Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னில் வசப்பட்ட வானம் -1

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் ப்ரண்ட்ஸ்..
என்னில் வசப்பட்ட வானம்.. ராணி வாரந்தரியில் வெளியான என் சிறுகதை. மார்பக புற்றுநோய் பற்றிய இச்சிறுகதையைப் படித்து தங்கள் அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி.



என்னில் வசப்பட்ட வானம்..


“விலை மதிப்பற்றது வாழ்க்கை, மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துளியையும் ரசித்து அனுபவித்து வாழவேண்டும்....” – நான்.

நான் சபர்மதி... எனக்குப் புற்றுநோய் என்று டாக்டர் உறுதி செய்ததும் இந்த எண்ணம் தான் முதலில் தோன்றியது.

நான் அப்போது தேனியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கணவர் தபால்துறையில் அரசு வேலை. பெண்ணொன்று, ஆணொன்று என்று இரு மகவுகள். பெரியவள் இலக்கியா பொறியியல் மூன்றாமாண்டு... சின்னவன் கவின் பத்தாவது என்று நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை வளைந்து நெளிய ஆரம்பித்தது.

2011ம் ஆண்டு என் வலது மார்பகத்தில் வலியில்லாத கட்டி இருப்பதை உணர்ந்து அது புறக்கட்டியாக இருக்குமோ என்று பயந்துபோய் என் இளைய சகோதரி சத்யாவிடம் சொன்னேன். அவர் உடனடியாக டாக்டரைப் பார்க்க சொன்னார், பெண்களுக்கே உரிய கூச்சம் எனக்குள்ளும் தோன்ற, மருத்துவரிடம் செல்லவே பிடிக்கவில்லை.

சத்யாக்காவின் தொடர் வற்புறுத்தலின் பேரில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். மேமோகிராம் எடுக்கப்பட்டு புற்றுக்கட்டியாக இருக்குமோ என்று சந்தேக்கிக்கப்பட்டது. அப்போதுதான் திடீர் ப்ரேக் போட்டது போல் எனக்கும் இறப்பு வரும் என்ற உண்மை உறைத்தது. அந்த நொடி உலகம் மிக அழகாகத் தெரிய, வாழவேண்டும் என்கின்ற ஆசை மனதில் துளிர் விட்டு விருட்சமாய் வளர்ந்தது.

தேனியில் என்னைக் கவனிக்க ஆள் இல்லாததால், திண்டுக்கல்லில் இருந்த அம்மா வீட்டிற்கு சென்றேன். அம்மா வீட்டில் பூட்டிய அறையில் இருளின் துணையுடன் இருக்கத்தான் எனக்குப் பிடித்தது.

எனக்கு ஏன் இந்த நிலை என்ற கேள்விக்கான பதிலைத்தான் அந்த இருளில் நான் தேடிக்கொண்டிருந்தேன்.

என் மூத்த சகோதரி சந்திரா மட்டும் அந்த இருளில் நிழலாக ஒரு கணமும் பிரியாமல் என்னுடனே இருந்தார். மகள் விடுதியில் இருந்ததால், கணவரும், மகனும் ஓரளவுக்கு அவர்களாகவே சமாளித்துக் கொண்டனர்.

சத்யாக்கா காலையில் எனக்குத் தேவையான சாப்பாட்டைச் செய்துவிட்டு வேலைக்கு செல்வார். மாலை வீட்டுக்கு வந்ததும் என்னுடனே இருப்பார். கணவர் முடிந்தபோதெல்லாம் வந்தார். அம்மாதான் பார்க்கும் போதெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.

மருத்துவரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் வாகனங்களில் பறந்து கொண்டிருந்த மக்களைப் பார்த்தபோது, பைத்தியகாரத்தனமாகத் தோன்றியது. மரணம் எந்த நேரமும் நம்மைத் தேடி வரும் சூழலில் இவர்களெல்லாம் யாரைத் தேடி ஓடுகிறார்கள் என்று எனக்கு சிரிக்க தோன்றியது.

எனக்கு புற்றுநோய் தான் என்று ‘பயாப்சி’ உறுதிப்படுத்த, குடும்பத்தில் எல்லோரும் உடைந்துபோனார்கள், கணவர் உட்பட.. அப்போதுதான் அவர்களுக்காக நான் கொஞ்சமாவது என்னை தைரியமாக காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன். என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன்.

என் தைரியம் தான் அவர்களை தைரியப்படுத்தும் என்று நான் நினைத்தது உண்மயானது. எனைச் சுற்றியுள்ளோரின் பச்சாதாபப் பார்வையைத் தவிர்க்க, பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். என் மாற்றம் என் குடும்பத்தாருக்கு சிறு நிம்மதியை கொடுத்தது.

