பாகம் – 13
இடம்: அர்ஜூன் வீடு
நேரம்: மனசாட்சியோடு மல்லுக்கட்டும் நேரம்
அம்மு மாதிரி ஒரு க்யூட் பொண்டாட்டி, என் சாயலில் லயா மாதிரி குட்டிக்குழந்தைன்னு இருந்தா, வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்?
ஆமா, ஏன் அம்மு மாதிரி? அவளே என் பொண்டாட்டியா வந்தா என் வாழ்க்கை நல்லாயிருக்கும். அவள் இங்கில்லாத தனிமைதான் என் கண்ணீருக்கு காரணம் என்று புரிந்தது.
என்னதான் அவளை நட்பு வட்டத்துக்குள் நிறுத்தி வைத்துப் பார்ப்பதாய் நடித்தாலும் அவமேல எனக்கு காதல் மட்டும்தான் இருக்கு.
யெஸ் ஐ லவ் ஹெர்.
கோயிலில் என்னவோ அவதான் என் காலில் விழுந்தாள். ஆனா சரணாகதி ஆனது நாந்தான்.
மான் குட்டி மாதிரி மருள மருள விழிக்கும் போது, அள்ளி எடுத்து முத்தம் குடுக்க துடிச்சேன். அந்த கண்களில் காதல் நிரம்பி வழிஞ்சது.
ஆனா, கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாள். அப்படியே அவள் கல்யாணம் ஆனவளா இருந்தாலும், எதாவது காரணத்தால், அந்தபந்தத்தை விட்டு பிரிஞ்சு வந்திருக்கனும். புருஷன் கூடவும் வாழ்ந்திட்டு என் கூடவும் பழகுற அளவுக்கு என் அம்மு கெட்ட பொண்ணு இல்ல. அவகிட்ட கள்ளத்தனம் இல்லை. என்மேல் அவளுக்கிருப்பது காதல் மட்டுமே, காமமல்ல.
அமுதினியைப் பார்த்தால், எங்கம்மாவுக்கும் பிடிக்கும். அப்பாவைச் சமாளிக்கிறது அம்மாவோட வேலை. ஆனா ஏற்கனவே அவளுக்கு கல்யாணம் ஆனதை எப்படி எடுத்துக்குவாங்க?’ என நான் யோசிக்கும்போதே,
என் மனசாட்சி, ‘’அடேய் அர்ஜூனா, இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தால்தான் என்ன? கற்புங்கிறது உடம்புக்கு மட்டுமல்ல, மனசுக்கும் இருக்கு. இன்னைய தேதில 100ல 99 சதவீத ஆணோ, பெண்ணோ யாரோ ஒருத்தரை மனசார நேசிச்சிருப்பாங்க. காதலிக்கிற சமயம், அடுத்து எப்படியெல்லாம் வாழப்போறோம்ன்னு யோசிக்காமலா இருப்பாங்க. அதில் அந்தர வாழ்க்கை பத்தியும் பேசிருப்பாங்க தான!
அந்த காதல் கைகூடாமல் போயிருக்கும். பிறகு காயத்தை ஆத்திக்கிட்டு மறுபடியும் அவங்களுக்கு கிடைச்ச துணை மேல அதே காதலைக் காட்டறாங்க. அது தப்பா?
அதுவும் பொண்ணுங்க நிலைமை இன்னும் பாவம். மனதால் ஒருவனை விரும்பிட்டு, பெத்தவங்களுக்காகவோ, மத்த காரணங்களுக்காகவோ, புடிச்சோ புடிக்காமலோ, வேறு ஒருவரை திருமணம் பண்ணிக்கறாங்க.
ஏன் காதலிச்சவனையே கைப்பிடிச்சாலும், அவன் பொண்டாட்டியை கொடுமைப்படுத்தறதில்லையா? காதல் திருமணம் என்ற பெயரிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்களே!
பொண்ணுங்களை காயப்படுத்த அடிச்சு துன்புறுத்தனும்ன்னு இல்லை. சொல்லக்கூடாத ஒத்தச் சொல் போதும். ஆயுசுக்கும் அதை மறக்க முடியாமல் துடிப்பாங்க.
ஏதோ ஒரு காரணத்தால் முதல் பந்தம் உடையும் போது, இன்னோரு பந்தத்துக்குள் நேர்மையா போக ஆசைப்படுவதில் எந்த குற்றமும் இல்லையே?
பசிக்கற மாதிரி தூங்க மாதிரி, யாராவது நம்ம மேல அன்பு காட்டனும்ன்னு எதிர்பார்க்கறது அவங்க இல்ல. அந்த உடம்பில் இருக்கற ஹார்மோன்கள்தான். ஒரு பொண்ணோட அந்தரங்க இடத்தை, அவள் விருப்பத்தோடோ, விருப்பமில்லாமலோ தொட்டதால் மட்டும், அவள் கற்பு இழந்தவள் என்று அர்த்தமல்ல.
