*16*
முத்தம் கூட வேண்டாம்!
முத்தம் கூட வேண்டாம்!
உன் அருகாமையில் கிடைக்கும் மூச்சுக்காற்றின் வெப்பம் போதும்!!!
ஷங்கரின் பேச்சுக்கு பின்னே, மொத்தமாய் ஒடுங்கி போய் தன் அறையோடு அடங்கியிருந்த தங்கத்தை கண்டு பேரின்பனுக்கு மனம் வலித்தது. அவன் சிறு வயதாய் இருக்கும்போது வெளியே அழைத்து செல்லும்படி தங்கத்தை அவன் வேண்டும்போதெல்லாம் சிறு விசும்பலோடு, ‘அத்தைக்கு கால் வலிடா கண்ணா! நீ நம்ம தோட்டக்கார அண்ணாக்கூட போறியா?’ என அவன் மனம் வருந்தக்கூடாது என கேட்பவரை கண்டு அப்போது அவனுக்கு என்ன புரிந்ததோ, ‘வேனாத்தே! நான் உனக்கு கால் அமுக்கி விடுறேன், அழாத! சரியாபோய்டும்’ என்று தன் பிஞ்சுக்கரங்களால் தங்கத்தின் கண்ணீர் துடைப்பவனை வாரி அணைத்துக்கொள்வார் அவர்.
வயது ஏறும்போது கண்ணில் கண்டிருந்த காட்சிக்கெல்லாம் அர்த்தம் புரிந்து, தவறு யார் மீது என அறிந்தவன், தங்கத்தை வீட்டோடு முடங்கி போக காரணமாயிருந்த செல்லம், ஷங்கரின் மீது கட்டுக்கடங்காத கோவம் பெருகியிருந்தது. இத்தனை வருடங்கழித்து வீட்டிருக்கு விஜயம் செய்தவர்கள், வீட்டிற்க்குள்ளேனும் சுதந்திரமாய் இருந்தவரை இப்போது அறையை விட்டுக்கூட வெளிவராமல் செய்துவிட, அவனுக்கு கோவத்தை யார் மீது காட்டுவது என்றே பிடிபடவில்லை.
அன்று அவன் கொண்டிருந்த சினத்திற்க்கு ஷங்கரை, எப்படி கை நீட்டி அடிக்காமல் விட்டான் என்றே இன்பன் இப்போது வரை சிந்தித்து அதிசயித்துக்கொண்டிருக்கிறான். மீண்டுமொருமுறை அவர் அப்படி பேசினால் கூட இன்பனின் கையால் அவர் கன்னம் பழுப்பது உறுதி!!
காரணமின்றி கோவம் கொள்வதும், அதை வேறோருவர் மீது காட்டுவதும் இன்பனுக்கு இயல்பிலேயே இல்லாத ஒன்றானதால் தான், ஷங்கர் செல்லத்தின் மீதான கோவம், கோகிலாவின் மீது இறங்காமல் இருக்கிறது. அதுவுமின்றி, இன்பன் கோகிலாவின் உறவே ‘உன் பெற்றோரை நமக்கிடையில் கொண்டு வரக்கூடாது’ என்ற ஒப்பந்தத்த்தோடு தானே முளைவிட்டது!? அதனால் ஷங்கரின் பேச்சுக்காக இன்பனிடம் வருத்தம் தெரிவிக்க முடியாத நிலையில் நின்றாள் கோகிலா. அப்படியே அவள் சென்று பேசினாலும், ‘உனக்கும் இதுக்கும் ஏதாது தொடர்பு இருக்கா? இல்ல தானே? அப்போ ப்ரீயா விடு’ என்பானே ஒழிய, ‘உன் தந்தை பேசியது கொஞ்சமும் சரியில்லை’ என உரிமையாய் அவளிடம் பொங்க மாட்டான்.
கோகிலாவிற்கு மனம் உறுத்தலாகவே இருந்தது. வீட்டில் உள்ள யாருமே அவளிடம் விகல்பம் காட்டாது நடந்துக்கொள்ள, தங்கத்திடம் மட்டுமாவது தன் தந்தையின் சார்பில் மன்னிப்பை வேண்ட வேண்டும் என எண்ணியவள், அவர் அறைக்கு சென்றாள்.
