Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 12

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 12

“இத்தனை நாள் வாய்ல என்ன வச்சிருந்த கமலி... கடைசி நேரத்துல வந்திட்டு இப்படி சொல்ற??” என்று சிவகாமியே மகளை கோபித்துக்கொண்டார்.

ஆனால் கமலியோ எதற்கும் அசருவதாய் இல்லை.. வீட்டினில் விருந்தாட்கள் நாளைய திருமணத்திற்காக வந்திருந்தனர். ஒருசிலர் சிவகாமி பக்கத்து உறவுகள், இன்னும் கொஞ்சம் பேர் மகுடேஸ்வரன் பக்கத்து உறவுகள். மிக மிக நெருங்கிய ஆட்களுக்கு மட்டுமே அழைப்பு வைத்திருக்க, அனைவரும் முதல்நாள் தான் வந்திருந்தனர்.

வந்தவர்கள் ஆளாளுக்கு பல கேள்விகள் கேட்டாலும் முடிவில் அனைவருக்குமே இதில் சந்தோசமே.

“பரவாயில்ல சிவா.. நல்ல முடிவு.. நாளைக்கு பின்ன ஒட்டு உறவுன்னு வேணாமா..” என்றுதான் சொன்னார்கள்..

கமலி அத்தனை நேரம் நன்றாகவே இருந்தவள், ராணி வந்து “கமலி தூங்க போ.. நேரமாச்சு.. நாளைக்கு அப்போதான் பிரெஷா இருக்கும்..” என,

“இருக்கட்டும் சித்தி.. கொஞ்சம் பேசணும்..” என்றாள் சிவகாமியைப் பார்த்து.

வீடிளிருந்தவர்களில் ஒருசிலர் உறங்கச் சென்றிருக்க, மற்றவர்கள் ஆங்காங்கே அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டு இருக்க, சிவகாமியின் அருகே இருந்த சங்கிலிநாதனோ “என்ன கமலிம்மா... இப்போ என்ன??” என்று கேட்க,

“நாளைக்கு கல்யாணம் தானே தாத்தா...” என்றார் ஒருவித யோசனையோடு..

“ஆமா...”

“எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு தாத்தா...” என்று அவள் ஆரம்பிக்கும்போதே சிவகாமி “கமலி என்ன இது??!!!” என்று அதட்டினார்..

“இரு சிவா கமலி சொல்லட்டும்..” என்ற சங்கிலிநாதன், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதனை எதிர்பார்த்து இருந்தாரோ என்னவோ.

“நாளைக்கு நான் கோவிலுக்கு வரணும்னா.. என்னோட கல்யாண முறைகள் எல்லாமே அந்த வீட்ல, அதாவது எங்க வீட்ல நடக்கணும்.. அவர் வீட்ல இருந்து என்னை யார் கூப்பிட வந்தாலும் சரி, அங்க வந்து தான் என்னை கூப்பிட்டு போகனும்.. அதேபோல, கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குற எல்லா சடங்கும் கூட அங்க அந்த வீட்ல தான் நடக்கணும்.. அம்மா.. நீ.. இனிமே அந்த வீட்ல தான் இருக்கணும்... இதுக்கெல்லாம் சம்மதம்னா... எனக்கும் இந்த கல்யாணத்துல மனப்பூர்வ சம்மதம்...” என்று அவள் சொல்லி முடிக்கவும் அப்படியொரு அமைதி அங்கே வீட்டினில்..

ஆனால் சங்கிலிநாதன் இதனை முன்னமே யூகித்திருப்பார் போல, பந்தல் போடும்போது கூட, வனமாலி வீட்டினில் ஆரம்பித்து, அப்படியே அந்த தெருவையே அடக்கி, மகுடேஸ்வரன் வீட்டினை கடந்து, இங்கே சிவகாமி வீடு முடிய போட சொல்லியிருந்தார்..

வனமாலி கூட கேட்டான் தான் “என்ன தாத்தா தெருவை அடக்கி போட்டு இருக்கீங்க..” என்று,

“இதுவும் நல்லாதானே இருக்கு வனா.. தெரியவேணாமா யார் வீடு கல்யாணம்னு.. சிம்பிளா பண்ணாலும் நமக்குன்னு ஒரு இது இருக்குல..” என்றுவிட்டார் அவர். சிவகாமி கேட்டதற்கும் கூட இதே பதில் தான்.