சில விசயங்களை அம்மாகிட்ட பகிர்ந்துகொள்ளலாம். என்னதான் அன்பு இருந்தாலும் அதே விசயத்தை அப்பாக்கிட்ட சொல்ல முடியாது. அதே மாதிரித்தான். ஒரு பொண்ணுக்கு ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ‘கணவன்’ என்கிற இடத்துக்கு ஈடாகாது.
நீங்கெல்லாம் முகநூலில் வெட்டியா புரட்சி செய்வீங்க. ஆனா நிஜ வாழ்க்கையில், ஒரு சிங்கிள் லேடியை திருமணம் செய்ய யோசிப்பீங்க? அம்மாஅப்பா ஒத்துக்குவாங்களா? சொந்தக்காரங்க என்ன சொல்வாங்க? ஊர் என்ன சொல்லும்ன்னு நீங்களாவே ஒரு முகமூடியை வலுக்கட்டாயமா போட்டுக்குவீங்க?
அது மத்தவங்களைப் பத்திய சிந்தனையில்லை. உங்களுடைய இயலாமை, சுருக்கமா சொல்லனும்ன்னா கோழைத்தனம்.
ஏன், பொண்ணுங்க கூட, சிங்கிளா இருக்கற பொண்ணுங்க மனநிலையைப் புரிஞ்சுக்கறது இல்ல. உங்களைப் பொறுத்தவரை, சிங்கிலா இருக்கற பொண்ணுக்கு நீங்களா வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைச்சு, புரட்சி பண்ணிட்டோம்ன்னு பேர் வாங்கனும்.
அதுவே, அந்தப்பொண்ணே, ‘எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பறேன்னு சொன்னா’, அலையறான்னு சொல்வீங்க.
ஒரு பொண்ணு, திருமண பந்தத்தை உடைச்சிட்டு வெளியில் வந்திருக்கான்னா, எந்தளவு அதில் காயப்பட்டிருப்பாள்? அந்த முடிவு எடுக்கறதுக்கு எத்தனையாயிரம் முறை யோசிச்சிருப்பாள்? திரும்பவும் அவள், பாதுகாப்புக்காகவோ இல்லை காதலுக்காகவோ இன்னோரு துணையை தேடுறப்ப, அதைவிட அதிகமா சிந்திச்சுத்தான் முடிவு எடுப்பாள்.
ஆம்பள எத்தனை வயசானாலும், எத்தனை புள்ளை இருந்தாலும், ஏன் முதல் பொண்டாட்டிக்கு தெரிஞ்சும் தெரியாமலும் இன்னோரு கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா ஒரு பொண்ணுக்கு மறுபடியும் காதலுணர்வு வந்தா ஆயிரம் குறை சொல்வீங்க, அதான?
இன்னும் கணவனை இழந்த பெண்ணை, சகுன தடையா பார்க்கிறதும், நல்ல காரியங்களில் தள்ளி வைக்கிறதும்ன்னு அவங்க நிலையை குத்திக்காட்டிட்டு தான இருக்கீங்க?
ஏன் தமிழ் சினிமால கூட, துணை இல்லாத பெண்ணை நேசிக்கறவனை, ரொம்ப நல்லவனாட்டம் காட்டுவீங்க. அதே பொண்ணு, ஹூரோ மேல விருப்பம் இருப்பதாகச் சொன்னால், அவளை வில்லியாகத்தான காட்சிப்படுத்துவீங்க?
நல்லாயிருக்குடா உங்க நியாயம். நாசமா போங்க!’’ என்று கேவலமாகத் திட்டியது.
‘’ஸ்ஸ்ஸ்ப்பா… யோவ் மனசாட்சி என்னை விடு மேன். அமுதினியை எனக்கு புடிச்சிருக்கு. எங்க வீட்டை எதிர்த்தாவது அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்படியே புருஷன் இருந்தாலும் அவனைப் போட்டுத் தள்ளிட்டாவது அம்முவைத் தூக்கறேன்.
அதுக்கு முன்னாடி அவ வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். பின்னாளில் எதார்த்தமாக நான் எதாவது சொல்லும் போது, பழைய வாழ்க்கை நியாபகம் வந்து அவ காயப்படகூடாதில்ல, அதான்.
எனக்கு அமுதினி. அவளுக்கு நான், பிக்ஸ் ஆகிட்டேன். எங்கம்மாவுக்கு இனி அவதான் மருமகள். ’’
சில புதிர்களை அவிழ்க்க, அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அமைதியாக இருந்தாலே போதும். காலம் காட்டிக் கொடுக்கும்.
காதல் வளரும்