அலை – 12
வகுப்பறைக்குள் நுழைந்த நேத்ராவால் ஏனோ தனக்குள் உண்டான படபடப்பை தாளமுடியவில்லை. முகமெல்லாம் வியர்வை துளி பூத்திருக்க அமைதியாக வந்து அமர்ந்துகொண்டாள்.
அவளின் இந்த மௌனம் அவளின் தோழிகளை மட்டுமல்லாது அந்த வகுப்பில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்த பின்னும் ஒரு நிலையில் உட்காரமுடியாமல் ஏதோ அவஸ்தையில் நெளிந்துகொண்டே இருந்தாள்.
வகுப்பாசிரியை அன்னலட்சுமியும் இதை கவனித்துக்கொண்டே தான் இருந்தார். ஐந்து நிமிடத்திற்கு மேல் பொறுத்து பார்த்து பின்,
“நேத்ரா ஆர் யூ ஆல்ரைட்...” என கேட்க,
“மேம்...” என தயங்கியபடி எழுந்து நின்றவளிடம் ஒருவித தள்ளாட்டம் தென்பட,
“உனக்கு உடம்புக்கு முடியலையோ? நீ வேணும்னா உன் ரூம் போய் ரெஸ்ட் எடு நேத்ரா...” தானாகவே அவளின் தயக்கத்தை கணித்து கூற விடுதலை உணர்வோடு,
“தேங்க் யூ மேம்...” என்றுவிட்டு யாரையும் நிமிர்ந்து பாராமல் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள் நேத்ரா.
ரோஷிணியிடம் திரும்பிய மலர் என்னவாக இருக்கும் என பார்வையிலையே வினவ ரோஷிணி தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினாள். அவளருகில் இருந்த ராகினியோ,
“எல்லாம் கரெஸ் வேலையா தான் இருக்கும். இப்போ இந்த ஸீன் பார்ட்டி கிளாஸ் முடியாம நாம ஹாஸ்டல் போக முடியாதே...”
அன்னலட்சுமியை பார்த்தபடி ராகினி முணுமுணுப்பாய் கூற அதை கவனித்துவிட்ட அன்னலட்சுமி,
“ராகினி, டோன்ட் ஷவுட். க்ளாஸ் கவனிங்க...” என சப்தமிட,
“ஸீனுக்கு வேற வேலை இல்லை...” மீண்டும் முணுமுணுத்து அன்னலட்சுமியின் அனல் பார்வையை வாங்கிக்கொண்டு வாயை மூடினாள் ராகினி.
ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்த நேத்ராவால் ஒரு நிலையில் இருக்கமுடியவில்லை. தன்னை இந்நிலைக்கு கொண்டுவந்த ரிஷியின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
ஒரு மனம் அவனை அந்நேரம் எதுவும் செய்யமுடியாத கோபமும், ஆற்றாமையும் சேர்ந்து அவளை அலைகழிக்க, மறு மனம் மறவாமல் அவனின் அருகாமையை ஞாபகத்தில் நிறுத்தி அவளை புரட்டிப்போட்டது.
அதை மறக்க நினைத்தாலும் மீண்டும் மீண்டும் விழிகளுக்குள் வலம் வர நேத்ராவிற்கு அழுகை வரும் போல ஆனது.
வேகமாக அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை மொத்தமாக தனக்குள் சரித்தவள் முகத்தை கூட துடைக்காமல் வேகமாக சென்று கட்டிலில் விழுந்தாள்.
தன் முகத்திற்கு நெருக்கமாக இருந்த அவனின் முகம் இந்த நொடியும் இம்சிக்க தன் விழிகளை முடிந்தளவிற்கு இறுக்க மூடிக்கொண்டாள்.
“வேண்டாம், வேண்டாம். நினைக்காதே. அதை நினைக்காதே...” என உள்ளம் உந்த அது முடியாமல் போக தன்னிரக்கத்தில் ஆழ்ந்து போக இருந்தவள் சட்டென விழி திறந்து,
“இல்லை நான் இப்படி ஆகிவிட கூடாது. என்னிடமே அவன் சேட்டையை காட்டுகிறானா? நான் நேத்ரா...” என சிலிர்த்துக்கொள்ள மீண்டும் அவன் முகம்.
