22. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
வேலன், தனா, பட்டர் நீலகண்டர், குளக்கரை கோவில் பூசாரி ரத்தினம் என நால்வரும் நாகர்மலை நோக்கி பயணத்தை தொடர்ந்தனர்.

இரவு நேர பயணம் தான் என்றாலும் தனாவிற்கு உறக்கம் கண்ணை எட்டக் கூட இல்லை. கண்முன்னே அம்மா அப்பாவின் முகமும், அண்ணன்களின் முகமுமே அலைந்தோடிக் கொண்டிருந்தது.

வெளியே இருட்டையே வெறித்துப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். அவனையே கவனித்தபடி வந்த வேலன், கொஞ்ச நேரம் தூங்கு தனா. நாளைக்கு நமக்கான பயணம் ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். இப்போவே கொஞ்சம் உன்னை அசுவாசப்படுத்திக்கோ பா.

எப்பிடி மாமா தூங்க முடியும். எல்லாரும் தெரிஞ்சே உயிர விட்டுருக்காங்க.

அம்மா... அம்மாவை பத்தி பூசாரி ஐயாவும் ஏதேதோ சொல்லுறார். எனக்கு இப்போதைக்கு மனசே சரியில்ல மாமா. நடக்குறதெல்லம் பார்த்தா, நாம இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கலயின்னா, குடும்பத்துல இருக்குற எல்லாரையும் இழக்க வேண்டி வருமோன்னும் பயமா இருக்கு.

அதுமட்டுமில்ல மாமா, இப்போ அங்க வீட்டுல, எல்லாரும் பத்திரமா இருப்பாங்களான்னும் பயமா இருக்கு. ஏதோ சித்தன் தாத்தா இருக்கவும் கொஞ்சம் பயம் இல்ல. ஆனாலும் பயம் இருந்துட்டு தான் இருக்கு மாமா.

ப்ச்... பயப்படாத தனா. அதான் யாரையும் மாடிப் பக்கமே போக வேணாம்னு சொல்லிட்டு தானே வந்திருக்கோம். அதான் சித்தன் ஐயாவும் இளாவும் இருக்காங்க தானே. நீ கொஞ்ச நேரம் எதையும் போட்டு குழப்பாம தூங்கு வா.

அவரது நெஞ்சினில் சாய்த்து மெல்ல தலையை வருடிக் கொண்டே இருந்தார். அவருக்கும் கண்ணீர் வந்து கொண்டே தான் இருந்தது. கல் மனம் படைத்தோரும் கரைந்திடும் நிலை தான் இப்போதைய இவர்களின் நிலை.

தனா தூங்கவில்லை. ஆனால் கண்களை மூடி இப்போது வேலனின் தோளில் சாய்ந்து கொண்டான்.

அம்மா அப்பவே கதி அண்ணன்கள் இருக்க எதுக்கு கவலை என இருந்தவன், யாருமின்றி நிற்கும் போது அவனுக்கு தையரியம் ஊட்டி மெல்ல அவனை நிதர்சனத்திற்கு கொண்டு வந்தது வேலன் தான்.

தாய்மாமன் தாயாகி தாங்கிய நிலையை வடிக்க வார்த்தை தான் வேண்டுமா. இதோ தன் பிள்ளை போல நெஞ்சில் தாங்கி கண்ணீர் விடும் இவரல்லவா தாயுமானவன்.

நல்ல நெஞ்சங்களின் கண்ணீருடன் நாகர்மலை நோக்கி அந்த பேருந்து தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. காலை பத்து மணி வாக்கில் நாகர்மலையை அடைய,

சொல்லி வைத்தது போல் இவர்களுக்காக குமரவேலன் காத்துக் கொண்டிருந்தார்.

வருபவர்களை முன் பின் அவர் பார்த்து கூட இல்லை தான். ஆனால் நேற்றே அவருக்கு, வேண்டியவர்களிடமிருந்து வரவேண்டியது வந்து விட்டதே. கிட்டத்தட்ட ஆறுமாத காலம், அந்த குகையில் இருந்த பெரியவர் கூறிய வார்த்தைகளுக்காக தினமும் காத்திருக்கிறார்.

மீண்டும் அவரது பேத்தி ஏதாவது பேசுவாளா என அவளை அருகில் இருத்தியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது காத்திருப்பின் பலனாக நேற்றே அவள் மீண்டும் வாய் திறந்தாள்.

என்ன குமரவேலா... ஆறு மாதமாய் காத்திருக்கிறாய் போல. ம்ம் ஆகட்டும் உனக்கான பணி ஆரம்பாமாகி விட்டது. ஆறு மாதத்திற்கு முன்பு நீ உதவி செய்த நாதனின் மகன் இங்கு வந்து கொண்டிருக்கிறான். நாளை பல புதிய செய்திகள் உன்னை வந்து சேரும். நால்வருடன் இணைந்து ஐவராய் நாளை மறுநாள் உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.

