Very nice
NicePart 2
அவளை முதலில் ஸ்கூட்டியில் இருந்த தண்ணீரை வைத்து மயக்கத்திலிருந்து எழுப்ப விழித்தவள் முதலில் ஒன்றும் புரியாமல் திருதிருத்தாள்.
ஷக்தி தள்ளிவிடும் வரை எதிரே வந்த லாரியையும் கவனிக்காமல் ஷக்தியின் முகத்தையும் கவனிக்காமல் ஜன்னல் புறம் திரும்பியவாறே அவனிடம் வாயாடிக்கொண்டிருந்தவள் கண் சிமிட்டும் வினாடிக்குள் திடீரென்று கீழே விழுந்திருந்தாள்.
“என்னாச்சு சேகர் அண்ணா? கௌரவ் எங்க?...” என பார்வையை சுழற்ற அங்கு தங்களது கார் விபத்திற்குள்ளாகி இருந்ததை கண்டதும் உயிரே போய்விட்டது.
“ஐயோ கௌரவ், அண்ணா கௌரவ்க்கு என்னாச்சு?...” பதறியவள் அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது என மனதை திடப்படுத்திக்கொண்டு சேகரின் உதவியோடு எழுந்து காரை நோக்கி சென்றாள்.
அங்கே மயக்கநிலையில் தலையிலிருந்தும் உடல்களில் அங்குமிங்கும் குருதி கசிய மயங்கியிருந்தவனை கண்டு துடித்தவள் தனது மடியில் அவனை தாங்கு உலுக்க ஆரம்பித்தாள்.
“கௌரவ், எழுந்துக்கோ. ப்ளீஸ். இனிமே இப்படியெல்லாம் செய்யமாட்டேன். நீ என்ன சொன்னாலும் கேட்கறேன் கௌரவ். ப்ளீஸ். என்னை விட்டுட்டு மட்டும் போய்டாதே...”
“எனக்கு தெரியும் உன்னால என்னை தனியா விடமுடியாதுன்னு. உன்னை யாருடா என்னை மட்டும் தள்ளிவிட சொன்னது? என்னை அழவைக்க தானே இப்படி செஞ்ச? ப்ளீஸ் கௌரவ். எழுந்துக்கோ. நீ இப்படி இருக்கிறதை பார்க்க என்னால் தாங்க முடியலை...”
அவளது கதறல் அவனது காதுகளில் ஒலித்தாலும் அதற்கு எந்தவிதமான பிரதிபலிப்பையும் அவனால் காட்டமுடியவில்லை. தலையிலிருந்து ரத்தம் வெளியேற வெளியேற அவனது துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
ஆனால் மனதிற்குள் உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன் ஹர்ஷூ என உருப்போட்டுகொண்டே இருந்தான். அவனவளுக்காக தனது உயிரை தக்கவைக்க போராடினான்.
அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர ஷக்தியையும் ப்ருத்வியையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி ஹாஸ்பிட்டல் கொண்டு சேர்த்தான் சேகர். ப்ருத்வி யாரென சேகருக்கு தெரிந்திருக்கவில்லை. ஹர்ஷூவின் கதறல் சேகரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
புருஷோத்தமனுக்கு தகவல் தெரிவிக்காமல தனது நண்பனை அனுப்பி அழைத்துவர சொன்னான். இங்கு வந்து தெரிந்துகொள்ளட்டும் என எண்ணிக்கொண்டான்.
அவர் வந்ததும் பார்த்தது நிலைகுலைந்து வெறித்த விழிகளோடு அமர்ந்திருந்த ஹர்ஷூவை தான். அப்போதே அவருக்கு எதுவோ சரியில்லை என தோன்ற ஆரம்பித்துவிட்டது.
ஹர்ஷூவிடம் என்னவென கேட்டும் அவளோ அவரை பார்த்தாள் இல்லை. அதற்குள் சேகரே அவரை அழைத்து விபரத்தை பக்குவமாக சொல்லவும் நொறுங்கிவிட்டார்.
