9.
“ பின்தொடர்ந்தா???? அது சரி டேய்!! இந்த ஊருக்கு பேருந்து காலையில 5.30 மணிக்கு வரும். இங்க இருந்து போகணும்னா மாலையில 5.30 மணிக்குத்தான் போக முடியும்.
இதுல இந்த பொண்ணு கார்ல போயிடும் நாம எப்படி பின்தொடர்ந்து போறதாம்???” என கிஷோர் கேட்க
“ ஹ்ம்ம் நீ சொல்றது சரிதான். எதாவது யோசனை பண்ணுவோம்” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கும் போது
பண்ணையாரின் வீட்டில் வேலைசெய்யும் வேலு இவர்களை நோக்கி வந்தான்.
“ ஐயா” என வேலு ஹர்ஷாவை அழைக்க
“ என்ன வேலு??”
“ உங்க ரெண்டு பேரைத்தானுக தேடிகிட்டு வந்தேன்”
“ எதுக்கு ??”
“ சாமி அண்ணே காலை சாப்பாட்டை உங்க ரெண்டு பேருக்கும் குடுத்துவிட்டாக. அங்குன்ன வீடு பூட்டி இருந்துச்சு சரின்னு உங்க ரெண்டு பேரையும் தேடிட்டு இருந்தேன்.பார்த்தா இங்குன்ன தோட்டத்துல இருக்கீங்க.”
“ ஓ!!! அப்படியா. சரி வேலு இந்தாங்க வீட்டு சாவி. நீங்க முன்னாடி போயி சாப்பாட்டை எல்லாம் டேபிள் மேல வச்சுட்டு போங்க. நாங்க போட்டு சாப்பிட்டுக்குறோம் ” என ஹர்ஷா கூறி வேலுவை அனுப்பிவைத்தான்.
வேலு சென்ற பின்,
“ என்னடா மச்சி சாப்பாட்டை கொடுத்துவிட்டுடாங்க??” என கிஷோர் வினவ
“ ஏன்டா நடுராத்திரி வீட்டுக்குள்ள புகுந்ததுக்கு நமக்கு சாப்பாடு போடுறதே பெருசு. இதுல துரைக்கு பண்ணையார் வீட்டுக்கு போய் சாப்பிட முடியலன்னு கவலை ஹ்ம்ம்” என ஹர்ஷா கூற,
“ என்னடா இப்படி கேட்குற??”
“ பின்ன என்னடா நானே எப்படி ஹாஸ்பிட்டலுக்கு போறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தா நீ சாப்பாட்டை ஏன் கொடுத்துவிட்டுடாங்கன்னு கேட்குற.” என ஹர்ஷா கூறினான்.
“ அதுக்கு நான் ஒரு யோசனை வச்சுருக்கேன்”
“ என்னது?? வனிதா போற காரோட டிக்கில நாம மறைஞ்சு இருந்து போலாம் அதானே"
“ எப்பிடி மச்சி இவ்வளவு சரியா என்னை புரிஞ்சு வச்சுருக்க”
“ உன்னை பத்தியும் நல்லா தெரியும். நீ எப்படி யோசிப்பன்னும் தெரியும். அப்புறம் கிச்சா எனக்கு ஒரு உதவி செய்றியா??”
“ என்னதுடா???”
“ கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாம வா.”
‘ ஆமா நாம பேசாம வந்துட்டா மட்டும் இவனுக்கு யோசனை வந்துருமாக்கும்’ என கிஷோர் மனதில் எண்ணிக்கொண்டு வர
“ எனக்கு யோசனை வருதோ இல்லையோ தலைவலி வராது” என ஹர்ஷா கூறினான்.
‘ ஆத்தி நாம மனசில நினைச்சதுக்கு பதில் சொல்றான்’ என எண்ணி கொண்டு கிஷோர் அமைதியாக வர இருவரும் தோட்டத்து வீட்டை நோக்கி நடந்தனர்.
