காலையில் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பே ஹரி பஸ்ஸை ஒரு இடத்தில் நிறுத்த சொல்லி அனி மீனாவோடு இறங்கிக்கொண்டான். அங்கே அவர்களுக்காக வெங்கட்டும், வைஷ்ணவியும் காரில் காத்திருந்தனர்.
மீனாவை பார்த்தும் வைஷ்ணவி வந்து அவளை அனைத்து வரவேற்றார். வைஷுமா என அனி அவரிடம் தாவ.... “வாடா ராஜாத்தி....” என அவளைக் கொஞ்சி மகிழ்ந்தார்.
வெங்கட் எப்போதும் போல் வரவேற்றதோடு அமைதியாகி விட.... எல்லோரும் காரில் வீட்டிற்குச் சென்றனர். மீனாவுக்கு அவர்களின் வீட்டை மிகவும் பிடித்தது.
சின்ன வீடு தான். ஆனால் வித்தியாசமான வடிவமைப்பில் அழகாக இருந்தது. சிறிது இடைவெளி விட்டுப் பக்கத்திலேயே அவர்களின் விருந்தினர் விடுதி இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம் ஒவ்வொரு தளத்திலும் நான்கு அறைகள் இருந்தது. அதோடு ஒவ்வொரு தளத்திற்கும் பொதுவான சமையல் அறையும் இருந்தது. அங்கேயே தேவையான பத்திரங்களும் இருந்தது. விருப்பபட்டால் சமைத்துக் கொள்ளலாம்.
ரூம் சர்வீஸ் இல்லை... காபி டிபன் வேண்டுமென்றால் ஒன்று அவர்களாகச் செய்து கொள்ள வேண்டும் அல்லது வெளியே சென்று தான் சாப்பிட வேண்டும். அறைகளைச் சுத்தம் செய்ய மட்டும் ஆட்களை வைத்துக்கொண்டு வெங்கட்டும் வைஷ்ணவியுமே நிர்வாகம் செய்தனர்.
மீனாவுக்கும் வைஷ்ணவிக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தது. இருவரும் பேசியபடியே வேலைப் பார்த்தனர். மீனா இவ்வளவு பேசி ஹரி இன்று தான் பார்கிறான்.
ஹால், சமையல் அறை மற்றும் ஒரே ஒரு படுக்கை அறையைக் கொண்ட சின்ன வீடு என்பதால்.... எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பது போல் இருந்தது.
அவன் மீனாவை இன்னும் வாங்க போங்க என அழைப்பதை பார்த்த வைஷ்ணவி “சொந்தகாரங்க யாரவது கேட்டா சிரிப்பாங்க. மீனா உன் பொண்டாட்டி ஒழுங்கா பேசி பழகு.... நம்ம சொந்த ஊருக்கு வேற திருவிழாவுக்குப் போகணும். நீ மீனாவை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டதா அவங்ககிட்ட எல்லாம் சொல்லி வச்சிருக்கேன். அங்க வந்து யாரு வாய்க்கும் மீனாவை அவல் ஆக்காத.” அவர் சொல்ல ஹரியும் சரி என்றான்.
அன்று எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இரவு ஆனதும் வைஷ்ணவி ஹரியிடம் “நீங்களும் ஒரு ரூம்ல போய்ப் படுக்கலாமே...” என்றதற்கு ஹரி அவரைப் பார்த்து முறைத்து விட்டு ஹாலிலேயே படுத்துக்கொள்ள.... வெங்கட்டும் ஹாலில் இருந்த திவானில் படுத்துக்கொண்டார்.
ஹரிணியும் விக்ரமும் வந்தால்.... விடுதியில் காலியாக இருக்கும் எதாவது ஒரு அறையில் தான் தங்குவார்கள். இதற்கு முன் ஹரியும் பிருந்தாவும் வந்த போது கூட அப்படித் தங்கியது உண்டு. அதனால் தான் வைஷ்ணவி கேட்டார்.
அனி ஏற்கனவே அறையில் இருந்த கட்டிலில் உறங்கி இருந்தாள். வைஷ்ணவியும் மீனாவும் அவளை நடுவில் விட்டு ஆளுக்கொரு பக்கம் படுத்துக்கொண்டனர்.
நடு இரவில் விழித்த அனி ஹரியை காணாது அவனைத் தேடி வெளியே வந்தவள், அவன் ஹாலில் படுத்திருப்பதைப் பார்த்து அவனிடம் சென்று படுத்துக்கொண்டாள். காலையில் கண் விழித்த ஹரிக்கு மகளைத் தன் அருகில் பார்த்ததும் அவ்வளவு பெருமை... அவளை அணைத்தபடி மீண்டும் உறங்கி போனான்.
