Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செம்பருத்தி

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஃபரண்ட்ஸ்..
இது என்னுடைய ஐந்தாவது சிறுகதை.. எங்கள் ஊரில்(மூனார்) நான் பார்த்து, மிகவும் உடைந்து போன ஒரு உண்மைச் சம்பவத்தை சிறுகதையாக கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பகிந்து கொள்ளுங்கள்..
மிக்க நன்றி ஃபரண்ட்ஸ்..


செம்பருத்தி..!


“இந்தா செம்பா இது நேத்தைக்கு பணம், கடைக்காசையும் சேர்த்து மொத்தமா வச்சிடு, நாளைக்கு ஆட்டோ டியு கட்டிருவோம்... இந்த டியுவோட முடிஞ்சது... இனி ஆட்டோ நம்மது..” என்ற கணவனைப் பார்த்து புன்னகைத்தபடியே,


“ம்ம்... ஆமாப்பா இதோட ஒரு பிரச்சினை முடிஞ்சது... அடுத்து பிள்ளைங்க ஸ்கூல் பணம் தான் பாக்கி, அதை அடுத்தவாரம் முடிச்சிடனும்..” என்றாள் செம்பருத்தி.


“அதைத்தான் நானும் நினைச்சேன்... இதுல ஒரு மூனாயிரம் தனியா எடுத்து வச்சிடு, நாளைக்கு பிள்ளைங்கள ஹாஸ்டல் விட போடிக்கு போகும் போது, அந்தக்காசுல கடைக்கு சரக்கு போட்டுட்டு வந்துடு..” என மாரிமுத்து கூற,


“நான் எங்கப்பா போக, கம்பெனிகாரன் முன்னாடி மாதிரியா இருக்கான், ஒரு நாள் வேலைக்கு போகலைன்னாலும், ப்ளாக் மார்க் பண்ணிடுறான்... அப்படியே டிஸ்மிஸ் நோட்டிஸ் கொடுத்துடுறான்... இந்த லட்சணத்துல நான் எங்க போக, நீங்களே போயி பிள்ளைங்கள விட்டுட்டு, சாமான் போட்டுட்டு வந்துடுங்க...” பரிதாபமாய் முடித்தாள் மனைவி.


“ம்ம் அதுவும் சரிதான்... யாரை குத்தம் சொல்ல, இங்க இருக்க தலைவர்மாருங்க அதுக்கு மேல இருக்கானுங்க, தொழிலாளர்களுக்கு எந்தப்பிரச்சினையும் வந்துடக்கூடாது, அப்படி வந்தா அதை சரி செய்யத்தான் இந்த கட்சிங்க... தலைவர்மாருங்க..! இவனுங்க என்னடான்னா கம்பெனிக்காரன்கிட்டயும் வாங்கித் திண்ணுட்டு, தொழிலார்கள்கிட்டயும் வாங்கித்திண்ணு ஏமாத்திட்டு திரியுறானுங்க...”


“சந்தா மட்டும் கேட்டுட்டு வந்துடுவானுங்க வீட்டுக்கு... இவனுங்களை யார் கேட்குறது...? என்ன செய்ய..? நம்ம பொழப்பு அப்படி... சரி விடு... நான் ஒருத்தன் டிஸ்மிஸ் ஆகி கிடக்குறது போதும்... நீயாச்சும் வேலைக்கு போ... இல்லாட்டி நாம வீடு இல்லாம தெருவுல தான் நிக்கணும்...” என தன் ஆதங்கத்தை கொட்டினான் மாரி.


“வேண்டாம்ப்பா.. நாம எதுவும் பேச வேணாம்... அப்புறம் நம்மதான் பிரச்சினை செய்றோம்னு எஸ்டேட்டெல்லாம் பரப்பி விட்டுருவானுங்க... நீங்க அதை விடுங்க...”


“இந்தாப்பா பீரோ சாவி, பணத்தை நீங்களே கொண்டு போயி வச்சிடுங்க... பிள்ளைங்ககிட்ட சொல்லி ஆட்டோவை கழுவி விட சொல்லிட்டு, நீங்க சாப்பிட்டு படுங்க.. இங்க நான் பார்த்துட்டு வரேன்...”