வேலு சாப்பாட்டை வைத்துவிட்டு கிளம்புவதற்காக வீட்டின் வாசலுக்கு வரும் போது நண்பர்கள் இருவரும் வீட்டை அடைந்தனர்.
ஹர்ஷா மற்றும் கிஷோரை கவனித்த வேலு,
“ ஐயா சாப்பாட்டை உள்ளாற வச்சுட்டேன்க”.
“ சரி வேலு ரொம்ப நன்றி. நீங்க கிளம்புங்க” என ஹர்ஷா கூற,
“ சரிங்க ஐயா” என வேலு கூறி கிளம்பும்போது
“ வேலு ஒரு நிமிஷம் நில்லுங்க” என ஹர்ஷா அவனை நிறுத்தினான்.
“ என்னங்கய்யா???”
“ எங்களுக்கு ஒரு உதவி செய்ய முடியுமா??”
“ என்ன உதவி??.....” என வேலு சற்று தயங்க
“ ஒன்னும் பெருசா எல்லாம் இல்ல. எங்களுக்கு சில பொருள்கள் வாங்கணும். அதான் பக்கத்தூருக்கு போலாம்னு நினைச்சோம்.
ஆனா இங்கதான் பஸ் சரியான நேரத்துக்கு இல்லையே. அதான் எதாவது வண்டி எதுவும் கிடைக்குமா இங்க.”
“ வண்டியா????...... இங்க பண்ணையார் ஐயா கிட்டையே இருக்குங்களே நீங்க ஐயாட்டையே கேட்டு பாருங்களேன்.
ஏன்னா இந்த ஊருல ஒரு ரெண்டு மூணு பேருகிட்டத்தான் வண்டி இருக்கு அதான் சொல்றேன்.”
“ பண்ணையார்ட்டையா?????... என ஹர்ஷா சற்று தயங்க
“ ஆமா அப்பிடியே நாம போய் பண்ணையார்ட்ட வண்டி தாங்கன்னு கேட்டவுடன் இந்ததாங்கப்பா சாவி பார்த்து போயிட்டு வாங்கன்னு சொல்லி டாட்டா காட்டி அனுப்பி வைக்க போறாரு” என கிஷோர் ஹர்ஷாவின் காதில் முணுமுணுத்தான்.
ஹர்ஷா கிஷோரை முறைத்துவிட்டு “ இல்ல ஏற்கனவே சார் எங்களுக்கு இங்க தங்குறதுக்கு சாப்டுறதுக்குன்னு நிறைய உதவி செஞ்சுருக்காங்க.
அதான் வண்டி தாங்கன்னு கேட்க சங்கடமா இருக்கு. நீங்க வேற யார்டையாவது கேட்டு ஏற்பாடு செய்யுங்களே நாங்க அதுக்கான பணத்தை கொடுத்துடுறோம்” என கூறினான்.
“ ஓ இன்னைக்கே வேணும்ங்களா வண்டி??”
“ ஆமா. இன்னைக்கு சாயந்தரம் ஒரு நாலு மணிக்குள்ள கிடைச்சா நல்லது”.
“ சரிங்கய்யா. முயற்சி செய்து பார்க்குறேன் அப்ப நான் போயிட்டு வரேன்க” என கூறி வேலு சென்றுவிட்டான்.
அதன் பின் ஹர்ஷாவும் கிஷோரும் வீட்டிற்குள் வந்து உணவை உண்டுகொண்டிருக்கும் போது கிஷோர் ஹர்ஷாவிடம்,
“ மச்சி எனக்கு ஒரு சந்தேகம்”
“ என்ன கிச்சா?”
“ இல்ல வனிதா பண்ணையார் பார்த்துருக்க மாப்பிள்ளையை அவளோட முழு சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணப்போறதா சொன்னா.
இதுல கதிர் சொன்னது பொய்யா இருந்தாலும் சரி, இல்ல வனிதா கதிரை ஏமாத்தி இருந்தாலும் சரி. இது அவுங்க சம்பந்தம் பட்டது .
