அத்தியாயம்: 26
இரு வருடங்கள் கழித்து,
BREAKING NEWS:
"தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விக்கி என்ற விநாயகம் மற்றும் மத்திய அமைச்சர் சகாயம் இருவருக்கும் கோவை குண்டு வெடிப்பு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்பு - காவல் நிலையத்தில் புகார்.”
அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
மத்திய அமைச்சர் ஒருவர் சம்பந்த பட்டிருப்பதால், தேசிய ஊடகங்களும் அதையே தான் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது.
எதிர்கட்சி, ஆளும்கட்சி மற்றும் சாமானிய நபர்களுடன் காரசாரமான விவாதங்களும் ஊடகங்களில் நடந்துக்கொண்டிருந்தது.
இதற்கு நடுவில் ஆளும் கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் விக்கியின் பேட்டி ஒளிபரப்பானது.
"எங்கள் கட்சியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியில் எதிர்க்கட்சியினர் கொடுத்த பொய்யான புகார் இது. வழக்கு நடக்கும் போது உண்மை வெளிவரும். புகார் அளித்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை களைந்து கட்சியின் பெயரை மீட்டெடுப்போம்.. அது வரை நான் சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டேன். நன்றி."
பேட்டி முடித்து காரில் ஏறி செல்வது வரை அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
'அமைச்சர் சகாயத்துடன் நேர் காணல் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் *****டிவியில் காணத் தவறாதீர்கள்.' என்று விக்கி பேட்டியின் போதே அதே தொலைக்காட்சியில் கீழே முக்கிய செய்தியாக சென்று கொண்டிருந்தது.
அந்த தொலைக்காட்சியையே வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சமீரா.
இப்பொழுது அவள் தேசிய அளவில் இருக்கும் ஊடகம் ஒன்றிற்கு தமிழ் நாட்டிலிருந்து பணி புரிகிறாள்.
அன்று சமர்த்திடம் பேசிவிட்டு தன் தந்தையுடன் திருச்சி புறப்பட்டு சென்றவளை இனிமையாக வரவேற்று அரவணைத்தது காயத்ரியின் குடும்பம்.
கோதையின் துடுக்குத்தனம் சமீராவிற்கு நிரம்ப பிடித்தது. கோவிந்த் சொன்னது போல் வாய் ஓயாமல் தான் பேசிக்கொண்டிருந்தாள் கோதை. அவளுடன் கழிந்த பொழுதுகளில் சமீராவின் மௌனம் கூட சில சமயங்கள் கட்டவிழ்ந்தது.
கண்ணன் அவளுக்கு தன் மனைவி பவித்ராவின் புகைப்படத்தை காண்பித்து, தினம் ஒரு கதை சொன்னார். அதில் இருந்த மனைவி மீதான காதல் சமீராவின் மனதை பிசைந்தது.
குழந்தையை தொலைத்து, அதனால் தன் வாழ்க்கை துணையை இழந்து, இத்தனை காலங்கள் ஆனாலும், தன் மனைவி பற்றி பேசும்போது கண்ணில் தெரியும் பரவசம், ஏதோ இன்று தான் நடந்தது போல் இருந்தது.
அதைப்பார்ப்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது சமீராவிற்கு.
அவளுக்கு அவரின் பவித்ரா மீதான பிரியம் சற்று பொறாமையை கூட கொடுத்தது. தானும் இதுபோன்ற பிரியத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமர்த்திற்கு தர வேண்டும் என்ற ஆவலும் கூடவே எழுந்தது.
இங்கு வந்ததும் அவளின் வாழ்வு முறை சற்றே அழகானதாக மாறியது. அலைபேசி மூலம் சமர்த்திடம் காதல் பயிரை வளர்த்துக்கொள்ளவும் மறக்கவில்லை.
கோவிந்தும் தினமும் அவளை தொடர்புக்கொண்டு அவர்களின் உறவை மேலும் வளர்த்தான்.
எது எப்படி இருந்தாலும் அவள் இன்னும் 'சமீரா' வாகவே இருந்தாள். 'மீரா' வாக மாற சொல்லி அங்கு யாருமே அவளை வற்புறுத்தவில்லை.
அவளை அவளாகவே ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் மீது பெருகிய பாசம் அவளை இளக்கி, அவ்வப்பொழுது அவளின் மௌனத்தையும் சிறிதளவு கலைத்தது.
அங்கு வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்த நிலையில் தான், தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் பனிரெண்டு பேர்களுடன் சேர்ந்து அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை செய்திகள் மூலம் அறிந்துக்கொண்டாள் சமீரா.
அவளின் பத்திரிகை அறிவு நடந்ததை அறிந்துக்கொள்ள தூண்டியது.
அடி முதல் நுனி ஆழம் வரை தூத்துக்குடியில் நடந்தவற்றை ஆராய்ந்து அறிந்துக்கொண்டாள்.
அந்த ஆலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதை இழுத்து மூட அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து நடத்திய போராட்டம், அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருந்தது.
அனைத்து ஊடகங்களிலும் தொடர்ந்து இதனை விவாத பொருளாக்கி தினம் தினம் அந்த கட்சியை கேலி கூத்தாக்கி கொண்டு இருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தாள் சமீரா.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு அந்த ஆலையில் இருந்த பெரும் பங்குகள் தான்.
அதைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் எங்குமே பகிரப்பட்டு இருக்கவில்லை. அதை மட்டும் ஊடகங்கள் அடக்கியே வாசித்தது.
சமீரா போன்ற ஆர்வம் மிக்க பத்திரிக்கையாளராகள் மட்டுமே அறிந்த அந்த தகவலை அவள் உட்பட யாருமே வெளியிடவில்லை.
பத்திரிக்கைகளுக்கு என்று ஒரு சுதந்திரம் இருப்பதைப்போல தொழில் நடத்துவோருக்கு என்று இருந்த சுதந்திரத்தில் தலையிட அவளுக்கு விருப்பம் இல்லை.
ஆனாலும் அரசாங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் நடக்கும் எந்தவிதமான தொழில்களையும் யார் நடத்தினாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்தவள், அந்த ஆலையில் இருக்கும் பங்குகள் யார் வசம்? என்ற தலைப்பில் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினாள். சமீர் என்ற பெயரில் தான் எழுதி அனுப்பினாள்.
ஆனால் அது பிரசுரம் தான் ஆகவில்லை. இப்பொழுது அவள் எந்த பத்திரிகை நிறுவனத்திலும் வேலையில் இல்லாததாலோ, என்னவோ அவள் அனுப்பிய எந்த தகவலும் பிரசுரம் ஆகவில்லை.
இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்க்க தூத்துக்குடிக்கு சுற்றுலா என்ற பெயரில் தந்தை கண்ணனுடன் கிளம்பிச் சென்றாள்.
அங்கு அவளுக்கு நிறைய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.