Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 1 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 1
சிவகங்கை மாவட்டம் புதூர் கிராமம் துரைச்சாமி இல்லம். உயர்ந்த மதில்சுவர்களுக்கு நடுவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்த இரண்டடுக்கு பெரிய வீட்டு வாசலில் கரும்பு தட்டை, மஞ்சள் கொத்து கட்டப்பட்டு மாவிலை தோரணங்களுடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாட எதிர்நோக்கி இருந்தனர்.

வீடு முழுவதும் வெளியூரில் வசிக்கும் உற்றார் உறவினர்கள் அங்காளி பங்காளிகள் என நிரம்பி வழிய ஆட்டமும் பாட்டமும் உற்சாகமாய் திரியும் இளசுகள் மத்தியில் கடனே என அமர்ந்திருந்தான் ரிஷிவந்த்.
இத்தனை ஆர்ப்பாட்டமும் தன்னை ஈர்க்கவில்லை என்பதை போல இறுக்கமான முகபாவனையோடு தன் தாயை உறுத்துவிழித்தபடி பார்த்திருந்தான்.

அவனின் முறைப்பிற்கெல்லாம் அச்சம் கொள்ளாத சுமங்கலி வெகுநாட்கள் கழித்து சந்தித்த ஓரகத்திகள், அக்கா, தங்கைகள் அவர்கள் பிள்ளைகள் என அனைவரோடும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் மறந்தும் ரிஷியின் முகம் பார்க்கவில்லை.

அதில் இன்னும் ஏக கடுப்பிற்கு ஆளானான் அவர்களின் உத்தமபுத்திரன். தன் தாயை அழைக்க அவன் ஏக பிரயத்தனங்களை மேற்கொண்டும் பலனில்லாது போல பல்லைகடிக்கத்தான் முடிந்தது அவனால்.
துரைச்சாமி ஹாலிற்கு வர அத்தனை சலசலப்பும் அடங்கிப்போய் ஒரு அமைதி அலை பரவ மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றனர். நடுவில் நின்றவர் அனைவரயும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொண்டையை செருமியவர் வீட்டு பெண்களின் புறம் திரும்பி,

“மருமகள்களே, நாளைக்கு காலையில கோவில் பூசைக்கு தேவையான சரக்குகள் எல்லாம் எடுத்து பூஜையறையில வச்சாச்சா?...” என்று பொதுவாக கேட்டு சுற்றிலும் பார்வையை விட்டு வீட்டின் மூத்த மருமகளான திலகவதியிடம் நிறுத்த,
“ஆச்சுங்க மாமா. எல்லா வேலையும் முடிஞ்சது. நாளைக்கு பூசைக்கு எல்லாமே தயார் தான் மாமா. சரிபார்த்துட்டேன்...” என பணிவாக கூற,

“எல்லோரும் சாப்பிட்டாச்சா?...” மீண்டும் பார்வை வலத்தை தொடங்க,

“எல்லாமே பசியாறியாச்சுங்க மாமா...” என அடுத்த மருமகளான ரத்தினம்மாள் கூற,

“எல்லா வேலையும் ஆச்சுல. போய் உறங்கவேண்டியது தானே? இன்னும் என்ன இங்க பேச்சு?. காலையில எல்லோரும் நேரத்துக்கு கோவிலுக்கு கிளம்பனும். சூரியோதயத்துக்கு முன்னால பானை பொங்கனும். ஞாபகம் இருக்கட்டும்...” என கூறிவிட்டு ரிஷிவந்தை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றார்.

அவர் சென்றதும் அனைவருமே ஒரு பெருமூச்சை ஆசுவாசமாக வெளியேற்ற ரிஷிவந்த் ஆயாசமாக உணர்ந்தான். மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர விளைய,

“போங்க. போங்க, போய் அவங்கவங்க ரூம்ல தூங்குங்க. அப்பா சொன்னத மறந்துடாதீங்க. நாம பட்டணத்துல பொழைச்சாலும் நம்ம மண்ணு வரைமுறைகளை சரியா பின்பற்றனும்...”