கையில் ஒரு நாவலை வைத்து வாசித்துகொண்டிருந்தவர், கோகிலா வந்ததை கண்டு, “வா கண்ணு!” என்றார் வாஞ்சையாய். அவளுக்கு இன்னுமே துன்பமாய் போனது. கபடம் இல்லா மனுஷியிடம் துவேஷம் காட்ட தன் தந்தைக்கு எப்படி மனம் வந்ததோ? என மருகிப்போனாள்.
“சாப்பிட்டியாடா?” என்ற அவர் கேள்விக்கு அவள் தலை ‘ஆம்’ என அசைந்தது.
“சித்தி....!!” மெல்ல தொடங்கியவள், “எனக்கு அந்த பட்டம்மா சமையல் பிடிக்கவே இல்லை சித்தி! உவேக்கா இருக்கு” என்றாள் முகத்தை அஷ்டகோணலாய் காட்டி.
புருவம் நெரித்து சன்னமாய் சிரித்தவர், “அப்படியா? அதான் காலைல ஐஞ்சு சப்பாத்தியோட எழுந்துட்டியோ?” என்று கேட்டிட, ஆடு திருடியவன் போல அகப்பட்டுவிட்டதில் முழித்தாள் கோகிலா.
“அது...அது... சரியா சாப்பிடலன்னா உடம்பு கெட்டுடும்ல? அதான் கஷ்டப்பட்டு சாப்பிட்டேன்!!” என்று சமாளித்ததோடு, “எனக்கு உங்க சமையல் தான் ரொம்ப பிடிச்சுருக்கு சித்தி” என்றாள்.
பதில் சொல்லாமல் புன்னகித்தவர், நாவலுக்குள் முகத்தை கொண்டு செல்ல, “சித்தி? இனி நீங்களே சமைங்களேன்!? ப்ளீஸ்!!!” என்றாள் முகம் சுருக்கி.
தலை நிமிர்த்தாமல் விரக்தியாய் சிரித்த தங்கம், “எனக்கு மனசு சரியானதும் நானே கிச்சனுக்கு வரேன், அதுவரைக்கும் பொறுத்துக்கோ ராஜாத்தி” என்றார் தன்மையாய்.
அவரே தொடங்கி வைத்ததும் வேகமாய், “சித்தி, சித்தி... அப்பா பேசுனதுக்காக நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன் சித்தி ப்ளீஸ்! அப்பா இப்படி பேசுற ஆளே இல்லை! எனக்கே ஷாக்கிங்கா இருந்துச்சு!!” என்றிட, அவரது விரக்தி புன்னகை தொடர்ந்தது.
“உங்களுக்கு அவர் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு சித்தி! இத்தனை நாளும் அதுக்காக வருத்தப்பட்டு தான் என்கிட்டே பேசிருக்கார். ஆனா அன்னைக்கு மட்டும் ஏன் அவர் அப்படி பேசினாருன்னே எனக்கு தெரியல!! ஐ பீல் ரியலி சாரி பார் யூ!!!!” என்றாள் தங்கத்தின் கரங்களை பற்றிக்கொண்டு.
“பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்லுவாங்க! இங்க நாரோட சேர்ந்ததால பூவும் நாருது!!” என்ற தங்கத்தை புரியாது பார்த்தவள், “என்ன சொல்றீங்கன்னு புரியல சித்தி” என்றாள்.
கசப்பான முறுவலோடு, “எனக்கு உங்க அப்பா செஞ்சதை விட, என் கூடவே பொறந்த உங்க அம்மா செஞ்சது தான் மன்னிக்க முடியாத துரோகம்!! சின்ன வயசுல இருந்தே எல்லாத்துலையும் பயங்கர பிடிவாதம், நான் ஆசைப்படுற எல்லாத்துக்கும் பங்குக்கு வருவா! கல்யாண விஷயத்துலயும் இப்படி செய்வான்னு தெரிஞ்சுருந்தா கண்டிப்பா நானே விட்டுக்கொடுத்துருப்பேன்!” என்றார் தங்கம். அவர் கரத்தை ஆதரவாய் அழுத்திய கோகிலா வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தாள்.
“மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நிக்குறதை விட, எனக்கு பார்த்த மாப்பிள்ளையை என் தங்கச்சியே கட்டிக்கிட்டு வந்து நிக்குறது எத்தனை பெரிய அதிர்ச்சியா இருந்துருக்கும் எனக்கு? அந்த நிமிஷம் வாழ்க்கையே வெறுத்துடுச்சு!! மனசுல விழுந்த ரணம் போக முழுசா அழக்கூட விடாம என் அத்தை மகனுக்கு அப்போவே என்னை கட்டிவச்சாங்க! அவர் முகம் மனசுல பதியறதுக்குள்ள மகராசனா போய் சேர்ந்துட்டாரு!” என்றவர் அடக்கிய தேம்பலோடு, “அதுக்கு பின்னாடி ஊருல எல்லாருமே ‘ஐயோ பாவம்’ன்னு என்னை பரிதாபமா பார்க்குறதை என்னால தாங்கிக்கவே முடியல! என் மூஞ்சிக்கு நேரே என்னை அதிர்ஷ்டக்கட்டைன்னு சொல்லலன்னாலும் முதுகுக்கு பின்னாடி பேசுறது எனக்கு தெரியாமையா இருக்கும்?! பிடிமானம் இல்லாம இருந்தப்போ தான், இன்பன் கிடைச்சான், கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்! இன்னமும் அவனுக்காக தான் இருக்கேன்!!” என்றார் பெருமூச்சோடு.
“நீங்க இந்த வீட்டுக்கு வரவே கூடாதுன்னு இன்பனும் காண்டீபனும் என்ன ஆட்டம் கட்டுனானுங்க தெரியுமா? அத்தனையும் சமாளிச்சு உங்களை வரவைச்சோம்! எனக்காக கூட பார்க்க வேணாம்! எங்கம்மா அப்பாக்காக உங்கப்பா பொருத்து பேசிருக்கலாம்ல?” தங்கம் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்ட இடம் கிடைத்ததும் கொட்டிவிட, செய்வதறியாது இருந்தாள் கோகிலா. தங்கத்திடம் இப்படி ஒரு எதிர்வினையை அவள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இவ்வளவு கூட பேச வருமா? என வியந்தே போனாள்.
ஒருகட்டத்தில் தங்கம் பேச்சை நிறுத்தி அமைதியானதும், கோகிலா மெதுவாக, “நீங்க முன்னமாறி இருங்களேன் சித்தி! இப்படி ரூம்க்குள்ளவே இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!!!” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.
“ஹும்ம்!!” ஆழ மூச்செடுத்த தங்கம், “எனக்கு மனசு இன்னும் ஒப்பல கண்ணு, என்னை ஒரு வேலைக்காரின்னு சொல்லாம சொல்லிட்டாங்க உங்கப்பா!” அவர் சொல்ல, “அவர் சொன்னதுக்காக நீங்க இப்படி அடைஞ்சு கடக்கனுமா சித்தி? உங்களுக்கு சமைக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம் தானே? உங்களுக்கு பிடிச்சதை நீங்க செய்யுங்க!!” கோகிலா சொன்னதும், “கொஞ்ச நாள் போட்டும்!” என்று முடித்து விட்டார் தங்கம்.
‘ஓகே சித்தி’ என எழுந்து சென்றவளை, “கோக்கிமா?” என அழைத்த தங்கம், “நீ அடிக்கடி இன்பனை பார்க்க போற போலிருக்கே?” என்று நேரிடையாய் கேட்டுவிட சற்றும் எதிர்ப்பார்க்காத கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினாள் கோகிலா.