ஆனால் இப்போது கமலி இப்படி சொல்லவும் இவர் காரணமாகத்தான் செய்திருக்கிறார் என்று சிவகாமிக்குப் புரிய “கமலி.... இதெல்லாம் அத்தனை சீக்கிரம் நடக்காது...” என்றார் மகளிடம்..

“அப்போ இந்த கல்யாணம் நடக்கலைன்னா பரவாயில்லையாம்மா???”

“கமலி!!!!!!”

“ம்மா ப்ளீஸ்... நீ சொன்னதுக்கு நான் எந்த ரீசனும் கேட்காம சரின்னு சொன்னேன்.. ஆனா எனக்குன்னு சில நியாயமான விருப்பங்கள் இருக்கும்தானே.. அது ஏன் புரியலை உனக்கு.. ஏன் நான் அந்த வீட்டு பொண்ணு இல்லையா.. எனக்கு அங்க உரிமை இல்லையா...??” என, சிவகாமி வாயடைத்துப் போனார்..

மகள் கேட்பது சரிதானே... அவளும் அவ்வீட்டு மகள் தானே.. அந்த வீட்டில் பமீலாவிற்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேது கமலிக்கும் இருக்கிறது தானே. சிவகாமி வார்த்தைகள் அற்று அமைதியாகிவிட,

கமலியோ “ஏன்ம்மா நான் எதுக்குமே ஆசைப் படக்கூடாதா???” என்றாள் கண்களில் வழியும் ஏக்கத்தோடு..

“இல்ல.. இல்ல கமலி அப்படியில்லை..” என்று மறுக்க,

“வேற எப்படிம்மா.. எப்போவா இருந்தாலும் அதானே நம்ம வீடு..” என,

“ம்ம்...” என்று தலையை ஆம் என்று மேலும் கீழுமாய் ஆட்டியவர், “இதை சொல்ல உனக்கு இப்போதான் நேரம் கிடைச்சதா??” என்றார் வருத்தமாய்..

“ஹ்ம்ம் நீங்க யாராவது இதை செய்வீங்கன்னு நினைச்சேன் யாருமே இதை யோசிக்கலை.. நான் சொல்லிருந்தா கண்டிப்பா என்னை ஏதாவது சொல்லி வாய் மூட வைப்பீங்க.. அதான்..” என்றவள்,

“ம்மா இது நடக்கணும்...” என்றாள் உறுதியாய்..

மகளின் இப்பேச்சில் சிவகாமி சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தவர், “கமலி.. நீ சொல்றது எல்லாம் சரி.. ஆனா நான் எங்க இருக்கணும்னு முடிவு செய்ய வேண்டியது நான்தான்....” என,

“ம்மா...” என்றாள் அதிர்ந்து..

“நீ சொன்னது மத்தது எல்லாம் சரி.. ஆனா என்னை நீ அங்கதான் இருக்கணும்னு கட்டாயப் படுத்த முடியாது கமலி.. உங்கப்பா கூப்பிட்டே நான் போகலை அங்க.. இப்போ நீ சொல்லி நான் போனா அது அவருக்கு மரியாதை கொடுத்தா இருக்காது..”

இப்படி ஒரு கடினமான குரலில் சிவகாமி இத்தனை வருடங்களில் மகளிடம் பேசியதேயில்லை.. என்னதான் அம்மா மகள் என்றாலும் இது தான் உன்னுடைய எல்லைப் பகுதி என்று சிவகாமி கோடிட்டு காட்டிவிட்டார்.. அவருக்கு அவர் பக்க நியாயம்..

அன்றும் சரி இன்றும் சரி.. சிவகாமி தன் முடிவில் இருந்து மாற தயாராயில்லை.. அது கணவனுக்காக என்றாலும் சரி, மகளுக்காக என்றாலும் சரி.. எந்த சூழலிலும் சிவகாமி அங்கே அந்த வீட்டிற்கு செல்லும் எண்ணம் இப்போதில்லை. அதிலும் அங்கேயே வசிப்பது என்பது அவரால் முடியாத காரியம்.. கடந்து வந்த வாழ்க்கை, நினைக்கவே கூடாது என்று கடினப்படே விழுங்கிய நிகழ்வுகள் எல்லாம் அங்கே போனால் மீண்டும் காட்சியாய் விரியும்..
 