“பொழைக்க போன இடம் வேறா இருந்தாலும் நமக்குன்னு வழிவழியா வர பாரம்பரியம், கலாச்சாரத்தை நாம காப்பாத்தி நமக்கு பின்னால வரும் தலைமுறைகளுக்கான சீதனமா தரனும். புரியுதா?...” என்ற சிவராமன்,
அங்கிருக்கும் வயதுபிள்ளைகளுக்கு சொன்னாலும் கண்கள் மகன் ரிஷியையே கண்டனத்துடன் மொய்த்துக்கொண்டிருந்தன.

“என்னண்ணே நான் சொல்றது சரிதானா?...” என தன்னுடைய மூத்த அண்ணன்களிடம் மறக்காமல் கேட்டுக்கொண்டார்.
காரைக்குடி, புதுக்கோட்டையில் பெயர்பெற்ற கல்லூரிகளை திறம்பட நடத்திவரும் தன் தந்தையின் ஆங்கிலப்புலமை பற்றி எத்தனையோ முறை வியந்திருக்கிறான் ரிஷி.

யாரையும், எத்தனை பெரிய பதவியில் இருப்பவர்களையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் தந்தையின் திறனையும் தைரியத்தையும் எண்ணி பெருமைகொள்ளாத நாளே இல்லை எனலாம்.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தந்தை சிவராமன் தாய், தகப்பன், அண்ணன், சொந்தங்கள் என வரும்போது தன்னுடைய உயரத்தையையும் பெருமைகளையும் விட்டு இறங்கி நின்று பேசுவதும் தந்தையிடமும், உடன்பிறந்த மூத்தவர்களிடமும் பணிந்து போவதையும் அவன் அறவே வெறுத்தான்.

தன் தந்தை இங்கு வந்ததும் தொலைந்து போகும் மாயம் இதுவரை அவன் அறியாதது. அவரை கட்டிவைக்கும் இந்த பாசத்தளைகளை அடியோடு வெறுக்கத்தான் செய்தான்.

ரிஷியை பொறுத்தவரை சிவராமனின் பாசம் என்பது தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பதை போல. ஆனால் அவனின் தந்தைக்கோ அனைத்திற்கும் அப்பாற்பட்டது குடும்ப பற்றும் சொந்தங்களிடையே பகிரப்படும் பாசமும்.
தந்தையையே இந்நிலையில் காண விரும்பாதவனுக்கு தன்னையும் இந்த வலையில் அனைவரும் சேர்ந்தே பிணைக்கவிருப்பதை தடுக்கமுடியவில்லை. அதற்கு காரணம் தாய் சுமங்கலியும், தந்தை சிவராமனும்.
அனைவரிடமும் ஒரு எல்லையில் பழக நினைப்பவனுக்கு இந்த எல்லைகளற்ற அன்பு அலை மூச்சடைத்தது. வெளிவரும் வழி இருந்தும் சூழ்நிலை கைதியாக நிற்கவேண்டிய தன் இயலாமை அவதிக்குள்ளாக்கியது. வாய் மூடி மௌனியாக நடப்பவற்றை பார்த்திருந்தான்.

“நீ சொல்றது என்னைக்கு தப்பா இருந்திருக்கு ராமா? நம்ம அப்பா நமக்கு சொல்லிக்குடுத்ததை நாம நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்ததால தான் வெளியூர்ல வெளிநாட்டுல இருந்தாலும் தடம்பிறளாமல் நம்ம பிள்ளைங்க நம்ம பிள்ளைங்களாவே வளர்ந்திருக்காங்க...”

தம்பியின் பேச்சை மெச்சிக்கொண்ட அண்ணன் உசிதமணி பெருமையாக சகோதரனை அணைத்துக்கொண்டார். அவரின் அடுத்தவரான முருகானந்தமும், சிவராமனின் தம்பியான சிகாமணியும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
நான்கு உடன்பிறந்த சகோதரர்களும் ஒருவரை ஒருவர் தழுவி தங்கள் பெருமையை பறைசாற்றிக்கொண்டனர். என்னதான் ஒருவரை ஒருவர் எப்போதாவது பார்த்துகொள்வதாக இருப்பினும் இப்பண்டிகை நேரங்களில் யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் இணைந்தே இருப்பார்கள்.
 
