அத்தியாயம் -7
சென்னையின் புகழ்பெற்ற சட்டக் கல்லூரி அது!
மாணவர்கள் அனைவரும் கும்பலாக கல்லூரி உணவகத்தில் அமர்ந்திருந்தனர் ..அன்று தான் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன .அதை கொண்டாடியபடி அரட்டையும் உற்சாகமுமாய் உணவகம் கலகலத்துக் கொண்டிருக்க ..இருவர் மட்டும் உர்ரென்று அமர்ந்திருந்தனர்.
அது வேறு யாருமில்லை .. ஒன்று ப்ரித்வி ராஜ் ..மற்றொன்று சம்யுக்தா !
சம்யுவும் ப்ரித்வியும் சட்டக்கல்லூரியில் இன்டெகிரெட்ட்ட் கோர்ஸ் பயின்றவர்கள் .
ஒரே நிறுவனத்தில் தான் இன்டர்ன்ஷிப் ! அப்படியே அங்கு தேர்வு முடிவுகள் வருமுன்பே வேலைக்கும் சேர்ந்தாகிவிட்டது. இருவரின் திறமையும் அப்படி!
ஐந்து வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் ஒரு நாளும் நல்லதனமாக பேசிக்கொண்டதில்லை.
கல்லூரியின் முதல் நாளில் இருந்தே இருவருக்கும் முட்டிக் கொள்ளும். சண்டை சச்சரவு இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம் . இருவரும் கல்லூரியின் முதன்மையான மாணவர்கள் . அனைத்து பேராசிரியர்களுக்கும் பிரியமான மாணவர்கள். அதில் மட்டுமே இருவருக்கும் ஒற்றுமை.
யார் முதலில் வகுப்புக்கு வருவது? யார் அசைன்மென்ட் முடிப்பது ? யார் முதல் மதிப்பெண் வாங்குவது ? யார் ஸ்போர்ட்ஸ் செக்ரட்டரி ?யார் கலை குழு தலைவன் ? யார் காலை யார் வாருவது என்று எல்லாவற்றிலும் போட்டிதான் .
போட்டி சுமுகமாகவும் முடியாது .. கடைசியில் ஏதாவதொரு பஞ்சாயத்து கட்டாயம் இருக்கும்.
இருவரும் எதிரும் புதிருமாய் முகம் திருப்பி அமர்ந்திருக்க ..இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தது நண்பர் கூட்டம்.
முதல் வருடம் தனித்தனியே நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்த மாணவர் கூட்டம் காலப்போக்கில் பெரும்பாலும் நண்பர்கள் ஆகிவிட .. இவர்கள் இருவர் மட்டும் இன்னும் உரண்டை இழுத்தபடி தான் இருந்தனர்.
இவர்களை சமாதானப்படுத்தி சண்டைக்கு முடிவு கட்டுவதே நண்பர் குழுவின் தலையாய வேலையாய் இருக்க ... இன்றும் அப்படியொரு ஸீன் தான்.
பரீட்சை முடிந்து அன்றுதான் முடிவுகள் வெளியாகியிருக்க யார் முதல் மதிப்பெண் என்பதில் தான் எப்போதும் இருவருக்கும் போட்டி ஆயிற்றே!
அதிலும் ஜஸ்டின் தான் அவனது நெருங்கிய தோழன் .தான் எவ்வளவு மதிப்பெண் என்பதைவிட தன் நண்பன் நல்ல மதிப்பெண் வாங்கிவிட வேண்டும்.. அதுவும் சம்யுக்தாவை விட ஒரு மதிப்பெண்ணாவது கூடுதலாக வாங்கி விட வேண்டும் என்று ஜபித்துக் கொண்டிருக்க ..அதையே சம்யுவின் தோழி ஷபானாவும் வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஏனெனில் யார் மதிப்பெண் குறைந்தாலும் அவர்களது புலம்பலை கேட்டே காது ஓட்டை விழுந்துவிடும். அதிக மதிப்பெண் எடுப்பவரோ செய்யும் அலப்பறை கல்லூரியே தாங்காது.
இரு கடவுள்களும் அருளை சரிசமமாக பொழிந்துவிட ..இருவரும் ஒரே மதிப்பெண் .. முதல் மதிப்பெண் பெற்றிருந்தனர்.
அதை கொண்டாட நண்பர் குழாம் கூடியிருக்க .. மற்றவர் எடுத்த அதே மதிப்பெண்களை தானும் எடுப்பதா என்பதே இப்போது இவர்களது தலையாய சண்டை!
நவகிரகமாய் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தனர் ஜஸ்டினும் ஷபானாவும்.
அவனுக்கு எப்போதுமே ஆச்சரியம் தான் ..மற்ற பெண்களை கண்டும் காணாமல் போய்விடுபவன் ப்ரித்வி!
அவனது தோற்றமும் அலட்சியம் தெறிக்கும் பாவனைகளுமே பெண்களை கவர்ந்திழுக்க கூடியதுதான். ஆனாலும் இவனிடம் ப்ரபோஸ் செய்தவர்களை கூட ‘சாரி’ என்ற ஒரே வார்த்தையில் கடந்து விடுவானே தவிர…. கோபம் கொள்ள மாட்டான்.
ஆனால் எல்லா பெண்களிடமும் இலகுவாக இருக்கும் தன்மை இவளிடம் மட்டும் எப்படி மாறுகிறது என்பது புரியாத புதிர் .
எது வந்தாலும் தட்டிவிட்டு போய்விடக் கூடியவன் அவன்! ஆனால் இவளிடம் சிறு விஷயம் கூட பெரிய வில்லங்கமாய் மாறுவது எதனால் என்பது அவனுக்கே கேள்விக்குறிதான்.
சம்யுக்தாவிற்கும் அப்படியே ..எல்லாரிடமும் இன்முகமாக பேசுபவள் இவனை பார்த்தால் மட்டும் காளியாக மாறிடுவாள்.அது என்னவோ தெரியவில்லை ..ஆரம்பத்திலிருந்தே அவன் மேல் ஒரு கோபம் ..
அதற்கு காரணம் கல்லூரி முதல் நாள் நடந்த தரமான சம்பவம்.
வரலாறு முக்கியம் பாஸ்!