அவரின் அலட்சிய பார்வையை அலட்சியம் செய்தவனாக மொபைலை எடுத்து குடைய ஆரம்பித்தான்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் அவ்வீடே அமளிதுமளிப்பட்டது. வந்தவர்களுக்கு குடுக்கும் மரியாதையென்ன? கவனிப்பென்ன? குடும்பம் மொத்தமும் விழுந்து விழுந்து கவனித்தது.
அனைவரையும் வரவேற்று அமர்த்தி அறிமுகப்படலம் நடத்தி சம்பிரதாயமான பேச்சுக்கள் ஆரம்பித்து பெண்ணை அழைத்துவர சொல்லப்பட்டது.
வரவேற்பறைக்குள் நுழைந்த காவேரி சபையினருக்கு பணிவோடு வணக்கத்தை தெரிவித்து அங்கே அமர்ந்தாள்.
அனைவரையும் அடிக்கண்ணால் ஒருமுறை வலம் வந்தவள் பார்வை வட்டத்தில் ரிஷி விழுக கோவத்தில் முகம் சிவந்தாள். அவளின் பார்வை குறுகுறுப்பில் அவனும் எத்தேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்தான்.
முதலில் கண்டுகொள்ளாதவன் பின் எதோ உறுத்த அவளை மீண்டும் கூர்மையாக பார்த்தவன் அவள் சுமங்கலியையும் விரோத பார்வை பார்த்ததையும், தான் தாய் ஒதுங்கி நின்றதையும் கவனித்துவிட்டான்.
காவேரியின் பார்வையில் தெரிந்த அப்பட்டமான குற்றசாட்டை எரிச்சலோடு கண்ணுற்றவன்,
“இவ திருந்தவே மாட்டா. மாம் இவளுக்காக சப்போர்ட் பண்ணினாங்க. கொஞ்சமாச்சும் ரெஸ்பெக்ட் குடுக்காளா?...”
தானும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காத பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து தனியாக சென்று அமர்ந்துகொண்டான்.
சுமங்கலிக்குமே காவேரியின் இந்த ஒதுக்கமும் பாராமுகமும் பெரும் அதிர்வை தந்தது. எப்போதும் பாசமும் அன்பும் மட்டுமே தெரியும் கண்களில் இருந்த விலகலும் அந்நியமும் அவரை பின்னடைய செய்தது.
சுமங்கலி தானாகவே விலகி நின்றார். இதையெல்லாம் பார்த்திருந்த ரிஷிக்கு அந்த வைபவத்தில் கலந்திருக்கவே பிடித்தமில்லை. தாய்க்காக சகித்தபடி இருந்தான்.
பெண் பிடித்து ஒப்புத்தாம்பூலம் மாற்றி காவேரிக்கு அவளின் மாமியார் வீட்டினர் பூ வைத்து சம்பந்தத்தை உறுதி செய்துவிட அனைத்தும் நல்லபடியா முடிந்து நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் முகூர்த்தநாள் குறித்துவிட்டு சென்றனர்.
அதன் பின் ஒரு நிமிடம் கூட தாமதியாது தாயை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் ரிஷி.
இருந்து செல்லலாம் என கூறிய சிவராமனையும், உசிதமணியையும் அழுத்தமான பார்வையில் அடக்கியவன் துரைச்சாமியை முறைத்துவிட்டு அணைவாக சுமங்கலியை அழைத்து சென்றுவிட்டான்.
ஒரு தலையசைப்போடு விடைபெற்ற சுமங்கலியின் சோர்ந்த முகமும், ரிஷியின் கோபமும் திலகாவிற்கு கவலையை கொடுத்தது. அவரும் தானே காவேரியை கவனித்துக்கொண்டிருந்தார். வீட்டிற்கு செல்லவும் சுமங்கலியிடம் பேசவேண்டும் என நினைத்தார்.
காவேரியின் செயலில் அதிகமான கோவம் மூண்டது திலகாவிற்கு. “அனைவரும் செல்லட்டும் இருக்கு இவளுக்கு...” என கடுகடுப்பாக இருந்தார்.
காரில் ரிஷியின் அருகில் அமர்ந்திருந்த சுமங்கலியின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது. மாமனார் வீட்டில் காவேரி செய்த செயல்கள் கண்முன் தோன்றி கண்ணீரை விழிவிட்டு வெளியே கடத்தியது.
காவேரியை ஆசையாக பார்க்க சென்றவர் பெண்ணாய் அலங்கரிக்கப்பட்ட அவளை, “அழகா இருக்கேடா காவேரி...” என சொல்லி ஆசையாக தழுவ வேகமாக அவரிடமிருந்து தன்னை பிய்த்து அவரை தள்ளி நிறுத்தினாள்.