Last edited:
ரிஷியின் எரிச்சல் கரையை கடக்கும் அபாயத்தை அவனின் முகமே சுமங்கலிக்கு பறையடித்து காண்பிக்க சுதாரித்தவர் மூத்தார் மனைவி திலகவதியிடம்,

“அக்கா பேசிக்கிட்டே இருந்தா நேரமாகிட்டு இருக்குல. காலையில நேரத்தோட பொங்கல் வைக்கனுமே...” என

உத்தரவிற்காக காத்திருப்பதை போல கேட்டுவைக்க வேகமாக ரிஷி தாயின் அருகில் செல்ல முயல,

“அதுக்கென்னத்தா, இனி சோலி ஒண்ணுமில்லை. நாளைக்கு மறவாம ஐயா எடுத்துக்குடுத்த உடுப்பைத்தான் உடுத்தனும். நெனப்பிருக்குல...”என சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு சுமங்கலியையும் அழைத்துக்கொண்டு பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க சென்றார்.

அவர் சொல்லி சென்றது ரிஷிக்கும், அவனின் இளைய பெரியப்பா மகன் தினேஷிற்கும் என்பது அனைவருக்குமே வெட்டவெளிச்சம். ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை.

துரைச்சாமியின் குடும்பம் மிகவும் பெரியது. அங்காளி பங்காளி என அனைவருமே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருபவர்கள். துரைச்சாமிக்கு ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் என அவ்வூரிலேயே ஒரே குடும்பகாம வசித்துவந்தனர்.

துரைச்சாமியின் தலைமுறை வரை அவ்வூரிலேயே தோப்பு, வயல் என பண்ணையம் செய்ய அவரும், அவர் அண்ணன் பெரியசாமியும் தலையெடுத்து பஞ்சு மில் என மெல்ல கால்பதிக்க ஆரம்பித்து அதை வெற்றியும் காண அவர்கள் பிள்ளைகள் படித்து ஆளுகொரு தொழிலில் சொந்த முயற்சியில் கால்பதித்துக்கொண்டனர்.

பெரியசாமி உடல்நலகுறைவால் இறந்துவிட அவருக்கு பின் அவர் மனைவி கோமதியும் அவருடனே காலமானார். மொத்த குடும்ப பொறுப்பும் துரைச்சாமியிடம்.

அவரின்றி ஒரு அணுவும் அசையாது அவ்வீட்டில். அவரின் சொல்லிற்கு மறுபேச்சு எழும்பாதென்பது அவ்வூரறிந்த உண்மை. பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் என வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருந்தாலும் பொங்கல் பண்டிகை என்றும் வரும் பொழுது அவ்வீட்டில் தான் கொண்டாடவேண்டும்.

அக்குடும்பத்தை பொறுத்தவரை அது எழுதப்படாத சட்டமும் கூட. இதுவரை மீறியவர் எவருமில்லை. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைவரும் வந்துவிட அன்றைக்கே குலதெய்வம் கோவிலுக்கு சென்று பூஜை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவர்.

வந்ததும் துரைச்சாமி தன் உடன்பிறப்பான மகாதேவியின் வீட்டிற்கு தன் குடும்பம் சகிதமாக சென்று பட்டுபுடவை, பட்டு வேஷ்டி, ஒரு கட்டு கரும்பு, ஏழுவகை பழங்கள், எழுவகை கிழங்குகள், அரிசிப்பானை, அரிசிப்பெட்டி, பருப்பு வகைகள், நெய், மஞ்சள்கிழங்குகள், இவையனைத்தும் பொங்கலுக்கும் மூன்றுநாள் முன்பு கொடுத்துவிடுவார்.
இவர்களை வாசலில் வைத்து ஆரத்தி எடுக்கும் மகாதேவி அனைவரயும் வரவேற்று அன்றைக்கான கறிவிருந்தை தன் சொந்தங்களுக்கு நிறைவாக உபசரித்து வழியனுப்பிவைப்பார்.