அன்று நிறைய இடங்கள் சுற்றி பார்த்தனர். வைஷ்ணவியும் வெங்கட்டும் அவர்களுடன் செல்லவில்லை.... இவர்கள் மூவர் மட்டும் தான் சென்றனர். பொட்டானிக்கல் கார்டன், லேக், பார்க் என்று நிறைய இடங்களைக் கண்டு களித்தனர்.
கார்டனில் ஹரியும் அனியும் முன்னே செல்ல.... மீனா பின்னே மெதுவாக ஒவ்வொரு பூக்களையும் ரசித்தபடி நடந்து வந்தாள். சிறிது தூரம் சென்று அவளைக் காணாது திரும்பி பார்த்த ஹரியின் கண்களில் மீனாவையே பார்த்துக்கொண்டிருந்த சிலர் பட.... அவன் நின்று அவளோடு சேர்ந்து நடந்தான்.
ஹரி எதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டது போல் மீனாவுக்குத் தோன்ற.... அவள் என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள்?
“நீ ஏன் இவ்வளவு அழகா இருக்க?”
ஹரி ஆசையாகவோ இல்லை ஆர்வமாகவோ அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.... சாதாரணமாகத் தான் கேட்டான்.
திடிரென்று இப்படிக் கேட்டதும் மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படிக் கேட்டால் என்ன சொல்வது? இத்தனை நாள் மேகம் மறைத்த நிலவு போல் இருந்தவள், இப்போது தான் ஒழுங்காக உண்டு, உறங்கி எழுவதால்.... பார்க்க பௌர்ணமி நிலவு போல் பளிச்சென்று இருந்தாள்.
இவர்கள் இருவர் மட்டும் தான் நடந்து கொண்டு இருந்தனர். அனி முன்னே சென்று இருந்தாள். “ஏன் திடிர்ன்னு இந்தக் கேள்வி?” மீனா கேட்க....
“இல்லை உன்னைப் பார்துக்கவே ஒரு ஆள் போடணும் போலிருக்கு. அனியும் உன்னை மாதிரி தான் இருக்கா.... அவ பெரிசானா... அவளுக்கும் இந்தத் தொந்தரவு எல்லாம் வருமோ.... முதல்ல அவளுக்குக் கராத்தே சொல்லித் தரணும்.” என்றதும், ஹரியின் கவலையைப் பார்த்து மீனாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
இருவரும் இன்று தான் இது போல் சகஜமாகப் பேசுகிறார்கள். நேற்று வரை யாரோ போல் இருந்தவர்களைப் பேருந்தில் நடந்த சம்பவம் மாற்றி இருந்தது. ஹரியும் வாங்க போங்கவைகளை விட்டு வா போ என ஒருமைக்குத் தாவி இருந்தான்.
அவன் கேட்ட விதம் வேடிக்கையாக இருந்தாலும், அவன் கேள்வியில் இருந்த அர்த்தம் மீனாவுக்குப் புரியவே செய்தது. அழகாக இருப்பது சில நேரத்தில் ஆபத்திலும் கொண்டு விடுகிறது தானே.... ஏன் அவள் அழகாக இருந்ததால் தானே ஆகாஷின் கண்களில் பட்டு.... இத்தனை வேதனையும்.
ஆகாஷை பற்றி நினைத்ததும் பழைய நினைவுகளில் மீனாவின் முகம் கலங்க.... தான் தவறாக எதுவும் பேசி விட்டோமோ என ஹரிக்குப் பயமாகப் போய் விட்டது.
“சாரி நான் அப்படிக் கேட்டு இருக்கக் கூடாது.”
“இல்லை.... பரவாயில்லை....” மீனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே.... அனி அவர்களை நோக்கி ஓடி வந்தாள். அதன் பிறகு வேறு எதையும் நினைக்க நேரம் இருக்கவில்லை.... மற்ற இடங்களை சுற்றி பார்த்து விட்டு மூவரும் வீட்டிற்குத் திரும்பினர்.
“பத்து நாள் இருக்கிற மாதிரி வாங்கன்னா... ரெண்டு நாள்ல இப்படி அவசரமா கிளம்புறீங்களே....” வைஷ்ணவி குறைபட....
“நீங்க இங்க சீசன் இல்லதப்பா.... அங்க வந்து இருங்க மா... அடுத்தத் தடவை ஹரிணி வரும் போது நாங்களும் வரோம். அப்ப இன்னும் நல்லா இருக்கும். இப்ப அனிக்கு ஸ்கூல் இருக்கு இல்லையா... அதோட எனக்கும் ஷோரூம் போகணுமே....”
