Episode 43
சனிக்கிழமை இரவு அர்ஜூனும், ரவியும் பெங்களூருவிலிருந்து பாலக்காடு செல்வதற்க்காக ஆம்னி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். சரியாக பேருந்து கிளம்ப இருந்த அரைமணி நேரத்திற்க்கு முன்பு மகேஷ் அஞ்சலியைக் கூட்டிக்கொண்டு வந்தார்.
மகேஷ் எப்பொழுதும் போல புன்னைகைத்தவாறே, அவர்களுக்குக் கை காட்டிக் கொண்டு வந்தார். அருகில் வரும் அஞ்சலியின் முகமோ சரியில்லை. முகத்தை கடுகடுவென்று வைத்திருந்தாள்.
“டேய்.. அங்க பாரு, அஞ்சலி முகத்த. வேண்டா வெறுப்பா வரா. அவ இருக்கற ஸ்டேஜப் பார்த்தா உன்ன அடிச்சிடுவா போலிருக்கே டா.?” என்றான் ரவி.
“ப்ச்.. சும்மா இருடா. அவங்க பக்கமா வந்துட்டாங்க.” என்று அவர்கள் அருகில் வந்ததும், மகேஷ் கை குலுக்க நீட்ட, அவனும் நீட்டினான். கை குலுக்கிக் கொண்டதும்,
“பஸ் ஃபுல் ஆயிடுச்சா.?” என்றார்.
“ஆங்.. ஓரளவுக்கு எல்லாரும் வந்தாச்சு. இன்னும் டைம் இருக்கே.” என்றான் அர்ஜூன்.
“ஓகே பா. மூணு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க. மேரேஜ் முடிஞ்சதும் அஞ்சலிய நான் வந்து கூட்டிட்டுப் போய்க்கிறேன். எனக்கும் மண்டே கேரளா வர வேண்டியிருக்கு.” என்றார் மகேஷ்.
“ஓ. அப்படியா.? சரிங்க.” என்றான் அர்ஜூன்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், அஞ்சலி அவனை சட்டை செய்யவே இல்லை. சம்பந்தம் இல்லாதவளைப் போல் இருந்தாள். அதற்க்குள் பஸ் எடுத்து விட்டனர். அவர்கள் இருவரும் ஏறிக்கொள்ள,
அஞ்சலியும் அதில் போய் ஏறினாள். சொல்லப் போனால் அஞ்சலிக்கும், அர்ஜூனுக்கும் ஒரே சீட்டையும், ரவிக்கு அதற்க்குப் பின் சீட்டையும் புக் செய்திருந்தார் மகேஷ்.
டிக்கட் செக் செய்யும் வரை இருவரும் ஒரே சீட்டில் அமர்ந்திருக்கத்தான் வேண்டும். அதற்க்குப் பிறகு யாரேனும் வராமல் போனாலோ, அல்லது யாரிடம் கேட்டோ அவளை மாற்றி உட்கார வைக்க முடியும். ஆனால், அதுவரை அஞ்சலிக்கு பொறுக்க வேண்டுமே.
அவனை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயல்பட்டாள். அவன் அருகில் வேறு வழியில்லாமல் உட்காரும் முன்னே அவனை முறைத்தே கொன்று விடுவது போல் பார்த்தாள்.
“சரி, பார்த்து போயிட்டு வாங்க. அஞ்சலியப் பாத்துக்கோங்க.” என்று மகேஷ் அக்கறை மழையைப் பொழிய, அடுத்த நிமிடம் கிளம்பிவிட்டது பேருந்து.
அவளின் நேரமோ என்னவோ, பஸ்ஸில் அதிகமாக பயணித்தது ஆண்களே. குடும்பத்தோடு பயணித்தவர்கள் மிகக் குறைவே. அதிலும் சிலர் கைக்குழந்தையோடு பயணிக்க, மாற்றி உட்காரச் சொல்ல ஏதுவாக இல்லாமல் வேறு வழியுமின்றி அர்ஜூன் அப்படியே அமர்ந்தாக வேண்டியதாயிற்று.
