"சரி சரி கோபப்படாதடி நான் இப்ப என்ன சொல்லிட்டேன் இப்படி கோபப்படுற! கண்டிப்பா இன்னும் ஒரு வாரத்துல உனக்கு நியூஸ் சொல்றேன்.."என அங்கு வந்தார்கள் அவர்களது மற்ற நண்பர்கள்.
"என்ன எங்களுக்கு தெரியாம ரெண்டு பேரும் தள்ளி வந்து ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க.."என்று இருவரையும் சந்தேகமாக பார்த்தபடி பிரியா கேட்க,"அதெல்லாம் ஒன்னும் இல்லடி நம்ம காலேஜ் லைஃப் இன்னையோட ஒரு முடிவுக்கு வந்துடுச்சு.. இதுக்கடுத்து யார் யார் என்னென்ன பண்ண போறீங்க?"என்று நிறைமதி அழகாக பேச்சை மாற்றி விட,பிரியா வந்ததை மறந்து நிறைமதி சொன்னதைக் கேட்டு கண்கள் கலங்க தன் நண்பர் பட்டாளத்தை பார்க்க அனைவர் கண்களிலும் கண்ணீர் தான்.
நிறைமதியும் கண்களில் வழிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டவள் "ஏய் இப்ப எதுக்கு எல்லாரும் பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நம்ம என்ன இப்படியாவா இருக்க போறோம் இனிமே நம்ம லைஃப் நம்ம இஷ்டப்படி தான் இருக்கும் எப்ப வேணும்னாலும் எல்லாரும் மீட் பண்ணலாம்.. இதே மாதிரி மாசத்துக்கு ஒரு தடவை இல்லனா வருஷத்துக்கு ஒரு தடவை எல்லாரும் இன்னைக்கு வந்து செலிப்ரேட் பண்ணது போலவே ஹோட்டல் பார்க் பீச் தியேட்டர்னு ஒரு நாள் ஃபுல்லா என்ஜாய் பண்ணுவோம் யார் கேட்க போறாங்க!நம்ம காலேஜ்ல லைஃப்ல நம்ம திரும்பி பார்க்கும்போது அதுல நமக்கு சந்தோசம் மட்டும் தான் இருக்கணும் எதுக்காகவும் நம்ம யாரும் பீல் பண்ண வேண்டாம்.."என்றவள் பேச்சு மற்றவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்க, அவள் சொன்னது போலவே மற்றவர்களும் வருடத்திற்கு ஒரு முறையாவது அனைவரும் ஒன்றாக கூடி இதே போல் ஒரு நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்போம் என்று சபதம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
"எப்படி மாமா கரெக்டா நான் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்துடுறீங்க.."நிறைமதி கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளை அமைதியாக பார்த்தான்.
"வாய தொறந்து பதில் சொன்னா வாயில இருக்க அத்தனை முத்தும் கொட்டிடும்.."என்று அவனை திட்டியவள் காரில் ஏறி அமர்ந்தாள்.
முன்னால் டிரைவர் காரை ஓட்ட பின்னால் அமர்ந்திருந்தவன் அலைபேசி எடுத்து அந்த பக்கம் யாருக்கோ அழைத்தான்.
"ஆமா அப்படியே செய்ங்க நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் நைட்டு நான் சொன்னது போல எல்லா வேலையும் முடிங்க.. எலக்சன் இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு அதுக்குள்ள இருக்கிற எல்லா வேலையும் முடிச்சுடுங்க.. எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் ஆட்சி யார் பக்கம் வேணும்னாலும் போகலாம் நம்ம இருக்கும்போதே செஞ்சு முடிச்ச எல்லாத்தையும் முழுசா முடிச்சுடனும் அரைகுறையாக விட்டுட்டு போகக்கூடாது.."என்றவன் போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க,காரில் ஏறி அமர்ந்தது முதல் அவனை பார்த்துக் கொண்டிருந்த நிறைமதி அவன் போனில் தீவிரமாக பேச அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தாள்.
அதே நேரம் அவன் கடைசியாக சொன்ன வார்த்தை அவள் மனதை பதம் பார்த்தது.
அவளும் இப்படி தானே அரைகுறையாக விட்டுவிட்டு அவனை விட்டு விலகி நிற்கிறாள்.
அவளின் ஆசையை நிறைவேறுவதற்காக அவன் அவளை விட்டு தள்ளி நிற்க அவனின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக அவனை விட்டு அவள் தள்ளி நிற்கிறாள்.
அவளது ஆசை தான் அவனது ஆசையும் கூட..
தன்னுடைய கனவுகளுக்காக தான் அவன் தள்ளி நிற்கிறான் என்பதை உணர்ந்து வைத்திருந்தவள் அவனுக்காக தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தானே இந்த திருமண பந்தத்தில் இருந்து இருவரும் தள்ளி தள்ளி நிற்கிறார்கள்.