காலங்காலமாக நடைபெறும் அவர்களின் பழக்கவழக்கங்களை, சகோதரிக்கும், மகள்களுக்கும் செய்யும் சீர்வரிசைகளை எந்த சூழ்நிலையிலும் அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.

அதை தன் வாரிசுகளும் தன் வீட்டில் பிறக்கும் பெண்பிள்ளைகளுக்கு அந்த மரியாதையை குறைவின்றி செய்ய கற்றுக்கொடுக்கவும் செய்தார். இன்றுவரை தன்னுடன் பிறந்த சகோதரிக்கான சீரை தன் கையாலேயே கொடுத்தும் வருகிறார் துரைச்சாமி.

பிள்ளைகள், மருமக்கள், பேத்தி, பேரன்களுக்கும், துரைச்சாமியே தன் கையால் புது உடுப்புகளை தட்டில் வைத்து வழங்குவர். அதைத்தான் கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்லும் பொழுது உடுத்தியிருக்கவேண்டும்.
இது அவரின் பிள்ளைகள் தன் பிள்ளைகளுக்கு தரும் அன்பான கட்டளை. இன்றுவரை எந்த மீறல்களும் இல்லாமல் கட்டுக்கோப்பாக செவ்வனே சென்றுகொண்டிருக்கிறது துரைச்சாமியின் பரம்பரை.

விடிய வெகுநேரம் இருந்தும் கதவு படபடவென தட்டப்பட எரிச்சலுடன் கண்விழித்தான் ரிஷிவந்த்.

“ரிஷி, கதவை திறய்யா. ரிஷி தம்பி...” என்ற குரலில் ரௌத்ரமானவன்,

“ஆரம்பிச்சுட்டாங்க போல அவங்க சுப்ரபாதத்தை...” என்ற சன்னமான முணுமுணுப்போடு எழுந்து கதவை திறக்க அவனின் கோலம் கண்டு கொஞ்சம் ஆசுவாசமானார் சுமங்கலி.

“நல்லவேளைய்யா நீயே தயாராகிட்டே...” கோவிலுக்கு தயாராக கிளம்பியே வந்து கதவை திறந்த மகனின் பொறுப்பில் முகம் மலர்ந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது.

மகனின் முகத்தில் தூக்கக்கலக்கம் கொஞ்சமும் குறையாமல் கலைந்த தலையோடு நிற்பதை முறைத்து பார்க்க, அதை உணர்ந்தது போல ரிஷியும்,

“டவுட்டே வேண்டாம் மாம். நான் நைட்டே குளிச்சுட்டு இந்த ட்ரெஸ் போட்டுட்டுதான் படுத்தேன். அப்போதானே நீங்க எழுப்பினதும் அப்டியே கிளம்ப சரியா இருக்கும்...” என,

“ஐயோ ராமா...” தலையில் அடித்துக்கொண்ட சுமங்கலியை அசால்ட்டாக பார்த்தவன் முகம் கழுவ பாத்ரூம் சென்றான்.
“உனக்கு எத்தனை தடவை சொல்றது ரிஷி. அம்மான்னு கூப்பிடுன்னு. உன் தாத்தாவுக்கு கேட்டா வருத்தப்படுவாரு...” என சொல்ல,

“கேட்கட்டும். ஐ டோன்ட் கேர் மாம். நான் எப்படி உங்களை கூப்பிட்டு வளர்ந்தேனோ அப்டித்தான் கூப்பிடுவேன்...” என்று முகத்தை துவாலையில் ஒற்றி எடுத்தவன் அதை சுமங்கலியின் தோளில் போட்டுவிட்டு கண்ணாடியின் முன்பு சென்று தலைவார நின்றான்.

“இது என்ன பிடிவாதம் ரிஷி?...” கொஞ்சம் கவலையோடு கெஞ்சல் குரலில் தான் கேட்டார் சுமங்கலி.
“உங்க பிடிவாதத்துக்கு எந்தவிதத்திலும் என்னுடைய பிடிவாதம் இணையில்லை மாம்...” என்றவனின் முகன் களையிழந்து காணப்பட்டது.

