21. இவன் வசம் வாராயோ!
நிரஞ்சனாவை சேலம் போகமல் சென்னைக்கு வரச் சொல்லி பைரவியின் தோழியுடைய சகோதரன் சொல்ல, நிரஞ்சனாவும் சென்னைக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்னை செல்லும் பேருந்தில் ஏறினாள்.
அவளுடைய கெட்ட நேரமோ என்னவோ, அந்தப் பேருந்து சில அடி தூரம் சென்றதுமே பழுதடைந்து நின்றது.
பேருந்தின் நடத்துனர் இதே பயணச்சீட்டினை பயன்படுத்தி வேறு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று எல்லாருக்கும் அவரவர்களின் பயணச்சீட்டில் குறித்துக் கொடுத்தார்.
நிரஞ்சனாவும் தன் பயணச்சீட்டில் நடத்துனரின் கையொப்பத்தை பெற்றுக் கொண்டு அடுத்த பேருந்துக்காக மற்ற பயணிகளுடன் காத்திருக்கலானாள்.
அப்போது கரிய பெரிய உருவத்துடன் பெரிய வீச்சருவாளுடன் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான் முரடன் ஒருவன்.
அவன் பின்னால் இன்னும் சிலர் கத்தி கம்புகளுடன் ஓடி வந்தனர்.
அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே நிரஞ்சனாவின் அடிவயிற்றில் பயப்பந்து உருளத் தொடங்க, அதன் விளைவாக அவளுக்குத் தலைசுற்றத் தொடங்கியது.
பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பயத்தோடு விலகி ஓட, நிரஞ்சனாவால் அப்படி ஓடக் கூட முடியவில்லை.
அந்த முரடன் இவளுக்கு முன்னே இன்னும் ஐந்தடி தூரத்தில் இருக்க, இவளுக்குப் பின்னால் நின்றிருந்த பெண் ஒருத்தி அழுகையுடனும் பயத்துடனும் கதறினாள்.
"வேண்டாம் தம்பி.. என்ன ஒண்ணும் செஞ்சிடாதீங்க.. ப்ளீஸ்.. நாந்தான் இந்த ஊர விட்டு போயிடறேன்னு சொல்றேன்ல.."
"ஏய்.. வாய மூடுடீ.." என்று ஆரம்பித்து மேற்கொண்டு காதில் கேட்கச் சகிக்காத வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டே அவளை வெட்ட வந்தான்.
ஒரு கால் சூம்பிப் போன நிலையில் முதுகில் கூன் விழுந்து நிற்கக் கூட முடியாமல் நடப்பதற்கு ஊன்றுகோல் (crutches) வைத்திருந்தாள். ஆனால் இப்போதைய அலைச்சலிலும் பயத்திலும் பொலிவிழந்து காணப்பட்டாலும் அவளுடைய முகம் களையாக அழகாக இருந்தது. அவளுடைய வயிறு கொஞ்சம் மேடிட்டிருக்க, அவள் ஒரு உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவளுடைய கர்ப்பத்தைப் பார்த்ததும் நிரஞ்சனாவுக்கு எங்கிருந்துதான் அத்தனை ஆவேசம் வந்ததோ, அந்த முரடனைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு அவன் கையிலிருந்த வீச்சரிவாளைப் பிடுங்கி,
"டேய்.." என்று கத்திக் கொண்டே அவன் கையில் ஓங்கி வெட்டினாள்.
மற்றவர்கள் எல்லாரும் பயந்து ஓட, சிலர் ஓடி வந்து வெட்டு வாங்கியவனைப் பார்க்க, அவன் மயங்கினான்.
"யம்மா.. போய்டுங்கம்மா.. இங்கேந்து போய்டுங்க.." என்றார் ஒரு பெரியவர். அப்போதுதான் நிரஞ்சனா தன் சுயநினைவுக்கு வந்தாள் போலும். அவனுடைய கையில் வெட்டுக் காயமும் அதிலிருந்து வழியும் ரத்தமும் தன் கையில் அரிவாளையும் கண்டுவிட்டு மயங்கத் தொடங்கினாள்.
