அத்தியாயம் -15
அந்த ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும் போது அவளது எலுமிச்சை நிற இடுப்பு பகுதி சேலையை மீறி கொஞ்சம் வெளியே தெரிந்தது. அடுத்து இருந்த காரில் டிரைவிங் சீட்டை தேய்த்தவனின் கண்கள் அங்கு செல்வதை கண்டதும் " இடியட்" என்ற வார்த்தையை துப்பிவிட்டு அந்த பகுதியை மறைத்தாள். அவள் பச்சை கலர் சிங்குச்சா என்பதை கற்பனைக்கு கொண்டு வாருங்கள்.
' என்ன ஜென்மங்களோ ..' என்று முணுமுணுத்தாள். அசதியையும் மீறி சந்தியாவின் தாயைப் பார்க்கப் போகிறோம் என்று இருந்த குதூகலம் கொஞ்சம் குறைந்தது.
சிக்னல் விழுந்ததும் ஸ்கூட்டியில் பறந்தாள். கொஞ்சம் ஒழுங்காக ஓட்டுகிறாள் இப்போது. சமீபமாக அவளும் மெக்கானிக் ஷாப் மணியும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதில் இருந்தே நமக்கு அது புரிய வேண்டும்.
விஜயகாந்த் வீட்டு கூர்க்கா அவளைக் கண்டதும் கேட்டை புன்னகையோடு திறந்து விட்டார். அந்த கறுப்பு நிற அல்சேஷன் அவளைப் பார்த்ததும் குரைத்துக்கொண்டே வாலை ஆட்டியது.
" ஹாய் சீசர்..!" என்று அதற்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள்.
கௌதமியை காணவில்லை. சம்பளம் வாங்கும் வேலையாட்கள் அதற்கு தகுந்தாற் போல பூச்சாடிகளை துடைத்துக்கொண்டும், தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டும் இருந்ததைத் தான் காணக்கிடைத்தது. நேராக சமையலறைக்குள் நுழைந்தாள். ஏனெனில் வாசனை அங்கிருந்து தான் வந்தது.
" ஹாய் ஆண்ட்டி... என்ன கேசரியா??" என்று மூக்கை இழுத்தாள்.
" ம்.. உனக்கு பிடிக்குமே..எப்படியிருக்க மித்ரா.." கேசரி கடைசி கட்டத்தில் இருந்தது.
"எனக்கென்ன... அப்படியே.. வேலையோட டைம் போகுது. அங்கிள் எப்படி இருக்கார்? சந்தியா பேசினாளா...? எனக்கு எப்பயாவது மெசேஜ் பண்றதோட சரி.. மேடம் ரொம்ப பிஸி ஆகிட்டாங்க போல.."
"நீ வேற மித்ரா! எனக்கே எப்பயாவது தான் பேசுறா.. எல்லாம் கல்யாணம் ஆன கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும். அப்புறம் அம்மா அவரு அப்படி சொல்றாரும்மா.. இப்படி சொல்றாரும்மானு குற்றம் சொல்ல எடுப்பா.. அதுக்கு பிறகு அம்மா கதம்ப சாம்பார் எப்படி வைக்கிறதுனு கேட்பா.. அப்பறம் அம்மா உங்க பேத்தி தொல்லை தாங்க முடியலனு பேசுவா... அதுக்கப்புறம் புருஷனை பற்றி கம்ப்ளைண்டா வரும்.. "
" என்ன ஆன்ட்டி.. நாலே வரில பொண்ணுங்க வாழ்க்கையை புட்டு புட்டு வைச்சிட்டிங்க.."
" ம்.. எல்லார் வாழ்க்கையும் அப்படித்தான் போகும். ஆனா அதுக்குள்ள நம்ம தான் வாழ்க்கையை எப்படி ஸ்வாரஸ்யமாக்குறதுனு கத்துக்கனும்.. "
" அடடா.. அடடா.. என்ன ஒரு தத்துவம்.." என்று கேசரியை எடுத்து சுடச்சுட வாயில் போட்டு நுனி நாக்கை லேசாக சுட்டுக்கொண்டாள்.
" என்ன அவசரம்... கொஞ்சத்துல சாப்பிடு.. உனக்கு ஒரு பார்சல் அனுப்பிருக்கா. அதை தந்துவிடத் தான் உன்னை வரச்சொன்னேன்..."