மனம் பிசைய மகனின் முகத்தை பார்த்தவருக்கு இப்போது அவனிடத்தில் இலக்கம் காண்பித்தால் உடனே தலைமேல் ஏறிவிடுவான் என்பது நிச்சயம். கரையத்துடித்த மனதை இருக்கிப்பிடித்தார்.
“கிளம்பு ரிஷி...” கொஞ்சம் கண்டிப்போடு கூறி வெளியேறிவிட்டார்.
 
Last edited:
அசையாது நின்று தாயையே பார்த்திருந்தவன் தினேஷின் குரல் வெளியில் கேட்க ஒரு கசந்த முறுவலோடு கிளம்பிவிட்டான்.

கோவிலுக்கு சரியான நேரத்தில் அனைவரும் வந்திருக்க துரைச்சாமியின் முகம் பொலிவாக இருந்தது. பொங்கல் வைக்க வேலைகள் ஆயத்தமாக வரிசையாக பானைகளை வைக்க தொடங்கினர்.

முதலில் துரைச்சாமியின் அண்ணன் பெரியசாமியின் மக்கள் பொங்கல் பானைகளை அடுப்பு சேர்த்து வைக்க அதன் பின் துரைச்சாமியின் பிள்ளைகளான உசிதமணியில் ஆரம்பித்து அடுத்தடுத்து பானைகளை அடுக்கி அனைத்திற்கும் முன்னால் கோவிலுக்கென ஒரு பானையை வைத்தனர்.

கோவில் பூசாரி வந்து கற்பூரத்தால் அடுப்பை கூட்ட மற்ற அடுப்புகளும் எரிக்கப்பட்டு பொங்கல் வைக்க ஆரம்பித்தனர்.
பொங்கல் வைத்து படையல் போட்டு சாமிகும்பிட்டதும் ரிஷிக்கு பெரிய விடுதலை கிடைத்தது போல இருந்தது.

எப்போதடா வீட்டிற்கு சென்று இந்த பட்டுவேஷ்டி, பளபள சட்டையை கழட்டி கேஷ்வல்வேர் எடுத்துப்போம் என்றானது.
ஒரு வழியாக பூசை முடிந்து அனைவரும் வைத்திருந்த பொங்கலை கோவில் வளாகத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பாரிமாறி உண்டு முடித்து வீடுவந்து சேர துரைச்சாமி மட்டும் நேராக தன்னுடைய அறைக்குள் நுழைந்துவிட்டார்.
இது வழக்கமாக நடப்பதுதான் என்றாலும் அனைவரும் ஹாலிலேயே தேங்கி நின்று காத்திருந்தனர் துரைச்சாமியின் அழைப்பிற்காக.

ஒரு கையில் விபூதி குங்குமம் பிரசாதமும், மறுகையில் வாழைஇலையில் கொஞ்சம் சக்கரைப்பொங்கலுமாக உள் நுழைந்தவர் அங்கிருந்த பெண்ணை பார்வையாலேயே அகற்றினார்.

கட்டிலை நெருங்கியவர் அதன் ஓரத்தில் அமரும் முன்பே அவரின் விழிகள் கலங்கிவிட்டன.

“நாயகி...” என கரகரத்த குரலில் அழைக்க கட்டிலில் வயதான தோற்றத்தில் படுத்திருந்த துரைச்சாமியின் மனைவி நாயகியம்மாள் மெல்ல கண்மலர்ந்தார்.

“கோ...கோ... கோ...வில்...லுக்கு போ...ய்ட்டு வந்தா...ச்சா?...” என திக்கி திணறி கேட்க அதற்குள் உதட்டோரம் வடிந்திருந்த உமிழ்நீரை துடைத்துவிட்ட துரைச்சாமி,

“போய்ட்டு வந்துட்டோம்ஞ்சே. உனக்கு பிரசாதமும் கூட கொண்டாந்துட்டேன் தாயி...” என்றவர் முதலில் குங்குமத்தை நாயகியின் வகிட்டில் இட்டவர் திருநீற்றையும் பூசிவிட்டு பொங்கலை அவரின் வறண்ட இதழ்களினுள் கொஞ்சமாக வைத்தார்.