அவளோ, அவனை உரசாதபடி ஜன்னலை உரசிக்கொண்டு ஓரமாய் தான் கொண்டு வந்திருந்த வுல்லன் பெட்சீட்டை போர்த்திக்கொண்டு, சாய்ந்து படுக்கும் வசதி கொண்ட சீட்டை சற்று தணுவாக்கி அதை அட்ஜஸ்ட் செய்து அவனைப் பார்க்காமல் படுத்துக்கொண்டாள்.
அர்ஜூனுக்கு மிகவும் சங்கடமாகிப் போனது. அஞ்சலி ஏன் இவ்வளவு கோபமாய் இருக்கிறாள் தன் மேல்.? என்று தோன்றியது. அது என்னவென்று கேட்கலாம் என்று நினைத்தால், அவளோ அவன் முகத்தையே பார்க்க விரும்பாதவளாய் ஓரமாய்ப் போய் படுத்துக்கொண்டாள். அதற்க்கு மேல் அவனால் என்ன செய்ய முடியும்.
அவனும், அந்த சீட்டை அர்ஜஸ்ட் செய்து தணுவாக்கி அப்படியே சாய்ந்து படுத்தான். இதையெல்லாம் பின்னாலிருந்து கவனித்த ரவி, மெல்ல முன்னே வந்து அவன் காதருகே பேசினான்.
“என்ன அர்ஜூன், இவ உன் மேல கழுத்து அளவுக்கு கோபத்துல இருக்கா போலிருக்கே.? நீ பேசணும்னு நினைச்சா கூட இனி உனக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டான்னு நினைக்கிறேன்.?” என்றான் ரவி.
“டேய்.. நானே கடுப்புல இருக்கேன். தயவு செய்து போய்த் தூங்கற வேலையைப் பாரு. விட்டா உன்னைத்தான் அடிப்பேன். பேசாம போயிடு.” என்று அவள் மேல் உள்ள எரிச்சலை அவன் மேல் காட்டினான் அர்ஜூன்.
“சரிடாப்பா.. நான் என் வேலையைப் பார்க்கறேன். உங்க நடுவுல தேவையில்லாம நான் வந்து அடி வாங்குவானேன்.” என்று புலம்பியபடி அவனும் படுத்து விட்டான்.
இவள் செய்த செயல்களில் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று கண் விழித்து அவள் முறைக்க, அப்படியே அவன் கண்ணை இறுக மூடிக்கொண்டான்.
அதைப் பார்த்த அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சரியென்று அப்படியே படுத்து விட்டாள். பேருந்தே உறங்கிக்கொண்டிருந்தது. இரவு மணி 2 இருக்கும். பஸ் டிரைவர் ஒரு உணவகத்தில் பேருந்தை நிறுத்தினார்.
தூக்கக் கலக்கத்தில் இருந்த பலர் எழுந்து சிறுநீர் கழிக்கச் சென்றனர். திடீரென்று பஸ் நின்றதால் எழுந்த அஞ்சலி அருகில் அர்ஜூனும், பின்னால் இருந்த ரவியும் சீட்டில் இல்லை என்றதும், அவளும் இறங்கிச் சென்றாள்.
காடு போல் இருந்தது அந்த இடம். அந்த இருட்டில் அவர்களைத் தேட முடியவில்லை. அங்கு தாங்கள் வந்த பேருந்தைப் போலவே பல பேருந்துகள் இருந்ததைப் பார்த்தாள். அவளும் அந்த உணவகத்தில் இருந்த பாத்ரூமிற்க்குச் சென்றாள்.
அது ஒதுக்குப்புறமான இடமாக இருந்ததால், அவளுக்கு அங்கு செல்லவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், அவளுக்கு அன்று செல்ல வேண்டும் என்று இருந்தது. அடக்க முடியவில்லை. சென்றாள். அங்கு ஏற்கனவே சில பெண்கள் சென்று வந்தனர்.
அந்த தைரியத்தில் கையில் உள்ள போனின் டார்ச்சை ஆன் செய்து சென்றுவிட்டு வந்தாள். அவள் திரும்பி வரும் போது, அனைவரும் சென்று விட்டனர். சில பஸ்கள் எடுத்து விட்டனர். இவள் அவசரத்திலும், கோபத்திலும் தான் வந்த பஸ்ஸின் நம்பரைக் கூட தெரிந்துகொள்ளவில்லை.
