நீதானே என் பொன்வசந்தன்
அத்தியாயம் 13
அபி திரும்பத் திரும்ப ஃபைல்களை செக் செய்துகொண்டும் அப்ளிகேஷன்களை ரன் செய்து பார்த்துக் கொண்டும் இருந்தாள்,ஏற்கனவே பலமுறை சரி பார்த்திருந்தும் அவள் திருப்தியடையவில்லை, ஒரு சிறு தவறு கூட நடந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள்.. இதோ எல்லாம் தயாராக இருந்தது அவர்களது ஒரு மாத உழைப்பு அவளது கணினியில் ஏற்றப்பட்டிருந்தது,நாளை ப்ராஜெக்ட் பிரசன்டேஷன், முதலில் சர்மா சார் இடமும் பிறகு கிளையண்ட்ஸ் இடமும் ப்ராஜெக்ட் பிரசன்டேஷன் செய்யவேண்டும். இது அருண் டீம் லீடர் ஆனபிறகு அவனுடைய முதல் ப்ராஜெக்ட் இதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்று அபி மிகவும் கவனமாக இருந்தாள் அபி எப்போதும் வேலையில் தனது 100 சதவீதத்தை கொடுப்பவள் ஆனால் இப்பொழுது அதற்கு மேலும் முனைப்புடன் வேலை பார்த்தாள் எல்லாம் அவனிடமிருந்து கிடைக்கும் மெச்சுதலான அந்த ஒரு சிறு புன்னகைக்காக மட்டுமே..அருணின் நினைவே அவளது முகத்தில் புண்ணை பூக்க செய்தது..அத்தியாயம் 13
அபிக்கு அனைவரது வேலையையும் ஒருங்கிணைக்கும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது, அதை அவள் கன கச்சிதமாக செய்து முடித்திருந்தாள். எல்லாம் சரியாக இருக்கிறது என்று நிம்மதியுடன் அவள் நிமிரும்போது
நித்தி அவளை அணுகி “ஹாய் அபி..” என்று சினேகமாக சிரித்தாள்.. பதிலுக்கு தயங்கியபடியே லேசாக சிரித்தாள் அபி…
“என்ன என்கிட்ட வந்து பேசுறா..? நல்லா பேசுற அளவுக்கு நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு நல்ல பிரெண்ட்ஸ் இல்லையே..!” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவளை ஏறிடும் போது
“அபி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் ..”என்று தேன்குரலில் கேட்டாள்.
“என்ன ஹெல்ப்..?” என்று புருவம் சுருக்கினாள் அபி..
தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பென் ட்ரைவை எடுத்து நீட்டி
“இந்த பென்டிரைவ்ல சில பைல்ஸ் காபி பண்ணனும்..” என்று கூறினாள் நித்தி..
“என்ன பைல்ஸ்?”
“அந்த எஸ்பிஐ ப்ராஜெக்ட் டீடைல்ஸ் உன்கிட்ட இருக்குன்னு விவேக் சொன்னாரு, அந்த பிராஜக்ட் பேசிக் ஸ்ட்ரக்சர் ரெடி பண்ணி மெயில் அனுப்பனும்.. வெரி அர்ஜென்ட் இன்னிக்குள்ள முடிக்கணும் இல்லைன்னா என்னை காய்ச்சி எடுத்துவிடுவார் உனக்கு தான் அவர பத்தி தெரியுமே…” என்று கவலையும் பயமும் கலந்து கூறினாள்..
விவேக் பெயரைக் கேட்டதும் அபிக்கு அவளை பார்க்க கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது அவளுக்கு தெரியாதா அந்த விவேக் வேலை என்று வந்துவிட்டால் எப்படி அரக்கனாக நடந்து கொள்வான் என்று..
“சரி, நான் உங்களுக்கு மெயில அனுப்பறேன் நித்தி…”
“நோ.. நோ.. அந்த பைல் சைஸ் ரொம்ப பெருசு மெயில்ல அட்டாச் ஆகாதுன்னு விவேக் சொன்னாரு…” என்றாள் அவசரமாக
நித்தி வேண்டும் என்றே தான் விவேக்கின் பெயரை அடிக்கடி பயன்படுத்தினாள்.. அவள் நினைத்தது போலவே விவேக் என்ற மந்திரச்சொல் நன்றாக வேலை செய்தது, அபியும் விவேக்கின் பெயரைக் கேட்டதும் நித்திக்கு உதவ முடிவு செய்தாள்..
