பாகம் – 10
இடம்: அர்ஜூன் வீடு
நேரம் : முதல் ராத்திரி
‘’வாட்…. என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க’’ என போனில் கத்தினேன்.
‘’இன்னிக்கு நாம ஒன்னா தூங்கலாமா?’’ என்றான் அர்ஜூன் மறுபடியும்.
‘’பிஞ்சிரும், என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?’’ கோபத்தில் வெடித்தேன்.
‘’ஹேய் அம்மு, தப்பா புரிஞ்சுக்காத, நான் சொல்றதை முதலில் கேளு’’ என்றான்.
‘’யாரு நானு, தப்பா புரிஞ்சுக்கிட்டேன், நீங்க நல்ல விதமா பேசறீங்க, அசிங்கமா எதாவது சொல்லிடப் போறேன்’’ மறுபடியும் பொரிந்தேன்.
‘’பிளீஸ் டீ, நானே டென்சன்ல இருக்கேன். நேர்ல வா, விளக்கமாக சொல்றேன். என் வீட்டு அட்ரஸ் உனக்கு அனுப்பியிருக்கேன். தயவு செஞ்சு வா. உன்னை ரேப் பண்ண மாட்டேன்.’’ என்றான் தளர்ந்த குரலில்.
………….…………………….……………………
‘’அம்மு, என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, இருந்தா வா’’ என்றான் இறுதியாக.
‘அர்ஜூனோடு பல முறை தனிமையில் இருந்திருக்கிறேன். ஜோக் அடிக்கிறேன் என்ற பெயரில் கூட தப்பாக பேசியதில்லை. எதார்த்தமாகக் கூட தொட்டுப் பேசியதில்லை. எல்லை மீறனும் என்று நினைச்சிருந்தால் எப்பவோ முயற்சித்திருப்பான். இன்னிக்கு வீட்டுக்கு கூப்பிடுகிறான் என்றால் எதோ அர்த்தம் இருக்கும்’ என்று யோசித்தவாறே அவன் வீட்டிற்கு சென்றேன்.
கதவைத்திறந்ததுமே, ‘’நீ இல்லாமத் தவிச்சுப் போய்ட்டேன்டி ‘’ என்றவனின் கண்கள் சோர்ந்திருந்தது.
‘’என்னாச்சு, எதுக்கு என்னை வரச்சொன்னீங்க’’ என்று நான் கேட்கும்முன்னே, சிணுங்கிக்கொண்டிருந்த ஆல்பர்டின் மகள் லயாவைத் தூக்கி என் கையில் தந்தான்.
‘’குட்டிம்மா என்ன இங்கிருக்கா? ‘’ என்று கேட்டதற்கு, பதில்கூடத் தராமல் சோபாவில் ஓய்ந்து படுத்திருந்தவனைக் கண்டபோது பாவமாக இருந்தது.
நடந்தது இதுதான்.
டாஷாவின் அப்பா, ஊர்சுற்றிப்பார்க்க ஸ்வீடன் போயிருந்த சமயம், மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அங்கிருக்கும் அரசு மருத்துவமையில் அவர் உடல் இருக்கிறது. ரத்த உறவுகள் யாராவது கையெழுத்திட்டு அவரது உடலைப் பெற்று இங்கு கொண்டுவர வேண்டும் அல்லது அங்கேயே இறுதி காரியம் செய்ய வேண்டும். டாஷா உடனே ஸ்வீடனுக்கு கிளம்பத் தயாராகிவிட்டாள். ஆனால் 52 வயதில் அப்பா இறந்த அதிர்ச்சியில், இரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்த மனைவியை, தனியே அனுப்ப ஆல்பர்ட் விரும்பவில்லை.
லயாவிற்கு கடந்த மாதம்தான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். பாஸ்போர்ட் வரும் போது, வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பவும் அந்த அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டதால், மறுபடியும் இவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் இன்னும் பாஸ்போர்ட் வந்து சேரவில்லை.
ஆக மகளை அழைத்துச் செல்ல முடியாது. நெருங்கிய உறவினர்கள் எல்லாம் வேல்ஸ்( wales) யில் இருக்கிறார்கள். அவசரத்துக்கு யாரை நம்பி, அதுவும் கைக்குழந்தையை விட்டுச் செல்வது? என்ற மிகப் பெரிய குழப்பத்தில் தான், அர்ஜூன் பொறுப்பேற்றிருக்கிறான்.
‘’நான் வேலை கிடைச்சு லண்டன் வந்தபோது, இங்க தமிழ் பேசறவங்க யாரையும் தெரியாது. ஹாஸ்பிட்டலில் நான் முதலில் சந்தித்த ஆல்பர்ட்தான் வீடு பார்த்து தந்து, எல்லா விசயத்திலும் உதவினான். என்னோட பெஸ்ட் பிரெண்ட், அவனுக்கு ஒரு கஷ்டங்கிறப்ப நான் உதவலைன்னா எப்படி?
நீ இருக்கிற தைரியத்தில் தான், லயா குட்டியை எங்ககிட்ட விட்டிட்டு போங்கன்னு சொன்னேன். குட்டியும் உங்கிட்ட நல்லா ஒட்டிக்குவாள். அவளுக்கு என்ன சாப்பாடு தரனும்ன்னு உனக்குத் தெரியும். ஆக சமாளிச்சிடலாம் என்கிற தைரியத்தில், நாந்தான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன்னு கேட்டேன்.
‘’டாஷாக்கு உன்மேல ரொம்ப நம்பிக்கை. நீ கவனிச்சுக்குவ-ங்கிற எண்ணத்தில் கிளம்பிவிட்டாள், உனக்கு பலமுறை போன் பண்ணினேன். சாரி அம்மு, உங்கிட்ட கேட்காமலேயே நானா முடிவு பண்ணிட்டேன். பிளீஸ் ஹெல்ப் பண்ணு’’ என கிட்டத்தட்டக் கெஞ்சும் நிலையில் இருந்தான் அர்ஜூன்.
‘’ச்ச.. என்ன சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு. நானா இருந்தாலும் இப்படித்தான் செஞ்சிருப்பேன். சரி குட்டிக்கு சாப்பிட எதாவது குடுத்தீங்களா? ‘’ எனக் கேட்டேன்.
‘’எனக்கு தெரிஞ்சளவுக்கு செரலாக் கரைச்சு தந்தேன். ஆனா அவ ஒழுங்கா சாப்பிடலைன்னு தெரியும்’’ என்றான்.
அந்த அவதியிலும், டாஷா மகளுக்குத் தேவையானவற்றை கூடையில் எடுத்து வைத்துவிட்டு சென்றதோடு. வேறு எதுவும் வேண்டுமென்றால் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, அவர்கள் வீட்டு சாவியும் தந்திருந்தாள்.
கூடையில் இருந்த பவுடர் பாலைக் கரைத்து பாப்பாக்கு தந்து, டயப்பர் மாற்றிய பிறகு , அவள் தூங்க ஆரம்பித்தாள். அதற்குள் அர்ஜூன் எங்கள் இருவருக்கும் உணவு வரவழைத்திருந்தான். ஆளைக் கொல்லும் பசியில் இருவரும் சாப்பிட அமர்ந்தோம்.
‘’என்ன பிரச்சனைன்னு சொல்ல வேண்டியதுதான, அதைவிட்டுவிட்டு எதுக்கு அப்படி கூப்டிங்க?’’ என்றேன்.
‘’நான் ஹாஸ்பிட்டல் போகும் போதே டாஷா அழுதிட்டு இருந்தாங்க. ஆல்பர்ட்க்கு என்ன செய்யறதுன்னு தெரியவில்லை. அவங்களை சமாதானப்படுத்தி, டிக்கெட் எடுத்து அனுப்பி வைச்சிட்டு, வீட்டுக்கு வந்தா லயா வேற அழறாள். இதுல நீயும் போன் எடுக்கல. ஒருவழியா நீ பேசினப்போ, எங்ககிருந்து ஆரம்பிக்கிறது, என்ன சொல்றதுன்னு எதுவுமே தெரியாத அளவுக்கு சோர்ந்து போய்ட்டேன்’’ என்றான்.
‘’அதுக்குன்னு, வீட்டு வான்னு சொல்ல வேண்டியதுதான, எதுக்கு அப்படி கூப்பிட்டிங்க?’’ என அவன் பேசியதில் உள்ள அர்த்தத்தை விளக்க முயன்றேன்.
‘’சத்தியமா தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. பாப்பாவ பார்த்துக்க வந்து, நீயும் இங்கேயே தூங்குன்னு சொல்ல வந்து எதோ சொல்லிட்டேன்.’’ என்றான் அர்ஜூன்.
‘’ஆஹாங்… அதென்ன, சைட் கேப்ல ‘’டீ’ போடுறீங்க?’’ என்று எகிறினேன்.
‘’ஆமால்ல! அப்படியே பேச்சுவாக்குல வந்திடுச்சு. மன்னிச்சிடு தெய்வமே’’ என்றான்.
‘’அந்த பயம் இருக்கட்டும்’’ என்றபடி கைகழுவச் சென்றேன்.
பின்னாடியே வந்த அர்ஜூன், என் காதருகில் நெருங்கி, ‘’அம்மு இதுவரைக்கும் நான் எந்த பொண்ணையும் ‘’டீ’ போட்டுக் கூப்பிட்டதில்லை. காலேஜ்ல ஒரு பொண்ணை 6 மாசம் லவ் பண்ணினேன். அவளைக் கூட ‘’டீ’ போட்டுக் கூப்பிட்டதில்லை. ஆனா உன்னை கூப்பிடத் தோணுது, பிளீஸ் அம்மு, பிளீஸ் டீ’’ என்று முணுமுணுக்கும் போது, சிலிர்த்துக் கொண்ட என் காதுமடல்களில் கூச்சம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.
அதன் பிறகு, அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு பிரிட்ஜிக்குள் இருப்பது போல் ஜில்லென இருந்ததால்,
‘’சரி கிளம்புங்க. என்னை வீட்டில் கொண்டுவந்து விடுங்க. டாஷா வர்ற வரைக்கும் பாப்பா எங்கூட இருக்கட்டும்’’ என்றேன்.
‘’ஹேய், குட்டி தூங்கிட்டாள். கூட்டிப் போகும் போது அழுதா? அதுவும் இல்லாமல் இந்த வீட்டுக்கு சில முறை வந்திருக்கிறாள். அவங்கம்மா எங்கிட்ட விட்டிட்டு போகும் போது கூட அழவில்லை. அந்தளவுக்கு நான் பழகிய முகமாகிட்டேன்.
உன்னையும் நல்லா தெரியும் என்றாலும், புது இடத்தில் எப்படி இருப்பாள்? நாம மூணு பேரும் இங்கேயே இருக்கலாமே’’ என்றான் அர்ஜூன்.
அவன் சொல்வதும் நியாயம்தான் என்றாலும், அவன் வீட்டில் இரவு தங்குவது எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. இன்று ஒரு நாள் சமாளிப்போம் என்று மனதைத் தேற்றினேன்.
‘அடுத்து கேள்வி, நான் எங்கு தூங்குவது? ஸ்டூடியோ பிளாட் என்பதால் தனியாக ஹால் இல்லை. யாரேனும் வந்தால், பெட்டை மடித்து சோபாவாக மாற்றலாம். ஆக தனியே படுக்க எனக்கு இடமில்லை.
லயாகுட்டி, படுக்கையின் நடுவில் படுத்திருந்தாள். நாங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாய் படுத்தாக வேண்டும். வேறெங்கும் இடமில்லை. இவன் கூட எப்படி ஒரே பெட்டில் எப்படி படுப்பது? கடவுளே, என்னப்பா இப்படி சோதிக்கிற?’ என்று மனதுக்குள் புலம்பும் போது,
‘’அம்மு, தூங்கலாமா? இன்னிக்கு ஒரே அலைச்சல்,’’ என்றான் அர்ஜூன்.
காலையில் இருந்து கடையில் நின்றுகொண்டிருந்தால் எனக்கும் படுத்தால் நன்றாக இருக்கும்போல இருந்தது. ஆனா புது இடத்தில் எப்படி? அதுவும் இவன்கூட?’ தயங்கித் தயங்கி குட்டிக்கு இடதுபக்கம் படுத்தேன். அர்ஜூன் சுவற்றை ஒட்டிய வலதுபக்கத்தில் படுத்தான்.
கண்ணை இறுக்க மூடினாலும் தூக்கம் வரவில்லை, ஒரே படபடப்பாக இருந்தது.
‘’அம்மு’’ என்று அழைத்தான் அர்ஜூன்.
‘’ம்ம்’’
‘’அம்மு தூங்கிட்டியா?’’
…………………..
‘’என்னடி பேச மாட்டியா?’’
‘’சொல்லித்தொலைங்க’’ என்று எரிந்துவிழுந்தேன்.
‘’அம்மு…அம்மு’’
…………………….
‘’நான் இன்னிக்கு பஸ்ட் நைட் கொண்டாடப் போறேன்.’’ என்றான்.
‘’என்ன?’ ‘’ என்றபடி திடுக்கிட்டு எழுந்தேன்.
‘’இல்ல. ஒரு பொண்ணோட, முதன் முதலா, தனியா ஒரு அறையில் தூங்கப் போறேன். அதான் பஸ்ட் நைட்’’ என்று பல்லைக் காட்டினான்.
‘’ரொம்ப முக்கியம். நாளைக்கே பி.பி.சியில் நியூஸ் குடுத்திடலாம், இப்ப பேசாமல் தூங்குங்க, ’’ என்று அதட்டிவிட்டு படுத்தேன்.
‘ஆமாம், எனக்கும் இது முதல் ராத்திரிதான். அந்நிய ஆடவன் ஒருவனோடு முதல் முறையாக தனித்திருக்கும் ராத்திரி’, என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டேன்.
காதல் வளரும்