அங்கிருந்து பார்க்கும் போது, அது ஒரு வெள்ளை நிற வண்டி என்று மட்டும் பார்த்திருந்தாள். இப்போது பார்த்தால் அங்கே அந்த நிற பேருந்து எதுவுமே இல்லை. அவளுக்கு உள்ளூர திக்கென்றது. நடு இரவு இரண்டு மணி. பார்ப்பதற்க்கு பொட்டல் காடு போன்ற இடத்தில் தனியாக ஒரு பெண் என்றால், எப்படி இருக்கும்.?
தனியார் பேருந்தே என்றாலும், எப்பொழுதும் பெரிய பெரிய உணகங்களிலேயே வண்டியை நிறுத்துவர். ஆனால், ஏனோ இன்று இங்குதான் கொண்டு வந்து வண்டியை நிறுத்த வேண்டுமா.? எல்லாம் தன் நேரம் என்று நொந்து கொண்டாள்.
இந்த அர்ஜூனும், ரவியும் எங்குதான் போனார்கள்.? மாமா, எதை நம்பி இவர்கள் இருவருடனும் தன்னை அனுப்பி வைத்தார் என்று தெரியவில்லை. இவர்களாவது பொறுப்பாய் தன்னைக் கூட்டிக்கொண்டு போகக் கூடாதா.? என்று பலவாறு தவிப்புடன் யோசித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு இரண்டு ஆண்கள் சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே ஒதுக்குப்புறம் வருவதைக் கண்டாள். அவளுக்கு அப்போதே உள்ளூர பயம் உண்டானது. அவர்களோ அவள் தனியாய் நிற்பதைப் பார்த்தவாறு திரும்பித் திரும்பி பார்த்தபடி அவளை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அவளுக்கு அங்கிருந்து ஓடிவிடலாம் என்று தோன்றியது. ஆனால், அப்படி ஓடும் போது இழுத்துப் பிடித்து வாயைப் பொத்தி தன்னை.. ... ..... அய்யோ அம்மா நினைத்தாலே உயிரே போய்விடும் போலிருந்தது அவளுக்கு. அதற்க்குள் ஒரு குரல் அவள் பேரைச் சொன்னவாறு வருவதைக் கண்டாள்.
அந்த சின்ன வெளிச்சம் தன்னை நோக்கித்தான் வந்தது. அந்தக் குரல் அர்ஜூனுடையது. “அஞ்சலி, எங்க போன.? எல்லாரும் பஸ்ஸூல ஏறியாச்சு. வா, போகலாம்.” என்று கூப்பிட,
அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது. ஓடிச்சென்று அவன் மேல் சாய்ந்து, “எங்கே சென்றாய்.? என்னை இப்படித்தான் விட்டுச் செல்வாயா.?” என்று கேட்கணும் போல் தோன்றியது அஞ்சலிக்கு.
ஆனால், அதை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், எப்பொழுதும் போல் சாதாரணமாகவே வந்தாள். அங்கே வந்த இருவரும் அவர்களாக ஒதுக்குப்புறத்துக்கு சென்று விட்டனர். எதுவும் பேசாமல் அர்ஜூனோடு சென்றவள், பஸ்ஸூக்கு அருகில் வந்ததும், அவனைத் தாண்டி வந்து பேருந்தில் ஏறினாள். அவள் ஏறும் போது,
“ஏம்மா, நீங்க மட்டும் எங்க போனீங்க.? நாங்க எல்லாரும் வந்துட்டாங்கன்னு நினைச்சோம். நல்ல வேளை, அந்தப் பையன் தான் சொன்னான். இல்லைன்னா வண்டி கிளம்பிருக்கும். உங்களுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.?” என்று கன்னடத்தில் அவர் திட்ட, அப்போதுதான் அர்ஜூன் அவளுக்காகக் காத்திருந்ததை அறிந்தாள்.
உள்ளே சென்று தனது சீட்டில் அமர்ந்தாள். உடனே பின்னாலிருந்த ரவி, “அம்மா தாயே, எங்க போன.? உன்னைக் காணோம்னு ஒரே பயம். அவன் சுத்தியும் போய் தேடாத இடமே இல்ல. இதுல எனக்கு ரெண்டு திட்டு வேற. அப்படி எங்க தான் போன.?” என்றான்.
