அத்தியாயம்: 22
தன்னருகே அமர்ந்திருந்த சமீராவை காதலுடன் பார்த்தான் சமர்த். அவனின் பார்வையில் சிறு வெட்கத்துடன் தலையை குனிந்தாள் சமீரா.
சமர்த் அவளின் கைகளில் சிறு அழுத்தம் கொடுத்து அவளை நிமிர வைத்தான்.
சமீராவும் நிமிர்ந்து அவனை காதலுடன் பார்த்தாள்.
"இப்போ நீ பார்க்கற இந்த பார்வைக்கு, நோக்கு அர்த்தம் புரியறதா மீரா?" என்று மௌனத்தை முதலில் கலைத்தான் சமர்த்.
"ஏன் உங்களுக்கு புரியலையா?" என்றாள் சமீரா சற்றே வெட்கத்துடன்.
அவளின் வெட்கத்தில் சமர்த்தின் முகத்தில் புன்னகை தோன்றியது.
"கீழ விழுந்ததுல எங்காவது வலிக்குதா? ஹாஸ்பிடல் போலாமா?"
"இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நானும் போக மாட்டேன்! உன்னையும் போகவிடமாட்டேன்!" என்றவன் குரலில் அந்த உறுதி நன்றாகவே தெரிந்தது.
"உங்க ஹெல்த் எப்படி இருக்குன்னு முதல்ல தெரிஞ்சிக்கிட்டா தான் எனக்கு திருப்தி! அதான் கேட்டேன்."
"டோன்ட்வொர்ரி!! ஐயம் பர்பெக்ட்லி ஆல் ரைட்!!"
"...."
"என்ன மீரா திரும்பவும் மௌனமா? சரி நீயா பேச போறதில்லை! விடு, நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு!! அதுவே போறும் நேக்கு!" என்ற சமர்த் சிறிது நிறுத்தி,
"ஆத்துல இருக்கறச்ச நேக்கு இந்த பேச்சு வழக்கம் தான் வர்றது." என்றான்.
"பரவாயில்லை சமீர், அம்மா கூட பேசிக்கிட்டே இருந்ததால ஓரளவிற்கு என்னால இப்போ புரிஞ்சுக்க முடியுது." என்ற சமீரா சமர்த்தை பார்த்தாள்.
"பர்ஸ்ட் டைம் என்னை பார்க்கறச்சே கேட்டியே, 'உங்களுக்கு வேற ஏதானும் பேர் இருக்கா?' ன்னு, எப்படி, என்னை முன்னாடியே நோக்கு தெரியுமா?"
'ஆம்!!' என்பதாக தலையை ஆட்டினாள் சமீரா.
"ப்ளீஸ் மீரா உன் மௌனம் என்னை கொல்றது!! போறும் உன்னோட மௌனம், பேசு மீரா!!" என்று சமர்த் கடிந்தான்.
"எனக்கு உங்களை முன்பே தெரியும்?"
"எப்படி தெரியும்?"
"...."
"ம்ச்ச்!! சொல்லு மீரா!!"
"அம்ரு - ஸ்ரீநியை நினைவிருக்கா உங்களுக்கு?"
"ம்ம் இருக்கு!! இப்போ அவாளுக்கு என்ன வந்தது?"
"அம்ரு - ஸ்ரீநி கல்யாணம் அன்னிக்கு தான் உங்களை முதல்ல பார்த்தேன். அதிலும் ஸ்ரீநி உங்களை 'சமீர்' ன்னு சொன்ன போது எனக்கானவர் நீங்க தான்னு முடிவு செஞ்சு உங்களையே பார்த்துகிட்டே இருந்தேன். ஆனா," என்று நிறுத்தினாள் சமீரா.
"ஆனா! ஆனா என்ன ஆச்சு மீரா? சொல்லும்மா!!"
"அ..து, முதல்ல என் கண்கள்ல நீங்க விழறதுக்கே உங்க பேரான 'சமீர்' தான் காரணம். ஏன் என்றால் நான் இஸ்லாமிய குடும்பத்து பெண்! என் பேரு சமீரா!!"
"...."
இப்பொழுது மௌனம் சமர்த்திடம் இடம் பெயர்ந்தது.
அவனுக்கு தான் கேட்டது நிஜம் தானா என்று ஒரு சில நிமிடங்கள் புரியவில்லை. சமீராவை அதிர்ச்சியுடன் பார்த்தான் சமர்த்.
"இதுக்காகத்தான் நான் உங்களை விட்டு தள்ளி போகணும் நினைச்சேன்!"
சமர்த்திற்கு அவளின் ஒதுக்கத்திற்காண காரணம் இப்பொழுது புரிந்தது. ஆனால் அதற்காக அவளை விடவும் முடியவில்லை. மெதுவாக அவளிடம் நகர்ந்து, இடது கையை எடுத்து அவளின் தோளின் மீது போட்டு நன்றாக அணைத்துக்கொண்டான்.
சமீராவிற்கு அவனின் அந்த அணைப்பு ஆதரவாக இருந்ததால், அவன் மார்பின் மீது நன்றாக சாய்ந்துக்கொண்டாள்.
சமர்த் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எப்படி குடும்பத்தில் விரிசல் விழாமல் காதலை காப்பாற்றிக் கொள்வது என்று புரிபடாமலே அமர்ந்திருந்தான்.
இது மிகவும் சென்சிட்டிவான விஷயம், இதில் யாரின் மனமும் புண் படாமல் எப்படி பேசுவது என்பது குறித்தான ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றான் சமர்த். அதில் அவனையும் அறியாமல் சமீராவை அணைத்திருந்த கையை விலக்கினான்.
அவனின் மார்பில் சாய்ந்திருந்த சமீரா, அவனின் அணைப்பு விலகியதால் எழுந்து நிமிர்ந்து அமர்ந்து அவனை 'ஏன்?' என்பதுப் போல் கேள்வியாகப் பார்த்தாள்.
சமர்த் தான் இந்த உலகத்திலேயே இல்லையே!! அவளுக்கு ஆறுதல் தருவதற்காக தான் அவளை அணைத்திருந்தான். ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றதால் மட்டுமே அவளை விலக்கியும் இருந்தான்.
ஆனால் அதை தவறாக புரிந்துக்கொண்ட சமீரா அந்த இடத்தை விட்டு செல்வதற்காக எழுந்தாள்.
அவளின் அசைவில் தன்னுணர்வுக்கு வந்த சமர்த், சமீராவின் முகத்தில் இருந்த அச்சமும், இதற்காக தானே விலகினேன் என்ற சோகமும் சேர்ந்திருந்ததை பார்த்தான்.
முதலில் அவளுக்கு தைரியம் கொடுக்க விரும்பினான். அதனால் அவளின் கையைப் பற்றி தன்னருகே இழுத்தான். அதில் அருகில் இருந்த கட்டிலில் விழுந்தாள் சமீரா.