அத்தியாயம்: 19
சமீரா அவர்களுடனேயே இருக்க ஒத்துக்கொண்டாலும், அவளிடம் சற்று ஒதுக்கம் இருந்துக்கொண்டே தான் இருந்தது.
அதை எல்லோரும் அறிந்திருந்தாலும், எதிலும் அவளை ஒதுக்காமல் அவர்களுடனேயே இருக்குமாறு பார்த்தும் கொண்டனர்.
சமர்த் காவல் துறையினரை சமீராவின் முன்னாலேயே அழைத்து, சற்று கடுமையாகவே நடந்துக்கொண்டான்..
மருத்துவவிடுப்பு முடிவதற்குள் அக்சிடன்ட் செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் பணித்தான்.
அவர்கள் சென்றதும் காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரியை அழைத்து, விக்கி மற்றும் சகாயத்தின் மீது இருக்கும் தன் சந்தேகம் தவறானது.. அதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சமர்த் சொல்வதை சமீரா அமைதியாகவே பார்த்திருந்தாள்..
இந்த நேரத்தில் இந்த முடிவை எடுப்பது தான் சரியான முடிவு என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது..
அடுத்து வந்த நாட்கள் மருத்துவமனையிலேயே கழிந்தது..
அதற்குள்ளாக அந்த அக்சிடன்ட் செய்தது தாங்கள் தாம் என்று யாரோ இருவர் வந்து சரணடைந்ததாக காவல் துறை அறிக்கை சமர்ப்பித்து இருந்தது..
சமீராவிடம் தனியே பேச சமர்த் முயன்றான்..
ஆனால் அதைப் புரிந்துக்கொண்ட சமீரா அந்த சந்தர்ப்பங்களை அறவே தவிர்த்தாள்..
அவளின் நடவடிக்கையைப் பார்த்து சமர்த்தை சமாதானம் செய்த கோவிந்த், கூடிய விரைவிலேயே அவளைப்பற்றி தெரிந்து சொல்வதாக உறுதி அளித்தான்..
உடல்நிலை சற்றே தேறியதும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டான் சமர்த்..
வீட்டினுள் நுழையும் போதே கண்ணன் மாமா வந்தது அவனின் மனதிற்கு இதமாக இருந்தது. அதை அவரிடம் சொல்லவும் செய்தான்..
"சமர்த்தா! உன் அம்மா ரொம்ப கவலை பட்டுண்டு இருக்கா! அப்பாக்கும் சித்த உடம்புக்கு முடியல வேற, அது வேற உன் அம்மாக்கு மனச போட்டு படுத்திண்டு இருக்கு. ரெண்டு பேருமே உன்னை பார்க்க தவிச்சுண்டு தான் இருக்கா.. அநேகமா அடுத்த மாசம் வருவா போல இருக்கு.." என்று சமர்த்தின் தலையை தடவி விட்டவாறே கூறினார் கண்ணன்.
அவரின் கைகளைப் பற்றியபடியே "அம்மாட்டயும், அப்பாட்டையும் பேசறேன் மாமா.. அவாளுக்கு தைரியம் சொல்றேன்.." என்றான் சமர்த்..
"சித்தப்பா இவன் கூட பேசிண்டே இருந்தா போதுமே உங்களுக்கு, பொழுது போறதே தெரியாதே!" என்று கண்ணனை கேலி செய்தான் கோவிந்த்.
மூவரும் இணைந்து நகைத்தபடியே இருந்ததை கவனித்தும், கவனிக்காத மாதிரி உள்ளே நுழைந்தாள் சமீரா.
"சுமி! மீரா வரா பாரு! அவளுக்கு காபி கலக்கறச்ச நேக்கும் சேர்ந்து கலந்துடு." என்ற கிருஷ்ணனைப் பார்த்து லேசாக முறுவலித்தாள் சமீரா..
வீட்டிற்குள் நுழைந்த மீராவை பார்த்த கண்ணனுக்கு மனதெல்லாம் பாரமாக இருந்தது.. பவித்ராவின் முக ஜாடையில் சமீரா இருந்தாலும், கண்ணனுக்கு வயதாகி விட்டபடியால் அவரால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போனது.
'மீரா' என்ற பெயரே அவரின் மனதை அழுத்தியதால் மிகவும் பாரமாக உணர்ந்தார்.
அவரின் மன உணர்வுகளை குழந்தையிலிருந்தே புரிந்துகொள்பவன் சமர்த். இப்பொழுதும் சரியாக அவரைப் புரிந்துக்கொண்டவன், அவரின் மன பாரத்தை குறைக்க எண்ணினான்.. அதனால்,
"மீரா, இது என்னோட கண்ணன் மாமா!" என்று அறிமுகப்படுத்தினான் சமர்த்.
அவரின் அருகில் சென்று லேசாக முறுவலித்தாவாறே கை கூப்பி வணங்கி, "நான் மீரா!" என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாள் சமீரா.
அவள் 'சமீரா' என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள மறந்தாளோ, இல்லை 'மீரா' வாகவே இவர்களுடன் இருக்க நினைத்தாளோ அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.
கண்ணன் பதிலுக்கு வணக்கம் வைக்காமல், "நன்னா இரும்மா ராஜாத்தி!" என்று அவளின் தலையை லேசாக தடவி விட்டவாறே கூறினார்..
அவரின் கைகளின் நடுக்கத்தை உணர்ந்த சமீராவிற்கு தன் தந்தை இப்ராஹீம் தான் நினைவிற்கு வந்தார்.
