அலை - 13
“ரிஷி கனவு கண்டது போதும். பீ சீரியஸ். தாத்தாவை இந்த வீக்கெண்ட் போய் பார்த்திட்டு வந்திடு. என்ன பேசனும்னு ஒருதடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சுக்கோ...” சுமங்கலி தன் போக்கில் கூறிக்கொண்டிருக்க ரிஷி அதை கவனித்தான் இல்லை.
சோபாவில் நன்கு சாய்ந்து உதடுகளில் உறைந்த புன்னகையோடு விழிகளில் கனவு ஊர்வலம் மிதக்க வேறுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அவனின் கையில் வலிக்காமல் கிள்ளி வைத்தார்.
“ஏன் மாம் என்னை டிஸ்டர்ப் பன்றீங்க?...” பெரிதாக வலித்துவிட்டதை போல கையை வறட்டு வறட்டென தேய்த்துவிட்டுக்கொண்டான் ரிஷி.
“அது சரி. நீ இப்படி கனவுலையே உன் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்ட போல? எனக்கென்ன?...” சேலை தலைப்பை உதறிக்கொண்டு சுமங்கலி எழுந்துவிட,
“நோ நோ மாம். என்ன சொன்னீங்க? முதல்ல இருந்து சொல்லுங்க. அப்படியே எனக்கொரு ஐடியா குடுங்களேன் ப்ளீஸ்...”கெஞ்சலாக கேட்க,
“உன் அப்பாக்கிட்ட முதல்ல விஷயத்தை சொல்லுவோம். அதுக்கப்பறமா நாம தாத்தாக்கிட்ட பேசலாம். இன்னைக்கு செவ்வாய் கிழமை. இந்த வீக்கென்ட் அங்க போவோம். இதைத்தான் சொன்னேன்...” என,
“அதென்ன வீக்கெண்ட்? இன்னைக்கே மீசையை பார்க்க போவோம். கெட்டப் கெட்டப்...”
ரிஷியின் அவசரத்தை பார்த்து ஆவென வாயை பிளந்த சுமங்கலியை அசந்த நேரத்தில் இழுத்துக்கொண்டு காரில் ஏற்றி துரைச்சாமியின் மாளிகைக்கு புறப்பட்டேவிட்டான் ரிஷி.
“அப்பாவுக்கு சொல்லனும் ரிஷி. உன்னோட இந்த அவசரத்துக்கு அவர் கோபப்படுவார். அப்பா எப்படி பேசனும்னு சொல்றாரோ அது போல தாத்தா மூட் பாத்து பேசுவோம் ரிஷி...”
நிலைமையை புரிந்துகொள்ளாமல் மகன் பிடிவாதமாக இருக்கிறானே என்கின்ற கவலை அவரை வாட்டியது.
எந்த ஒரு முடிவிலும் நிதானமாக செயல்படுபவன் அவனின் வாழ்க்கையில் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவிற்கு இந்தளவிற்கு வேகம் காட்டுவது கொஞ்சம் திகிலை கூட தந்தது தாயவருக்கு.
காரைக்குடியை நெருங்கியதும் சிவராமனுக்கு மொபைலில் அழைத்து இன்ன விபரம் என சொல்லாமலே மொட்டையாக தாத்தா வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு வைத்துவிட அவர் என்னவோ ஏதோ என பதறிக்கொண்டு ரிஷி வரும் நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தார்.
“என்ன சுமா என்னாச்சு ரெண்டு பேரும் இவ்வளோ தூரம் திடீர்னு கிளம்பி வந்திருக்கீங்க?...” மகனை தாண்டி மனைவியிடம் சிவராமன் கேட்க ரிஷிக்கு புசுபுசுவென பொங்கியது.
“வரசொன்ன நான் இங்க கல்லாட்டம் நிக்கிறேன். இவரு என்கிட்டே கேட்டா என்னவாம்? முதல்ல இந்த அப்பாக்கிட்ட இருந்து அம்மாவை நாடு கடத்தனும்...” இரக்கமே இல்லாமல் கருவினான்.
விட்டால் இன்னும் என்ன நினைத்திருப்பானோ அதற்குள் சிவராமன் மகனை திரும்பி பார்க்க,
“மகனோட கல்யாண விஷயத்தை வாசல்லையே வச்சு பேசனுமாப்பா?...” மிதப்பாக கேட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
சிவராமன் அதிர்ச்சியில் நிற்க அவரை அழைத்துக்கொண்டு அவனின் பின்னாலேயே வேகமாக வந்த சுமங்கலி அங்கிருந்த பணியாளரிடம் பெரியவரை கேட்க துரைச்சாமி வயலுக்கு சென்றிருப்பதாக கூறி சென்றார்.
