2. பவளத் தீவில் பாய்விரித்த நாவாய்
மத்திய தரைக்கடல் பகுதியில் விரிந்து பரந்திருந்த நீலக்கடல் பரப்பு…. மத்திய தரைக்கடலிலிருந்து வடக்கு நோக்கி விரிந்த ஏஜியன் கடலில் வாரியிறைத்த மரகத கற்களாக சிதறி ஜொலித்த தீவுக்கூட்டங்கள்…. எண்ணைதீவுகள் என்று கடலோடிகள் அழைத்த பேகான தீவுகள் கூட்டம் ஒவ்வொன்றும் ஒரு தனிரகம்…. அந்த தீவுக்கூட்டத்தின் நடுவே சிறிது பரப்பில் பெரியதும் மேடான மலைப்பகுதியில் அமைந்ததுமான பவளத்தீவு, தன்னை சுற்றிலும் ஏழு சிறு தீவுகளை அரணாக கொண்டு கம்பீரமாக அமைந்திருந்தது….
ஊதா நிற கடலும், அது முட்டி மோதி தொட்டு விளையாடும் வெண் மணற்கரையும், கரை தழுவி செழிப்புடனும், பரபரப்புடனும் காணப்படும் துறைமுகமும் கண்களில் விரிகின்றது… நேர்த்தியாக செதுக்கிய கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த துறைமுகத்தின் அமைப்பும், துறைமுகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சரக்குகள் சேமிப்பு கிடங்குகளும், அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த காவற்கோபுரங்களும் பவளத்தீவின் செழுமையை நம் கண்களில் காட்சிகளாக விவரித்து காட்டுகின்றது. துறைமுகத்திலிருந்து மேலேறி…. மலை நோக்கிப் பயணப்பட கற்பாதை, நகர வாயில் வரை வளைந்து சென்றது.
கடினமான கிரேக்கத்து கற்களை கொண்டும், உலோகம், மரக்கூழ் கொண்டும் அமைக்கப்பட்டிருந்த வலிமையான கோட்டை பவளத் தீவை சுற்றி அமைக்கப்பட்டிருந்தது. கோட்டை வாயில் கனமான மரத்தில் உலோக காப்புகள் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. கதவின் இடப் புறத்தில் இருந்த சிறிய வாயில் வழியே நகர மக்களின் நடமாட்டத்தை காண முடிகின்றது. துறைக்கு வருபவர்களும், துறையில் இருந்து நகருக்கு திரும்புவோரும், பரபரப்பாக தங்களின் அன்றாட செயலில் மூழ்கியிருகின்றனர். பவளத் தீவிற்கு அப்பால் நிறுத்தப்பட்ட மரக்கலங்களில் இருந்து சிறு படகுகள் வழியே தீவினை அடையும் மாலுமிகளும், மரக்கலங்களின் தலைவர்களும், உப தலைவர்களும் உல்லாச விடுதிகளில் லயித்து, திளைத்து இன்புற்றிருந்தனர்.
நகரிலிருந்து மேலேறிய அகன்ற பாதை அரண்மனை நோக்கி பயணித்தது. வழியெங்கும் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. கிரேக்க காவல் உடையணிந்து தலையில் உலோக கவசம் தாங்கிய வீரர்கள் கையில் நீளமான கூரிய ஈட்டிகளும், இடையில் அகலமான ஆனால் உயரம் குறைவான வாளும் சொருகி இருந்தனர். நூறு வீரர்களுக்கு ஒரு தலைவன் நியமிக்கப்பட்டு, சுமாராக ஐநூறு போர்வீரர்கள் இந்த தீவின் அரச குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர்.