என்ன நடந்தது என முழுவதும் கூறாமல் விபத்து என்று மட்டுமே கூறியவன் மறந்தும் இது ஹர்ஷூவை காப்பாற்ற போய் நிகழ்ந்தது என கூறவில்லை. காவலர்களையும் தன்னுடைய பத்திரிக்கை அடையாளத்தை காண்பித்து புருஷோத்தமனையோ ஹர்ஷூவையோ தொந்தரவு செய்யாமல் தானே அனைத்தையும் பார்த்துக்கொண்டான்.
அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டவர் அப்போதுதான் ஹர்ஷூவின் தலையிலும் கையிலும் சுற்றப்பட்டிருந்த கட்டுகளில் கவனத்தை செலுத்தினார். அது எதற்கு என சேகரிடம் கேட்டும் அவனோ மழுப்பலான பதிலே தந்தான்.
அதிலேயே அவருக்கு புரிந்துவிட்டது ஹர்ஷூவிற்கும் இந்த விபத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதென. ஆனாலும் அவள் அமர்ந்திருந்த நிலை அவளிடம் கோவத்தை காட்டமுடியாமல் அவரை தடுத்தது.
ஹர்ஷூவின் பெற்றோருக்கு அழைத்து விபரத்தை கூறிவிட்டு டாக்டரிடம் ஷக்தி எப்படி இருக்கிறான் என விசாரித்து விசாரித்து ஓய்ந்துபோனார்.
ஐ சி யூவில் இருந்த ஷக்தி அபாயக்கட்டதை தாண்டிவிட்டதாகவும், மயக்கம் தெளிய மறுநாள் காலை ஆகிவிடும் என்றும், ஆனாலும் காலிலும், கையிலும் முறிவு ஏற்பட்டிருக்க எழுந்து அமர்ந்தாலும் நடக்க இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் என்றும் கூறிவிட்டு சென்றார்.
மொத்தமாக உடைந்துபோனார் புருஷோத்தமன். அவரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மொத்த ஆத்திரமும் மருமகள் மேல் திரும்பியது.
ஆனால் டாக்டர் கூறி சென்ற எதுவும் ஹர்ஷூவின் காதில் விழவே இல்லை . ஷக்தி எழுந்திரிக்காமல் இருப்பதே அவளது உயிரை தின்றது.
தன் குடும்பம் மொத்தமும் அடுத்த மூன்றுமணி நேரத்தில் விமானம் மூலம் வந்துவிட்டதோ, தன்னை அழைத்ததோ ஷக்தியை பார்த்துவிட்டு வந்து தன்னிடம் பேசியதோ நிஷாந்த் நடந்ததை சேகர் மூலம் அறிந்து தன்னை திட்டியதோ எதுவுமோ அவளது மூளைக்கு எட்டவே இல்லை.
அன்று இரவு முழுவதும் கொஞ்சமும் தூங்காமல் வெறித்த பார்வையோடு விழித்திருந்த மருமகளை பார்த்த அவரது மனதில் முதலில் இருந்த கோவம் இப்போது குறைந்திருந்தது.
அதுவுமில்லாமல் டாக்டர் குடுத்த நேரத்தை தாண்டியும் ஷக்தி விழிக்காமல் இருந்தது சஞ்சலத்தை கொடுக்க மகனிற்காகவாவது மருமகளை தேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர் அவளருகில் அமர்ந்தார். விடியல் நெருங்கிய பின்னாலும் அவளை இப்படியே விட மனமற்றவராக,
“ஹர்ஷூ, இங்க பாரும்மா...” என மெல்லிய குரலில் அழைக்க அவரது அருகாமையை உணர்ந்தவள் தன்னையறியாமலேயே அவரின் தொழில் சாய்ந்துகொண்டு,
“என்னால கௌரவ்வை விட முடியாது மாமா. என்னால்தான் இப்படி ஆகிடுச்சு. எனக்கு கௌரவ் வேணும். அவன் மட்டும் போதும். இனிமே இப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன். யாரோட பிரச்சனையிலும் தலையிட மாட்டேன். ப்ளீஸ் மாமா அவனை எழுந்து என்னை பார்க்க சொல்லுங்க...” என தோள்சாய்ந்து கதறியவளை எப்படி சமாதானம் செய்ய என முடியாமல் திகைத்துவிட்டார்.