“ரெண்டு மாசம் கழிச்சு வந்த பிள்ளைங்கள வேலை வாங்க சொல்றியா, அதெல்லாம் போற வழியில, அந்த அருவி பக்கத்துல நிறுத்தி கழுவிட்டு போயிடுறேன்... நீ சீக்கிரம் வந்துடு...” என்றபடியே கிளம்பினான் மாரிமுத்து.


மூணாரின் சுற்றுலா இடங்களில் முக்கியாமானது எக்கோ பாயிண்ட் எனப்படும் இடம்... இங்கு பலவகையான கலைபொருட்களை கொண்ட சின்ன சின்ன கடைகள் அதிகம்... அப்படி ஒரு சின்னதான ஒரு கடையை தான் மாரிமுத்துவும், அவன் மனைவி செம்பருத்தியும் வைத்துள்ளனர்..


மாரிமுத்து கிளம்பவும், அங்கிருந்த செல்பி ஸ்டிக் மற்றும் சில பொருட்களை எடுத்து வந்து கடைக்கு முன்னே நின்று சுற்றுலா பயணிகளிடம் அவரவர்க்கு ஏற்றார்போல், தனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் பேசி வியாபாரத்தை தொடர்ந்தாள் செம்பா.. காரணம் வடமாநிலத்தவரும், வெளிநாட்டவரும் தான் இங்கு அதிகம் வருவது..


எப்போதும் கூட்டங்கள் அலைமோதும் இடம் என்றாலும், சனி ஞாயிறுகளில் மிக அதிகம். அவர்களுக்கு ஏற்றமாதிரியான பொருட்களை, அவர்களுக்கு பிடித்த விதத்தில், அவர்களுக்கு புரியும்படி கூறி விற்பனை செய்வதில் செம்பருத்தி கெட்டிக்காரி..


அடுத்த சிலமணி நேரங்கள் எப்படி போனதோ செம்பாவிற்கு... பக்கத்து கடையில் இருந்த ஜாக்ளின் தான் அவளை உள்ளே பிடித்து இழுத்தாள்.


“ஏண்டி இதென்ன பேய் மாதிரி நிக்க, போ போய் முதல்ல வயித்துல கொஞ்சம் தண்ணிய ஊத்து... மணி எத்தன ஆவுது பாரு...” என்று கடிய,


“அட ஆமா மதினி, மணி மூணாவுது... எங்க நேரம் போனதே தெரியல, டீத்தண்ணிய குடிச்சா, சாப்பிட முடியாது, பேசாம சாப்பிட்டுருவோம்... நீ என்ன கொண்டாந்த....” என ஜாக்ளியிடம் விசாரித்தாள்.


“நான் என்னத்த கொண்டார, தீவாளிக்கு கரி போட்டான்னு, நேத்தைக்கு போடல போல கரிக்கடக்காரன். மீனு வந்துச்சுன்னு எடுத்தாந்தான் தம்பி, அதத்தான் வச்சேன்.. காலைல இட்லி அவிச்சு வச்சிட்டு, நான் நாலை எடுத்து டப்பால போட்டுட்டு வந்தேன்..”


“கிரைண்டர் ரிப்பருன்னு சொல்லிட்டு இருந்தியே மதினி, எப்போ சரி பண்ண.. அந்த மணிப்பயனா பார்த்தான்...”


“அட ஏன் புள்ள நீ வேற, அதை சரி பண்ணிக்கொடுக்குறதுக்கு புதுசே வாங்கிடலாம்னு இந்தப்பையன் சொல்லிட்டான்.. அதைக்கொண்டு போயி மூனார்ல அந்தக் கடைல போட்டுட்டு புதுசு எடுக்க நேரமில்ல, கல்லுல தான் ஆட்டுனேன்.. நீ என்ன எடுத்தாந்த..”


“பிள்ளைங்க நாளைக்கு ஹாஸ்டல் போகுதுங்களே... அதான் பரோட்டா போட்டுக் கொடுத்துச்சு அவங்க அப்பா... அதை தான் நானும் எடுத்துட்டு வந்தேன்....”