அவளாவது குடும்பத்தோடு இருக்கிறாள்.
அவன் அப்படி அல்லவே.
போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் "ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க.."என்றவன் செல்லை மியூட்டில் போட்டுவிட்டு "கார நிப்பாட்டுங்க முருகன் அண்ணா பாப்பாவுக்கு புடிச்ச பஞ்சுமிட்டாய் விக்குது பாருங்க வாங்கிட்டு வந்து குடுங்க.."என்றவன் தன் பரிசில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க அதை அவசரமாக மறுத்தார் முருகன்.
"அய்யய்யோ வேணாம்ங்க தம்பி என்கிட்டயே பணம் இருக்கு இது என்ன ஆயிரம் கணக்கிலையா வரப்போகுது மிஞ்சி போனா 50 ரூபாய் வரப்போகுது நானே பாப்பாவுக்கு வாங்கிட்டு வந்து தரேன்.."
"இல்லன்னா அவளுக்கு எதுவா இருந்தாலும் நான் மட்டும் தான் செய்யணும்.. அது எதுவா இருந்தாலும் சரி இந்தாங்க பாப்பாவுக்கு ஒன்னு வாங்கிட்டு அப்படியே உங்க பசங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க.."என்றவன் அவரிடம் 100 ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துவிட்டு மீண்டும் போனில் கவனமானான்.
முருகன் அவன் சொன்னது போலவே காரை ஓரமாக நிறுத்திவிட்டு ரோட்டுக்கு அந்த பக்கமாக இருந்த பஞ்சுமிட்டாய் வாங்குவதற்கு சென்று விட்டார்.
தீவிரமாக பேசிக் கொண்டிருந்த நிலைமையிலும் கூட, இந்த இடத்தை கடந்து செல்லும் பொழுது தனக்கு பிடித்த பஞ்சுமிட்டாய் எப்போதாவது விற்கும் பொழுது அவனிடம் ஆசையாய் வாங்கி வர சொல்லி அவள் உண்டதை நினைவு வைத்து அப்பொழுதும் அதை மறக்காமல் அதுவும் அவன் செலவில் மட்டும் தான் தனக்கு எதுவானாலும் செய்வேன் என்று சொன்னதைக் கேட்டு ஒரு மனைவியாக பூரித்து போய் விட்டாள்.
நயன விழிகள் அவன் மீதான காதலில் போதை கொள்ள, கண்களாலையே அவனை தனக்குள் அணு அணுவாக ரசித்து மெய் மறந்து அவனே சர்வமும் என்று பார்த்துக் கொண்டிருக்க, அவள் பார்வையின் பொருள் அறியாதவனா அவன்!
அந்தப் பார்வையின் பொருள் என்னவென்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தாலும் தெரிந்து கொள்ளாதது போல் போனில் இன்னும் தீவிரமாக பேச ஆரம்பித்தான்.
தன்னை வேண்டுமென்றே பழிவாங்க இப்படி செய்கிறான் என்று அவன் மீது கோபம் வர, சட்டென்று அவன் கைகளில் வைத்திருந்த போனை பிடுங்கி ஆப் செய்தவள் அவன் கன்னத்தில் ஆசைப்பட்டது போலவே ஒரு முத்தம் வைத்திருந்தாள்.
ரொம்ப முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருந்த பகலவன் நிறைமதி செயலில் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அவள் செயலில் மிகவும் கோபம் கொண்டவன் சற்றும் யோசிக்கவில்லை அவள் கைகளில் இருந்த போனை வாங்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கி விட்டான்.
அவன் காரில் இருந்து இறங்கவும் பதட்டமாக நிறைமதியும் காரிலிருந்து இறங்க, அவளை திரும்பி பார்க்க கூட பிரியப்படாதவன் மீண்டும் மொபைலை ஆன் செய்து அந்த நபரிடம் பேச ஆரம்பித்தான்.
"இல்லை தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க இப்ப அவங்க எப்படி இருக்காங்க?"என்று கேட்க,முதன்முதலாக அவன் வாயிலிருந்து வேறொருவரிடம் மன்னிப்பு கேட்பதை கண்டு அதிர்ந்து போனாள்.
எப்பொழுதும் இவள் இப்படி செய்யும் பொழுது கண்டும் காணாது இருப்பவன் இப்பொழுது காரில் இருந்து இறங்கி அவள் முகத்தைக் கூட பார்க்காமல் வேறொருவரிடம் மன்னிப்பு கேட்பதை கண்டும் அவன் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்து கொண்டாள்.
தன் அவசர புத்தியால் அவனை இந்த நிலைமைக்கு தள்ளிய தன் மீது கோபம் கொண்டாள்.