ஒரு கையும் காலும் பக்கவாதத்தில் விழுந்திருக்க உதடுகள் ஒருபுறமாக கோணி கணவன் வைத்த பொங்கலை ரிசித்தவரின் உள்ளம் இன்றுவரை தன் மீது மாறா நேசம் கொண்டிருக்கும் துரைசாமியின் அன்பில் பூரித்தது.

மெல்ல பொங்கல் வாயில் கரைய முழுவதுமாக உண்ட பின் உதடுகளை துடைத்த துரைச்சாமி,
“புள்ளைங்க ஆசிர்வாதத்துக்கு காத்திருக்குதுக தாயி. உள்ளாற கூப்புடட்டுமா?...” என உடனே தலையாட்டி சம்மதித்தார் நாயகியம்மாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற மாட்டுப்பொங்கல் நாளில் தான் மாடியிலிருந்து விழுந்தவர் பின் எழவே இல்லை. படுத்த படுக்கையாகி பக்கவாதத்தில் விழுந்தவரை குழந்தை போல தாங்கிக்கொண்டது குடும்பம்.

தன்னுடைய மேற்பார்வையிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக கவனித்தார் துரைச்சாமி. மகன்களும் பேரன் பேத்திகளும் தங்களோடு அழைக்க வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் நாயகியம்மாள்.

உயிர் பிரிந்தாலும் துரைச்சாமியின் மடியிலும், உயிர் மூச்சான சொந்த மண்ணிலும் தான் பிரியவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் நாயகியம்மாள். அவரின் பேச்சிற்கு துரைச்சாமியிடமே மறுப்பில்லை எனும் போது அவரின் வாரிசுகளிடமா மறுப்பிருக்கும்?

துரைச்சாமியின் அழைப்பிற்கு காத்திருந்த பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராக குடும்பம் சகிதமாக சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள ரிஷியும் அவ்வாறே சென்றான்.

சென்றவனை ஓரிரு நிமிடம் தன் கைவளைவிற்குள் நிறுத்திவைத்து பார்த்தார் துரைச்சாமி. ரிஷிவந்த் தன்னுடைய அண்ணன் பெரியசாமியின் மறுபிம்பமாக அவரயே உரித்துவைத்து பிறந்திருக்கும் அவன் மீது எப்போதுமே அலாதி ப்ரியம்.

அதை காண்பித்துக்கொள்ளவே மாட்டார். கணவரின் முகத்தில் தெரியும் பெருமிதத்தை மனதார உள்வாங்கிய நாயகி ரிஷியை அருகிலழைத்து உச்சிமுகர்ந்தார்.

ஏதேதோ பேச உணர்வுகள் முட்டி மோதினாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாயகியால் ஒரு வார்த்தையை கூட வெளிவிட முடியவில்லை. அவரின் வேதனையை பார்த்த ரிஷி,
“இதுக்குத்தான் நான் பாட்டியை சிட்டிக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் குடுக்கலாம்னு சொன்னேன். யாராவது கேட்டீங்களா? என்னோடு எப்படி கலகலப்பா பேசுவாங்க என் பாட்டி. எல்லாம் உங்க எல்லாரோட பிடிவாதத்தால...” என துரைச்சாமியை பார்த்து கத்தியவன்,

“ஐ ஹேட் திஸ்...” என சொல்லி சிறுபிள்ளை போல விசும்பிக்கொண்டே வெளியேறிவிட்டான்.
அவனின் வருத்தம் புரிந்த துரைச்சாமி அமைதியாக உட்கார்ந்துவிட அவரையும் நாயகியையும் அவஸ்தையாக பார்த்தார் சுமங்கலி.