அதிர்ந்த பார்வை பார்த்தவரை அலட்சியப்படுத்தி, “மேக்கப் கலைஞ்சிடும்...” தன்னை திருத்திக்கொள்வதை போல கண்ணாடி முன்பு திரும்பி நின்றாள்.
அடுத்ததாக சபையில் சிவராமனோடு தம்பதி சகிதமாக நின்ற சுமங்கலியை பார்க்காமல் மாமனின் காலை மட்டும் தொட்டு வணங்கியவள் சட்டென எழுந்து அவரிடம் மட்டும் விபூதி பூசிக்கொண்டு திரும்பி திலகாவிடம் எதையோ கேட்பது போல நகர்ந்தாள்.
இப்படி யாரும் அறியாவண்ணம் சுமங்கலியை அவமதிக்க அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அமைதிகாத்தார் சுமங்கலி.
பெறாத பெண்ணாக தான் நினைத்தவள் செய்த செயலை ஜீரணிக்கமுடியாமல் அழுகையை அடக்க வகையில்லாமல் திணற அதை பார்த்த ரிஷியின் கை முஷ்டிகள் இறுகின.
“மாம், லீவ் இட். நீங்க பீல் பன்ற அளவுக்கு அவ வொர்த் இல்லை...” ரிஷி சொன்னது தான் தாமதம் அவனின் தோளில் சாய்ந்துவிட்டார்.
மௌனமாக சென்றவர்களுக்கு அன்றைய நாள் மிகுந்த கனத்தநாளாக கடந்து சென்றது.
இரவே திலகா சுமங்கலியிடம் பேசி காவேரியை மன்னிப்பு கேட்க சொல்ல அவருக்காக வேண்டா வெறுப்பாக மன்னிப்பை கேட்டவளிடம் ம்ம் என்ற பதிலை மட்டும் கொடுத்துவிட்டு வைத்துவிட்டார்.
காவேரியின் இந்த குணத்தினால் மிகவும் கசந்துபோனார் சுமங்கலி. இப்படி ஒரு உதாசீனத்தை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
“இதுவரை யாரும் தன்னை இப்படி அவமானம் செய்ததில்லையே?...” அவருக்கு மனம் தாங்கவே இல்லை.
“இத்தனை நாள் தன்னிடம் காட்டிய பாசம் வெறும் பாசாங்கா? இதுதான் இவளின் உண்மை முகமோ?...” என எண்ணியவர் மனக்கண்ணில் ரிஷியின் முகம் வந்து செல்ல மகனிற்காக தன்னை வெளிக்கொணர்ந்தார்.
“ச்சே ச்சே என்னதிது? ஒரு சிறுபெண்ணின் நடத்தையால் நான் ஏன் பாதிக்கப்படவேண்டும்? அந்தளவிற்கு தான் பலகீனமானவளா?...”
கண்களை இறுக மூடி இரு நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவர் விழி திறக்கையில் தெளிவாகியிருந்தார். தன் குடும்பத்தில் முழுமையான கவனத்தை செலுத்தினார்.
-------------------------------------------------------------------
ஹாஸ்டல் ரூம் கட்டிலில் ஒருகாலை மடக்கி இன்னொரு காலை முட்டியிட்டு அமர்ந்திருந்த நேத்ரா வாயில் ஒரு பேனாவை வைத்து கடித்துக்கொண்டிருந்தாள்.
“என்னடி நேத்ரா நான் சொல்றேன் கொஞ்சமும் சீரியஸ்நெஸ் புரியாம அமைதியா இருக்க. இப்போ என்ன செய்ய போற?...”
“இப்போ அதுக்கு என்ன செய்யனும்ன்ற?. கத்தி கதறி உருண்டு புரண்டு அழட்டுமா?..”
நேத்ராவின் அலட்சியபாவனை வனமலருக்கு பீதியை கிளப்பியது.
“நேத்ரா கொஞ்சமாச்சும் பொறுப்பா பேசு. உன் மேல ஹாஸ்டல் வார்டன்கிட்ட உன் ரூம் மேட் சத்யா தான் கம்ப்ளைன்ட் குடுத்திருக்கா நீ மொபைல் வச்சிருக்கன்னு. குடுக்க வச்சது ரஞ்சனி மேம்...” என சொல்ல,
“திரும்பவும் பாடுன பாட்டையே பாடாதே அமேஸான். எல்லா நியூஸும் வந்திருச்சு. என் ரூம்ல செக் பண்ணினாலும் போன் அவங்களுக்கு கிடைக்காது...” நேத்ரா திடமாக கூற,
“உனக்கு என்ன ஒரு நம்பிக்கை? நம்ம காலேஜ் ரூல்ஸை மீறி நீ போன் வச்சிருக்க. அது உன் ரூம்ல தான் இருக்கு. தேடினா கிடைக்காதா?...” ராகினி கேட்க,
“கிடைக்காது, கிடைக்காது...” நேத்ரா ராகம் பாட ரோஷிணி அனைத்தையும் பார்த்து மௌனமாக சிரித்தாள்.