இதற்குள் முருகன் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொண்டு வர,"நீங்க காரை எடுத்துக்கிட்டு போங்க நான் வெளியில வேலை இருக்கு அப்படியே போறேன்.."என்றவன் மனைவியை திரும்பியும் பாராமல் போனை மீண்டும் காதில் வைத்து பேசியபடி சென்று விட்டான்.
அவன் செயலில் மனதுக்குள் பெருத்த அடி வாங்கினாள் அவள்.
'என்னதான் தப்பு செஞ்சு இருந்தாலும் இரண்டு திட்டு திட்டி இருக்கலாமே கோபம் வந்தா அடிச்சு இருக்கலாம் அதை விட்டுட்டு எதுக்கு இப்படி போயிட்டாரு..'என்று மனதுக்குள் புலம்பி கொள்ள, அவனால் உன்னை தண்டிக்க முடியுமா? என்று அவள் மனசாட்சி அவளிடமே கேள்வி கேட்க, அதற்கு பதில் இல்லை அவளிடம்.
"அம்மா வண்டியில் ஏறி உட்காருங்க ஐயாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரு இந்தாங்க இதை வாங்கிக்கோங்க.."என்று முருகன் சொல்ல, அவன் பின்னாடியே செல்ல வேண்டும் என்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வேறு வழி இல்லாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.
வீடு வந்து சேர்ந்ததும் காலையில் உற்சாகத்துடன் கிளம்பி போனவள் அப்படியே அதற்கு நேர்மாறான மனநிலையோடு வீட்டிற்குள் நுழைந்தவள் எதிர்பட்ட தாயிடம் "அம்மா எனக்கு தலை ரொம்ப வலிக்குது என்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நான் போய் தூங்குறேன்.."என்றவள் கண்கள் அழுகைக்கு தயாராக, தீபாவை நிமிர்ந்து பார்த்தால் நிச்சயம் அவர் கண்டுபிடித்து விடுவார் என்று அவர் முகத்தை பார்க்காமல் தலையை பிடித்தபடி தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
தீபாவும் இனி நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது அதனால் இப்படி இருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக விட்டு விட்டார்.
தன் அறைக்குள் வந்தவள் புகைப்படத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த கணவன் புகைப்படத்தை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவள் "எதுக்காக மாமா இப்படி என் மேல இவ்வளவு அன்பாய் இருக்கீங்க?இந்த அன்பு இது ஒன்னு தானே உங்களையும் என்னையும் சேரவிடாமல் தடுத்துகிட்டு இருக்கு இதுக்கு நான் என்ன பண்ண போறேன்?"என்று வாய்மொழியாக கேட்டவள் புகைப்படத்தில் பேருக்காக கூட சிரிக்காமல் விறைப்பாக நின்று கொண்டிருந்த கணவனை வேதனையுடன் தான் அவளால் பார்க்க முடிந்தது.
அன்று அவள் செய்த செயல் தான் அது.
அவள் தான் அவனிடம் அன்று அதை விரும்பி கேட்டாள்.
அவள் எதை கேட்டாலும் உடனடியாக கொடுத்து விடுபவன் அன்றும் அவள் கேட்டதை மறுக்க முடியாமல் உயிர் காதல் வலியுடன் திருப்பி கொடுத்து விட்டான்.
எந்த கனவுகளுக்காக அன்று அத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டு அவனிடமிருந்து
அதைப் பெற்றுக் கொண்டாளோ இன்று அந்த கனவுகளை நினைக்கும் பொழுது வேதனையாக வந்து தொலைத்தது.
தன் கனவுகளுக்காக ஒருவனை உயிரோடு கொன்று விட்டதை எண்ணி அவள் மனம் வேதனையில் துடித்தது.
தன் அறையில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி நிறைமதி படுத்திருக்க, நேரம் நள்ளிரவு பொழுதையும் தாண்டி சென்றிருந்தது.
எதைப்பற்றியும் கவலையில்லாமல் பகலவன் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தவள் உறக்கம் தொலைந்து போக, மேலே ஓடிக்கொண்டிருந்த காத்தாடியை வெறித்து பார்க்க, அவளை கலைப்பது போல் இசைத்தது அவளின் அலைபேசி.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி போனை எடுத்து பார்க்க திரையில் தோன்றிய எண்ணை கண்டதும் அத்தனை நேரம் இருந்த மனசுனக்கம் அத்தனையும் காணாமல் போக, அவன் புகைப்படத்தோடு அலைபேசி எண் வரவும் சற்றும் தாமதிக்காமல் ஆன் செய்து காதில் வைத்தாள்.
"என்ன மாமா! ஏதாச்சும் முக்கியமான விஷயமா இந்த நேரம் போன் பண்ணி இருக்கீங்க.."