முடிந்தளவு தன்னையும் தன் மனதையும் நிம்மதியாய் வைத்துக்கொள்ளவே சிவகாமி விரும்பினார்.. அப்போதும் சரி இப்போதும் சரி.. ஆகையாலே இந்த திடம்..

“அப்.. அப்போ.. எனக்காகன்னு கேட்டாலும்...” என்று கமலி சொல்லும்போதே,

“உனக்காக நான் இருக்கணும் நினைச்சா நான் அங்க இருக்க முடியாது கமலி...” என்றுவிட்டார் பட்டென்று.

“அம்மா..!!!!”

“அது தான் நிஜம்... அங்க இருந்தா நான் நிம்மதியா இருக்க மாட்டேன்... அதுக்குமேல உன்னோட விருப்பம்...” என்று முகத்தினை திருப்பிக்கொண்டார்..

கமலி உர்ரென்று முகத்தினை வைத்துகொள்ள, அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சங்கிலிநாதனோ “இப்படி ரெண்டுபேரும் பிடிவாதம் செஞ்சா எப்படி??” என,

ராணியோ “நாளைக்கு கல்யாணம் வச்சிட்டு இதெல்லாம் தேவையா..??” என்றார்..

சிவகாமியோ “அதை அவக்கிட்ட சொல்லுங்க..” என்று கமலியை காட்ட,

கமலியோ “சரிம்மா.. நீ எங்க இருக்கணும்னு நான் முடிவு பண்ண முடியாது.. பட் என் கல்யாணம் எப்படி, எங்க நடக்கனும்னு நான் முடிவு செய்யலாம்ல...” என்றாள், என் முடிவிலும் எவ்வித மாற்றமும் இல்லையென்று.

“இப்போ என்னதான் செய்ய சொல்ற கமலி....”

“கல்யாண பொண்ணா நான் அந்த வீட்ல இருந்து தான் வருவேன்.. அதேபோல கல்யாணத்துக்கு அடுத்து நடக்குற எல்லாம் சம்பிரதாயமும் அங்க தான் நடக்கணும்...”

“கமலிம்மா... காலைல நான் போய் இந்திராக்கிட்ட பேசுறேன்.. இப்போ போய் எல்லாம் தூங்குங்க..” என்று சங்கலிநாதன் சொல்லவும்,

“அதெல்லாம் சரி தாத்தா, அம்மாவை அவங்க மருமகனுக்கு சொல்ல சொல்லுங்க...” என்றாள் இவளும் விடாப்பிடியாய்..

“நான் சொல்லமாட்டேன் கமலி. ஏற்கனவே என்ன சொல்லி வனா கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினானோ, எவ்வளோ டென்சன் அங்க இருக்கும்னு எனக்கு தெரியும்.. இதுல இதுவும் நான் அவனை படுத்தமாட்டேன்...”

“ஓ...!!!! அப்போ நானே சொல்லிக்கிறேன்...” என்று அறைக்கு வந்தவள் தான் வனமாலிக்கு அழைத்து, பேசினாள்.

வனமாலிக்கோ ஏற்கனவே வீட்டில் இருப்பவர்களை சமாளிக்க அல்லல்பட்டுக் கொண்டு இருந்தான்.. அவன் வீட்டிலும் உறவினர்கள் இருந்தார்கள், முக்கால்வாசி பேர் வனமாலியின் தந்தை வழி உறவுகள். அவர்களை எல்லாம் ‘வாங்க...’ என்று கேட்டதோடு சரி, மணிராதா எதுவும் பேசவில்லை.

நாளைய தினம் எப்படி கடக்கப் போகிறது என்று ஒருவித படபடப்போடு வனமாலி இருக்க, கமலி அழைத்து “நாளைக்கு நான் வரணும்னா அந்த வீட்ல வச்சு தான் எல்லாம் நடக்கனும்..” என்று சொல்ல, கடுப்பாகி போனான் அவன்..

“இத்தனை நாள் என்ன பண்ண நீ???” என்று கத்த,

“உங்க யாருக்காவது தோணுதான்னு பார்த்தேன்...” என்று அவளும் சற்று எகத்தாளமாய் சொல்ல,

“அத்தைக்கிட்ட போன் கொடு..” என்றான் இவன்..