நெஞ்சில் கைவைத்து கொஞ்சம் ஆசுவாசமானவர்,
“என்னங்க குடிக்க கொஞ்சம் ஜில்லுன்னு ஏதாவது எடுத்துட்டு வரேன். நானே வந்து உங்கக்கிட்ட விளக்கமா எல்லாம் சொல்றேன்...” என்றுவிட்டு உள்ளே சென்று மூவருக்கும் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஊற்றி மோர் கரைத்து கொண்டுவந்தார்.
அந்த வெயிலுக்கு இதமாக இருக்க குடித்துக்கொண்டிருக்கும் பொழுதே அதே பணியாள் திரும்பி வந்து,
“பெரியய்யாவுக்கு தாக்கல் சொல்லியனுப்பிட்டேனுங்க சின்னய்யா. இன்னும் செத்த நேரத்துல வந்துடுவாங்க. பெரியம்மா தூங்குறாங்க...” என மிக பணிவோடு கூறி தன் வேலை முடிந்தது என நகர்ந்துவிட்டார்.
“இப்போவாச்சும் என்ன சேதின்னு சொல்லுதீகளா?...” சிவராமன் நெற்றிக்கண் திறக்காத குறையாக முறைப்போடு கேட்டார்.
அவர் மகனோ வெகு நிதானமாக அவரை பாதாதி கேசம் வரை பார்த்துவைக்க அதில் இன்னமும் சினம் ஏறியது சிவராமனுக்கு.
பார்மல் பேண்டும் அதற்கு பொருத்தமாக டர்க்இன் செய்த ஷர்ட்டுடன் டை கட்டிய அவரது தோற்றம் ரிஷியை கவர்ந்தது. அந்த உடுப்பிற்கும் சிவராமனின் பேச்சிற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாமல் போனதற்கு தான் அந்த பார்வை பார்த்தான்.
“என்னவே பார்வை பலமாருக்கு? கேட்டதுக்கு பதில் சொல்லாம என்ன சுமா உம்ட்டு மவனுக்கு என்னவாம்? என்னைய இப்படி பாத்துவைக்கான்?...” சிவராமன் கேட்க,
“அது எப்படிப்பா இந்த வீட்டுக்குள்ள காலடி வச்சதும் உங்க ஸ்லாங் அப்டியே சேஞ் ஆகிடுது? இன்னை வரைக்கும் அதுக்கான விடை எனக்கு கிடைக்கவே இல்லை...” என,
“என்னதான் உடுப்பு மாறினாலும் நான் இந்த மண்ணுல பிறந்த கிராமத்தான் தான். நான் இப்படித்தான் இருப்பேன். உன் உடம்பில ஓடற ரத்தமும் இதே கிராமத்து வாசம் தான். நீ பிறந்ததும் இங்க தான் மறந்துடாதே. உனக்குள்ளும் அந்த கிராமத்தான் தான் இருக்கான்...” என பிரசங்கம் ஒன்றை நடத்தி,
“இப்போ இது ரொம்பவும் முக்கியம் பாரு. விஷயத்தை சொல்லு...” நேரம் ஆக ஆக டென்ஷன் தலைக்கேறியது சிவராமனுக்கு.
“நீங்க ஏன் வொரி பண்ணிக்கறீங்க? நான் தான் என்னன்னு சொல்றேன்னு சொன்னேன்ல. வாங்க நாம ரூம்க்கு போய் பேசுவோம்...”
எழுந்து பக்கவாட்டில் இருந்த அறை நோக்கி சென்ற சுமங்கலியை சிவராமன் பின் தொடர ரிஷி வேண்டுமென்றே அவரை முந்திக்கொண்டு தாயின் தோளில் கைபோட்டபடி சென்றான்.
“எனக்கு இவன் போட்டியா?. என்னா ஒரு அலும்பு இவனுக்கு?...” விரிந்த புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது மகனின் சிறுபிள்ளைதனத்தால்.
உள்ளே நுழைந்ததும் சுமங்கலி கூறிய விஷயத்தில் அப்புன்னகை துடைத்துவிட்டதை போல ஆனது சிவராமனுக்கு.
“என்ன விளையாடறீங்களா ரெண்டு பேரும்?...” என ரிஷியையும் சுமங்கலியையும் திட்டி தீர்த்துவிட்டார்.