“என்னவாம் உங்க வீட்டு திருவாத்தன் என்னமோ சொல்லிட்டு போறான்..” என நொடித்துக்கொண்டே இட்லியைப் பிய்த்து வாயில் போட்டாள் ஜாக்ளி..


“அட ஏன் மதினி நீ வேற, அந்தாளு குடிச்ச குடிக்கு, இப்போ இவ்ளோ மாறியிருக்குறதே பெருசு... எல்லாம் என் சாமி கர்த்தராலதான்... இன்னும் குடிச்சிட்டு கடைமேட்டுலத் திரிஞ்சிருந்தா, நானும் என் புள்ளைங்களும் நடுத் தெருவுலதான் நின்னுருக்கணும்..” என்ற செம்பாவைப் பார்த்து முறைத்த ஜாக்ளி,


“அட கிறுக்குப் பிடிச்சவளே, என்னப் பேச்சு பேசுற, அவன் உன்னைப் படுத்தாத கொடுமையா... அதுவும் அப்போ உனக்கு வேலையும் பெரமன்ட் (பெர்மனன்ட்) ஆகாம இருந்த.. பாதி நாளு வேலை கொடுப்பானுங்க, மீதி நாளு சும்மா போட்றுவானுங்க, அப்பவும் ரெண்டு பொம்பளப்புள்ளைங்கல வச்சிட்டு சும்மா உக்காந்தா கெடந்த, இதோ இந்தக்கடையை ஒத்தப் பொம்பளையா நீ கட்டி இழுத்துட்டு வரல, விடு புள்ள, நீ பட்ட பாட்டைக் கண்ணால பார்த்தவ நானு... வேற எதுவும் பேசாத...” என கோபமாய் பேச,


“அதென்னமோ நெசம்தான் மதினி இந்தாளு தான் வேணும்னு ஒத்தக்கால்ல நின்னு கட்டுனேன், அப்பன் ஆத்தா தொலஞ்சு எக்கேடோ கெட்டுப்போன்னு அப்படியே விட்டுட்டாங்க, ரெண்டு புள்ளைங்களக் கொடுத்தத தவிர, வேற என்ன செஞ்சுப்புட்டான் எனக்கு.. குடி... குடி... குடிதான்..! முக்கியமா போச்சு...”


“எந்த நேரமும் சண்டைதான்... வீடு வீடாவே இருந்ததில்ல, புள்ளைங்க பயந்து பயந்து தான் படுக்குங்க... நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்துட்டு, பச்ச மண்ணுங்கள கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டேன், அப்படியாச்சும் நிம்மதியா இருக்கட்டும்னு,..”


“எல்லாம் நான் வாங்கி வந்த வரம் மதினி, லீவுக்கு வந்த பிள்ளைங்க நிம்மதியா ஒருநாள் ஒருநேரம் கஞ்சிக் குடிக்க முடியாது... அதுங்க படுற வேதனையைப் பார்த்து நானே அந்த மனுசனை கொன்னு போட்டுரனும்னு துனிஞ்சிட்டேன்...”


“இந்தாளு இருக்குறதும் ஒண்ணுதான், போய் சேருறதும் ஒண்ணுதான்னு மனசுக்குள்ள தோன ஆரம்பிச்சிட்டு...” என்று தொடர்ந்து பேசிய செம்பாவின் பேச்சு நின்று முகம் வேதனையில் சுருண்டது.


“பழசெல்லாம் விடு செம்பா... இப்போதான் எல்லாம் சரியா போயிடுச்சில்ல, எதையும் நினைச்சு வருந்தாத புள்ள..” என ஜாக்ளி அவளைத் தேற்ற...


“சில விசயங்கள் எப்பவும் மறக்க முடியாது மதினி, அப்படித்தான் இதுவும். அந்தாள் பண்ணக் கூத்து ஒன்னா ரெண்டா... வேலையும் போயி, வீட்டை இழுத்து மூடி, நானும் என் பிள்ளைங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... இருக்க தலைவர்மாருங்க கால்ல எல்லாம் விழாத குறைதான்.. அதுலயும் ஒவ்வொருத்தனோட பார்வையும், பேச்சும் இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் கூசுது மதினி..”