முதலில் பார்த்த மருத்துவர் எனது உடல் பருமனையும், வயதின் முதிர்வையும் காரணம் காட்டி, அறுவை சிகிச்சை எண்ணத்தை கை விட்டுவிட்டதால், வேறு ஒரு மருத்துவரிடம் போனோம்.

அவரோ, நோய் உடம்பின் வேறு பாகங்களுக்கும் பரவியிருக்கலாம் என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு நிறைய பரிசோதனைகளை எடுக்க சொன்னார்.

“புற்றுநோயில் நான்கு கட்டங்கள் இருக்கு, நீங்க மூன்றாவது கட்டத்தில் இருக்கீங்க, ரொம்ப ரிஸ்க்கானது. கட்டி 5 செ.மீ.இருக்கு. ஆபரேஷனைத் தவிர வேற வழியே இல்ல” என்றார்.

அவர் பேசப்பேச எனக்கு வெளியே ஓடிவிடலாம் போல் இருந்தது. மறுநாள் மற்றொரு டாக்டர் வருனிடம் அழைத்துச்செல்ல, அவர் இரண்டொரு நிமிடங்களில் என்னைச் சோதித்துப் பார்த்துவிட்டு, “சரியாக்கிடலாம்” என்றார்.

டாக்டரின் வார்த்தைகள் தான் நோயாளிகளுக்கு முதல் மருந்து என்பது எத்தனை உண்மை..

என் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததுமே அனைவருமே நிம்மதியானார்கள். எனக்குத்தான் மார்பகத்தை நீக்குவது என்பது ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தது. என் கணவரின் ஆறுதல்கள் எதுவும் என்னை அசைக்கவில்லை. இந்நிலையில் தான் என் கணவரின் நண்பருடைய அக்கா சுபா என்னைப் பார்க்க வந்திருந்தார்.

அவரும் என்னைப் போலவே ஒரு பக்கம் மார்பகம் நீக்கப்பட்டவர். இப்போது குணமாகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டவர். ரொம்பவே உற்சாகமாக இருந்த ராதாவைப் பார்த்ததுமீ எனக்குள்ளும் நம்பிக்கையின் ஒளி ஒளிர ஆரம்பித்தது. அவர் உற்சாகத்துடன் பேசிப்பேசி நம்பிக்கையூட்ட, மனம் தெளிவானது எனக்கு.

என் குடும்பத்தார் புடைசூழ என் முதல் கீமோ அரங்கேறியது. அப்சர்வேஷனில் வைக்க வேண்டுமென்று மருத்துவர் கூறியதால் அன்றிரவு சந்திராக்கா மட்டும் என்னுடன் தங்கினார். அரைகுறை மயக்கத்தில் நான் கண்விழிக்கும் போதெல்லாம் அக்கா விழித்துக்கொண்டுதான் இருந்தார்.

அறைக்கு வெளியே அவ்வப்போது கேட்ட காலடி ஓசைகளும், ஃபேனின் சத்தமுமே எங்களுக்குப் பெரிய ஆறுதலைத் தந்தன. சத்தங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.

கீமோ முடிந்த மறுநாள்தான் வந்தது வினை. தலைசுற்றலும் வாந்தியும்..! இரண்டு நாட்கள் கழித்துத் தலை வாரிக்கொண்டிருந்த போது கற்றைக் கற்றையாக முடி கையோடு வந்தது. அரண்டுபோய்க் கண்ணாடியில் பார்த்தபோது கருத்து, தோல் சுருங்கி, புருவம் உதிர்ந்து மொட்டைத் தலையுடன் நான்.!

அதன் பின் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கண்ணாடி பக்கமே செல்லவில்லை. என் அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த என் குடும்பத்தினரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாட்கள் அவ்வாறே கழிய, எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. என்ன செய்யலாம் என்ற யோசனையில் நான் இருக்க...

என் இரு அக்காக்களும் ஒரு நாள் கடைக்கு அழைத்துச்சென்று கலர் கலராக பாசிமணிகள், கம்பி, ஊக்கு என்றெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். அதை வைத்து நான் விதவிதமாகக் கம்மல், வளையல், கொலுசு எல்லாம் செய்ய, அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கியதோடு, முன்பணம் கொடுத்து ஆர்டர் கொடுத்தது தான் உச்சம்.

“நாம் இவளைப் பற்றிக் கவலைப்பட்டுட்டு இருக்கோம், இவளோ சுடசுட பிசினஸ் பண்ணிட்டு இருக்கா...” என்று என் வீட்டில் உள்ளவர்கள் பெருமையோடு சலித்துக்கொள்ள, நானும் புதுவிதமாக உணர்ந்தேன்.

நம்மை ஒரு கவலை, பிணந்தின்னிக் கழுகாய் பிய்த்துத் தின்னும்போது நம் கவனத்தை வேறு திசையில் திருப்பினால் அந்தக் கழுகு பறந்து போகும் என்பதை உணர்ந்தேன்.