என்றும் உனக்கு காவலாய் நான் இருப்பேன் என்பதை நீ மறவாதே. தவித்துக் கொண்டிருக்கும் படகு ஒன்று உன்னால் கரை சேர போகிறது. படகிற்கு துடுப்பாக ஓர் உயிர் அமைய வேண்டிய நிலையில் உன் முடிவே பல உயிர்களை காக்கும். மறவாதே... குமரவேலா. உன் முடிவே இறுதியானது.

அவ்வளவு தான் அதற்கு பிறகு வேற எதுவும் பேசவில்லை. இறுதியில் சொன்ன செய்தி மட்டும் அவருக்கு விளங்கவே இல்லை. சரி அவள் துணையிருக்க, என்ன நடந்தாலும் சரி என்று, அதிகாலை விடியும் முன்னேயே கிளம்பி வந்து விட்டார் பேருந்து நிறுத்திற்கு.

சிறு துளியேனும் சலிப்பு என்பதே அவருக்கு வரவே இல்லை. காலை மூன்று மணிக்கு வந்தவர் இதோ பத்து மணி ஆகியும் அங்கேயே இருக்கிறார்.

பேருந்தில் இருந்து இறங்கியவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, பிறந்ததிலிருந்து அதே ஊரில் இருக்கும் அவருக்கு புதிதாக வந்த அவர்களை தெரியாமல் போகுமா?

முகத்தில் புன்னகையை தவழ விட்டபடி, நீங்க நாதனோட கடைசி பையனா என நேராக தனாவிடமே சென்று கேட்டுவிட்டார்.

அப்போ நீங்க தான் குமரவேல் ஐயா சரியா? என இவனும் பதில் கேள்வி கேட்க, சிரிப்புடனே

ஆமா தம்பி நான் தான். எல்லாருக்கும் வணக்கம்.. முதல்ல வாங்க வீட்டுக்கு போகலாம். மத்தத அப்புறம் பேசிக்கலாம்.

வீட்டிற்குள் நுழைந்ததும் எல்லோரையும் வரவேற்றதே குமரவேலனின் பேத்தி அகரயாழினி தான்.

வாய் பேசாவிட்டாலும் அவளின் விழிகளே அத்தனை அமுதமொழி பேசியது. கண்களின் வழி அவளின் அபிநயத்தைக் காட்டி கைக்கூப்பி வணங்கி நிற்கும் பாவனை அத்தனை சிறப்பாகத் தான் இருந்தது.

அவளை பார்த்த முதல் பார்வையிலேயே கணித்து விட்டார்கள் நீலகண்டரும், ரத்தினமும்... அவள் பரிபூரண அம்மன் அருள் பெற்றவள் என்று. இருவரும் அவள் தலையில் ஒரு சேர கைகளை வைத்து ஆசீர்வதிக்க, இருவருக்கும் சேர்த்து அவள் வைத்த புன்னகை தான் அத்துணை அழகு.

உள்ளே வந்து சில நல விசாரிப்புகளுக்கு அடுத்து,

குமரவேலன், இன்னும் கீர்த்தனன் அவனோட பலத்தை அறியல. இன்னும் முக்கியமான விஷயங்கள் நெறய இருக்கு. நாம எல்லோரும் பயணத்துக்கு முன்னாடி அதை தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஆனா அதை இப்போ பேசவேணாம். கோவில்ல அம்பாளை தரிசிச்சுட்டு அங்கேயே பேசலாம்.

சரிங்க ரத்தினம் நாம கோவிலுக்கு போகலாம். இப்போ எல்லாரும் முதல்ல சாப்பிடுங்க. வாங்க.

பூங்கொடி பரிமாற எல்லோரும் உணவருந்தி விட்டு ஆங்காங்கே சற்று ஓய்வெடுக்க, தனா மட்டும் குமரவேலைத் தேடி சென்றான்.

தாத்தா..

சொல்லுப்பா..

உங்கள தாத்தான்னு கூப்பிடலாமா?

தாராளமா கூப்பிடலாம்.

தாத்தா.. அப்பா இங்க வந்தது... நாகர் மலைக்கு போனது, அதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே எங்க யாருக்கும் தெரியாது. ஆனா நேத்து தான் அப்பா எழுதின அந்த கையேட்டை நாங்க எல்லாரும் படிச்சோம்.

அப்பா..அப்பா இங்க வந்த போது ரொம்ப கஷ்டப்பட்டாரா தாத்தா.

அவன் அப்படி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்கள் முன் வந்தாள் அகரயாழினி.

விடை தேடி பயணம் தொடரும்...
Prabhaas...
 

Advertisement

Advertisement

Back
Top