அலை உறங்கும் கடல் - பா. ராகவன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்தக வடிவில் ஒரே சிட்டிங்கில் நான் வாசித்த நாவல் இது. இன்று காலை பேருந்து பயணத்தில் எனக்குக் கிடைத்த தோழன். ஒரு முழு புனைவு கதையைக் காட்டிலும் நிஜத்துடன் இணைந்த புனைவை வாசிப்பதில் தான் எனக்கு அலாதி இன்பம். அந்த வகையில் இந்த நாவல் எனக்கொரு நல்ல தீனி.
ஈழத்தில் போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களில் இருந்து விடுதலை பெற வேண்டி ராமேஸ்வரத்தில் சிறை கைதிகளாக அகப்பட்டவர்களின் வாழ்க்கையையும் அதை வைத்து பிழைப்பு நடத்தும் ராமேஸ்வரத்தின் உள்ளூர் வாசிகளையும் கண்முன்னே படம் பிடித்து காட்டுகிறது. இந்தக் கனமான கதையை இன்னொரு கனமான கதையுடன் இணைத்து இயல்பாகச் சொல்லுவதில் தான் இந்தக் கடலின் ஆழம் வியப்பில் ஆழ்த்துகிறது.
பிராமண பெண்ணான உமாதேவிக்கும் கிறிஸ்துவ மீனவனான அருள்தாஸூக்கும் மலரும் காதலின் முடிவு தான் என்ன? எதிர்காலத்தில் நடக்கப்போவதை எல்லாம் தன்னுடைய கனாக்களின் மூலம் முன்பே அறிந்துகொள்ளும் நீலுபாட்டியின் கதாபாத்திரம் தான் இந்தக் கதையின் ஆணிவேராக நான் உணர்கிறேன்.
அகதிகளை வைத்து நிகழ்த்தப்படும் அரசியல் அவர்களை வைத்து இயங்கும் பொருளாதாரம் அதில் இருக்கும் தில்லுமுல்லு கடத்தல் தொழில் மீனவர்களின் வாழ்க்கை முறை ராமநாத சாமியின் கோவிலில் இருக்கும் பிராமணர்களின் பிழைப்பு இலங்கை கடற்படையால் பிடித்துக்கொள்ளப்படும் மீனவர்களின் எண்ணவோட்டம் என்று போகிற போக்கில் இது பேசும் லிஸ்ட் ரொம்ப பெரியது.
முடிந்தால் வாசித்துப்பாருங்கள்.
இந்த முறை நான் வாங்கிய புத்தகங்கள் ஏராளம். அடுத்த கதை படித்து விட்டு விமர்சனத்துடன் வருகிறேன்.
இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், பிரபஞ்சனின் வானம் வசப்படும் முதலியவை தான் அடுத்தடுத்த பக்கெட் லிஸ்ட்.
அப்பறோம் இன்னொரு முக்கியமான விஷயம், வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்) கதை நல்லா இல்லையோ? இங்கேயும் ரெஸ்பான்ஸ் இல்ல ப்ரதிலிபிலயும் ரெஸ்பான்ஸ் இல்ல. என்ன ரீசனால அது engaginga இல்லைனு சொன்னா நல்லா இருக்கும்?