அந்தப் பெரியவர், அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி நிரஞ்சனாவையும் அந்த கருவுற்ற பெண்ணையும் அவர்களுடைய பைகளையும் அதில் ஏற்றி அனுப்பினார்.
நிரஞ்சனா அரை மயக்கத்திலிருக்க, அந்தப் பெண் தன் கைப்பையிலிருந்து தன் கைப்பேசியெடுத்து யாருக்கோ அழைத்துப் பேச, அந்த ஆட்டோ எங்கோ சென்று கொண்டிருந்தது.
அரை மணி நேரப் பயணத்துக்குப் பின் அந்த ஆட்டோ எங்கோ நின்றது. அந்த ஆட்டோ நின்ற இடத்தில் ஒரு கார் நின்றிருந்தது. அந்தக் காரில் அந்தப் பெண் ஏறிக் கொண்டு நிரஞ்சனாவையும் ஏற்றிக் கொண்டாள். கார் கிளம்பியது.
காரினுள் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஓட்டுனர் மிக மரியாதையுடன் அந்தப் பெண்ணிடம் பேசினான்.
ரொம்ப தூரம் போன பின் அவர்கள் நம்மைத் தொடரவில்லை என்று உறுதி செய்து கொண்டு ஒரு சிறிய உணவகத்தின் முன்னே வண்டியை நிறுத்தச் சொன்னாள் அந்தப் பெண்.
அப்போதும் அவள் காரை விட்டு இறங்காமல் அந்த காரோட்டியையே எல்லாம் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டாள். நிரஞ்சனாவையும் சாப்பிடச் சொன்னாள்.
நிரஞ்சனா மறுத்தபோது வற்புறுத்தி உண்ண வைக்க, அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்து வண்டியை விட்டு இறங்கி ஓடிப்போய் சாலையோரமாக வாந்தியெடுத்துவிட்டு வந்தாள்.
"ஒனக்கு ஒடம்புக்கு என்ன.." என்று அவள் பதறிப் போய்க் கேட்க,
"இல்ல.. நானும் கர்ப்பமா இருக்கேன்.. இப்பதான் மூணு மாசமாகுது.." என்று தயங்கியபடி சொன்னாள் நிரஞ்சனா.
"ஓ.. சாரிமா.. என்னால ஒனக்கு வீண் அலைச்சல்.. நீ எங்க இறங்கணும்னு சொல்லு.. அங்க இறக்கி விடறேன்.."
நிரஞ்சனா தன் திருமண வாழ்வைப்பற்றி மட்டும் சுருக்கமாகச் சொல்லி,
"எங்கம்மாவும் அண்ணனும் ரொம்ப கொடுமை படுத்தறாங்க.. என்ன வெச்சி சோறு போடறதே வேஸ்ட்டு.. இதுல இந்த குழந்தை வேறயான்னு கேட்டு அத கலைக்க முயற்சி செய்யறாங்க.. நா பண்ணின பாவம்.. இப்டி கஷ்டப்படறேன்.. இன்னும் முழுசா உருவாகக் கூட இல்ல.. இந்த பச்ச மண்ணு என்ன பாவம் பண்ணிச்சு.. அதான்.. எங்கியாவது போய் பாத்திரம் தேய்ச்சாவது பொழச்சிக்கலாம்னு.. வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன்.." என்று கூறி முடித்தாள்.
"நீ என் உயிர காப்பாத்தியிருக்க.. உனக்கு நான் உதவி செய்யறேன்.. வா.." என்று கூறி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் அந்தப் பெண்.
"உங்க பேர் என்னக்கா.."
"வரலட்சுமி.. உன் பேரு.."
"நிரஞ்சனா!"