" சந்தியா இல்லாம போர் அடிக்குது ஆண்ட்டி. ஐ மிஸ் ஹர்... ஃப்ரீயா பேசக்கூட யாருமில்லாத மாதிரி இருக்கு..." என்றாள் மித்ரா.
" அதுக்கு ஒரு வழி இருக்கு. உன் மனசுக்கு பிடிச்ச யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்க.. வாழ்க்கையே இனிக்கும்...." என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தார் கௌதமி.
அவள் மௌனமாய் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"மித்ரா.. நான் நேராவே விஷயத்துக்கு வாரேன். உன் பிடிவாதம் கொஞ்சம் கூட அர்த்தமில்லாம இருக்கு. வார நல்ல சம்பந்தம் எல்லாம் உன் வீம்பால தட்டிக்கிட்டு போறதா சொல்லி பாமா ரொம்ப வருத்தப்பட்டாங்க. நடந்ததுக்கும் உனக்கும் முடிச்சு போட்டுக்கிட்டு உன் வாழ்க்கையையே சீரழிச்சுக்காத மித்ரா.. உன் நல்லதுக்குத் தான்மா சொல்றேன்.. முதல்ல உன் பிடிவாதத்தை விட்டுட்டு வீட்டுக்கு போற வழியைப் பாரு.. அப்பா அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்கம்மா.. நான் சொன்னதை நல்லா யோசிச்சுப் பாரு...." என்று நீளமாய் ஒரு இலவச அட்வைஸ் தந்தார் கௌதமி.
மித்ராவுக்கு கௌதமி என்றால் கொள்ளை இஷ்டமே. சந்தியாவைப் போலவே அவளுக்கும் பாகுபாடு இன்றி அந்த வீட்டில் எல்லாமும் கிடைக்கும். அதற்கு அட்வைஸ்ஸும் விதி விலக்கில்லேயே. தன் தாயைப் போன்றவர் இத்தனை அன்பாய் சொல்லும் போது அவளால் எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. மௌனமாகவே இருந்தாள்.
அவள் முகம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்ததை கௌதமி கவனித்தார். மித்ரா எப்போதும் தன் பேச்சுக்கு மரியாதை கொடுப்பாள் என அவருக்குத் தெரியும். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனமார கடவுளை வேண்டிக்கொண்டார். அவளை இயல்புக்கு கொண்டு வர " சரி.. வீட்டுக்கு போய் யோசனை பண்ணு. இந்தா கேசரி.. சாப்பிடு.." என்று அன்போடு தந்தார்.
அவளுக்கு கேசரி இறங்கவில்லை. கௌதமி சொன்ன வார்த்தைகள் தான் இறங்கின.
'வாழ்க்கையை சுவாரஸ்யமா கொண்டு செல்வதற்கு எது வேண்டும்? வேறு என்ன காதல் தான். அந்த காதல் தனக்கு கிட்டுமா? ' என்று யோசிக்கும் போது நவிலன் நினைவுக்கு வந்தான். அவனைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
' நம்மளை மறந்துட்டாரோ.. இல்ல இவ சரியா வர மாட்டானு யோசிச்சிட்டாரோ.. ஓ.. கடவுளே நான் என்ன யோசிக்கிறேன். . நான் எதுக்கு இப்படி யோசிக்கிறேன்.. அவருக்கும் எனக்கும் நடுவில எதுவும் இல்ல..' என்று அவசரமாய் மறுத்தவள் படக்கென்று எழுந்தாள்.
" நா.. கிளம்புறேன் ஆன்ட்டி. ஒரு முக்கியமான வேலை இருக்கு..." அவசரமாய் வாசலுக்கு போனாள்.
" மித்ரா.. இதை எடுத்துக்கிட்டு போ.." என்று சந்தியா அனுப்பின பார்சலை அவள் கையில் கொடுத்து அனுப்பினார் கௌதமி.
" என்னததுக்கு இவ இவ்வளவு அவசரமா போறா..?" என்று கன்னத்தில் கை வைத்து பார்த்துவிட்டு உள்ளே நகர்ந்தார் கௌதமி.
அவசரமாய் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கேட்டை கடந்தவள் எதிரே வந்த காருடன் மோதிக்கொண்டாள். இது பத்தென்பதாவது தடவையா என்ன?? மெக்கானிக் ஷாப் மணிக்கு தான் தெரியும்.