"எப்படி இருக்க? சாப்டியா?"
"இல்ல மாமா.."என்று அவனிடம் பொய் சொல்ல மனம் வராமல் உண்மையை சொல்லிவிட்டாள்.
நிச்சயமா அவள் இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்த்த ஒன்றுதான். கண்களை மூடி திறந்தான்.
"அப்படியே பால்கனி வா."
"இதோ வரேன் மாமா.."என்றவள் ஜன்னலை திறந்து விட,அங்கு சாலையில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அதில் சாய்ந்து ஒய்யாரமாக அலைபேசியை காதில் வைத்த படி நின்று கொண்டிருந்தான் பகலவன்.
அவனை அங்கு கண்டதும் சூரியனை கண்ட சூரியகாந்தி பூவை போல அவள் முகம் மலர்ந்து விகசிக்க, தூரத்தில் நின்று கொண்டிருந்தவனுக்கும் அவள் முக அசைவுகள் ஒன்று ஒன்றும் நன்றாகவே தெரிந்தது.
"அதான் இப்ப என்னை பார்த்தாச்சே.. இதுக்கப்புறம் என்ன போய் சாப்பிடு.."
"இல்ல மாமா நீங்க வாங்க அப்பதான் நான் சாப்பிடுவேன்.."என கேட்டுக் கொண்டிருந்தவன் கண்களை மூடி திறக்க அவன் கண்கள் ரத்த நிறம் பூசிக் கொண்டது.
"வேண்டாம் மதி தேவையில்லாத பிரச்சினையை நீ உருவாக்குகிற.."
"அது எது வந்தாலும் சமாளிக்க நீங்க இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் உங்களுக்காக நான் உருவாக்க தயார்.."
"இல்ல நான் கிளம்புறேன் நான் வந்து இருக்கவே கூடாது.."என்றவன் அலைபேசியை துண்டிக்க போக,"இப்ப மட்டும் நீங்க போன கட் பண்ணீங்க இந்த இடத்தை விட்டு நான் அசையவே மாட்டேன் கொட்டுற இந்த பனியில இன்னைக்கு ஃபுல்லா இங்க மட்டும்தான்.."என்று அவனையே மிரட்ட, அவனுக்கு வந்த கோபத்தில் காரை வேகமாக ஓங்கி உதைத்தான்.
அதுவே சொல்லியது அவன் கோபத்தின் அளவை.
அவள் எதை கண்டும் பயப்படவில்லை அவனை கண்டு அவள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
"ரொம்ப கோபப்படாதீங்க நீங்க வரிங்களா? இல்ல நான் வரவா?"
"என்னை நீ ரொம்ப அலைய விடுற!"
"கமான் மாமா ப்ளீஸ் எனக்காக.."என்றவளின் வார்த்தையை மறுக்கும் தைரியம் அவனுக்கில்லை.
"சரி சீக்கிரம் கிளம்பி வா வரும்போது உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வா.."என கூண்டுக்குள் இருந்து பறக்கும் கிளியாக சந்தோசமாக அவன் சொன்னது போல் விறு விறுவென உடை மாற்றியவள் கீழே வந்து உறங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.
இங்கு காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன் செல்போனை நோண்டிக்கொண்டிருக்க, சாதாரண பனியனும் முட்டிக்கு மேல் ஏற்றிவிட்ட கால் சட்டையும் அணிந்து கொண்டு கண்களில் கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு காரில் சாய்ந்து நின்றபடி போனை நோண்டிக் கொண்டிருந்தவனை கண்டதும் எப்போதும் போல அவள் மனம் மயங்கித்தான் போனது.
அதேபோல் அவள் வருகையை உணர்ந்து தலையை உயர்த்திப் பார்த்த பகலவன் கையில்லா சட்டையும் முட்டியை தொடும் அளவிற்கான குட்டை பாவாடையும் அணிந்து குளிர் தெரியாமல் இருப்பதற்காக மேலே மெல்லிய ஷால் ஒன்றையும் அணிந்து சுருள் சுருளான கேசம் காற்றில் அசைந்தாட,விழிகளில் காதலுடன் தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தவளை அவனும் ரசனையுடன் பார்த்தான்.
அவன் ரசனையான பார்வையை அவன் கண்ணாடி மறைத்துவிட அவளுக்கு அது தெரியாமலேயே போனது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் அவள் பக்கத்தில் வந்ததும் காரில் ஏறி அமர்ந்தவன் அவள் அடுத்த பக்கம் ஏறி அமர்ந்ததும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தான்.
அதே நேரத்தில் அவனை பொறிவைத்து பிடிக்க காத்திருந்த சில வேடர்களும் அவனை அறியாமல் அவனை பின் தொடர ஆரம்பித்தார்கள்.