வை, மாறாத புன்னகையும் ஓராண்டு காலம் நீடித்தது.

வேலை முடிந்தும்...
அவரது கட்டிட வேலை முடிந்தும் கூட, சரியாக நான் உணவு இடைவேளையில் வீடு திரும்பும் போது, அந்த இடத்தில் எனக்காக வந்து காத்திருப்பதை அவர் நிறுத்தவில்லை. ஒரே இடம், ஒரே பார்வை, ஒரே புன்னகை, அதே நாங்கள். ஒரு நாளும் இது மாறவில்லை. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

ஒரு நாள்!
ஒரு நாள், அதே போல நான் இடைவேளை நேரத்தில் வீடு திரும்பும் போது அவர், அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தார். நான் அவரை கடக்க மறுத்து, அதே இடத்தில் நானும் நின்றேன். அவர் தயக்கத்துடன் இங்கே சாலையில் நின்று பேசுவதை தவிர்த்து, வேறெங்காவது போய் பேசலாமா என்று கேட்டார்.

முதல் டேட்டிங்!
நாங்கள் இருவரும் முதல் முறை ஒன்றாக வெளியே சென்ற இடம் எக்மோர் மியூசியம். நாங்கள் இருவரும் அங்கிருந்த பொருட்களை மிகவும் வியப்புடன் கண்டு பூரித்துப் போனோம். அங்கே இருந்த அரசர், அரசி பயன்படுத்திய பொருட்களை கண்டு நாங்கள் ஆச்சரியத்தில் இருந்து வெளிவரவே இல்லை.

ராஜா, ராணி!
அங்கே மியூசியத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் என்னை நிறுத்தி, "நீ எனது ராணியாக இருப்பாயா?" என கேள்வி கேட்டார். சற்றும் யோசிக்காமல், நான் "எப்போதிருந்து?" என பதிலளித்தேன். அதற்கு அவர்,"இன்றிருந்து" என கேட்டார்....

எங்கள் முதல் டேட்டிங்கின் போதே நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். இப்போதும், நாங்கள் அன்று அந்த மியூசியம் சென்ற என்ட்ரி பாஸ் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

வறுமை!
என் கணவருக்கு வேலை இல்லாமல் இருந்த நாட்கள் பலவன இருந்தன. அந்த மழை கால நாட்களில் நாங்கள் இருவரும் இரண்டு கப் கடுங்காஃபியையும், ஓரிரு பிரெட் துண்டுகள் சாப்பிட்டு கழித்துள்ளோம். என்னவர் ஒரு டீ அடிக்ட். நான் அவருக்கு தெரியாமல் பணம் சேமித்து வைத்து, அவர் ஒரு நாள் கூட டீ அருந்தாமல் நாளை கழிக்க விடாமல் பார்த்துக் கொள்வேன்.

நாங்கள் ராஜா, ராணி இல்லை. எங்களிடம் அரண்மனை இல்லை, பெரும் சொத்துக்கள் இல்லை. ஆனால், எங்களுக்கு நாங்களே ஒரு சொர்க்கத்தை உருவாக்கி வைத்துள்ளோம். அதில் நாங்களே ராஜா, ராணி. எங்களுக்கு ஒரு இளவரசியும் இருக்கிறாள், அவள் பெயர் ரகசியா...சரி விஷயத்துக்கு வருகிறேன்.

இப்படி சந்தோஷமான எங்களுடைய வாழ்க்கையில் புயல் வீச காரணமாய் இருந்தது அவர் வேலைப்பார்த்த பதினோரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. அதில் அறுபது பேர் உயிர் இழந்து விட்டார்கள். அதில்...அதில்...அதற்குமேல் பேச முடியாமல் குரல் உடைந்து அழத்தொடங்கினாள். புரிந்துக்கொண்ட அபிநயா,

“ஓகே..அழாதீங்க....உங்களுக்கு வரவேண்டிய பணமெல்லாம் வந்துடிச்சா?”

“இல்ல மேடம் தினம் தினம் கோர்ட் கேசுன்னு அலைந்சுக்கிட்டுதான் இருக்கேன். உங்களை கையெடுத்து கும்புடுறேன். நீங்கதான் எனக்கும் என் பொண்ணுக்கும் வழிகாட்டணும்.”