"அழகான பேர்! சரி.. மொதல்ல.. உன் போன்லேர்ந்து சிம்மை தூக்கிப் போடு.. இல்லன்னா இத வெச்சி உங்கண்ணனும் அம்மாவும் உன்ன கண்டுபிடிச்சிடப் போறாங்க.." என்றாள் வரலட்சுமி.
"ஐயோ.. இன்னிக்கு சாந்தரம்தான் ரீசார்ஜ் பண்ணிச்சு.." என்று அவசரமாக மறுத்தாள் நிரஞ்சனா.
"எத்தன லட்சத்துக்கு பண்ணின.." என்று பொய்யான கோபத்துடன் வரலட்சுமி கேட்க,
"ஹூம்.. பத்து ரூபாய்.."
"ஏய்.. பத்து ரூபாய்க்கா இவ்ளோ பதட்டப்படற.."
"அதில்ல.. என்ன திட்டிகிட்டே அண்ணன்தான் பண்ணிச்சி.."
"ஹையோ.. நிரஞ்சனா.. நீ ஒரு லூசுதான்.."
"ஆமா.. ஓடிப் போன எம்புருஷன் கூட இப்டிதான் சொல்வாரு.." என்றாள் நிரஞ்சனா.
"ஹா.. ஹா.. ஹா.." என்று வாய்விட்டு சிரித்தாள் வரலட்சுமி. அவளுடைய சிரிப்பையே கண் கொட்டாமல் பார்த்தாள் நிரஞ்சனா.
"என்ன? என்னையே பாக்கற.." வரலட்சுமி கேட்க, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா.." என்றாள் நிரஞ்சனா.
அதற்கும் சிரித்தாள் வரலட்சுமி.
இருவரும் சில நிமிடப் பேச்சில் நல்ல நட்பாகி விட்டனர்.
ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிரஞ்சனாவுக்கு பால் ஜூஸ் என்று வாங்கிக் கொடுத்தாள் வரலட்சுமி.
மூன்றரை மணிநேரப் பயணத்துக்குப்பின் கிட்டத் தட்ட இரவு பதினொரு மணியளவில் அவர்கள் தேனியை அடைந்திருந்தனர்.
தேனிக்குள் நுழைந்து டவுனைத் தாண்டி சிமென்ட் வீடுகள் குறைந்து குடிசைகள் ஆரம்பிக்கும் பகுதியில் கார் சென்று ஒரு வீட்டின் போர்ட்டிக்கோவில் நின்றது.
ஓட்டுனர் இறங்கி வந்து வரலட்சுமி காரிலிருந்து இறங்க உதவி செய்ய, நிரஞ்சனாவும் இறங்கி வந்து அவளுடைய ஊன்றுகோலை எடுத்துக் கொடுத்தாள்.
அதற்குள் கார் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வீட்டு வாசலில் மின் விளக்கு போட்டார்கள். அதுவரை கும்மிருட்டாக இருந்த அந்த இடத்தில் லேசாக வெளிச்சம் வந்தது.
வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் அந்த ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வரலட்சுமியிடம் வந்தாள்.
"என்ன தங்கம்.. இன்னும் தூங்கலயா? புருஷனப் பாக்க முழுச்சிட்டிருந்தியா?" வரலட்சுமி கேட்க, அந்த தங்கம் புன்னகைத்தாள்.
வரலட்சுமி காரிலிருந்து இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள். ரொம்ப நேரம் உட்கார்ந்த நிலையிலேயே இருந்ததால் கால்களை தரையில் ஊன்ற முடியாமல் தவித்தாள்.
நிரஞ்சனாவும் அந்த தங்கமும் அவளை விழாமல் பிடித்துக் கொள்ள, அவள் கொஞ்சம் கொஞ்சமாய் சுதாரித்துக் கொண்டு நடக்கலானாள்.
வீட்டுக்குள்ளிருந்து ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி அவசரமாக ஓடி வந்தாள்.