“அவங்கக்கிட்ட இப்போதான்...” என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் சொன்னவள், “என் முடிவு இதுதான்...” என்று சொல்ல,

“ஓ...!!!!” என்றவன் “இது நடக்காட்டி...” என்றான்..

“நம்ம கல்யாணமும் நடக்காது...”

“ஹ்ம்ம் நடக்காதுங்கிற பேச்சுக்கு என்கிட்ட வேலையேயில்லை.. நாளைக்கு ரெடியா இரு..” என்றவன் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை வைத்துவிட்டான்..

வனமாலிக்கு அப்படியொரு கோபம் கமலியின் மீது இந்நேரத்தில் சொல்கிறாள் என்று. சொல்லப்போனால் இதெல்லாம் வனமாலியும் நினைத்தான் தான், ஆனால் இப்போது திருமணம் நடப்பது தான் முக்கியம், அதன்பின்னே அங்கே செல்வது பற்றி பார்த்துகொள்வோம் என்றிருக்க, கமலியோ இப்படி விடாப்பிடியாய் பேசுவது சற்றே எரிச்சல் கொடுத்தது.

ஒரு பெண்ணின் நியாயமான ஆசைதான். ஆனாலும் நேரம் காலம் என்று ஒன்று உள்ளதே.. இந்த நேரத்தில் வனமாலி அங்கே செல்லவும் முடியாது. ஆக என்ன செய்வது என்று யோசித்தவன் சங்கிலிநாதனுக்கு அழைத்துப் பேசினான்..

“நான் நாளைக்கு போய் இந்திராக்கிட்ட பேசிக்கிறேன் வனா... நீ கவலைப் படாதா...” என்று அவர் சொல்லிவிட, அவர்மட்டும் செல்வது சரியில்லையே, ஆக கோவர்த்தனுக்கு அழைத்து அறைக்கு வர சொன்னான்..

“என்னாச்சுண்ணா..” என்று கோவர்த்தன் கொஞ்சம் டென்சனாகவே வர,

“ஒண்ணுமில்ல டா.. நாளைக்கு சீக்கிரமே நீ மாமா வீட்டுக்கு போயிடு.. சங்கிலி தாத்தா அங்க வருவார் இந்திரா அத்தைக்கிட்ட பேச..” என,

“ஏன் என்னாச்சு?? எதுவும் பிராப்ளமா??” என்றான் தம்பிக்காரன்..

“ம்ம் கமலிக்கு அங்க மாமா வீட்ல வச்சுதான் எல்லாம் முறை செய்யணும் சொல்றா...”

“அதானே முறை..”

“ஆமா இப்போ வந்து எல்லாம் சொல்லுங்க...” என்று வனமாலி எகிற,

“சரி சரிண்ணா.. நாளைக்கு நான் போறேன்.. நீ வொர்ரி பண்ணிக்காத.. அம்மாக்கிட்ட பேசினியா.. நாளைக்கு வர்றேன் சொன்னாங்களா???” என்று கோவர்த்தன் பேச்சினை மாற்ற,

“ம்ம் எங்க... வாயே திறக்கலை.. வந்தனா பேசுறேன் சொல்லிருக்கா திரும்ப..” என, சரியாய் அங்கே வந்தனாவும் அம்மாவோடு பேசிக்கொண்டு தான் இருந்தாள்..

“ம்மா கொஞ்சம் யோசிம்மா..” என, மணிராதா மௌனமாகவே இருந்தார்..

“இருந்திருந்து அண்ணனுக்கு ஒரு நல்ல..” என்று அவள் சொல்லும்போதே, மகளை ஒரு பார்வை பார்க்க,

“ம்மா.. உனக்கு பிடிக்காதது அண்ணனுக்கு நல்லதா கூட இருக்கலாமில்ல” என்றாள் தன்மையாய்.