அந்த காரை இடித்தவள் ஸ்கூட்டியோடு ரோட்டில் விழுந்தாள். காரிலிருந்தவன் இறங்கி வந்தான். அவனைக் கண்டதும் பேயறைந்தவள் போல ஆனாள்.
நவிலன்.
வேறா யாராக இருக்க முடியும். அவனை இடிப்பதற்கென்றே பிறந்தவள் அல்லவா நம்ம சங்கமித்ரா.
" என்னாச்சு மித்ரா.. அடி பட்டிருக்கா..?" பதட்டத்தோடு கேட்டான்.
அவள் பதிலே பேசவில்லை. அவன் அவளது கையை பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனது கையை விலக்கி விட்டாள். அவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது.
' கீழே விழுந்தவளை தூக்கியது ஒரு குற்றமா?'
" என்ன மித்ரா.. தொட்டு தூக்கியது ஒரு குற்றமா?"
அவள் பதில் பேசவில்லை. ஸ்கூட்டியை நிமிர்த்தி மீண்டும் உயிர் கொடுத்தாள். நல்லநேரம் இந்த தடவை சைட் மிரர் மட்டும் தான் போயிருந்தது. வண்டியை கிளப்பி பறந்தாள்.
அவனுக்கோ கோபம் வந்ததில் தலையில் இரண்டு கொம்புகள் முளைத்தன. காரை எடுத்தான். அவளை விரட்டிச் சென்று ஒரு பயங்கரமான ஓவர்டேக் செய்து அந்த டேமேஜ் ஆன ஸ்கூட்டியின் முன் நிறுத்தினான். அந்த திடீர் தாக்குதலை எதிர்ப்பார்க்காமல் அவள் பேந்த பேந்த விழித்தாள்.
"எதுக்கு பார்த்தும் பேசாம போற மித்ரா.. நான் என்ன அவ்வளவு பொல்லாதவனா?? கீழ விழுந்தியேனு தொட்டு தூக்கினேன். என் நிழல் கூட உன் மேல படக்கூடாதுனு நினைச்சிட்டியா மித்ரா..? லவ் பண்றேனு சொன்னது அத்தனை குற்றமா..? என்ன பார்க்க கூட பிடிக்கலயா...? நான் உன்ன எந்த டிஸ்டர்பும் பண்ணலயே.. ஒரு போன்.. ஒரு மெசேஜ்.. எதுவுமே பண்ணலயே.. உனக்கு இடைவெளி தந்தேனே.. உனக்காக வெய்ட் பண்றேனு தானே சொன்னேன். என்ன பண்ணிட்டேனு இப்படி நடந்துக்கிற..." கோபமாய் வந்தது அவனது வார்த்தைகள். இதுவரை அவனது அந்த முகத்தை அவள் பார்த்ததேயில்லை.
"அ..அது.. வந்து...." அவள் பயந்து போய் தடுமாறினாள்.
"ஓகே மித்ரா. இனி உன்ன டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். உன் கண் முன்னாடி வரவே மாட்டேன். குட் பாய்...." கோபமாக கிளம்பி சென்றுவிட்டான். கௌதமியைப் பார்க்க வந்தவன் அந்த அலுவலை அப்படியே விட்டுவிட்டு கடற்கரையை நோக்கி வண்டியை செலுத்தினான்.
அவன் சென்றதும் தான் அவள் யோசித்தாள்.
' ஆமா.. எதுக்கு இப்படி அவரைக் கண்டு அடிச்சிப்பிடிச்சி ஓடி வந்தேன்.. எதுக்கு அவர் கையை தட்டிவிட்டேன்.. ச்சே.. தப்பு. பாவம் நவிலன்... என் மனசுல இருக்க குழப்பம் என்ன..? நான் ஏன் இப்படி லூசு மாதிரி நடந்துக்கிறேன்..' தலையை இரு கைகளாலும் பிடித்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
' எதுக்கு அழுறேன்.. நவிலைனை கஷ்டப்படுத்திட்டேன்.. எனக்கு என்ன நடக்குது..?' அவளுடைய கேள்விகளுக்கு அவளிடமே பதில் இல்லை.
வீட்டுக்கு சென்றவள் அத்தையின் மடியில் படுத்துக்கொண்டு அழுதாள்.
மங்களா பதறிப்போனாள்.
" என்னாச்சு மித்ரா..?" தலையை பரிவோடு வருடிக் கொடுத்தார்.
" அத்தே.. " நடந்ததை சொன்னாள். மங்களா ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்.