அபி மனம் உருகிப்போனாள்.

“கவலைப்படாதீங்க...என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.” என்ற உறுதியளித்து விட்டு மற்ற தகவலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். அந்த பெண்ணால் இவள் வாழ்வில் ஒரு நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அப்போது அபிக்கு தெரியாது.

சற்று நேரத்தில் ஊருக்குள் நுழைந்தார்கள்.

கிராமமே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றுமில்லை பக்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம் ஒன்று கிராமத்தில் பொங்கல் கோலப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது. லோக்கல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், துண்டு பிரசுரங்கள் போன்றவை பெண்கள் அனைவரையும் அதில் கலந்துகொள்ள அழைத்துக் கொண்டிருந்தது.

பொங்கல் அன்று மாலை ஏழு மணிக்கு வரும் கலெக்டர் அவற்றை பார்த்து சிறந்த கோலங்களை தெரிவு செய்வார். ரொக்கப் பரிசுகளும், பல மாதங்களுக்கான இலவச மளிகை சாமான் கூப்பன்களும் உண்டு.

புதுமையான போட்டி.

கிராமத்து பெண்களுக்கு கேட்கவா வேண்டும். ஆளாளுக்கு வீட்டில் கூடி திட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள்.

‘நீ இப்படி போடு, நான் அப்படி போடுகிறேன்’ என்று.

மலர்விழி பத்தாம் வகுப்பு படிப்பவள். அப்பா கிடையாது.

வீட்டில் மூன்று பசு மாடுகள் உண்டு. அதில் பால் கறந்து விற்று வரும் வருமானத்தில்தான் காலம் ஓடுகிறது. மலர்விழி படிப்பில் சுட்டி. அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு உதவி செய்து, பால் கறக்கும் வரை பாத்திரம் மாற்றிக் கொடுத்து பக்கத்து ஊர் டீ கடை வரை கொண்டு போய் ஊற்றி வருவாள். அதன் பின்பு பள்ளிக்கு கிளம்பிச் செல்வாள். அவள் மெல்ல அம்மாவிடம் ஆரம்பித்தாள்.

“அம்மா?”என்றாள் மெல்லிய குரலில்.

“என்னடி புதுசா ராகம் பாடுதே”

“நானும் போட்டியில கலந்துக்கறேன்ம்மா”

“என்ன போட்டியில?”

“நீ வேற ஊரே அமர்க்களப்படுதேம்மா... கோலப் போட்டி”

“பார்த்தேன், நானும் நோட்டீசு பார்த்தேன். நமக்கு எதுக்கு அதெல்லாம். நீ எட்டுப் புள்ளி கோலம் எல்லாம் போடவே தடுமாறுவே, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். அதெல்லாம் வேண்டாம், உன்னோட வேலையைப் பாரு” என்று சொல்லி விட்டாள்.

மலர்விழிக்கு வருத்தம்தான்.

எப்படியாவது அம்மாவிடம் சம்மதம் வாங்க வேண்டும். இறங்கிப் போய் கெஞ்சினால் அம்மா வழிக்கு வருவாள்.

அன்று பால் ஊற்றி விட்டு வந்ததும் சாப்பிட உட்கார்ந்தாள்.

அம்மாக்காரி தட்டில் சூடாய் இட்லியும், சாம்பாரும் ஊற்றினாள்.

நல்ல சுவை.

“அம்மா வழக்கத்தைவிட இன்னைக்கு சாம்பார் சூப்பரா இருக்கு. எங்கிட்ட மட்டும் காசு இருந்ததுன்னு வச்சுக்கயேன், உன்னோட விரலுக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கிப்போடுவேன். சரிதான். மோதிரம் வாங்கற அளவுக்கு எங்கிட்ட எங்கே பணம் இருக்கு?” என்று அங்கலாய்த்தாள்.

“என்னடி! வழக்கமான இட்லி சாம்பார், எதுக்கு நீ இப்ப பீடிகை போடறே?” என்றாள்.