ஹரி சொன்னதைக் கேட்ட வைஷ்ணவி மகனை முறைத்துக்கொண்டே.... அவர்களுக்குக் கொடுத்து விடச் சாமான்களை எடுத்து வைத்தார். மீனாவுக்குக் கிளம்பவே மனம் இல்லை.... விருப்பம் இல்லாமல் கிளம்பி கொண்டு இருந்தாள்.
ஒரு வழியாக ஊட்டியில் இருந்து கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தனர். எப்போதும் போல் நாட்கள் சென்று கொண்டு இருந்தது. இப்போது இருவரும் கொஞ்சம் பேசிக்கொள்ள ஆரம்பித்து இருந்தனர்.
ஒரு நாள் உணவு அருந்தும் போது தனது பர்சை டேபிளில் வைத்த ஹரி, அதை எடுக்க மறந்து விட்டு ஷோ ரூம் சென்று இருந்தான்.
மீனாவும் அதைக் கவனிக்கவில்லை.... காலை உணவை முடித்து விட்டு மேஜையை ஒதுங்க வைத்தவளின் கைபட்டுப் பர்ஸ் தரையில் விழுந்தது.
பர்ஸ் திறந்து உள்ளே இருந்த புகைப்படம் தெரிந்தது. மீனா கையில் எடுத்து பார்க்க.... அதில் ஹரியும் பிருந்தாவும் இருந்தனர். அந்தப் புகைப்படத்தை ஒட்டியே அனியின் புகைப்படம் ஒன்றும் இருந்தது.
மீனா அன்று தான் பிருந்தாவின் புகைப்படத்தைப் பார்க்கிறாள். முதலில் வேறு எதுவும் அவள் கவனத்தில் இல்லை.... பிருந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பிறகு தான் பக்கத்தில் இருந்த ஹரி மீது பார்வை சென்றது. அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
ஏனோ அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது.... மனதிற்கு இதமாக இல்லை... எதோ பிடிக்கவில்லை.... கணவனை வேறு ஒரு பெண்ணுடன், அவள் அவனின் முன்னால் மனைவியாக இருந்தாலும், சேர்த்து பார்க்கும் போது கஷ்டமாகத்தானே இருக்கும். பிறகு தான் அனியின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
மொத்தமாகச் சேர்த்து பார்க்கும் போது... அவர்கள் மூவரும் ஒரு குடும்பம் போல் இருந்தது. அப்போது நான் யார்? என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அவள் யாரை பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டுமோ அவனே அப்போது எதிரில் வந்து நின்றான். ஹரியை எதிர்பார்க்காததால்... மீனா திகைத்துப் போய்ச் சில நொடிகள் அப்படியே நின்று விட்டாள்.
அவனின் பர்ஸ் கையில் இருப்பதை உணர்ந்தவள் “இல்லை கீழ விழுந்துடுச்சு.... அது தான் எடுத்தேன்.” என்றபடி பர்ஸை அவனை நோக்கி நீட்டினாள்.
“பரவாயில்லை.... மறந்துட்டுப் போயிட்டேன். அது தான் எடுக்க வந்தேன்.” என்ற ஹரி அவளிடம் இருந்து பர்சை வாங்கிகொண்டு வெளியே சென்றான்.
அவள் பர்ஸை தரையில் இருந்து கையில் எடுக்கும் போதே உள்ளே நுழைந்திருந்தான். தானாக எப்படிக் கேட்பது என்று தான் அமைதியாக நின்றிருந்தான். அதனால் அவளின் முக மாற்றத்தையும் கவனித்து இருந்தான்.
அந்தப் புகைப்படத்தை அவனின் பர்ஸில் வைத்தது பிருந்தா... அதனால் அதை எடுக்க மனம் வராமல் வைத்திருந்தான். இப்போது தவறோ எனத் தோன்றியது.
ஒருபக்கம் இப்படி நினைத்தால்.... மறுபக்கம், என் பொண்டாட்டி போட்டோ நான் வச்சிருப்பேன் என மனம் வாதிட்டது. அப்போ மீனா யாருடா... என அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.
மீனா மெல்ல மெல்ல அவனின் மனதிற்குள் மனைவி என்ற ஸ்தானத்தைக் கைப்பற்றுவதை அவனும் அன்று தான் உணர்ந்தான். ஆனால் அதை முழுமையாக ஏற்றக்கொள்ளப் பிடிக்காமல்.... அலட்ச்சியபடுத்தி விட்டுச் சென்றான்.