“இல்ல, பாத்ரூம் தான் போனேன். அங்க ரொம்ப இருட்டா இருந்துச்சு. யாருமே இல்ல. தூரத்துல இருந்து பார்க்கும் போது பஸ்ஸயும் காணோம். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுட்டிருந்தேன்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அர்ஜூன் வந்து நின்றான்.
“அந்த டைம் தான் நான் போனேன் டா. விளக்கம் போதுமா.? பேசாம தூங்கு.” என்றான் அர்ஜூன்.
“ஆமா, இனி எங்க தூங்கறது.? இவ பண்ண அலப்பறைல தூக்கமே போச்சு.” என்று பின்னாலிருந்து ரவி புலம்பிக்கொண்டிருந்தான்.
அர்ஜூன் அருகில் அமர்ந்ததும், “ஸாரி. நான் கண் முழிச்சுப் பார்க்கும் போது உங்க ரெண்டு பேரையுமே காணோம். வெளியிலயும் பார்த்தேன். அப்பவும் உங்களைத் தெரியல. பாத்ரூம் போகணும்னு தான் போனேன்.” என்றாள் அஞ்சலி.
“சரி, பரவால்ல விடு. தூங்கு. காலைல பேசிக்கலாம்.” என்று அவன் அதோடு தன் பேச்சை முடித்துக்கொள்ள, அவளுக்குக் கோபமாய் வந்தது.
தான் என்ன சொல்ல வருகிறோம் என்று எல்லாமே தெரிந்து விட்டானோ.? எதையுமே கேட்க மாட்டேன் என்கிறான். இருக்கட்டும். ஹூம்ம்... தான் எதுவுமே பேசியிருக்கக் கூடாது. இது தேவை தான் தனக்கு என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு திரும்பவும் போர்வையை இழுத்துப் போத்தியபடி ஜன்னலோரம் ஒட்டிக்கொண்டே படுத்தாள்.
இவை எல்லாவற்றையும் அர்ஜூன் பார்த்தபடிதான் இருந்தான். தான், வெளியே சென்று வருவதற்க்குள் அஞ்சலியைக் காணவில்லை என்றதும் அவன் பரிதவித்தான். எங்கே போனாள், என்று பஸ்ஸிலிருந்து இறங்கி நாலாபுறமும் தேடினான்.
அந்த இருட்டான இடம் மட்டும் தான் அவனுக்கு அப்போது தோன்றவில்லையோ தவிர மீதி அனைத்து இடங்களிலும் பார்த்தான். கடைசியாக தான் அவனுக்கு அந்த ஒதுக்குப்புறமான கழிப்பிடம் நினைவுக்கு வர, அங்கே சென்றபோது தான் அஞ்சலி திக்குமுக்காடி நின்று கொண்டிருந்தாள்.
அவள் பயத்தோடு நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், ஓடிச் சென்று அவளைக் கட்டிப் பிடித்து “நான் இருக்கிறேன் கண்மணி. பயப்படாதே...” என்று அவளை ஆரத்தழுவி சொல்ல வேண்டும் போல் தோன்றியது.
ஆனால், அது முடியாததால் வாய் வார்த்தைகள் கூறி அவளை அழைத்துச் சென்றான். அவள் பேருந்துக்கு முன் செல்லும் போது கூட, அவளின் திமிரை நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான் அர்ஜூன்.
இப்போது கூட அவளிடம், அளவாகப் பேசியது அவளிடம் பேசக்கூடாது என்பதற்க்காக அல்ல, அவள் பேச்சில் ஏற்பட்ட தயக்கத்தை உணர்ந்தவன், அவளை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம் என்பதற்க்காகவே.
இப்படியே இருவரும் மாறி, மாறி மனதில் இருப்பதை ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொள்ளாமலே இந்தக் காதல் இரண்டு வருடங்களாய் போய்க்கொண்டிருக்க, இதற்க்கு எப்பொழுது தான் தீர்வு என்று யாராவது ஒருவர் மனது வைத்தால் தான் முடியும். யார் மனது வைப்பது.?
(தொடரும்...)