“நீ நிச்சயம் முடிஞ்சு கல்யாணத்துக்கு நிக்குற பொண்ணு! ஊர் வாயில விழாம நடந்துக்கோ!!” என்றவர் கண்களில் கனிவையும் தாண்டிய கண்டிப்பு தென்ப்பட்டதை போல தோன்ற, திகைத்து நின்றவள், ஒருவாறாய் சமாளித்து, “என் மனசு தப்புன்னு சொல்ற எதையும் நான் செய்யமாட்டேன் சித்தி! அப்படி என் மனசு சரின்னு சொல்றது ஊருக்கு தப்புன்னு பட்டா அதுக்காக நான் கவலைப்படவும் மாட்டேன்!!” திண்ணமாய் சொன்ன கோகிலா அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இதே வரிகளை அவள் மீண்டும் ஒருமுறை கண்ணீரோடு சொல்ல வேண்டிய நாள் விரைவில் வருமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
பேரின்பனுக்கு கோகிலாவின் திடீர் மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ‘என்னைதான் கட்டிக்குவேன்னு’ சவால் விட்டவ, எப்படி உடனே மனசு மாறுனா? இனி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு உங்ககிட்ட கேட்கவே மாட்டேன்னு சொன்னாளே? அதுக்கு என்ன அர்த்தமாம்?
‘குரங்கை நினைத்து மருந்தை குடிக்காதே’ என்ற கதையாய் அவளை நினைக்கக்கூடாது என்று முடிவு செய்தததும் தான் அவள் எண்ணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன இன்பனிடத்தில்.
அடுத்தவர் கை பொம்மையாகவே வாழும் தன் வாழ்க்கையை எண்ணி வெறுத்துப்போனான். கோகிலாவை கரம் பிடிக்க முடிவு செய்துவிட்டால், அதை நிகழ்த்த அவனுக்கு ஒரு நிமிடம் மிகையாகாது. இருப்பினும் அவன் மனம், தன் ஆசையை மட்டும் பாராது, உற்றார் உறவினர் என்றே யோசிக்கிறதே!?
சில நாட்கள் வீட்டில் தங்கியதற்கே கல்லென இருந்த தாத்தாவை ஆஸ்பத்திரியில் படுக்க வைத்துவிட்டனர் ஷங்கரும் செல்லமும். இதில் அவர்கள் பெண்ணையே மனம் முடித்தால், உதற முடியாமல் உறவு பிணைந்துவிடுமே!? பிற்க்காலத்தையும் சேர்த்து யோசித்தனான் இன்பன்.
‘ஒருவேளை நான்தான் அதிகம் யோசிக்குறேனோ? அதிகமாய் சிந்தித்து அவளை இழந்து விடுவேனோ?’ இப்படியும் தோன்றியது அவனுக்கு.
திக்கு தெரியா காட்டில் கண்ணை கட்டி விட்டதை போல ஆயாசமாய், கலக்கமாய், ஆவேசமாய் அவன் நொடிக்கு நொடி உணர்வு பிடியில் சிக்கித்தவிக்க, உடலை விட மனம் அதிகம் அசந்தது. ஒரு வார்த்தை பேசினால் கூட போதும், எதிரே இருப்பவரை கடித்து குதறிவிடும் கண்மண் தெரியாத உணர்வு!!
எங்கேனும் அமைதியான, தொந்தரவில்லாத இடத்திற்கு சென்றுவிடலாம் என்றே மனதில் உழன்றுக்கொண்டிருக்கிறது ஓர் எண்ணம்! அவன் இல்லாவிட்டாலும் நிச்சயிக்கப்பட்ட கோகிலாவின் திருமணம் நடைபெறும் தானே!? அவ்வெண்ணம் மேலும் பிரளயமெடுக்க, சரியாய் அந்நேரம் காதுக்குள் ஒலித்தது அந்த குரல்....!!
சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்பட்டு, அப்பா, தம்பியின் அவமதிப்புக்கு பழக்கப்பட்டு, தன் உணர்வுகளை வெளிப்படையாய் கொட்ட முடியாது அடங்கி, உரிமையான இடத்தில் முதலாளியாய் இல்லாது அடிபணிந்து அவன் நிற்க காரணமான குரல்...!!