“இந்தக் குடின்னால எத்தன குடும்பம் இல்லாம போச்சோ தெரியல, ஆனா என் பிள்ளைங்க இப்படி ஒரு முடிவு எடுப்பாங்கன்னு கனவுல கூட நினைக்கல. என் ஈரக்கொலையே நடுங்கிப்போச்சு மதினி..” அன்றைய நாளின் நினைவில் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது சென்பாவிற்கு...


“விசயத்தைக் கேள்விப்பட்டதும் எனக்கும் அப்படிதாண்டி இருந்துச்சு.. ஒலகம் தெரியாத பிள்ளைங்க உயிர விட துனிஞ்சிருக்குங்கன்னா அதுங்க மனசளவுல எவ்ளோ வேதனைப்பட்டிருக்கும்.. சரி இதுவும் நல்லதுக்குத்தான, தாம் பிள்ளைங்கள அன்னைக்கு அப்படிப் பார்த்ததும், இடிஞ்சிப் போயி உக்காந்தவன் தான்... இப்போ சுத்தமா ஆளே மாறிட்டானே உன் புருசன்காரன்...” என்று மேலும் சமாதானப் படுத்தினாள். ஜாக்ளி…


“என்ன மதினி சொல்ற, இந்தாளு உணரனும்ன்றதற்காக, என் குழந்தைங்க இப்படி ஒரு முடிவு எடுத்தது எப்படி சரின்னு சொல்ல முடியும், அப்படி மட்டும் ஒன்னு கணக்கா ஒன்னு ஆகிருந்தா..? இந்த மனுஷனையும் எரிச்சிட்டு நானும் செத்துருப்பேன்... ஏதோ ஏசப்பா கிருபை நல்ல வழிக் காட்டிருக்கார்..” என்ற செம்பாவின் விழிகளில் அன்றைய நாளின் வேதனை நீராய் வழிந்தது..


“இனி என்ன அதான் நீ பெரமன்ட் ஆகிட்டியே... அப்புறம் என்ன கவலை, வீட்டுக்கு வீடு... தோட்டத்துக்கு தோட்டம் கிடைச்சிருக்கு... பாரு இனி எல்லாம் நல்லாதாத்தான் நடக்கும்... நாலு பேரு மாதிரி நீயும் நல்லா வருவ... சரி எந்திரி புள்ள, யேவாரத்தை பாப்போம்.. பேசுனா பொழுதன்னைக்கும் பேசிட்டே தான் இருப்போம்... சாயங்காலம் சீக்கிரம் வரச்சொல்லிட்டு போயிருக்கான் மாரி வேற...” என்று ஜாக்ளித் தன் கடை நோக்கி நகர, செம்பாவிற்கு அன்றைய நாளின் நினைவில் இருந்து வெளிவர சிறிது நேரம் பிடித்தது..


அடுத்த சில மணிநேரங்களில் வேலையில் தன்னை மூழ்கடிக்க, பழைய நினைவுகள் எல்லாம் மனதின் ஓரத்தில் சென்றமர்ந்தது. தன்னுடைய ரத்தம் என்றதும் உண்டான தவிப்பும், துடிப்பும் ஏன் மனைவி என்ற ஒருத்தியிடம் வரவில்லை என்ற கேள்வி வழக்கம்போல் எழுந்தாலும், இன்று நல்லமுறையில் தானே நடந்துகொள்கிறான் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி கசப்பான பழையவற்றை மறக்க முயற்சிக்கிறாள் தான், ஆனால் முடியவில்லை பதின்மூன்று வருடங்களாக அனுபவித்த கஷ்டங்களை ஒரே ஆண்டில் மறந்து விட சொன்னால் எப்படி முடியும்..?