அவள் பார்ப்பதற்கு வரலட்சுமியின் முகசாடையில் இருக்க, வரலட்சுமியின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நிரஞ்சனா கணித்தாள்.
"லட்டு.. லட்டு.. என்னம்மா.. ஐயோ.. இப்டி ஆய்டுச்சேம்மா உன் வாழ்க்கை.." என்று கலங்கியபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் அந்த முதியவள்.
"அம்மா.." உடைந்து போய் அழுதாள் வரலட்சுமி.
"அழாதம்மா.. அம்மா இருக்கேன் உனக்கு.. வாம்மா.. உள்ள வாம்மா.." என்று தன் மகளை அழைத்துப் போனாள் அவள். பின்னாலேயே நிரஞ்சனாவும் சென்றாள்.
இரவு ரொம்ப நேரம் ஆகி விட்டதால் எளிதாக செரிக்கும் படி இட்லியும் இடியாப்பமும் செய்திருந்தாள் அவள். வந்தவர்களுக்கு அதை சாப்பிடக் கொடுத்தாள்.
அவளுக்கு கூட மாட தங்கம் உதவி செய்தாள்.
நிரஞ்சனா தயங்க, வரலட்சுமி அவளை சாப்பிட வைத்தாள்.
"மணி! இந்தா.. நீயும் சாப்பிடு.. நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டன்னு தெரியும்.. ம்.. சாப்பிடு.." என்று அந்த ஓட்டுனருக்கும் சாப்பிடக் கொடுத்தாள் அவள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின், மணி தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் பின்னாலிருக்கும் அவுட் ஹவுஸுக்குச் சென்றுவிட்டான்.
அந்த வீடு சிறியதுதான் என்றாலும் நிரஞ்சனாவின் கண்களுக்கு அது பெரியதாகத்தான் தோன்றியது.
வரலட்சுமியை அவளுடைய கட்டிலில் படுக்க வைத்த அவளுடைய அம்மா விவரம் கேட்டாள்.
"மாப்ள எங்கம்மா?"
"அவர் அப்புறம் வரேன்னு சொல்லி என்ன அங்கேந்து தப்பிச்சுப் போக சொல்லிட்டு அவங்க கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தாரு.. நா எப்டியோ தப்பிச்சி வந்தேன்.. ஆனாலும் என்ன கண்டுபிடிச்சி வெட்ட வந்தானுங்க.. அப்ப தெய்வம் மாதிரி இந்த பொண்ணுதான் என்ன காப்பாத்தினாம்மா.. இவ நிரஞ்சனா!" என்று நிரஞ்சனாவைக் காட்டினாள்.
"நிரஞ்சனா! ரொம்ப நன்றிம்மா.. குழந்தை குட்டியோட நல்லா இருக்கணும்.." என்று வாழ்த்தினாள் அவள்.
"நிரஞ்சனா.. இவங்க எங்கம்மா ரேணுகா! இவங்க நர்சா இருந்து ரிடைர் ஆனவங்க!" என்று தன் தாயை நிரஞ்சனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
நிரஞ்சனாவுக்கு அவள் நர்ஸ் என்றதும் தன் தாயின் நினைவு வந்தது. ஒரு வேளை அம்மா உயிரோட இருந்திருந்தா இப்டிதான் இருந்திருப்பாங்கல்ல.. என்று நினைத்துக் கொண்டாள்.
வரலட்சுமி, நிரஞ்சனாவின் திருமண வாழ்வு தோற்றுப் போனதைக் கூறி அவளுடைய தற்போதைய நிலையை தன் தாயிடம் சுருக்கமாகக் கூற,
"ஹூம்.. பொண்ணுங்களுக்குதான் எவ்ளோ பிரச்சனை.. நிரஞ்சனா.. நீ எதுக்கும் கவலப்படாத.. நீயும் என் பொண்ணு மாதிரிதான்.. எவ்ளோ நாள் வேணும்னாலும் நீ இங்க இருக்கலாம்.. இத உன் வீடு மாதிரி நெனச்சுக்கோ.." என்று சொல்லி ஒரு காலி அறையை அவள் படுப்பதற்கு காட்டினாள்.