“இன்பா கண்ணா!!! நீ தான் இனி உன் தம்பியை பார்த்துக்கனும்டா! அவனை விட்டு எங்கயும் போய்டாத! அவன் திட்டுனாலும் அடிச்சாலும், அவன் இனி உன்னோட பொறுப்பு!! அம்மாக்காக இதை செய்வியாடா? உன் தம்பிக்கு எப்பவும் நீ துணையா இருப்பியாடா?”
தன்னால், தனக்காக உயிர் விட்ட அன்னையின் குரல்!!! இப்போதும் அவன் செவிகளில் ரீங்காரமிட்டது. ஊமையாய், ‘அம்மா!!!! நான் சாய்ந்துக்கொள்ள உன் தோள் வேணும்மா! என்னால இங்க முடியல!!’ கண்மூடி மானசீகமாய் அழைத்தான் அவன் அன்னை வைதேகியை.
வெள்ளாமைக்காக வயலை உழுது தயார்ப்படுத்த வேண்டி கடந்த பத்து நாட்களாய் மில்லுக்கு செல்லாமல் இருந்தவன், இன்று வயல் வேலை முடிந்ததும், மில்லை பார்க்க சென்றான். அங்கே போகாமல் இருந்தாலும் மில்லிற்கு வந்த சரக்குகள், ஏற்றுமதிகள் சார்ந்த விவரங்கள் அனைத்தும் அவன் செவிகளில் ஏற தவறவில்லை.
தன் வேலையை எப்போதும் போல இன்பன் தொடங்க, அவன் உடன் இருந்த கிளிகளை நோக்கி வந்தார் அவர்களின் ஆஸ்த்தான கணக்கர் ஜோதிலிங்கம்.
“என்ன தம்பிங்களா? இன்னைக்கு தான் மில்லுக்கு வழி தெரிஞ்சுதா?” சூடாக அவர் கேட்க, இன்பன் குறுக்கே வரவில்லை. தன் வேலையை தான் தொடர்ந்தான்.
கிளிகளோ, “இன்பா அண்ணே வயலுக்கு வேலைக்கு போனாரு, அதான் நாங்களும் போயிருந்தோம்!” என சொல்ல, “இதெல்லாம் அவரோட சொத்து, ஒரு நாளைக்கு ஒரு இடம்ன்னு அவர் போகலாம்! சம்பளம் எதிர்ப்பார்க்க மாட்டாரு! உங்களுக்கு எப்படி வசதி?” என கேட்க, அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல், “இனி ஒழுங்கா வரோமுங்க!” என்று முடித்துக்கொண்டனர்.
அவர் அந்த பக்கம் சென்றதுமே, “ஏன்னே? எங்கள அந்த நாளு நிக்க வச்சு கேள்வி கேக்கான், நீ ஒரு வார்த்தை கூட பேசாம நிக்குற?” உரிமையாய் கேட்டான் பச்சைக்கிளி.
உணவு விடுதி ஒன்றுக்கு அனுப்ப வேண்டிய அரிசி மூட்டைகளை சரி பார்த்தபடியே, “உங்களை தானே கேள்வி கேட்டாரு!? இதுல நான் என்னத்துக்கு குறுக்க வரணும்?” என்றான் அசட்டையாய்.
“உனக்காக தானே வந்தோம்?” இது வெட்டுக்கிளி.
அவன் அப்படி சொன்னதும் அவர்களை நோக்கி திரும்பிய பேரின்பன், கண்களில் கனல் கக்க, “நான் கேட்டேனா? என்கூட வாங்கன்னு நான் கூப்பிட்டேனா? கொஞ்சம் இடம் குடுக்கவும் உரிமை எடுத்துக்கிட்டீங்க? தொலைச்சுடுவேன் பாரு!!” ஆள்காட்டி விரல் சுழற்றி அவன் மிரட்ட, அரண்டு போன கிளிகள், “என்னானே ஆச்சு உனக்கு? இப்படியெல்லாம் மூஞ்சி காட்ட மாட்டியே?” என்றான் பச்சைக்கிளி அழும்குரலில்.