குழந்தைகளுக்காகவேனும் வாழ்க்கையை இலகுவாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டாள். சில சில மனஸ்தாபங்கள் வந்தாலும், அதையும் தூர தள்ளி, தன் வாழ்க்கைப் படகை செலுத்திக் கொள்கிறாள். எதற்காக இத்தனைப் போராட்டங்கள்...! எல்லாம் குழந்தைகளுக்காக...! குழந்தைகளுக்காக மட்டுமே...!


மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனத்தைப் பதிக்க, அதுவும் சாத்தியமாக, அடுத்த இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை செம்பாவிற்கு..


மணி ஆறைத் தொட, அனைத்து சாமான்களையும் எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு, கடையை மூடியவள், ஜாக்ளியைத் தேடி செல்ல, அவளும் இவளுக்காய் காத்திருக்க, அடுத்து வந்த ஜீப்பில் நெருக்கியடித்து ஏறிக்கொண்டனர்.


ஆசுவாசமாய் அமரலாம் என்றால் அவர்கள் ஊருக்கான கடைசி வண்டி, கூட்டம், இருக்கைப் பற்றாக்குறை..! அதையெல்லாம் பெரிது பண்ணாமல் கிடைத்த சிறு இடத்தில் அமர்ந்தவளின் நினைவுகள் எல்லாம் நாளைக் குழந்தைகள் விடுதிக்குச் சென்று விடுவார்களே என்பதிலேயே இருந்தது. அவர்களுக்கானத்தை சமைக்க, எடுத்து வைக்க என்ற வேலைகள் அவளை நிதானாமாய் இருக்க விடவில்லை.


‘பெரியவளுக்கு எள்ளுப்பொடியும், சின்னவளுக்கு உளுந்துப்பொடியும் சேர்த்து செஞ்சுக் கொடுக்கணும். போன தடவைக்கு இந்த தடவை கொஞ்சம் இளைச்சிப் போயிட்டுதுங்க..’ தாயிற்கே உண்டான கவலை அவளை யோசிக்க வைக்க, அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்திருந்தது.


“மதினி நாளைக்கு ஒருநாள் கடையைப் பார்த்துக்க, பிள்ளைங்க ஊருக்கு போறதால, காப்பிக்கு கேட்ருக்கேன், காட்டுல போயி காப்பிய ஊத்திட்டு வந்துடுவேன்...” என்றவளிடம்,


“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், பார்த்து சூதானமா கூட்டிட்டு போக சொல்லு அவன்கிட்ட..” எனவும்,


“சரி மதினி, நீ பார்த்துப்போ...” என்று ஜாக்ளிக்கு விடை கொடுத்து, வீடு நோக்கி வேக வேக எட்டுக்களை எடுத்து வைத்தவளுக்கு, தன் வீட்டின் முன் சில ஆட்கள் நிற்பதும், அழுகைச் சத்தமும், அவளை மேலும் வேகமாய் நடக்க வைத்தது.


‘அய்யோ என்னாச்சு... பிள்ளைங்களுக்கு என்னமோ... இந்தாளு எங்க போச்சோ தெரியலையே..’ என்று நொடியில் நூறு எண்ணங்களை யோசித்துக்கொண்டு வந்தவளைப் பார்த்த ஒரு வயதான பெண்மணி... “அடிப்பாதகத்தி இப்படி உன்ன மூளியா நிக்க வச்சிட்டுப் போயிட்டானே... எவனோ கட்டாயப் படுத்துனான்னு குடிச்சிட்டு வந்து, இப்படி முழுசா போய் சேர்ந்துட்டானே..’ என்று ஒப்பாரி வைக்க...


அவளது கனவுக் கோட்டைகள் அனைத்தும் தரைமட்டாமாக, மொத்தமாய் இடிந்து போய் நின்றாள் செம்பருத்தி...!!!
 
இந்த பாழாப் போன குடியினால்
இன்னும் எத்தனை செம்பருத்திகள் உருவாக்கப்படுவாங்களோ?
அரசு உணருமா?
 
Last edited:
kudichu ethana kudumbam azhinjalum kudikrathayum nirutha matranunga. madhubana kadaya close panrathum illa.
 
Top