“அது என்ன அவனின் கண்களில் தெரிந்த ஒருவித பாவனை?...”
அதை தெரிந்துகொள்ள தானாகவே மீண்டும் அவன் முகத்தை விழிகளுக்குள் கொண்டுவர அதன் தாக்கம் ஏதோ சுழலுக்குள் சிக்குவதை போல மூச்சடைத்தது.
சட்டென சுதாரித்து, “அவன் கண்ணுக்குள்ள என்னவும் இருக்கட்டும். இனி எனக்கது தேவையில்லை. யோசிக்காதே நேத்ரா. அவனை பற்றி யோசிக்கவே செய்யாதே...” தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.
“இவன் செஞ்சது மட்டும் என் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ தெரிந்தது தம்பி தங்கதுரையை ஆளுக்கொரு பக்கமா பிச்செரிஞ்சிட்டு போய்டுவாங்க...”
அப்படி நினைக்கும் பொழுதுதான் சட்டென ஒரு விஷயம் மூளைக்கு எடுத்துக்கொடுக்க, “இதை எப்படி யோசிக்காமல் விட்டேன்?...”
“அதை பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமலே கிளம்பிட்டாங்களே?...” தாய் தந்தையரின் மீது கோபம் கோபமாக வந்தது நேத்ராவிற்கு.
தன் அறைக்கதவை அடைத்து தாழிட்டவள் வேகமாக மொபைலை எடுத்து பாகங்களை பொருத்தி உயிர்பிக்க மொபைல் உயிர்த்தெழும் நேரம் வரை பொறுக்கமுடியாமல் அலைபாய்ந்தாள்.
கொஞ்சமும் நிதானமில்லாத தன்னிலையை அறவே வெறுத்தவள் மொபைலையே வெறித்து பார்க்க அது உயிர்பெற்ற மகிழ்ச்சியில் அவளை பார்த்து கண் அழகாய் சிமிட்டியது.
வேகமாக காண்டேக்ட் லிஸ்ட்டில் தான் தேடிய பெயர் கிடைக்க அதை டயல் செய்தவள் அழைப்பு செல்லும் ஓசை கேட்டு மறுபுறம் கேட்கும் குரலுக்காக காத்திருந்தாள்.
“நேத்ரா...”மறுபுறம் கேட்ட அவனின் ஆழ்ந்த குரல் அவளை கட்டிப்போட,
“அனய்...” மேலும் பேசமுடியாமல் தவிப்போடு குரல் தளுதளுத்தது நேத்ராவிற்கு.
------------------------------------------------------
ரிஷியின் பிடிவாதம் ஏனோ சுமங்கலிக்கு கலக்கத்தையே கொடுத்தது. இந்தளவுக்கு தன் முடிவில் உறுதியாக நிற்பவனை பார்க்க கொஞ்சம் பயமும் தோன்றியது.
பின்னே தன் வீட்டாரிடமும் பெரியவர் துரைச்சாமியிடமும் யார் பேச்சு வாங்குவது?
“ரிஷி நீ அவங்களை எங்க பார்த்த? காலையில கூட நீ இதை பத்தி பேசலையே. இப்போ காலேஜ் டைம். உன் பொறுப்பை மறந்து இப்படி தான் அன் டைம்ல வந்து நிக்கிறதா?...”
கேள்விகளை அடுக்கிய தன் தாயை பார்த்தவன்,
“மாம், ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மீ. எனக்கு அவ வேணும். நேத்ரா வேணும். அவ்வளோ தான். நீங்க தான் எப்படியாச்சும் அப்பா தாத்தாக்கிட்ட பேசனும்...”
உணர்ச்சிக்குவியலாக மாறியவன் அதற்கு மேலும் அங்கிருக்கமுடியாமல் தன்னறைக்கு சென்று மறைந்தான். சுமங்கலி தான் அவ்விடம் விட்டு நகரமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
ரிஷியின் இந்த பரிமாணம் இதுவரை அவர் கண்டிராதது. முதலில் அதிர்ச்சி மேலோங்கி பின் ஆச்சர்ய அலையடித்து பின் கொஞ்சம் கொஞ்சமாக கோபமாக உருவெடுத்தது.
“இவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்?. எல்லாம் இவனா முடிவு எடுக்கிறதா? இவனை...” என நினைத்தபடி வேகமாக எழுந்தவர் மகனை தேடி சென்றார்.
சிவராமன் வந்துவிட்டால் ரிஷியிடம் தெளிவாக பேசமுடியாதே? அதற்குள் அனைத்தையும் கேட்டு தான் தெரிந்து தெளிந்துகொண்டால் கணவரிடமும், மாமனாரிடமும் பேச ஏதுவாக இருக்குமே?
ஆம், சுமங்கலி ரிஷியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்துவிட்டார். மகனின் சந்தோஷத்திற்கு முன்பு அவருக்கு வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை.
ரிஷியின் அறைக்கதவை மெலிதாக இரண்டுமுறை தட்டிவிட்டு உள்ளே வர,
“உங்களுக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். இப்படி பர்மிஷன் கேட்டு வரதை போல கதவை தட்டிட்டு வராதீங்கன்னு. இது ஒண்ணும் அடுத்தவங்க ரூம் கிடையாது மாம். உங்க மகனோடது...” செல்லமாக சுமங்கலியை கடிந்துகொண்டான்.
“யாரோட ரூமா இருந்தாலும் உள்ளே வரப்போ டோர் நாக் பண்ணிட்டு வரதுதான் கட்டர்சி. நான் எப்பவும் அப்படித்தான். இதுல மகனென்ன?. யாரென்ன?...”
ரிஷிக்கு தாய் என்பதை தன் அமர்த்தலான பேச்சில் நிரூபித்தவர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவனையும் அமருமாறு கை காண்பிக்க,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை...” அவரிடம் முணுமுணுத்துக்கொண்டே கழுத்தில் இருந்த டையை தளர்த்தியபடி எதிரே அமர்ந்தான்.
“நீ உன் மாமனாரை எங்க வச்சு பார்த்த?...”தாயின் மாமனார் என்ற விளிப்பில் ஆயிரம் வாட்ஸ் பல்பாக மாறியது ரிஷியின் முகம்.
“மாம் நீங்க நிஜமாவா சொல்றீங்க? ஐ கான்ட் பிலீவ்...” அவனின் சந்தோஷ ஆர்ப்பரிப்பை சன்னமான முறுவலோடு பார்த்திருந்தார்.
“இப்போ சொல்லு. ஏன் இந்த முடிவு...” தனக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்பதை போன்ற தீர்க்கமான பார்வையோடு பார்த்தார்.
பதில் சொல்ல யோசித்தபடி ரிஷி இருக்க,
“பிடிக்கலைன்னு சொன்ன பொண்ணை திரும்ப எங்களுக்கு பிடிச்சிருக்கு, குடுங்கன்னு எப்படி சொல்றது ரிஷி?. இப்படி நினைச்சு நினைச்சு நேரத்துக்கு ஒரு முடிவை மாத்திக்கிற உன்னை எப்படி அவங்க வீட்ல ஏத்துப்பாங்க?...”
சுமங்கலியின் கேள்விகளில் ரிஷிதான் பதில் சொல்ல தள்ளாடி இருக்கவேண்டும். ஆனால் அவன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்,
“மாம் நேத்ரா தான் அவங்க பொண்ணுன்னு எனக்கு அப்போ தெரியாதே?...”என்க,
“என்ன, நீ பொண்ணை பார்க்காமலே பிடிக்கலைன்னு சொன்னியா?...” கோபமாக சுமங்கலி கேட்க,
“மாம் பொண்ணு வந்தா தானே பார்க்க? அதுவும் இல்லாம நான் அவங்க வீட்டுக்கே போகலை. ஒரு ரெஸ்டாரண்ட்க்கு வர சொல்லித்தான் பார்த்தேன். அப்போ நேத்ரா வரலை...” சலிப்பாக சொல்ல,
“நீயாவது விசாரிக்க வேண்டாமா? என்ன பண்ணி வச்சிருக்க ரிஷி?...” என்றார் தலையில் கை வைக்காத குறையாக.