மகனிற்காக கணவரின் பேச்சுக்களை காதில் வாங்கி மௌனியாக சுமங்கலி அமர்ந்திருக்க ரிஷியோ யாரோ யாரையோ திட்டுகிறார்கள் என்பதை போன்ற பாவனையோடு காதை குடைந்துகொண்டிருந்தான்.
அவனின் செயலில் வெகுண்ட சிவராமன் பல்லைக்கடித்தபடி,
“சுமா உன் மகனுக்கு என்ன ஒரு மெட்டுமத்தனம் பார்த்தியா? நான் இப்படி கத்திட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் காதுல வாங்கறானா பாரு?...”
சிவராமன் மேல்மூச்சு வாங்க ருத்ர மூர்த்தியாக அவதாரமெடுத்திருக்க ரிஷி காது குடைந்துகொண்டிருந்த பேப்பரை எடுத்துவிட்டு,
“நீங்க பேசினது எனக்கு தேவையில்லாத விஷயம். இதையெல்லாம் என் காது கேட்காது. காது பிஸி...” மீண்டும் விட்ட வேலையே தொடர்ந்தான்.
ரிஷியை நிமிர்ந்து பார்த்த சுமங்கலி பார்வையாலேயே கெஞ்ச அவனோ அதை கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் பரிதாபம்.
“இவனுக்கு பேச வந்துட்டு இப்படி வாங்கிக்கட்டிட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் இறங்கி வந்து பேசறானா?...” சுமங்கலி இப்படி நினைத்திருக்க,
“எத்தனை நான் கெஞ்சியிருப்பேன். என்னோட கரியர், என் ஆம்பிஷன் எவ்வளோ முக்கியம்னு நான் எடுத்து சொல்லியிருப்பேன். அப்போலாம் நீங்க கேட்டீங்களா? அனுபவிங்க...” சமயம் பார்த்து அருமை மிகு புதல்வன் பழிவாங்கினான்.
“என்னால அய்யாக்கிட்ட இதை பத்தி பேசமுடியாது. இவனை அந்த பொண்ணை மறந்துட்டு வேலையை பார்க்க சொல்லு. இன்னும் கொஞ்ச நாள் போகவும் அய்யா வேற பொண்ணை பார்ப்பாங்க. அப்போ இவனை வாயை மூடிட்டு சரின்னு தலையாட்ட சொல்லு...” முடிவாக சிவராமன் கூறிவிட,
“இதுவும் உங்க அய்யா பார்த்த பொண்ணுதானே...” இருக்கையிலிருந்து வேகமாக எழுந்து ரிஷி கேட்க,
“அதைத்தான் நீ வேண்டாம்னு சொல்லிட்டியே. இது முடிஞ்சு போன விஷயம். அதுவும் இல்லாம காதல் அது இதுன்னு அய்யாக்கிட்ட போய் நிக்க என்னால முடியாது. நீயும் அப்படி நிக்க கூடாது. காதல் கல்யாணம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது...”
“எல்லாம் ஒத்து வரும். நீங்க பேசற விதமா பேசுங்க. அதெல்லாம் தானா ஒத்துவரும்...”ரிஷியும் தந்தையின் பிடிவாதத்திற்கு கொஞ்சமும் சளைக்காமல் முரண்டுபிடிக்க,
“முடியவே முடியாது. அய்யா இப்ப வந்து கேட்டா நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கறேன். நீங்க ஒண்ணும் பேசவேண்டாம்...”
“இதுதான் உங்க முடிவாப்பா?...”
“எத்தனை தடவை சொல்றது. இதுதான் முடிவு. உனக்காகன்னு சொல்லி இன்னொருக்க அய்யாக்கிட்ட பேசி அந்த பாலகிருஷ்ணன்கிட்ட பொண்ணை குடுங்கன்னு போய் நிக்க முடியாது...”
“ஓகே அப்போ என்னோட முடிவை நீங்க கேட்டுக்கோங்க. என் வாழ்க்கையை பத்தின உங்க அக்கறையை விட உங்கப்பா கௌரவம் தான் முக்கியம்னு நீங்க நினைக்கிறப்போ நான் என் எதிர்காலத்தை எனக்கு பிடிச்சது போல வச்சுக்க சுயநலமா யோசிக்கிறதுல தப்பில்லை தானே?...”
தந்தைக்கும் மகனிற்குமான வாக்குவாதத்தில் செய்வதறியாமல் தவித்து நின்ற சுமங்கலி ரிஷியின் பேச்சில் கலங்கிப்போனார்.
ரிஷியின் பிடிவாதத்தை தான் வீட்டிலேயே பார்த்தவராகிற்றே. இப்போது என்ன சொல்ல போகிறானோ?