“அம்மா நான் இருவது வீடுகளுக்கு மேலே பால் ஊத்துறேன். எல்லாத்துக்கும் மேலே நான் போற வழியில இருக்கற கோலத்தை எல்லாம் ரசிக்கிறேன். நான் நிச்சயம் போட்டியில ஜெயிப்பேம்மா?”

“சரி அதுக்கு கோலப்பொடி கலர் கலரா வாங்க காசு வேணும். அதுக்கு என்னப் பண்ண போறே?”

“நீ எனக்கு கொடுக்கற பணத்துல சேர்த்து வச்சிருக்கேன்ம்மா?”

“உன் இஷ்டம். கலந்துக்க. போட்டியில கோலம் போடறேன்னு பால் ஊத்தறதை அன்னைக்கு லேட் ஆக்கிடாதே” என்றாள்.

தான் கோலப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதை சில தோழிகளிடம் சொல்ல, அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

அவள் அதை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

போட்டி அன்று ஊரே பரபரப்பாக இருந்தது.

சீக்கிரமே எழுந்தவள் வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்தாள்.

பாலை அவசர அவசரமாய் ஊற்றி விட்டு வந்து கோலம் போட ஆரம்பித்தாள்.

ஒரு மணி நேரத்தில் அவளின் கோலம் கொஞ்சம், கொஞ்சமாக உருப்பெற ஆரம்பித்தது. ஏராளமானவர்கள் கோலம் போட்டிருந்தார்கள்.

நேரம் விறுவிறுப்பாக சென்றது.

மாலை நேரம்! கலெக்டர் தனிக் காரில் வந்து இறங்கினார். புது கலைக்டர் என்ற மரியாதையோடு அபிநயாவை ஊர்மக்கள் வரவேற்றனர்.

ஒவ்வொரு கோலத்தையும் நின்று நிதானமாய் பார்த்தாள்.

அவருடன் போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்த அங்காடி ஆட்களும் வந்திருந்தனர்.

கலெக்டருடன் வந்த கேமரா மேன் தனித்தனியாக போட்டோ எடுத்து கொண்டிருக்க அங்காடி ஆட்களுடன் வந்திருந்த விளம்பர நிறுவனத்தினரும் பாய்ந்து, பாய்ந்து பல கோணங் களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கலெக்டருக்கு தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

அவர் புகைப்படங்களை பரிசீலிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அங்காடி ஆட்கள் ஒட்டு மொத்த கிராமத்திற்கும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை என வண்டிகளில் சுடச் சுட கொண்டு வந்து பரிமாறினார்கள்.

நேரம் ஆக ஆக கோலம் போட்டு காத்திருந்த பெண்களின் முகத்தில் பதற்றம்!

பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறதோ?

யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதைவிட யாருக்கு கிடைக்கக் கூடாது என்று சில பெண்கள் நினைக்காமல் இல்லை.

அங்காடி உரிமையாளர் கிராமத்து மக்கள் அனைவரையும் மேடையின் முன் வந்து நாற்காலிகளில் அமரச் சொன்னார்.

எல்லோர் முகத்திலும் பரபரபப்பு.

கலெக்டர் எழுந்தார்.

“என்னோட பெயர் அபிநயா. நான் எட்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். அப்போ நான் ஒரு கல்லூரி மாணவி. நானும் நல்லா கோலம் போடுவேன். கலெக்டர் கலந்துக்க கூடாதுன்னு அவங்க சொல்லலை. இருந்தாலும் இளைய தலைமுறை பெண்கள் தங்களோட திறமையை வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இது. அதுவும் பரிசோட வருதுன்னா சொல்லவா வேணும். எனக்கு இதுல கலந்து கிட்டதுல ரொம்ப சந்தோஷம். மயிலாப்பூர்ல மார்கழி மாசம் முழுக்க வீட்டு வாசல்ல கோலம் போட்டு நடுவில பரங்கிப் பூ வைப்போம். அதுக்கப்புறம் பரங்கிப் பூவை இங்கேதான் பார்க்கிறேன்.