" உனக்கு நவிலனைப் பிடிச்சிருக்கா ?"
" எனக்கு சொல்லத் தெரியல.. அவரை எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா அது காதலானு தெரியல.. இது நிஜமான காதலானு தெரியல.."
" ஏய் பைத்தியம். காதல்ல ஏது நிஜ காதல்? பொய் காதல்? காதல்னாலே நிஜம் தான். உனக்கு நவிலனைப் பிடிச்சிருக்கு. நவிலனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. அப்படித்தானே.. இவ்வளவு நல்ல பையனை ஏன்டீ வேணாம்னு சொல்ற.. ஒரு ஒழுங்கான காரணம் சொல்லு பார்ப்போம்.."
மங்களா அப்படி கேட்டதும் தான் யோசித்தாள். அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை. பிடிக்கும் என்று சொல்வதற்கு தான் எக்கச்சக்கமான காரணங்கள் இருந்தன. ஆனால் எதுவோ ஒன்று அவளை தடுப்பதாக உணர்ந்தாள். அதை அன்று இரவு தான் கண்டுபிடித்தாள்.
நம்பிக்கை. அது இல்லை அவளுக்கு. அவளுக்கு அவள் மீதே நம்பிக்கை இல்லை. நவிலன் மீது நம்பிக்கை இல்லை. அவனது காதல் மீது நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவளும் அவனை காதலிக்கிறாள் என்ற உணர்வின் மீது நம்பிக்கை இல்லை. இப்படி எதிலுமே நம்பிக்கை இல்லாமல் இருப்பதாலேயே அவனை ஏற்றுக்கொள்ளாமல் தவிக்கிறாள்.
அன்று பேசிக்கொண்டு இருக்கையில் அத்தை சொன்ன கடைசி வரிகள் ஒலித்தன.
" இத பாரு மித்ரா.. வாழ்க்கைல நம்பிக்கை வேணும். நம்ம செய்ற காரியத்து மேல நம்பிக்கை வேணும். நம்ம மேல நம்பிக்கை வேணும். நம்மளை சுற்றி இருக்கவங்க மேல நம்பிக்கை வேணும். அப்பதான் வாழ்க்கை அழகாக மாறும். இப்படி யாருமே வேணாம்னு சொல்லிக்கிட்டு எவ்வளவு காலத்துக்கு திரிய முடியும். தனிமை கசப்பானது. அதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம்டா.. யோசி.. இந்த மாதிரி உன்னை புரிஞ்சிக்கிட்ட, உன்னை பாதுகாப்பா உணர வைக்கிற ஒரு பையன்... நீயே தேடினாலும் கிடைக்க மாட்டான். கடவுள் உனக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை தவற விடாதே.. யோசி.."
' நம்பிக்கை.. அதானே எல்லாம்.. ' காலையில் இருந்து கேட்ட அட்வைஸ் மலையால் மலைத்துப் போனாள் மித்ரா.
கண்ணாடி முன் சென்று நின்றாள்.
' ஏய் மித்ரா.. உண்மையை சொல்லு.. நவிலனை நீ லவ் பண்றியா இல்லையா..?'
' ஆமாம்..' கண்ணாடியில் தெரிந்த இன்னொரு மித்ரா வெட்கத்தோடு ஒத்துக்கொண்டாள். அப்பொழுது அவளது கன்னங்கள் சிவந்ததை நவிலன் பார்த்திருந்தால் லேசாய் கிள்ளியிருப்பான்.
மித்ரா அப்போதே அடுத்த நாள் செய்ய வேண்டியதை திட்டமிட்டாள். அவனுடைய நினைவுகள் வந்து அவளை அலைக்கழித்தது. இதில் கவிதை வேறு.
' உண்மையைச் சொன்னால்
கனவில் சொல்லக்கூட
தைரியமில்லை..
என் காதலை உன்னிடம்..!'
இங்கு இவளோ குஷியில் இருக்க, அங்கு அவனோ ரொம்ப நாள் மறந்திருந்த பியரை மடக் மடக்கென்று குடித்துக்கொண்டு இருந்தான். மூன்றாவது பியர்.
'என் காதல் உனக்கு
சாதாரணமானது..
எனக்கோ அது
சதா ரணமானது..!'
காதல் வலியில் துடித்தவாறு தூங்கிப்போனான். அவளோ விடியலுக்காக காத்திருந்தாள்.
ஆட்டம் தொடரும் ?