அறுவை சிகிச்சை நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. விடுப்பு எடுத்துக்கொண்டு என் கணவர் மகனுடன் வந்து சேர்ந்தார். என் தோற்றத்தைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த போதும், உடனே சுதாரித்துக் கொண்டு தாவி வந்து என்னைக் கட்டிப்பிடித்த போது வாழவேண்டுமென்ற ஆசை இன்னும் இன்னும் ஆழமானது என்னில்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து இரவா பகலா என்று தெரியாத அரைகுறை மயக்கத்தில் நான் இருந்தபோது என் குடும்பத்தினர், உறவினர்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் பார்த்ததும் நான் சற்றே தேறியதுபோல் தோன்றியது. இலக்கியா தான் கடைசியாக வந்தாள். ரொம்பவே நொந்து போய்விட்டாள்.

மருத்துவமணையில் நான் இருந்தபோது என் மீது கணவர் காட்டிய அக்கறை திருமண பந்தத்தின் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது. வேளை தவறாமல் உணவு, ஜூஸ் தந்து என் வேண்டுகோளுக்கினங்க காற்றும் வெளிச்சமும் புகுமாறு எந்நேரமும் ஜன்னலைத் திறந்து வைத்து, நொடியும் முகம் சுழிக்காமல் பார்த்து பார்த்து செய்தார். நம்பிக்கையூட்டும் புத்தகங்களும், பாடல்களும், சொற்பொழிவும் கேட்கவைத்து என் வாழ்க்கையின் மேல் எனக்குள் வாழவேண்டும் என்ற அதீத ஆசையை ஏற்படுத்தினார்.

நாங்கள் வாக்கிங் போகும்போது எதிரே வரும் நோயாளிகளைத் தினம் தினம் பார்த்ததில் கண்ணுக்குத் தெரியாத பந்தம் உருவாகியிருந்தது. மருத்துவமனையில் பல்வேறு விழாக்களும் கொண்டாடப்பட்டன. அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பதிலாக, இறைவனை வேண்டிக்கொண்டு உயிருக்காகத்தான் அவர்கள் கண்ணீர் விட்டனர்.

‘வாழ்வின் அருமை சாவின் விளிம்பில் இருக்கும் நோயாளிக்குத்தான் நன்கு புரியும் என்ற பெரியோரின் வாக்கு நினைவில் வந்தது எனக்கு.’

ஆசிரியர் தினத்தன்று டயட்டீசியன் ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். நவீன காலத்தில் மார்பக புற்றுநோய் அநியாயத்திற்கு அதிகரித்துக் கொண்டிருப்பதால் என் மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சொன்னார். புற்றுநோய் சம்மந்தமான புத்தகங்கள், சிடிக்கள் போன்றவற்றை எனக்குப் பரிசளித்து விட்டு அவர் கிளம்பியபோது என் பாதை எனக்கு தெளிவானது.

‘இனி என் பணி, பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல, மாணவர்களை நோயிலிருந்து பாதுகாப்பதும் தான் என்று முடிவெடுத்தேன்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று கீமொக்கள், முப்பது முறை கதிரியக்கச் சிகிச்சைகள்.. என் மகள் ஒரு அம்மாவாக என்னுடன் துணைக்கு வந்தாள். ஆறு மாதம் சிகிச்சை முடிந்து கிராப் தலையுடன் என் வாழ்க்கை பழைய நீரோட்டத்தில் சங்கமித்துவிட்டது.

இன்றைக்கு உருவாக்கியிருக்கும் அறிவியல் வளர்ச்சியால், புற்றுநோயும் குணமாகும் நோய்களின் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து கொண்டிருக்கிறது. நாம் போராடவும் பொறுமையாக இருக்கவும் தீர்மானித்துவிட்டால் போதும், வாழ்க்கை ஒருநாள் மிகவும் அழகாக விடியும். அந்த வானமும் நம் வசப்படும்.!
 
Nice. நானும் தொண்டை புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவள். தெய்வத்தின் துணைக் கொண்டும், அன்பான குடும்பத்தினர், அன்பும், கருணையும், கவனிப்பும் கொண்ட மருத்துவர்கள் துணைக் கொண்டு மீண்டு வந்தவள்தான்.
 
Nice. நானும் தொண்டை புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவள். தெய்வத்தின் துணைக் கொண்டும், அன்பான குடும்பத்தினர், அன்பும், கருணையும், கவனிப்பும் கொண்ட மருத்துவர்கள் துணைக் கொண்டு மீண்டு வந்தவள்தான்.
unkal thannambikkaikkum thairaiyaththirkum en manmaarntha vaazththukkal sis..
 
அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தை கள்.....Super sis...
 
Top