“உனக்கென்ன சிரிப்பு வேண்டி இருக்கு ரோஷி. இவளை கொஞ்சம் அடக்கேன்...”வனமலர் பொரிய,
“போனும் கிடைக்காது. ஒன்னும் கிடைக்காது. இவ கேடிக்கும் கேடி. நமக்கு தெரியாதா இவளை. என்னோட நினைப்பெல்லாம் அந்த சத்யாவுக்கு இது தேவையான்றது தான்...”
ரோஷிணியின் கூற்றில் இருக்கும் உண்மை உணர்ந்தாலும் ஏனோ ராகினிக்கும் வனமலருக்கும் அமைதி இல்லை.
“ப்ச் இவளுங்க இம்சை தாங்கலை. சரி நான் என் ரூம் போறேன். வார்டன் ரொம்ப நேரமா வெய்ட் பண்ணுவாங்க...” என போனால் போகிறது என்பதை போல கிளம்பியவளோடு வனமலரும் உடன் சென்றாள்.
அங்கே அறையின் வாசலில் வார்டன் கோப முகத்தோடு நேத்ராவை எதிர்க்கொள்ள இவளோ அவரை பார்த்து காதுவரைக்கும் ஈ என சிரித்துவைத்தாள்.
தன்னுடைய ரூம் மேட்ஸ் இருவரை தவிர புகார் குடுத்த சத்யா அங்கே இல்லாமல் போக வரட்டும் அவள் என நினைத்தபடி,
“சொல்லுங்க மேடம்...” என அவரிடம் கேட்க வார்டன் நேத்ராவிடம் என்கொயரியை ஆரம்பித்தவர் அவளின் பதில்களுக்கு எதிர்கேள்வி கேட்க முடியாதளவிற்கு ஓய்ந்து போனார்.
“உன் திங்க்ஸ் செக் பண்ணனுமே...” என அதிகாரமாக ஆரம்பிக்க அதற்கும் சளைக்காமல்,
“ஓ எஸ் மேம். தாராளமா. ஆனா போன் கிடைக்கலைனா நான் கரெஸ்பாண்டென்ட் சார்க்கிட்ட கம்ப்ளைன்ட் நிச்சயம் பண்ணுவேன்...”
திமிராக சொல்லியவள் தன்னுடைய உடமைகளை தன் கட்டிலில் எடுத்து பரத்தினாள்.
அவளின் பேச்சில் அதிர்ந்த வார்டன் கரெஸ்பாண்டென்ட் என்ற வார்த்தையில் நா உலர்ந்து போக வெற்றிகரமாக பின்வாங்கினார். அவரும் தான் ரிஷியின் கோபத்தை பற்றி கேள்விப்பட்டிருந்தாரே.
“இவ மட்டும் ஏனோ சிக்கவே மாட்டேன்றாளே?...” மனதிற்குள் நேத்ராவை கரித்துக்கொட்டியவர்,
“இன்னொரு முறை சிக்காமலா போய்விடுவாள் அப்போது பார்த்துக்கொள்வோம்...” என எண்ணி,
“சரி சரி. எல்லோரும் அவங்கவங்க வேலையை பாருங்க...” தன் சோடாபுட்டியை சரிசெய்துகொண்டே பொதுவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தன்னுடைய கட்டிலில் இருந்தவற்றை இறக்கி கீழே வைத்தவள் முகம் அப்படி ஒரு கனலை கொட்டியது. சைந்தவியும் இன்னொரு பெண்ணான சுசியும் பயந்து போய் ஒதுங்கி நின்றனர்.
சற்று நேரத்தில் சத்யா வந்துவிட வரும் போதே அவள் இப்போது நேத்ரா நிச்சயம் சிக்கியிருப்பாள், வார்டன் ரூமிற்கு சென்றிருப்பாள் என சந்தோஷித்தபடி இன்னொரு பெண்ணுடன் பாடிக்கொண்டே நேத்ராவை கவனியாது உள் நுழைந்தாள்.
“வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் டும்...” என சத்யா பாட,
“கத்தி போய் கடப்பாரை வந்தது டும் டும் டும் டும்...” நேத்ரா எசைப்பாட்டு பாடினாள்.
அதிர்வாக சத்யா திரும்பி பார்க்க அங்கே கட்டிலில் சம்மணம் இட்டு ஒய்யாரமாக காளி அவதாரம் எடுத்திருந்தாள் நேத்ரா.
அலை தீண்டும்...