பதிலே அவரிடம் இல்லை.. இது மணிராதாவிற்கும் கடினமான சூழல் தான். இத்தனை வருடங்களாய் கட்டிக்காத்த ஒரு பிடிவாதம்.. மனதினுள்ளே சிவகாமி மீதிருந்த ஒரு வன்மம்.. அர்த்தமேயில்லாத அனைத்தும் இன்றும் அர்த்தம்பெற்றதாய் மாறி, தான் பெற்ற மகனே தன் முடிவினை கேட்காது ஒன்று செய்யும் போது, அவரின் அந்த திடம் ஆட்டம் கண்டது.. மணிராதாவினுள் எப்போதும் இருக்கும் அந்த செருக்கு தள்ளாட, வனமாலி சொன்ன வார்த்தைகளே அவர் மனதினுள் ஒலிக்கத் தொடங்கியது.

ஆம் சிறிது நேரத்திற்கு முன் வந்து பேசிவிட்டுதான் போனான்.

“ம்மா.. நீ எதுக்காக மாமாக்கு இந்திரா அத்தையை கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னு தெரியாது.. ஆனது அது சிவகாமி அத்தையோட வாழ்க்கையும் கூட.. எதோ ஒருவகைல சிவகாமி அத்தை அங்கிருந்து போனதுக்கு நீங்களும் ஒரு காரணம்... அதை உங்கனால கூட இப்போ மறுக்க முடியாது..

காலம் மாறலாம்.. ஆனால் சில விசயங்களுக்கு எத்தனை வருஷம் போனாலும் கூட, நம்ம பதில் சொல்லித்தான் ஆகணும்.. அது என்னோட விசயத்துல இருந்தே எப்பவோ ஆரம்பிச்சிடுச்சு... இனியாவது நம்ம எல்லாம் நல்லா இருக்கணும்னா இந்த கல்யாணம் நடக்கணும்.. சிவகாமி அத்தை மனசு கொஞ்சமாது அமைதியாகனும்.. கமலியோடு வெறுப்பு எல்லாம் மாறனும்.. எல்லாத்துக்கும் மேல, நீ வந்து எங்களை ஆசிர்வாதம் செய்யணும்..” என்றவன் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

அப்போதிருந்து மணிராதா இதனையே யோசித்துக்கொண்டு இருந்தார், வனமாலிக்கு முதலில் ஏற்பாடான திருமணம் நின்றதில் இருந்து அதன்பின் அங்கே சுபிக்ஷம் இல்லை.. கோவர்த்தன் பமீலா திருமணம் கூட மணிராதாவின் பிடிவாதத்தில் நடந்த ஒன்றுதானே.. அவர்கள் வாழ்விலும் அடுத்த நிலை முன்னேற்றம் என்று எதுவுமில்லை.

வந்தனாவிற்கு பல வரன்கள் தட்டிப்போய் இப்போதுதான் ஒன்று கூடி வந்திருக்கிறது.. அதேபோல் வனமாலியின் வாழ்வு, ‘இவன் கல்யாணம் செஞ்சுப்பானா??!!’ என்று பலர் கேட்டிருக்கிறார்கள் மணிராதாவிடம்.

அதுவும் இதோ நடக்கப் போகிறது. ஆனால் இவரின் விருப்பமில்லாது. இந்த திருமண பேச்சு வரவுமே, சிவகாமி வந்து தன்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்தார். அவரை ஒருவழி செய்ய காத்திருந்தார்.. ஆனால் அதுவும் அடிபட்டு போனது.
 
‘உன் மகனின் திருமணம் என்பது என் முடிவு...’ என்று சொல்லாது செய்து காட்டப் போகிறார் சிவகாமி..

அது யாருக்கு புரிந்தாலும் புரியாவிடினும் மணிராதாவிற்கு நன்கு புரிந்தது.. எதோ ஒருவகையில் சிவகாமியிடம் தான் தோற்றுப்போனதாய் நினைத்தார். அடி மேல் அடி... நாம் வீராப்பாய் காட்டிக்கொண்டாலும், நம் மனதிற்கு தெரியுமே. அவரை மீறி எல்லாம் நடந்துகொண்டு இருந்தது.

அனைத்தையும் தாண்டி இப்போது வந்தனா வந்து பேசிக்கொண்டு இருக்க, மணிராதாவிற்கு எங்கே சிவகாமி மகளை தன் வீட்டு மருமகளாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தன் மகளின் திருமணமும் நின்றுவிடுமோ என்ற ஆச்சம் காரணமே இல்லாது தோன்ற ஆரம்பித்து விட்டது..