“சரி குடுங்க..” என்று பென்ட்ரைவை அவளிடமிருந்து வாங்கினாள், அதை சிஸ்டெமில் நுழைப்பதற்கு முன்பு இதுல வைரஸ் எதுவும் இல்லையே உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கேட்டாள்…
“ நோ நோ… இது புது பென்டிரைவ்.. வைரஸ்லாம் இருக்காது.. ஐ பிராமிஸ்..” என்றாள் திடமாக..
அபி பைல்களை காப்பி செய்து கொண்டிருக்கும்போது அவளுக்கு விவேக்கிடம் இருந்து போன் வந்தது உடனடியாக அவள் அவனை சந்திக்க வருமாறு அழைத்து..
விவேக் இடமிருந்து அவசர அழைப்பு வந்ததும் அபி சிறிது பதற்றமானாள்..
நித்தியிடம் பைல்களை காப்பி செய்ததும் சிஸ்டம்ஐ லாக் செய்துவிட சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பி சென்றாள்..
விவேக் அவளுக்கு மூச்சு கூட விட நேரம் இல்லாதவாறு வேலை கொடுக்க அவற்றை எல்லாம் முடித்துவிட்டு அவள் தனது இருக்கைக்கு திரும்பும்போது மணி 6 ஆகியிருந்தது.. அபி சிஸ்டம்ஐ அன்லாக் செய்து பார்த்தாள், அவள் செய்வதற்கு எதுவுமில்லை எல்லாம் ஏற்கனவே சரிபார்க்கபட்டிருந்தது ஷாட்டவுன் செய்து விட்டு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி…
அபி சிஸ்டம் ஐ கிளோஸ் செய்ய நினைத்தபோது ஏதோ உள்ளுணர்வு சொல்ல மீண்டும் ஒரு முறை பைல்களை செக் செய்தாள்…அப்போது அருணின் குரல் அருகில் கேட்கவும் முகம் தானாக மலர நிமிர்ந்து பார்த்தாள்..
“எல்லாரும் எக்ஸ்ஸைட்டெட்டா இருக்கீங்களா நான் ரொம்ப எக்ஸ்ஸைட்டெட்டா இருக்கேன்… எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டோம் சோ நாளைக்கு பிரசெண்டேஷன்ல தெறிக்கவிடுறோம் ஓகேவா..?”என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்டினான்…
நித்தியும் பத்ரியும் பதிலுக்கு தங்களது ஆள்காட்டி விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டினார் .
“அண்ணா.. ஃபர்ஸ்ட் டைம் நான் ஒரு நீட் வர்க் பண்ணியிருக்கேன், நீங்க கவலைப்படாதீங்க நம்ம கிளையண்ட்ஸ் சும்மாஅசந்துருவாங்க பாருங்க..” என்று கூறி பல் வரிசை முழுவதும் காட்டி சிரித்தான்..
அருண் அபியை பார்த்து “எல்லாம் ஓகே வா?” என்பது போல ஒற்றை புருவம் உயர்த்த , அவள் ஒரு கண் சிமிட்டலில் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற உறுதியை அளிக்க, அந்த ஒன்றிலேயே மனநிம்மதி அடைந்தவனாக அவளைப் பார்த்து சிரித்து விட்டு சென்றான்..
அவன் கண்ணிலிருந்து மறையும் வரை அவனுடைய முதுகையே கண்களில் கனவுடன் பார்த்திருந்து விட்டு, மீண்டும் தனது கணினி திரையில் பார்வை பதித்தாள், ஏதோ பாப் அப் செய்தி ஒன்று எட்டி பார்க்க… அரை கவனமாக என்னவென்று யோசிக்காமல் அதை கணநேரத்தில் கிளிக் செய்துவிட்டாள்…
உடனடியாக ஏதோ வீடியோ கேம்ஸ் போல அவளது சிஸ்டம் ஐ வைரஸ் தாக்க எல்லா பைல்களும் தன் கண்முன்னே சிதைந்து நெருங்குவதை கண்டாள்.. கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்துவிட அதிர்ச்சியுடன் அவர்களது ஒரு மாத கடின உழைப்பு தன் கண் முன்னே அழிந்து போவதை தடுக்க முடியாத கையாலாகாதனத்துடன் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்…
ஒரு கணம் திகைத்து ஸ்தம்பித்துபோனாலும் மறுகணமே தன்னுணர்வு பெற்று செயலிழந்து போன மூளையை தட்டி உயிர்பெற செய்து பரபரவென்று திரும்ப சிஸ்டமை பூட் செய்ய முயன்றாள்.. ஆனால் அது வெறும் கருப்புத் திரை ஆகிப்போனது, என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் அமர்ந்துவிட்டாள்.. ஒரு கணம் இதயம் நின்று பிறகு பந்தய குதிரை போல ஓடியது தான் செய்த காரியத்தின் வீரியம் முழுவதுமாக உரைக்க..
“ ஐயோ கடவுளே..எவ்ளோ பெரிய தப்பு செஞ்சுட்டேன்..” நெஞ்சம் பதறியது ,கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது , நடுங்கும் விரல்களில் டயல் செய்து அருணை அழைத்தாள்.. அருண் விரைந்து ஓடி வந்தான்… அபியின் குரலில் தெரிந்த பதற்றம் அவனுக்கு கிலியை உண்டாக்கியது.. என்னவோ ஏதோ என்ற தவிப்புடன் அவன் அவளது இடத்தை அடைந்த போது அபி , பீதியடைந்த முகத்துடன்கம்ப்யூட்டர் கீ போர்டை உடைத்துவிடுவாள் போல தட்டி கொண்டிருந்தாள்…
“என்ன ஆச்சு அபி...” திடீரென்று கேட்ட அருணின் குரலில் அதிர்ந்து துள்ளி குதித்தாள், கைகள் நடுங்க நெற்றியை வியர்வை நனைக்க கலவர முகத்துடன் நின்றிருந்த அபியின் நிலையைக் கண்டதும் அருணுக்கு அடிவயிற்றில் பயம் கவ்விப்பிடித்தது…ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் தோன்றியது.
“என்ன ஆச்சி அபி..” என்றான் மீண்டும் சிறு அழுத்தத்துடன்..
அவனுடைய இதயத்துடிப்பும் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போனது அவன் நினைப்பது போல் எதுவும் இருக்கக் கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டான்… அபி வரண்ட தொண்டையில் எச்சில் விழுங்கினாள் என்ன சொல்வது என்று தெரியாமல் அவனைப் பார்த்து மலங்க விழித்தாள் அவளுடைய உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது… கண்களில் கண்ணீருடன்… “சிஸ்டம் கிராஷ் ஆகிடுச்சு…” என்றாள் காற்றாகி போன குரலில்….
ஒருகணம் அவனுக்கு ஒன்றுமே தோன்றாமல் செயலற்றுப்போனான்.. வேறொரு சமயமாக இருந்தால் அபியின் கலவரமுகத்தை கண்டதும் ஆடிபோய் இருப்பான் ,ஆனால் இன்று அவளது பரிதாபத்திற்குரிய தோற்றம் கூட அவன் மனதில் பதியவில்லை..
“சிஸ்டம் கிராஷ் ஆகிடுச்சு..” என்பதற்கு மேல் எதையும் யோசிக்க முடியவில்லை.. எதுவுமே தோன்றாமல் மூளை மரத்துப் போனது போல் ஆனான்.. இருப்பினும் ,நொடியில் தன்னை சமாளித்துக்கொண்டு அவளை அப்புறமாக நகர சொல்லிவிட்டு ,அவனால் முடிந்த மட்டும் சிஸ்ட்டத்தை ஆன் செய்ய முயன்றான் , ஆனால் அவை எல்லாம் வீண் முயற்சியாக வெறும் கருப்புத்திரை தான் அவனை பார்த்து பல்லிளித்தது..
“எப்படி.. ?” என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்தான் நம்பமுடியாத அதிர்ச்சியில்..
அவனுடைய இறுகிய முகத்தை பார்த்து அபி மேலும் அரண்டு போனாள்,
“அருண்.. அது.. வந்து..” என்று பேசமுடியாமல் திணறவும்
“எப்படின்னு கேட்டேன்..?”என்றான் இரும்பைவிட கடினமாக, அவனது குரலில் அவளது உடல் சில்லிட்டது..
தொண்டையில் முள்ளாக குத்திய துக்கத்தை விழுங்கி கொண்டு ,நடந்ததை விவரித்தாள்..
“எப்படி உன்னால இவ்ளோ அலட்சியமா இருக்க முடிஞ்சுது?”
அவளால் என்ன பதில் பேச முடியும் ?எல்லா தவறும் அவளதாக இருக்கும் போது, தன் பக்க நியாயமாக எதையும் கூற முடியாமல், வாயடைத்து போய் நின்றாள்.