அரண்மனையை சுற்றிலும் ரெட்டை கற்கள் கொண்டு கோட்டை அமைக்கப்பட்டு, கோட்டையின் ஒவ்வொரு இருபது அடிக்கும் ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைந்திருக்க, காவல் பலமாக இருந்தது. அழகான விசாலமான அற்புத தோற்றமும், கண்கவர் கலைநயமும் அரண்மனையில் பளிச்சிட, அகன்ற தூண்களின் மேல்…. கூரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அரண்மனையின் மேல்மாடத்தில், கடலை நோக்கி இருந்த பளிங்கு கற்களால் பளபளத்த அறையின் விதானத்தில் ஏஜியன் கடற்பரப்பை உற்று நோக்கியபடி சிந்தனையில் நின்று கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன், ஆறடிக்கும் குறையாத உயரத்தில் அகன்ற தோளும் பரந்த மார்பையும் பெற்றிருந்தான். தோள்வரை வளராமல் ஆனால் தோளுக்கு பக்கம் வரை வளர்ந்திருந்த பொன்முடிகள் காற்றில் பறக்கும் போது, பிரம்மன் படைத்த அழகோவியமாக காட்சி தந்தவன், வெள்ளை சீராயை உடையாகவும், கருஞ்சிவப்பில் இடைக் கச்சையும் அணிந்திருந்தான்…
தலையில் அழகிய பொன் முடி ஒன்றை சூடியிருந்தான். மணிக்கட்டுகள் தங்க காப்பால் பிரகாசித்து அவன் நிறத்தோடு போட்டியிட முயன்று தோற்றுப் போயின. தீர்க்கமான இதய ஓட்டம் கொண்டவனாய், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, உள்ளத்துக்குள் அளவிட இயலாத பரபரப்புடன் காணப்படும் அந்த இளைஞன் பெயர்…. டையோனிஸ்…. கிரேக்கத்து பட்டத்து இளவரசன்… இருபது வயதில் முப்பது வயதினர் செய்யும் அத்தனை சாதனைகளையும் செய்து முடித்தவன். சமர் களத்தில் எதிரிகளை துவம்சம் செய்வதில் சிம்மம் போன்றவன். சமீப காலமாக தலைநகரை துறந்து, அரண்மனை பகட்டுகள் தவிர்த்து, இந்த தீவில் தனியே இருந்து கொண்டு எதையோ சாதிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றான்.
வாழ்க கிரேக்கத்து ஆண்டிகோணஸ் சாம்ராஜியம்… வாழ்க பேரரசர் டெமென்டிஸ்… வாழ்க வருங்கால கிரேக்க பேரரசர் என்ற குரல் கேட்டு திரும்பிய அந்த நீலக்கண் ஆணழகன் பார்வை எதிரில் நின்ற வீரன் ஒருவனை கண்டு நின்றது. பின் என்ன என்பது போல பார்வையிலே வினவ….
ஒப்பற்ற கிரேக்க மாவீரர், கிரேக்கத்து பெரும்படையின் முதன்மைத் தலைவர் அகோட்டஸ் தங்களை காண வந்துள்ளார். என்று பணிந்து நின்றான் வீரன்.
டையோனிசின் நீலமணிக் கண்கள் பளிச்சிட்டு பிரகாசிக்க, முகமெங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது…. உடனே அவரை வரச்சொல் என்றவன் ஆர்வமிகுதியில் திளைத்து நின்றான்.
வீரன் சென்ற ஐந்து நொடிகளில் ஓங்கி வளர்ந்த பேரீட்சைமரம் தலையில் உலோக கவசம் பூண்டவனாய், ஆப்பிரிக்க தேவதாரு மரங்களை வலிமையான கரங்களாகவும், தேக்கு மரத்தை புஜங்களாகவும், ஆல்ப்ஸ் மலை போன்ற உறுதியான பரந்த பரப்பை தேகமாக கொண்டு, உலோக கவசத்தில் அதை மறைத்துக்கொண்டு அதிபயங்கர பிசாசு போல தோன்றியவன் கிரேக்கத்து போர் புலி என்று பெயர் பெற்றவன்.. அக்கோட்டஸ் என்று அறியப்படும் இந்த போர் புலி கடலாடுவதில் கில்லாடி. கிரேக்க பேரரசியின் சொந்த சகோதரன். கிரேக்கத்து பெரும் போர்களில் பேரரசருக்கு பெரும் வெற்றிகள் வாரித் தந்தவன். சூழ்ச்சிகளுக்கு சூழ்ச்சி பாடம் எடுப்பவன். கண்களில் ஒளிர்ந்த தீர்க்கமான பார்வையும், கண்களுக்கு நடுவே பாய்ந்து சரிந்த நாசியும் அவனது அறிவாளித்தனத்தை வெட்ட வெளிச்சமாக காட்டின….