வந்தனாவின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள “என்னம்மா...” என்றாள் பதற்றமாய்..

“ம்ஹும்...” என்று மறுப்பாய் தலையை ஆட்டியவர், “நீ போ..” என,

“ம்மா அது...” என்றாள் தயங்கி..

“வனா மனசு எதுவோ அதுவே நடக்கும்...” என்றவர், அதற்குமேல் பேச இயலாதவராய் கண்களை இறுக மூடி படுத்துக்கொண்டார்..

“நான் உன் கூடவே படுத்துக்கிறேன்..” என்று வந்தனாவும் அருகேயே படுத்துக்கொள்ள, கோவர்த்தன் வந்து இப்போது கதவு தட்டினான் வனமாலியோடு பேசிவிட்டு..

வந்தனா வந்து கதவு திறக்க, மணிராதாவும் என்னவென்று பார்க்க “ம்மா நாளைக்கு மாமா வீட்ல வச்சு தன் பொண்ணு அழைப்பு நடத்தணுமாம்...” என்றான்..

‘இதென்ன புது கதை...’ என்று இருவரும் பார்க்க,

“அண்ணன் இப்போதான் சொன்னான்.. நாளைக்கு சங்கிலி தாத்தா இந்திரா அத்தைக்கிட்ட பேச வர்றாராம்.. ஆனா முறையும் அதானே...” என்றுசொல்ல,

“யாரோட ஏற்பாடு...” என்றார் மணிராதா..

இத்தனை நேரத்திற்கு இப்போது தான் வாய் திறந்திருக்கிறார்..

“ம்ம் கமலி...”

“ஓ..!!!” என்றவருக்கு ஒன்றுமட்டும் தோன்றியது, ‘கமலி தன்னைப் போல் பிடிவாதக்காரியோ..’ என்று..

தானாவிட்டாலும், தன் தசை ஆடும்.. அது இப்போது தான் மணிராதாவிற்கு ஆடியதோ என்னவோ.. எதோ ஒருவகையில் கமலியிடம் அவர் தன்னை காண்பதாய் ஓர் எண்ணம்... இதற்குமேல் அவர் என்ன செய்ய முடியும்.. எதுவுமே செய்ய முடியாத நிலையில் கமலி தன்னை நிறுத்திவிட்டாள் என்று தோன்றியது..

அன்று சிவகாமியை தான் நிறுத்தியது போல்.. இன்று என்னை அவளின் மகள் செய்துவிட்டாள் என்று தோன்றவும் “ம்ம் செய்யுங்க.. நான் கோவிலுக்கு மட்டும் தான் வருவேன்..” என்றுவிட்டு சென்று படுத்துக்கொண்டார்..

இரட்டைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, கோவர்த்தன் ‘சரி பார்த்துப்போம்..’ என்றுசொல்லி சென்றுவிட்டான்..

நாளை திருமணம் வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட யாருக்கும் உறக்கமில்லை. விடிந்தால் என்ன நடக்குமோ என்ற எண்ணமே.. கமலியோ ‘என்ன கல்யாணம் பண்றது அவ்வளோ ஈசியா என்ன??’ என்று வனமாலியிடம் கேட்பது போல் தனக்கு தானே கேட்டுக்கொள்ள, வனமாலியோ, தன் அம்மாவிடம் பேசியதை எண்ணிக்கொண்டு இருந்தான்.

‘கமலி....’

இந்த பெயரை சமீப காலமாய் பலமுறை உச்சரிக்க நேர்ந்திருக்கிறது. சில நேரம் விருப்பமாய்.. சில நேரம் வெறுப்பாய்.. ஆனால் விருப்பிற்கும் வெறுப்பிற்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவே அவளோடான உறவு என்பது இப்போதுவரைகும்.. இனி அது மாறுமா தெரியாது??

ஆனால் அவள் தன் மனைவி என்ற எண்ணம் எப்போதோ வந்தது நிஜம். அது விருப்பத்தின் பேரிலா இல்லை வெறுப்பின் பேரிலா அவனேயறியான்.

ஆனால் அவன் மணிராதவிடம் சொன்னது மட்டுமே காரணமில்லை.. அதுவும் ஒன்றுதான் ஆனால் அதுமட்டுமேயில்லை.. அவரிடம் அப்படி பேசினால் மட்டுமே வேலை நடக்கும் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன??? அதனால் தான் அப்படி பேசியது..