“நாளைக்கு ப்ரெசென்ட்டேஷன் இப்ப வந்து, நாம ஒரு மாசம் கஷ்ட்டபட்டு பண்ண வர்க் எல்லாம் வீணா போச்சின்னு எவ்ளோ சர்வசாதாரணமா சொல்ற?” அவனுடைய குரலில் ஒலித்த வலி அவளை சுக்குநூறாக கூறுபோட்டது…
“எப்படி அபி? நீ இப்படி சொதப்புவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை.. நித்தி, பத்ரீ இவங்கதான் ஏதாவது சொதப்புவாங்கன்னு, அவங்க மேல நான் ரொம்ப கவனமா இருந்தேன், உன்னை ஒரு முறைகூட கவனமா இருன்னு சொல்லணும்னு தோணலை, ஏன்னா நான் என்னை விட அதிகமா உன்மேல நம்பிக்கை வச்சிருந்தேன், ஆனா அந்த நம்பிக்கைக்கு கைமாறா இப்படி நல்லா என் முகத்துல அறைஞ்ச மாதிரி செஞ்சிட்டல…. என்னோட முதல் ப்ராஜெக்ட் மிக பெரிய தோல்வி,இதோட என்னோட கரியரும் முடிஞ்சுது ,இந்த எல்லா பெருமையும் உனக்கு தான்..”
அவனது ஒவ்வொரு வார்த்தையும் குத்தீட்டியாக அவள் நெஞ்சத்தை கிழித்தது… அருண் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு ,உடைந்து போய் அவள் பார்த்ததில்லை, அதற்க்கு மூல காரணம் தான் தான் என்பதையும் அவளால் தாங்க முடியவில்லை…
“அருண்…” அவன் பேரைக்கூட சொல்ல முடியாமல் அவள் தொண்டை அடைத்தது..
“ஐ அம் சாரி …”எனும் போதே இதயம் விம்மி வெடித்துவிடும் போல வலித்தது..
“டோன்ட் சே சாரி ,யூ லெட் மீ டௌன் அபி..” என்றான் வெறுத்த குரலில்..
“இல்லை அருண், உன் பேரை காப்பாத்தணும் உன்னோட முதல் ப்ராஜெக்ட் கிராண்ட் சக்செஸ் ஆகணும்னு எவ்ளோ கஷ்டப்பட்டு உழைச்சேன் தெரியுமா? எல்லாமே உனக்காக மட்டும்தான் செஞ்சேன்..”
“அப்போ இந்த மாதிரி நடக்க விட்ட? என் இவ்ளோ கேர்லெஸ்ஆ இருந்த?”
எப்படி அவள் செயலை நியாயப்படுத்த முடியும்? அவனிடம் சொல்லவா முடியும் நான் உன்னை பார்த்து பகல் கனவு கண்டுகொண்டே இப்படி ஒரு சொதப்பலை செய்தேன் என்று ,அவமானம், தூக்கம் ,தவிப்பு எல்லாம் ஒன்றான கலவையாக தலை குனிந்து நின்றாள்..
“நாம ஐடீ டீம்ல சொல்லி டேட்டா ரெட்ரைவ் பண்ண சொல்லலாமா?” என்றாள் கண்களில் சிறு ஒளியுடன் அவனை நோக்கி,
“இனி நமக்குள்ள “நாம”ங்கிற பேச்சே கெடையாது, நீ அப்புறம் ,நான் அவ்ளோ தான் ..”
என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..
“இனிமேல் நான் பார்த்துக்கறேன், நீ இதுவரைக்கும் பண்ண டேமேஜே போதும் இனிமேல் பண்றதுக்கு ஒன்னும் பாக்கி இல்லை நீ மொதல்ல இங்க இருந்து கெளம்பு..” என்றான் சிறிதும் கருணை இல்லாமல் அவளை ஏறெடுத்தும் பாராமல்,
அவனுடைய வார்த்தையில் தெரிந்த வெறுப்பில் முகத்தில் அரை வாங்கியது போல் வலித்தது அபிக்கு …
“அருண்..” என்று அழைத்து பேச தொடங்கியவளை இடைமறித்து ,
"உன்னை கிளம்ப சொன்னேன்..” என்றான் அந்நியமாகிவிட்ட குரலில்..
திகைத்து நின்ற அவளை சிறிதும் சட்டை செய்யாமல் ,கம்ப்யூட்டரில் இருந்து ஹார்ட்வேர் டிஸ்க் ஐ எடுத்துக்கொண்டு ,வேகமாக வெளியேறினான்…
அவன் போவதையே சிலையாகி பார்த்துக்கொண்டு நின்றவள் கண்களில் கண்ணீர் இடைவிடாது வழிந்தோடியது…