"இங்க படுத்துக்கம்மா.. எதப்பத்தியும் கவலப்படாத.. நிம்மதியா தூங்கு.." என்று சொல்லிவிட்டுப் போனாள் ரேணுகா.
நிரஞ்சனா அந்த அறையிலிருந்த மெத்தையில் படுக்காமல் தரையில் ஒரு போர்வையை விரித்துக் கொண்டு படுத்தாள்.
மனம் தவித்தபடி இருந்தாலும் உடல் அசதியினால் லேசாகக் கண்ணயற, அவளுடைய அடி வயிற்றில் சுருக்கென்று வலித்தது.
பயந்து போய் கண்ணைத் திறந்து வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். வலி இல்லை.
ஏதோ பிரமை போல என நினைத்து மீண்டும் கண்களை மூடினாள். சில நிமிடங்களில் மீண்டும் சுருக்கென்ற வலி. பயந்து போய் எழுந்து அமர்ந்தாள்.
ஒரு வேள.. ரொம்ப நேரம் வண்டில உக்காந்து வந்தது ஒத்துக்கலயோ.. சரியா வேற சாப்பிடல.. ரெஸ்ட் எடுக்கல.. என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு வயிற்றை லேசாக நீவி விட்டுக் கொண்டு மீண்டும் படுத்தாள்.
சில நிமிடங்களில் உயிர் போகும் அளவு வலி..
அம்மாஆஆஆஆ என்ற நிரஞ்சனாவின் அலறல் கேட்டு ரேணுகா எழுந்து பதட்டத்துடன் ஓடி வர, வரலட்சுமியும் நொண்டியபடி அந்த அறைக்குள் வர,
நிரஞ்சனா உதிரப் போக்கினால் துடிதுடித்தபடி மயங்கியிருந்தாள்.
ஆமாம். அவளுடைய கரு அன்றைய அலைச்சலினால் கலைந்து விட்டிருந்தது.
அவுட் ஹவுசிலிருந்து மணியின் மனைவி தங்கத்தை உதவிக்கு வைத்துக் கொண்டு ரேணுகா, நிரஞ்சனாவுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து அவளை படுக்க வைத்தாள்.
வரலட்சுமிக்கும் ரேணுகாவுக்கும் நிரஞ்சனாவின் கரு கலைந்ததில் மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
மறுநாள் மதியத்துக்கு மேல்தான் கண் விழித்தாள் நிரஞ்சனா.
கண் விழித்ததுமே தன்னுடைய நிலை புரிந்து கண்ணோரம் லேசாக ஈரம் உண்டானது.
இது எதுக்குன்னு நெனச்சேன்.. இது பொறந்து வளரும் போது இதோட அப்பா எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்வேன்னு தவிச்சேன்.. அதான் நீ தவிக்காதடீ.. உனக்கு இது மாதிரி கஷ்டமெல்லாம் வேணாம்னு நீயே எடுத்துகிட்டியா கடவுளே.. அப்டீன்னா இத நீ எனக்கு குடுக்காமலேயே இருந்திருக்கலாமே.. எதுக்கு குடுக்கற மாதிரி குடுத்து எடுக்கற மாதிரி எடுத்துட்ட.. ஒண்ணு மட்டும் புரியுது.. என்ன வெச்சி நீ பெரிய ட்ராமா போடற.. அதுக்கு எப்ப க்ளைமேக்ஸ் வெக்க போறியோ.. எப்டி வெக்க போறியோ.. க்ளைமேக்ஸ்ல ஹேப்பி எண்டிங்க் வெப்பியா.. இல்ல என்ன போட்டு தள்ளிட்டு வாழ்வே மாயம்னு முடிக்க போறியா.. கடவுளே.. என்று கடவுளிடம் பேசிக் கொண்டாள்.