ஏற்கனவே அவனின் ஆசையை அழித்து கல்லூரி பொறுப்பில் அமரவைத்த கோபம் குறையாமல் தணலாக தகித்து இருப்பவன் இப்போது அதை கணவனின் பேச்சு பெரும் தீயை உண்டாகிவிட்டதை உணரத்தான் செய்தார்.
சிவராமனுக்கும் இதே எண்ணம் தான். தாய் தந்தை இருவரும் அவனையே பார்த்திருக்க அவனோ,
“இந்த கல்யாணம் வீட்ல பேசி பெரியவங்க நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கனும்னு நினச்சேன். ஆனா அது முடியாது போல...” பாவம் போல உச்சுக்கொட்டிவிட்டு,
“நீங்களா நடத்தி வச்சா அது அரேஞ்ச்டு மேரேஜ். நானா பண்ணிக்கிட்டா அது கிட்நாப் மேரேஜ். எது எப்படியோ கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரும். மேரேஜ் பண்ணிக்கிட்டு அவளை தூக்கிட்டு மும்பைக்கு போய்டுவேன்...”
ப்ளைட்டில் பறப்பதை போல வலது கரத்தை வான் நோக்கி காண்பிக்க சிவராமனும் சுமங்கலியும் பீதியில் உறைந்து நின்றிருந்தனர்.
“என்னடா கடத்தல்னு சொல்றானேன்னு பார்க்கறீங்களா? வேற என்ன செய்ய? உங்களுக்கு நான் டைம் கொடுத்தா அவகிட்டயே போய் என்னை பத்தி நான் சொன்னதை பத்தி வத்தி வைப்பீங்க...”
“எனக்கு தான் ரிஸ்க். ஆனாலும் ரஸ்க் சாப்பிட நான் ரெடி தான். இனி யார் பேச்சையும் கேட்க மாட்டேன்...” அடாவடியாக ரிஷி கூற அவனின் அழிச்சாட்டியம் அளவில்லாமல் போனது.
“ரிஷி என்ன இது மிரட்டல்? அதுவும் அப்பாக்கிட்டையே?. நான் தான் பொறுமையா இருன்னு சொன்னேன்ல...”
“எதுவரைக்கும் மாம்? பேசாம இருங்க. அப்பா அவங்க அப்பாதான் முக்கியம்னு எதுவும் பேசமாட்டேன்னு சொல்லிட்டார். அப்போ நான் தானே என் வாழ்க்கையை பார்த்துக்கனும்...” என,
“அதுக்கு?...”
“இவங்க பேச மாட்டாங்க. நான் கெத்தா இருந்ததுக்கு அவளோட அப்பா பொண்ணு எனக்கு தரது டவுட் தான். பேசாம காலேஜ்ல ஒரு அர்ஜன்ட் மீட்டிங் வச்சு எல்லோர் முன்னாடியும் வச்சு தாலி கட்டிடறேன்...”
ரிஷி என்னவோ சிவராமனை இதற்கு எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தான் இந்தளவிற்கு இறங்கி பேசுகிறான். அது புரியாத சுமங்கலிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது ரிஷியின் மேல்.
“உன்னை இப்படியா ரிஷி நான் வளர்த்தேன்? நம்மளை நம்பி தானே காலேஜ்க்கு பொண்ணுங்களை அனுப்பி வைக்கிறாங்க. பொறுப்புள்ள பதவியில இருக்கிற நீயே இப்படி பேசினா உன் மேல எப்படி நம்பிக்கை வரும்?...”
சுமங்கலியால் கலங்கிய கண்களை கட்டுபடுத்தவே முடியவில்லை. அத்தனை பாரமாக இருந்தது அவர் நெஞ்சம். அதே கனத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ அழவேண்டாம் என்பதை போல சைகை காட்டி கண் சிமிட்டி,
“சும்மா லுளுலாய்க்கு...” என பழிப்பு காட்டி புன்னகைத்தான். ஆனாலும் அவனுள் பெரும் ஆயாசமாக இருந்தது.
பெற்ற தந்தையையே சமாளிக்க முடியவில்லையே என நினைக்கும் போது மலைப்பாகவும் இருந்தது.
தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக எத்தனை தரம் தாழ்ந்து பேசிவிட்டேன்? அவனுக்கே அவனை நினைத்து அசிங்கமாகவும் தோன்றியது. அதற்காக மானசீகமாக தந்தையிடம் மன்னிப்பையும் யாசித்தான்.