இந்தளவிற்கு தன் மகனின்மேல் அன்போடு இருப்பவள் மேல் தானும் கோபம் கொண்டு ஒதுங்கி இருக்க பார்த்தோமோ என தண்ணி நினைத்தே வெட்கி கொண்டார்.
ஆனாலும் சொன்னதையே கிளிப்பிள்ளை போல கௌரவ் வேணும். கௌரவ் இல்லாமல் இருக்கமாட்டேன் என மாற்றி மாற்றி பிதற்றிக்கொண்டே இருக்க அவளது குடும்பத்தினர் பயந்துவிட்டனர். மீண்டும் பழைய நிலை ஹர்ஷூவிற்கு ஏற்பட்டுவிடுமோ என பதட்டம் கொண்டனர்.
ஆனால் புருஷோத்தமனோ இது அதிர்ச்சியால் வந்த புலம்பல் என் நினைத்துகொண்டார். ஹர்ஷூவை பிடித்து உலுக்கியவர்,
“இங்கே பாரு ஹர்ஷூ. அழாதே, அழக்கூடாது. ஷக்திக்கு ஒண்ணுமே இல்லை. அவனை நீ போய் பார்க்காமலேயே நீயா ஒரு முடிவெடுக்காதே. போய் அவனை பாரு. அவனோடு பேசு. நீ இப்போதான் தைரியமா இருக்கணும். புரியுதா?...” என அவளை அதட்டலுடன் கூடிய ஆறுதல் கூறவும் கொஞ்சம் தெளிந்தாள்.
கண்களை துடைத்துக்கொண்டு ஷக்தியை காண அவரோடு எழுந்து சென்றாள். அப்போதும் தனது குடும்பத்தினர் ஒருவரும் அவளது பார்வை வட்டத்தில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை.
உள்ளே ஹர்ஷூவை அழைத்து சென்றவர் அவளை மகனருகே விட்டுவிட்டு வெளியேறி விட்டார் புருஷோத்தமன்.
ஷக்தியின் அருகில் சென்ற ஹர்ஷூவிற்கு பேச வார்த்தைகள் எதுவும் கிட்டவில்லை. அவனது இந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அவாளி வேரோடு சாய்த்தது. அதனால் தோன்றிய கண்ணீர் கணவனது கரத்தில் பட்டு தெறித்தது.
“கௌரவ்...” அவளுக்கே கேட்காத குரலில் அழைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“கௌரவ் ஐ லவ் யூ...” அவளை அறியாமல் இந்த வார்த்தை இதழ்களில் இருந்து துள்ளி விழ அதையே மீண்டும் மீண்டும் கூறினாள்.
“உன்னால என்னை விட்டுட்டு போகமுடியாது தானே கௌரவ்? ஏன் இப்படி படுத்திருக்க? எழுந்து வா கௌரவ். உன்னை இப்படி பார்க்க முடியலை. நான் உன்னை ரொம்ப படுத்தறேன்னு என்னை கலட்டிவிடலாம்னு பார்க்கற தானே? எவ்வளோ துணிச்சல் உனக்கு?...”
“அவ்வளோ சீக்கிரமா உன்னை விட்டுகொடுத்திட மாட்டேன் கௌரவ். இன்னும் நாம வாழ்க்கையில எவ்வளோ பார்க்க வேண்டியதிருக்கு. இப்படியே படுத்திருந்தா என்ன அர்த்தம்?எழுந்து வா கௌரவ். இந்த ஹாஸ்பிட்டல், ட்ரிப்ஸ், ப்ளட், உன்னோட சோர்ந்த முகம் எல்லாமே எனக்கு பயத்தை கொடுக்குது...”
அழுகையும் தவிப்புமாக இறைஞ்சுதலுடன் பேசியவளது குரல் அவனது மூளையை தட்டி எழுப்ப மெல்ல கண் மலர்ந்தான். அவன் விழித்துவிட்டதை கூட அறியாமல் இன்னுமின்னும் பேசிகொண்டிருந்தாள்.
“நீ சொல்ற ஐ லவ் யூ வை கேட்க எவ்வளோ வேலை பார்க்க வேண்டியிருக்குடா தேனு?...” என்ற அவனது தீனமான குரலில் சரேலென நிமிர்ந்தவள் முகம் நொடியில் பளிச்சிட்டது.