நான் இந்த அங்காடி அதிபர் கேட்டதும் உடனே ஒப்புதல் தந்ததற்கு காரணம் முதல்ல இந்த கிராமத்தைப் பார்க்கலாம், மக்களை சந்திக்கலாம்ன்னு தான். இந்த ஒரு மணி நேரம் ஒவ்வொரு கோலப் போட்டோக்களையும் ஆராய்ஞ்சு மூன்று பரிசுக்குரியவர்களை தேர்ந்துஎடுத்து இருக்கோம். முதல்ல மூன்றாவது பரிசுல இருந்து ஆரம்பிக்கிறேன். இதுல முதல், இரண்டு, மூணுன்னு நினைக்க வேண்டாம். எல்லாமே சிறப்பா இருந்தது. இருந்தாலும் போட்டின்னு அறிவிச்சதால இப்படி கொடுக்கறோம். எல்லோருக்கும் வாழ்த்துகள். முதல்ல மூன்றாம் பரிசு சாந்தி செல்வதுரை, மேல வீதி. இவங்க போட்ட கோலம் பாரம்பரிய காளைமாடு பிடித்தல். இருபத்தஞ்சாயிரம் ரொக்கம் மற்றும் மூன்று மாதத்திற்கான மளிகை கூப்பன்”

கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தார்கள்.

சாந்தி செல்வதுரை மேடையேறி பரிசினை கலெக்டரிடம் வாங்கும் போது கைத்தட்டல்கள் பறந்தன.

“அடுத்து இரண்டாவது பரிசு, ராணி தங்கவேல். இவங்க வரைஞ்சது ஒரு மயில் கூட்டம். ரொம்ப தத்ரூபமா இருந்தது. இவங்களுக்கு ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் ஆறு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் கூப்பன், வாழ்த்துகள்” என்று கூறி பரிசுகளை வழங்கினார்.

“அடுத்து, நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் முதல் பரிசு லதா தணிகைராஜ். இவங்களுக்கு முதல் பரிசு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு வருடத்திற் கான மளிகை கூப்பன்” என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது.

கலெக்டர் எல்லோருக்கும் பரிசுகளை வழங்கினார்.

சில பெண்கள் மலர்விழியை அலட்சியமாகப் பார்த்தனர்.

எல்லோரும் எழுந்திருக்க ஆரம்பிக்க ‘ஒரு நிமிஷம்’ என்றார் கலெக்டர்.

எல்லோரும் மீண்டும் அமர்ந்தார்கள்.

“நானும் அங்காடி ஓனர் மனைவியும் தீவிரமா பார்த்ததுல ஒரு ஸ்பெஷல் படம் கண்ணுல பட்டது. அது எங்க மனசை விட்டு இறங்கவேயில்லை. அந்தப் படத்தை கோலமாக வரைஞ்ச பெண்ணுக்கு சிறப்பு பரிசு இரண்டு லட்சம் மற்றும் ஐந்து வருடத்துக்கு மளிகை கூப்பன் வழங்க முடிவு பண்ணியிருக்கோம். அந்தப் பெண் ஏன் அந்த படத்தை கோலமா வரைஞ்சான்னு தெரியலை. அவங்களே மேடைக்கு வந்து விளக்கம் சொன்னா நல்லா இருக்கும்” என்று நிறுத்தினார்.

ஒட்டு மொத்த கூட்டமும் ‘யார் யார்’ என்று நாலாபுறமும் பார்த்தது.

கலெக்டர் சிரித்துக் கொண்டே, “ஏன் இந்த சஸ்பென்ஸ். நானே சொல்றேன், மலர்விழி வினாயகம்” என்றார்.

மலர்விழி மெல்ல எழுந்தாள்.

தனது ஒற்றைக் கட்டைக் காலால் விந்தி விந்தி நடந்து மேடையேறினாள்.

கலெக்டர் அவள் தோளைத் தட்டி, “வாழ்த்துகள் மலர்விழி. முதல்ல உன்னைப் பத்தியும் உன்னோட படத்தைப் பத்தியும் சொல்லு” என்றார்.

மலர்விழி கண்கள் லேசாய் பணித்திருந்தன.