இன்பன் மீண்டும் திரும்பிக்கொண்டான். அவன் இடக்கை சுளீரென அவன் நெற்றியில் அடித்துக்கொண்டது. தலையை இடவலமாக ஆட்டினான். மனதின் அழுத்ததை காற்றாய் மாற்றி அவன் ஊதித்தள்ளிவிட்டு, வேலையில் கவனம் வைக்க முயல, “உன் அத்தை மவ வந்ததுல இருந்தே நீ ஒரு மார்க்கமா தான் இருக்கன்னே?” என்றான் வெட்டுக்கிளி. ‘உண்மை சுடும்’ என கேள்விப்பட்டிருக்கிறான் இன்பன். ஆனால் முதல்முறை சூடு வாங்கியதில் மனம் வலியை காட்ட, “வாயை மூடுங்கடா” என உறுமினான்.
“இல்லண்ணே, அந்த புள்ள உன்கிட்ட ஒருமாறி பேசுது, எங்கனகிட்ட ஒருமாறி பேசுது!!” பச்சைக்கிளி அவள் பொய் சத்தியத்தை பற்றி சொல்ல வர, “நீங்க போறீங்களா? இல்ல நான் போகவா?” என பெரும்குரலில் கத்தினான் இன்பன்.
சுற்றி இருந்த ஆட்கள் கூட வேலையை விட்டுவிட்டு இன்பனை அதிசயம் போல பார்த்தனர். கண்ணாடி அறைக்குள் இருந்த காண்டீபனும் இன்பனின் முகமும் உடலும் காட்டும் கோவத்தின் சாயலில் அதிசயித்து வெளியே வந்தான்.
“ஏன் அண்ணே கோவமா இருக்கீங்க? ஏதாது மேலுக்கு நோகுதா?” இன்பனின் மீதுள்ள பிரியத்தில், வெட்டுக்கிளி அப்போதும் நகராது கேட்க, சூழ்நிலை உரைக்க அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்து சென்றான் பேரின்பன்.
அவனை பின்தொடர போன கிளிகளிடம், “ஏய்!! அவனை தனியா விடுங்க!!” என்ற காண்டீபனின் கணீர் குரல் ஆணை பிறப்பிக்க, ‘அண்ணே, கோவப்பட்டப்போ இந்த ‘காண்ட’ பார்த்த மாறியே இருந்துச்சுடா!!’ என்று முணுமுணுத்த பச்சைக்கிளிக்கு,
‘சேர்வாரோட சேர்ந்தா சினைக்கழுதையும் பரதேசம் போகும்’ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும்! காண்டீபன் அண்ணன் கூட பேசாதன்னா கேக்குதா நம்மண்ணே!?” என புலம்பினான் வெட்டுக்கிளி.
மில்லின் வாயிலில் இரண்டு பெரிய கார்களின் வரவை கண்ட காண்டீபன் அதில் இருந்து இறங்கியவர்களை கண்டு புருவம் சுருக்கினான். வெள்ளை வேட்டி சட்டையில் பத்து பேருக்கு குறையாமல் ஆட்கள் வந்திறங்கினர். மில்லை ஒருமுறை கண்களாலேயே அளவெடுத்துவிட்டு இவனை நோக்கி அவர்கள் வர, அதில் அவனுக்கு பரிட்சயமான ஒருவர் முன்வந்து, “உங்ககிட்ட பேசணும்!” என்றார் சற்றே திமிராய்.
காண்டீபன் ஒருமுறை தன் கண்களை சுழல விட்டான். பார்வை வட்டத்திற்குள் இன்பன் தென்ப்படுகிறானா என தேடியவன், அவன் இல்லை என்றதும், சிறு தலையசைப்பை மட்டுமே அவர்களுக்கு வரவேற்ப்பாய் கொடுத்து முன்னே செல்ல, அவனை பின்தொடர்ந்தனர்.
தன் அறைக்கு சென்றவன் சுழலும் நாற்காலியில் சுவாதீனமாய் அமர, அங்கிருந்த மூன்றே நாற்காலிகளை கண்டு முகம் இடுகினர் வந்திருந்தோர். ஜோதிலிங்கம் வெளியில் இருந்தே சைகையில், ‘நாற்காலிகள் கொண்டு வரவா?’ என கேட்டிருக்க, “தேவையில்லை” என உரத்த குரலில் பதில் சொன்னான் காண்டீபன். அவர் கேட்டதும் இவன் மறுத்ததும் வந்தவர்களுக்கு தெரியாமல் இல்லை.
“உட்காருங்க” என அவன் வாய்நிறைய சொல்ல, முக்கியமான மூவர் மட்டும் அமர்ந்தனர். அறையின் கதவை சாற்ற முடியாத அளவுக்கு ஆட்கள் சூழ்ந்திருந்தனர் அவன் அறையை.
“சொல்லுங்க என்ன விஷயம்?” காண்டீபன் நிதானமாய் கேட்க, “தம்பி இனிமே எங்களுக்கு ஆர்டர் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களாமே?” என்றார் நடுவே இருந்தவர்.
“நீங்க யாருன்னே சொல்லாம பேசுனா எப்படி?” அவனது கேள்வியில் வந்தவனின் பிபி ஏறியது. “எங்களை யாருன்னு தெரியாதோ?” என்று உறும, “சொன்னா தெரிஞ்சுக்குறேன்!” என்றான் கூலாய்.
“கர்ணன் ஆசுரமத்தோட நிர்வாகி நான்தான்!! எங்க ஆசுரமத்துக்கு இனிமே அரிசி மூட்டை லோட் அனுப்ப முடியாதுன்னு சொன்னியாமே?” கொஞ்சமும் மரியாதையின்றி ஒருமையில் அவன் பேச, காண்டீபனுக்கு ரத்த நாளங்கள் சூடேற தொடங்கியது.
“ஆமா சொன்னேன்!!” அசால்ட்டாய் தோள் குலுக்கியவன், “ஆதரவில்லாத குழந்தைங்களுக்கு செய்யுற சேவகமா நினைச்சு தான் கொள்முதல் விலைக்கே ஒரு பைசா லாபம் கூட இல்லாம அரிசி மூட்டை கொடுக்க சொல்லி என் அண்ணன் ஏற்ப்பாடு செஞ்சான்!!” அவனை மீறி பேச்சில் ‘என் அண்ணன்’ என வந்திருந்ததை அவன் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
“ஆனா நீங்க, குழந்தைகளுக்கு அரசாங்கம் இலவசமா கொடுக்குற அரிசில சாப்பாடு போட்டுட்டு, நாங்க கொடுக்குறதை நீங்க தனியா நடத்திட்டு இருக்க ஹோட்டலுக்கு உபயோகப்படுத்துறீங்க? உங்க லாபத்துக்கு நாங்க ஏன் எங்க லாபத்தை குறைச்சுக்கனும்? அதான் இனிமே லோட் வராதுன்னு சொல்லிவிட்டேன்!!” என்றான் திடமாய்.
“ஏய்... தேவையில்லாத விசயத்துல எல்லாம் நீ மூக்கை நுழைக்காத புரியுதா? காசு கொடுக்குறோம், அரிசி மூட்டை இறக்குற! உன் வேலையை அத்தோட நிறுத்திக்க! நாங்க அந்த அரிசிய பிரியாணி ஆக்குனா உனக்கென்ன, வாய்க்கரிசி ஆக்குனா உனக்கென்ன?” என்றான் நின்றுக்கொண்டிருந்த ஒருவன்.
ஐ விரல்கள் மூடி மூச்சை இழுத்து விட்டான் காண்டீபன். வெளியே நின்றாலும் பேச்சு தெள்ளத்தெளிவாய் ஜோதிலிங்கத்தின் காதில் விழுக, பதறிப்போனார் நடக்கப்போவதை எண்ணி!
அங்கிருந்து ஓடியவர், தேடியதோ பேரின்பனை!! அவர் கண்ணில் அவன் சிக்கினால் தானே!!