"நிரஞ்சனா.." மெல்லிய குரலில் அழைத்தபடி வரலட்சுமி அங்கே நொண்டியபடி வந்தாள்.
"அக்கா.. நீங்க ஏன் க்கா சிரமப்படறீங்க.." நிரஞ்சனா கேட்டாள்.
"என்னாலதானே.. என்ன காப்பாத்த போய்தானே உன் குழந்தைய இழந்த.. ம்ச்.. நா அந்த பஸ்ல ஏறியிருக்கவே கூடாது.." என்று கண் கலங்கினாள் வரலட்சுமி.
"அப்டி சொல்லாதீங்கக்கா.. அந்த பஸ்ல ஏறினதாலதான் நான் இப்ப உங்க உதவியால நல்லா இருக்கேன்.. யோசிச்சி பாருங்க.. ஒரு வேளை நா சென்னைக்கு போயி, எங்கண்ணியோட ஃப்ரண்ட கண்டு பிடிக்க முடியாமப் போயிருந்தா.. அங்க வெச்சி நடுத் தெருல எனக்கு இப்டி ஆகியிருந்தா.. அப்டியே செத்து போயிருப்பேன்.. அந்த தெய்வம் மாதிரி என்னை காப்பாத்தி உங்களோட கூட்டிட்டு வந்திருக்கீங்க.. இங்கயும் உங்கம்மா எனக்கு வைத்தியம் பார்த்திருக்காங்க.. இல்லன்னா எனக்கு என்னாகியிருக்கும்.. தெய்வம்.. இப்ப இந்த குழந்தை உனக்கு வேணாம்டீ.. வரலட்சுமி அக்காவுக்கு பிறக்கப் போற குழந்தைய பாத்துக்க.. அப்டீன்னு எனக்கு சொல்லாம சொல்லியிருக்காரு.." என்று சொல்லி புன்னகைத்தாள்.
"இந்த நிலையும் நல்லதுக்குன்னு நெனக்கிறியே.. உண்மையாவே உனக்கு ரொம்ப பெரிய மனசு நிரஞ்சனா.. எல்லாம் சரியாகிடும்.. நீ ரெஸ்ட் எடு.." என்று சொல்லிவிட்டுப் போனாள் வரலட்சுமி.
தள்ளியிருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகாவுக்கும் தங்கத்துக்கும் கூட நிரஞ்சனாவைப்பற்றி உயர்ந்த எண்ணம் தோன்றியது.
ரேணுகா மற்றும் தங்கத்தின் உபசரிப்பில் ஒரு வாரத்தில் நிரஞ்சனா உடல் நலம் தேறி எழுந்து அமர்ந்தாள்.
அதன் பிறகு அந்த வீட்டில் நிரஞ்சனாவும் ஒருத்தியாய் மாறிப் போனாள்.
வரலட்சுமிக்கு பணிவிடை செய்து ரேணுகாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து தங்கத்துடன் சமையலறையில் சமையல் செய்து என அந்த வீட்டில் தன்னை அழகாய் பொருத்திக் கொண்டாள்.
ஓட்டுனர் மணியிடமும் சகோதர பாசத்துடன் பழகினாள்.
அந்த வீடும் வீட்டின் பின்புறமுள்ள அழகான பூந்தோட்டமும் அங்குள்ள ரம்மியமான சூழலும் நிரஞ்சனாவுக்கு மிகவும் பிடித்துப் போயின.
வெகு நாள் கழித்து அவள் நிம்மதியாய் உணர்ந்தாள் எனலாம்.
வரலட்சுமி தன் கணவனின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் ஆவலுடன் காத்திருக்க, அவளுடைய பிரசவ நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.
- ctd...
Last edited: