என்ன பண்ணா கமலி
Nice Ep“ம்ம்... அத்தை முழிச்சதும், அடுத்த வாரம் சிம்பிளா ஒரு கோவில்ல வச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிடுங்க.. மத்தது நான் வந்து பேசிக்கிறேன்..” என்றவன் கமலியை பார்த்து
“வெளிய வா பேசணும்..” என்றுவிட்டு போய்விட்டான்..
‘என்ன இவனா வந்தான்.. ஒரு வாரத்துல கல்யாணம்னு சொல்றான்..’ என்ற கடுப்புடனே வெளியே சென்றவள்,
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?? கல்யாணம் நீங்களே முடிவு பண்ணிக்கிட்டா ஆச்சா?” என்று எகிறிக்கொண்டு தான் வந்தாள்..
“இங்க இத்தனை பேர் முன்னாடி சீன் கிரியேட் பண்றது உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்..” என்று வனமாலி தோள்களை குலுக்க,
“திஸ் இஸ் டூ மச்...” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு..
“சரி அப்போ என்னோட வா.. உன்னை வீட்ல டிராப் பண்றேன்.. பிரெஷ் ஆகிட்டு சொல்லு, திரும்ப கூட்டிட்டு வர்றேன்.. நீ கேட்கணும் நினைக்கிறதைப் போறப்போ பேசிக்கலாம்..”
“நீங்க என்ன எனக்கு டிரைவரா...”
“புதுசா ஏதாவது கேளேன்.. இதெல்லாம் ஓல்ட் ஆகிடுச்சு...” என்றவன், திரும்ப அந்த அறைக்குள் எட்டிப்பார்த்து
“கமலியை வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்டு வர்றேன் அத்தை...” என்று ராணியிடம் சொல்லிவிட்டு வர, “நீங்க நினைக்கிறது போல எல்லாம் என்னை ஆட்டி வைக்க முடியாது..” என்று பிடிவாதமாய் நிற்பவளிடம்,
“நான் ஆட்டி வைக்க நீ என்ன அரிசி மாவா?? என் மாமா பொண்ணு... ஒழுங்கா வா.. இல்லை குளிக்காம ப்ரெஸ் பண்ணாம இப்படி கப்போட தான் நிப்பன்னா.. ஹாஸ்பிட்டல் நாறிடும்...” என்று வனமாலி பார பச்சமே பார்க்காது அவளின் காலை வார,
“என்னது என்ன சொன்னீங்க... என்னா??” என்று கோபமாய் கேட்க ஆரம்பித்து பின் அவன் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திட, அதனை அடக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டே அவனோடு நடந்து வந்தாள்.
‘ம்ம் இப்படி அதட்டி உருட்டினா தான் வழிக்கு வருவாளோ..’ என்றெண்ணியபடி வனமாலி காரை கிளப்ப,
“டிராப் மட்டும் பண்ணினா போதும்.. நானே வந்துப்பேன்..” என்றாள் அடுத்து..
“லைப்ல நமக்கு நெக்ஸ்ட் ஸ்டேஜ் இப்போதான் பிக்கப் ஆகப் போகுது... நீ என்னடான்னா டிராப் மட்டும் செய்னு சொல்ற..” என்றபடி பக்கவாட்டு கண்ணாடியை வனமாலி பார்க்க,
“ஹா ஹா ஹா...” என்று கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள் கமலி..
வனமாலியோ அவளை திரும்பிப் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் இருக்க, “எனக்கு உங்கம்மா மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.. அதைவிட பமீலா மேல..” என்று சொல்லி இன்னும் சிரித்தாள்..
ஆக வனமாலிக்கு இப்போது தான் புரிந்தது இவள் எப்படி எதற்கு சம்மதம் என்று சொன்னாள் என்று. நிச்சயம் இதை மணிராதாவோ பமீலாவோ இல்லை இந்திராவோ யாரோ ஒருவர் நடக்க விடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் சரியென்று சொல்லியிருக்கிறாள் என்று.
‘ஓஹோ..!!!’ என்று அவளைப் பார்க்க,
“அம்மா கேட்கிறப்போ முடியாது சொல்ல முடியலை.. ஆனா இது நடக்காது இல்லையா.. சோ தேவையில்லாத நம்பிக்கை அம்மாக்கு கொடுக்கவேணாம்..” என்றாள்..
“யார் சொன்னது நடக்காதுன்னு..”
“யார் சொல்லணும்..”
“கண்டிப்பா நடக்கும் கமலி...”
“ம்ம்ச்... நான்தான் சொன்னேனே..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், அவள் முகத்தினை பற்றி தன்னை நோக்கி வெகு அருகில் கொணர்ந்து,
“நடக்கும்... நடந்தே தீரும்.. யாரா இருந்தாலும் சரி நம்ம கல்யாணத்தை நிறுத்த முடியாது...” என்று ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவள் கன்னத்தில் கொடுத்த அதே அழுத்தத்தை கொடுத்து கூற,
கமலிக்கோ ‘இவன் லேசு பட்டவன் இல்லை..’ என்றே தோன்றியது..
ஒருவாரம்.. எழு நாட்கள்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் போனது அனைவர்க்கும்.. எப்போது என்ன நடக்கும்?? யார் என்ன சொல்வார்?? யார் என்ன செய்வார்?? என்று ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எதிர்பார்ப்பு.. அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாகையில் மனதில் ஒரு ஏமாற்றம்..
கமலியின் வீட்டினில் ஒருவித அமைதியான சூழலே என்றால், வனமாலியின் வீட்டிலோ எப்போது பார் சண்டை, சச்சரவு, கண்ணீர், சத்தம் இப்படிதான் இருந்தது. வனமாலி வீட்டிற்கு வருவதே அரிதாகிப் போன நிலையில், நாளைக்கு விடிந்தால் திருமணம் அதுவும் மிக மிக எளிதாய்..
“அத்தை எனக்கு கிரான்டா செய்றதுல அவ்வளோ இஷ்டமில்லை.. உங்களுக்கு கமலிக்கு எல்லாம் இஷ்டம்னா நம்ம பண்ணிக்கலாம்..” என்றுசொல்ல,
“இல்ல வனா.. இப்போதைக்கு உங்க கல்யாணம் நடந்தா போதும். வேறெதுவும் வேண்டாம்..” என்று சிவகாமியும் சொல்லிட, அவன் பக்கத்து வேலைகள் எல்லாம் அவன் மட்டுமே பார்த்துகொண்டான்..
இங்கே சிவகாமிக்கு உதவியாய் சங்கிலிநாதனின் குடும்பம் வந்துவிட, மமிக மிக நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆகமொத்தம் இச்செய்தி கேட்டு, அனைவர்க்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..
‘அட இதெப்படி சத்தியம்...’ என்றும் ‘இனியாவது எல்லாம் ஒத்துமையா இருந்தா சரி..’ என்று பலவேறு கருத்துக்கள்..
இதோ நாளை விடிந்தால் திருமணம்.. வனமாலியோ அவனின் அறையில் இருந்தான். அன்று மாலை தான் வீட்டிற்கு வந்திருந்தான்.. அவனுக்கான உதவிகளை எல்லாம் கோவர்த்தன் செய்ய, வீட்டினில் செய்ய வேண்டிய சில உதவிகளை எல்லாம் வந்தனா செய்தாள்.
மணிராதா மகனோடு பேசவேயில்லை.. ஆனாலும் அவரிடம் பெரிய மறுப்பு வராது என்று இவனுக்கும் தெரியும்.. பமீலா பிறந்த வீடு சென்றுவிட்டாள். நாளைக்கு யார் யார் திருமணத்திற்கு வருவர் என்றுகூட தெரியாது.. இப்படியொரு நிலையிருக்க, கமலி அழைத்தாள் அவனுக்கு..
வெகு நாட்களுக்குப் பிறகான அழைப்பு அவளிடம் இருந்து.. அனைத்தையும் தாண்டி இது ஒருவித துள்ளல் கொடுத்தது வனமாலிக்கு, அழைப்பை ஏற்றவனோ அவள் சொன்ன செய்தி கேட்டு, கண்களை சுறுக்கி, முகத்தினை இறுக்கி நின்றிருந்தான்..
“தெரியும்.. நல்லா தெரியும்.. நீ இப்படிதான் சொல்வன்னு...” என்று வனமாலி பல்லைக் கடித்து வார்த்தைகளை கடித்துத் துப்பினாலும்,
‘நான் இதையும் செய்து காட்டுவேன்..’ என்ற வீம்பு அவனிடம் வெளிப்பட்டது.