“மூணு தலைமுறையா நாங்க சிலை செதுக்குற வேலையைத்தான் செஞ்சுகிட்டுதான் இருந்தோம். அனால் அந்த தொழில் எங்க குடும்பத்தையே நடு தெருவுல நிறுத்துடிச்சி. என் தாத்தா ஜெயில்ல இருக்காரு என் மாமாவும் என் பாட்டியும் எங்க இருக்குறாங்கன்னே தெரியில. என் அம்மா பெயர் குழலி, நானுன் என் அம்மாவும் பால் வியாபாரம் தான் பண்ணிட்டு வர்றோம். இப்ப நானும் அம்மாவும் மட்டும் தான். அப்பா சில வருடங்கள் முன்பு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டார். நான் நிறைய செய்தி தாள் படிப்பேன். அதுல மடி காய்ஞ்ச மாடுகளை கறிக்கு லாரியில ஏத்திட்டுப் போகும் போது கண்ணுல தண்ணி வரும். என்னோட ஆசையெல்லாம் எப்படியாவது சின்ன நிலம் வாங்கி அதுல மடி மரத்துப்போன மாடுகளுக்கு கோசாலை அமைக்கறதுதான். எல்லாத்துக்கும் மேலே இந்த கிராமத்துல சரியான கழிவறை கிடையாது. அதனாலத்தான் கோசாலை படமும், லாரியில மாடுகளை ஏத்திட்டு போற படமும் வரைஞ்சேன். நீங்க கொடுக்கப் போற ரெண்டு லட்சத்துல முதல்ல ஒரு கழிவறை கட்டுவேன். பக்கத்து கிராமத்துல ஒரு அனாதை ஆஸ்ரமம் இருக்கு. அதுக்கு நீங்க கொடுக்கப் போற மளிகை கூப்பனை கொடுப்பேன்” என்றாள்.

கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

கலெக்டர் கண்கள் கலங்க, “இந்த பரிசுகளை நீயே உன் குடும்பத்திற்கு பயன் படுத்திக்கொள். உன்னோட மேல் படிப்புக்கு உதவும். இங்கு கழிவறையை நானே பொறுப்பெடுத்து கட்டித் தர்றேன். அப் புறம்” என்றவர் அங்காடி முதலாளி பக்கம் திரும்பினார்.

“அந்த அனாதை ஆஸ்ரமத்துக்கும் இந்தப் பொண்ணு விருப்பப்படி மளிகை பொருட்கள் அனுப்பிடுங்க. உங்களுக்கு சங்கடம்ன்னா நான் அதுக்கு பணம் தர்றேன்” என்றார்.

அங்காடி முதலாளி, “வேண்டாம்மா நாங்களே காலம் முழுக்க தந்துடுறோம்” என்றார்.

“இப்ப சந்தோஷம் தானே மலர்விழி” என்று தோளைத் தட்டினார் கலெக்டர்.

கலெக்டர் மெல்ல மலர்விழியை அணைத்துக் கொள்ள கேமராக்கள் உள் வாங்கின.

நிகழ்ச்சியை பார்த்து ஒட்டு மொத்த கூட்டமும் மெய் சிலிர்த்து நின்றது.
ஆனால் அபிநயாவுக்கும் குமரேசனுக்கும் மலர்விழி யார் என்ற விஷயம் தெள்ள தெளிவாக புரிந்தது. அடுத்த கட்டமாக மலர்விழியின் அம்மா குழலியை சந்திக்க வேண்டும் என்று இருவரும் தீர்மானித்தார்கள்.
 
Last edited:
வேழவேந்தனின் சகோதரியின் பெண் மலர்விழி அருமை
வறுமையிலும் செம்மை
மடி காய்ந்த மாடுகளைப் பற்றி கவலைப்படுவது சூப்பர்
ஆனால் கோசாலை இதுக்கு அபிநயா என்ன செய்யப் போறாள்ன்னு சொல்லலையே
 
Last edited:
வேழவேந்தனின் சகோதரியின் பெண் மலர்விழி அருமை
வறுமையிலும் செம்மை
மடி காய்ந்த மாடுகளைப் பற்றி கவலைப்படுவது சூப்பர்
ஆனால் கோசாலை இதுக்கு அபிநயா என்ன செய்யப் போறாள்ன்னு சொல்லலையே
அடுத்துவரும் அத்தியாயங்களை படிக்கும்போது உங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.
நன்றி டியர்...
 
Top