கிரேக்க இளவரசருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் என்ற அகோட்டஸ் கிரேக்கத்து இளவரசன் காலடியில் மண்டியிட்டு வணங்கினான்….
வாருங்கள் அன்பு மாமா…. உங்களை எதிர்பார்த்தே சில நாட்களாக காத்து இருக்கின்றேன்…. உங்களை கண்டபிறகே நிம்மதி என்றான் டையோனிஸ்….
மன்னிக்க வேண்டும் இளவரசே….. தேவைப்படும் தகவல்கள் திரட்டவும், தேவைப்படும் சேனையை தலைநகரிலிருந்து விடுவித்து, மரக்கலங்களில் ஏற்றி வரவும் சற்று காலதாமதமாகி விட்டது. உங்கள் தாயும் சகோதரியும் இறுதிவரை நீங்கள் கிழக்கு தேசத்தை நோக்கி செல்வதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். உங்கள் தந்தை மட்டும்தான் இதற்கு முழு சம்மதமும், அதிகாரமும், அனுமதியும் அளித்தார் என்ற அகோட்டஸ்…. சற்று நிறுத்திவிட்டு…..
வரும் வழியில் முசிறி சென்றுவிட்டு, நம் தேசம் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த வணிக மரக்கலம் ஒன்றிலிருந்து தித்திக்கும் செய்தி கிடைத்தது. தங்களுக்கு புகாரில் இருந்து வந்த செய்தியை காட்டிலும் இது ரெட்டிப்பு மகிழ்வை தரக்கூடியது… என்றான்….
அதென்ன சேதி மாமா? என்ற டையோனிஸ் ஆர்வத்துடன் அக்கோட்டஸை பார்க்க…… அவனின் ஆர்வத்தை பார்த்த அவன் தாயின் சகோதரனும், கிரேக்கத்து பெரு வெற்றிகள் பலவற்றில் போர்ப்படை நடத்தி சென்று வெற்றிகளை குவித்தவனும், கிரேக்க உலோக பொறிகளை வடிவமைப்பதிலும், உபயோகிப்பதிலும் வல்லவனாக விளங்கும் அகோட்டஸ் கூறினான்….
கிழக்கிலிருந்து சேர அரசன் இரும்பொறை ஓலை கொடுத்தனுப்பி யுள்ளான் இளவரசே!!..காலம் கனிந்து கைகூடி நிற்கிறது. புறப்பட்டு வரவும். நெல்லும் முத்தும் அள்ளி செல்லலாம் என்பதே அந்த செய்தி… நீங்கள் கண்ட கனவு நனவாகப் போகின்றது என்றான் அகோட்டஸ்.
நல்லது மாமா… பவளத்தீவு வருங்காலங்களில் கிழக்கு திசை நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைய வேண்டும். இந்த தீவை பாதுகாப்பு மிக்க உலோக கோட்டையாக நீங்கள் தான் மாற்ற வேண்டும் என்றான் டையோனிஸ்…
கண்டிப்பாக செய்துவிடுவோம் இளவரசே… இங்கிருந்து நான் புறப்படும் முன் அனைத்து விதத்திலும் யாராலும் வெற்றி கொள்ள இயலாத அற்புதமான கோட்டையாக மாற்றிவிடுகின்றேன் என்றான்…. அகோட்டஸ்…
தங்களுடன் பேசிக்கொண்டிருந்த ஆர்வத்தில் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் மாமா… மூன்று தினங்களுக்கு முன், இரவில் மூன்றாம் சாமம் கடக்கும் போது, நம் ஏஜியன் கடலின் வலது திசையில் ஆறுமுறை வானத்தை நோக்கி பாய்ந்த சுடரொலியை கண்டேன். சிறிது நேரத்திற்கு எல்லாம் இருட்டில் கடற்பரப்பின் மேல் வித்தியாசமான இரைச்சல்கள் ஒலித்து கலங்குவது போல உணர்ந்தேன்… ஆனால் அடுத்த நாள் எப்போதும் போல சீராகவே இருந்தது. அன்று இரவில் ஒரு மாற்றமும் நிகழவில்லை…. ஆனால் நேற்று இரவு அதே மூன்றாம் சாமத்தில் வானில் பாய்ந்த அந்த சுடரொலிகளை கண்டேன் என்று தான் கண்ட அந்த நிகழ்வை அகோட்டஸிடம் கூறி நிறுத்தினான்… டையோனிஸ்.