சில நேரங்களில் எதையோ நினைத்து அமர்ந்தவாரே இருக்கும் இப்ராஹீமின் அருகில் அவள் உட்கார்ந்ததுமே இதே போல லேசாக தலையை தடவி கொடுப்பார்.. அப்போது அவர் கைகளின் நடுக்கத்தை உணர்ந்திருக்கிறாள்..
இப்பொழுது கண்ணனின் கைகளில் இப்ராஹீமை உணர்ந்தாள்..
அவளைப் பொறுத்தவரை, இப்ராஹீமே பெற்ற தந்தை!!
விதி வசத்தால் நிஜ பெற்றோரை இழந்து நிற்கும் அவளுக்கு, அவள் நிஜ தந்தையின் கைகளில் வளர்ப்பு தந்தையை உணர்ந்தது இறைவனின் க்ருபையோ!!
கண்ணனைப் பார்த்து லேசாக முறுவலித்தவள் அவரிடம் விடைபெறும் நோக்கத்துடன் தலையை ஆட்டி சுமித்ராவிடம் சென்றாள்.
அவள் கண்களில் துளிர்த்த நீர் சமர்த்தின் இதயத்தில் உதிரமாக இறங்கியது..
மீரா இப்படி அவளையே தனிமைப் படுத்திக் கொள்கிறாளே! என்று வருத்தமும் சேர்ந்து அவனின் இதயத்தை அழுத்தியது..
சமர்த்தின் குடும்பத்தினரை விட்டு தள்ளி நிற்க வேண்டும் என்று தான் நினைக்கிறாள் சமீரா, ஆனால் ஓவ்வொருவரும் காட்டும் பாசத்தில் தள்ளி நிற்க திணறி தான் போகிறாள்.
இப்பொழுது கண்ணனின் கண்களில் ஒரு வித சொந்தத்தை உணர்ந்தது போல் முதல் முறை கோவிந்தை பார்க்கும் போது அதே வித உணர்வு வந்ததும் அவளின் நினைவிற்கு வந்தது..
சமையலறையில் இருக்கும் சுமித்ராவிடம் செல்லுவதற்கு முன் சற்று திரும்பி கோவிந்தையும், கண்ணனையும் பார்த்தாள்.. அதே வித உணர்வு அவளை ஆட்கொண்டதும், ஒரு பெருமூச்சுடன் சமையலறையினுள் புகுந்தாள்..
அவள் செல்லும் வரை அவளையே பார்த்திருந்த சமர்த், 'தன்னை தவிர மற்ற எல்லோரையும் பார்க்கிறாள்.. இப்படியே பண்ணிட்டு இருந்தான்னா அவளை இழுத்து பிடித்து இறுக்கி அணைத்து காதலை சொல்லிவிடவேண்டியது தான்!!' என்று மனதினுள் பேசிக்கொண்டான்.
அவனிடமும் ஒரு பெருமூச்சு எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
"என்ன மீரா, போன காரியம் எல்லாம் ஆயிடுத்தா?" என்று கேட்டார் சுமித்ரா.
"ம்ம் ஆச்சும்மா!" என்றவளின் குரலில் சற்றும் சுரத்தே இல்லை என்பதை புரிந்துக்கொண்டார் சுமித்ரா.
"இப்போ என்னத்துக்கு இந்த சோகம்?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா!"
"ஒண்ணும் இல்லாம இருந்தா சரி தான். நாங்கெல்லாம் இருக்கோம்டிம்மா கவலை பட்டுண்டு நிக்காம, சின்ன பொண்ணா, லட்சணமா, சந்தோஷமா நீ இந்த ஆத்துல வலம் வரணும்.. சரியா மீரா பொண்ணே!!" என்று அவளின் மோவாய்கட்டையில் கை வைத்து கொஞ்சினார் சுமித்ரா.
அவரின் அன்பில் சமீராவின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை எட்டி பார்த்தது..
சுமி மாமியிடம் மட்டும் புன்னகைக்கும் மீராவைப் பார்த்து பொறுமியபடியே அங்கே வந்தான் சமர்த்.. கையில் ஊன்றுகோல் பற்றியபடியே நடந்து வந்ததால் முகத்தில் வலியின் வேதனையும் தெரிந்தது..
"மாமி உங்க கிட்ட மட்டும் தான் புன்னகை!!" என்று பொதுவாக சொன்னான்.
"சமீர் ஏண்டாப்பா இப்படி உடம்ப படுத்திக்கற? உள்ள போய் சித்த படுத்துக்கோ.. இட்லி ஆன விட்டு மீரா கொண்டு வந்து தருவா!" என்றார் சுமித்ரா..
அதில் சமர்த்தின் முகத்தில் ஒளி தெரிந்ததை சமீரா கண்டுக்கொண்டாள்.
மனதில் 'நான் கண்டிப்பா எடுத்துக்கிட்டு போக கூடாது!' என்று முடிவு செய்தாள் சமீரா.
"சரி மாமி! சும்மா படுத்துண்டே இருக்கறது என்னமோ மாறி இருக்கு.. அதான் நடக்க ட்ரை பண்ணினேன். இட்லியை கொடுத்து விடுங்கோ.." என்று சொன்ன சமர்த் மெதுவாக நடந்து சென்றான்..
தன் அறைக்கு சென்ற சமர்த் சமீராவின் வரவிற்காக காத்திருந்தான்..
முப்பது நிமிடங்கள் கழிந்து, இட்லியை எடுத்து வந்தான் கோவிந்த்.. அவன் பின்னால் வருகிறாளா? என்று கோவிந்தின் பின்னே எட்டி பார்த்தான்..