‘ம்மா எனக்கு வேற வழி தெரியலை.. உன்னோட எமோசன்ல அடிக்க நினைக்கலை.. ஆனாலும் வேற வழியில்லை..’ என்று அவனும் அம்மாவிடம் சொல்வது போல் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்..

இரவு மெல்ல மெல்ல கவிழ்ந்து, பொழுது புலர்ந்திட, சங்கிலிநாதன் எப்போது அங்கே சென்றாரோ, இந்திராவிடம் என்ன பேசினாரோ யாருக்கும் தெரியாது, ஆனால் கோவர்த்தன் அங்கே செல்லும்போதே, அவர் அங்கேதான் இருந்தார்..

இந்திராவோ அரண்டு போன முகத்துடன் “எ.. என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க...” என்று சொல்லிவிட, கோவர்த்தனுக்கே ஆச்சர்யம் தான்.

பமீலா இன்னும் உறங்கி எழுந்து வரவில்லை என்பது தெரிய, கோவர்த்தன் அவளைத் தேடி போக, சங்கிலிநாதன், சிவகாமிக்கு அழைத்து “எல்லாம் வாங்கம்மா...” என்று அழைப்பு விடுத்தார்.

கோவர்த்தன் பமீலாவைப் பார்க்க, அவளோ நன்கு உறங்கிக்கொண்டு இருந்தாள், சரி இப்போதைக்கு இவளை எழுப்பவேண்டாம் வெளியே வந்தவன், வனமாலிக்கு அழைத்து சொல்ல, “அப்படியா சந்தோசம் டா..” என்றவன்,

“சரி நீ வா, இங்க வந்தனா, நீ, அப்புறம் இன்னும் ரெண்டு பேர் போய் தான் கமலிய அழைக்கணும்.. ” என்று தம்பியை அங்கே அழைத்துக்கொண்டான்..

நேரம் கொஞ்சம் கடந்திருந்தது... வீட்டினில் ஆட்கள் சத்தம் நிறைய கேட்க, பமீலா எழுந்தவள், குழப்பமாகவே வெளியே வந்து பார்க்க, அங்கேயே மணப்பெண் அலங்காரத்தில் கமலி இருக்க, அவளுக்கு முறைகள் செய்வது எல்லாம் சொந்த பந்தங்கள் செய்துகொண்டு இருக்க, மாப்பிள்ளை வீட்டு சார்பாய், மேல தாளம் ஒலிக்க, அவளை பெண் அழைத்துப் போக வந்துகொண்டு இருந்தனர்..

இக்காட்சியை கண்ட அடுத்த நொடி பமீலாவின் கண்கள் விரிய “அம்மா.... அம்மா...!!!” என்று கத்திக்கொண்டு இந்திராவை தேடிப் போனாள்..

கமலி பமீலாவையோ, இந்திராவையோ யாரையும் கண்டுகொண்டாள் இல்லை. சிவகாமியும் அப்படியே.. மகளின் திருமண நிகழ்வுகளை மனதிற்குள்ளே ரசித்துக்கொண்டு இருந்தார். அந்த வீட்டின் வரவேற்பறையில், ஆளுயரத்தில் மகுடேஸ்வரனின் புகைப்படம் மாட்டப்பட்டு இருக்க, சிவகாமியின் கண்கள் அதனைப் பார்த்து கலங்கிவிட,

“அக்கா.. என்னக்கா...” என்றார் ராணி ஆறுதலாய்..

அதன் பின் யார் நினைத்தாலும் யாராலும் எதுவும் நடக்காது இருக்கப் போவதில்லை என்பதற்கிணங்க, பெண் அழைப்பு செய்து, கமலியை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்றனர்..

அங்கேயே மாப்பிள்ளை கோலத்தில் வனமாலி இருக்க, சற்று தள்ளி எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தார் மணிராதா.. சிவகாமி அவரை நேருக்கு நேராய் பார்த்தவர், பின் என்ன நினைத்தாரோ அமைதியாய் போய் அவரின் அருகே நின்றுகொண்டார்..

ஆனால் அந்த பார்வையின் வீச்சு இம்முறை மணிராதாவால் தாங்கவே முடியவில்லை..

 
Top