அகோட்டஸ் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இது நடக்க சாத்தியமே இல்லையே… வரும் வழியில் நாம் எதையும் வித்தியாசமாக கடலில் காணவில்லையே என்று யோசித்த கிரேக்க சேனாதிபதியின் உதடுகள் தன்னை அறியாமல் மூணுமுணுத்தன…. ஆலிமா.!!!!.. என்று..
மாமா யார் அந்த ஆலிமா??? அனுபவம் வாய்ந்த போர்வீரர் நீங்கள்… கடல் உலகத்தில் உங்களுக்கு ஈடாக எந்த வீரருரும் இன்றுவரை பிறக்க வில்லை. யார் இந்த ஆலிமா? கடல் பூதமோ? என்றான் டையோனிஸ்…
அதைவிட பயங்கரம் இளவரசே என்ற அகோட்டஸ்… நீங்கள் எக்காரணத்தை கொண்டும் நகரை சுற்றிப்பார்க்கவோ அல்லது துறைமுகம் செல்லவோ முயற்சிக்க வேண்டாம்… இதை என்னவென்று நான் கண்டு பிடிக்கும் வரை என் பேச்சை கேளுங்கள். என் யூகம் சரி என்னும் பட்சத்தில் இன்றே நாம் பாதி ஆபத்தை நெருங்கிவிட்டோம் என்றான்….
இதை கேட்ட டையோனிஸ் சிறிது அதிர்ந்தானாயினும் கடல் அரசர் என்னோடு இருக்க கவலை ஏன் படவேண்டும் என்று உரக்க கூறினான்
அப்போது இருள் பவளத்தீவை ஆக்கிரமிக்க தொடங்கி இருந்தது. அறையின் விதானத்தில் நின்று இருவரும் கடலை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தனர். பவளத்தீவு எங்கும் வெண்கல அன்னப் பறவை உருவை தலையில் பூண்ட, விளக்குகளில் ஐந்து திரியிடப்பட்டு ஒளி ஏற்றப்பட்டிருக்க துறைமுக நகரமே ஒளியில் பிரகாசிக்கத் துவங்கியிருந்தது. அரண்மனை முழுதும் வண்ண விளக்குகளால் பிரகாசிக்க தொடங்கியிருந்த அந்த நொடியில்..
டையோனிசை நோக்கி இரண்டு குறுவாள்கள் மின்னலெனப் பாய்ந்து வந்தன. சட்டென்று அதை உணர்ந்த அகோட்டஸ் இளவரசனை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொள்ள, குறு வாள்கள் இரண்டும் வரிசையாக இளவரசனின் இருக்கையில் தைத்து நின்றன.
அந்த இரண்டாம் வாளின் பிடியில் கட்டப்பட்டிருந்த சிறிய குழலை கவனித்த அகோட்டஸ், வாளை இருக்கையிலிருந்து எடுத்து, குழலைப் பிரித்து எடுத்து வெளிச்சத்தில் படித்தான். அகோட்டஸ் முகம் கருகியது…. கண்களில் கோபமும் வெறியும் கொப்பளித்தது….
அதே வேளையில் பவளத் தீவிலிருந்து முன்னூறு கடல்கல் மைலில் ஸ்கேட் என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய நாவாய் ஒன்றின் பாய்கள் அவிழ்த்து விடப்பட அது கிழக்கு நோக்கி தன் பயணத்தை தொடங்கியது… அந்த மரக்கலனின் முகப்பில் அர்த்த புஸ்டியோடு நின்று கொண்டிருந்தாள் ஆலிமா….. ஆம் அகோட்டஸ் பவளத்தீவு கோட்டைக்குள் கூறிய அதே ஆலிமா….
மரக்கலன் கிழக்கு நோக்கி ஆரவாரமாக கடலை கிழித்துக்கொண்டு சென்றது…. ஆலிமாவின் எண்ணங்களும் தான்….
தொடரும்….