“மன்னுச்சுக்கோங்க அம்மா. அவன் சின்னபுள்ளை மாதிரி பேசுப்புட்டானுங்க...” என மன்னிப்பு கோரி நின்ற மகனையும் மருமகளையும் பார்த்த நாயகி ரிஷியை சமாதானம் செய்யுமாறு சைகையில் கூறி அனுப்பிவைத்தார்.

மனமின்றி வெளியேறிய சிவராமன் அறைக்கு வெளியில் நின்ற தன்னுடைய சகோதரர்களை பரிதாபமாக பார்த்தார்.

அவரின் தோள் அனைத்த அண்ணன் உசிதமணி ஆறுதலாக தன்னோடு அமர்த்திக்கொண்டார். அவருக்கு தெரியும் ரிஷியின் இந்த கோபம் எதனால் என்று. ரிஷியை யாரும் தொந்தரவு செய்யகூடாது என்று சொல்லிவிட அவனாக வரட்டும் என கனத்த உள்ளத்தோடு அனைவரும் மாலை வீட்டிற்கு இரு பொங்கல் வைக்கும் வேலைகளை ஆரம்பித்தனர்.
 
அறைக்குள் நுழைந்த ரிஷி தன் இயலாமையால் காற்றி குத்துவிட்டவன் மீண்டும் மீண்டும் அதையே செய்ய தவறி கை சுவற்றில் பட்டுவிட வலியில் படுத்துவிட்டான்.
“கை வலியை விட மனவலி அதிகமாக இருக்க விழிகளை இருக்க மூடிக்கொண்டான். சிரித்த முகமான நாயகியம்மாளின் மஞ்சள் முகம் நிழலாக தெரிய மூடிய விழிகளில் இருந்து சூடான கண்ணீர் விழுந்தது.
-------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் புகழ்பெற்ற ஆர்ஜே கலை அறிவியல் கல்லூரியை ஒட்டி அமைந்திருந்த பெண்கள் தாங்கும் விடுதி வளாகம் அதிகாலை ஐந்துமணிக்கு காரிருளில் மூழ்கி இருக்க அனைவரும் குளிருக்கு இதமாக போர்வையை இழுத்து போர்த்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

“வேர் இஸ் த பார்ட்டி? ஆ உங்க வீட்ல பார்ட்டி. வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி...” என்ற ரிங்க்டோன் உறங்கிக்கொண்டிருந்த சைந்தவியின் காதுக்குள் மட்டும் உச்சஸ்தானியில் அலற அதற்கு இணையாக தானும் அலறி பதறி விழித்தாள்.

அந்த அறையில் உடன் உறங்கிக்கொண்டிருந்த மேலும் இரு பெண்கள் விழித்துக்கொள்ள மூவரும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டனர். சைந்தவிக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.
அவர்களை தவிர்த்து மற்றொரு கட்டிலில் நிம்மதியாக உதட்டில் உறைந்த புன்னகையோடு உறங்கிக்கொண்டிருந்தாள் நேத்ரா.

மூவரும் முகத்தில் கொலைவெறியோடு உறங்கும் நேத்ராவையே பார்த்திருக்க அவள் புரண்டு படுக்கும் அரவத்தில் கவனமாக தன் முகக்கடுப்பை கட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்.
மற்ற இருவரும் படுத்துவிட சைந்தவி மட்டும் விழித்திருந்தாள் ஐந்தரை மணிக்கு நேத்ராவை எழுப்பிவிட.
உறக்கம் விழிகளை நிறைக்க இருந்தாலும் முயன்று அதிலிருந்து வலுக்கட்டாயமாக வெளிவந்தாள் சைந்தவி.
மீறி உறங்கிவிட்டால் ஆஞ்சு பிச்சு கையில் கொடுத்துவிடமாட்டாளா? அதன் பின் விளைவுகள் மோசமாகிவிடுமே?.......

அலை பாயும்...
 
:D:D:D

site வந்த புதுசுல விழுந்து விழுந்து படிச்சதுல இதுவும் ஒன்னு........

அந்த காலேஜ் படிச்சதும் நியாபகம் வந்திடுச்சு........
:love::love::love:
 
Top