நாம இங்க வந்தது வனிதா என்ன ஆனா அப்பிடின்றத கண்டுபிடிக்க. அதான் வனிதா நல்ல இருக்காளே அப்புறம் எதுக்கு நாம ஹாஸ்பிட்டலுக்கு அவளை பின்தொடர்ந்து போகணும்” என் கிஷோர் கூற
“ சரி இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு”
“ இல்ல மச்சி நாம ஏன் மறுபடியும் வனிதாகிட்ட பேச முயற்சி பண்ண கூடாது. ஒருவேளை கதிர பத்தி சொன்னால் அவளோடபதில் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலாம்.
அதை வைச்சு பொய் சொன்னது யாரு ??? ஏமாத்துறது யாருன்னு?? கண்டுபிடிச்சுடலாம்”
“ அதுவும் சரிதான். பார்ப்போம் வனிதாவை ஹாஸ்பிட்டல் போறதுக்கு முன்னாடி சந்திக்க முடியுமான்னு” என ஹர்ஷா கூறினான்.
வனிதா வீட்டிற்கு வெளியே வருகிறாளா என மதியம் 3 மணி வரை பண்ணையார் வீட்டு வாசலை ஹர்ஷாவும் கிஷோரும் கவனித்துக்கொண்டே இருந்தனர்.
3 மணிக்கு மேல் ஹர்ஷாவை தேடிவந்த வேலு
“ ஐயா” என அழைக்க
“ என்ன வேலு???”
“ வண்டி கேட்டுருந்திகளே……”
“ ஆமா வண்டி கிடைச்சுருச்சா????”
“ ஆமாங்க. இந்தாங்க வண்டி சாவி வண்டியை பெரிய கேட்டுக்கு வெளிய நிப்பாட்டிருக்கேனுங்க “
“ ரொம்ப நன்றி வேலு, வண்டி வாடகை எவ்வளவு என்னன்னு சொன்னா இப்போவே கொடுத்துடுறேன்” என வண்டி சாவியை பெற்றுக்கொண்டே ஹர்ஷா கூற
“ காசு எல்லாம் வேணாமுங்க. இந்த வண்டி பட்டாளத்துக்காரரோடது. நீங்க பண்ணையார் ஐயா வீட்டுல தங்கி இருக்கீங்கன்னு சொன்னவுடன் வண்டி சாவிய எடுத்து கைல கொடுத்துட்டாரு. வண்டிய நாளைக்கு காலைல குடுத்தா போதும்னு சொன்னாருங்க”
“ அது யாரு பட்டாளத்துக்காரரு????” என் கிஷோர் வினவ
“ அவரு பேரு சதாசிவம்ங்க. பண்ணையாரும் இவரும் சின்ன பிள்ளைல இருந்தே நண்பர்களாம். அதோட ரெண்டு பேரும் சம்பந்தம் பண்ணிக்குறதா இருந்துச்சு. ஆனா……”என நிறுத்திவிட்டு வேலு எதோ யோசிக்க,
“ என்ன வேலு ஆனா….. சம்பந்தம் பண்ணிக்கலையா ரெண்டு பேரும்???” என ஹர்ஷா கேட்க
“ ஹ்ம்ம்ம் ஆமாங்க நிச்சயம் தேதி வரை முடிவுபண்ணி நின்றுடுச்சு”..
“ எதனால நின்றுடுச்சு???”
“ எங்க பண்ணையார் ஐயாவுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணுங்க. எங்க சின்ன ஐயா பேரு நிலவரசன். எங்க சின்ன அம்மா பேரு வனிதா.
சின்ன ஐயாவுக்கு பட்டாளத்துக்காரரோட பொண்ணு மஞ்சரிக்கும் கல்யாணம் பண்ணனும்னு பெரியவங்க பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கும்போதுதான், சின்ன ஐயா மயிலரசின்னு ஒரு பொண்ணை விரும்புறது தெரிய வந்துச்சு. அதோட இந்த சம்பந்தம் நின்றுடுச்சு”.
“ மயிலரசியா???? இந்த ஒற்றை கால் மண்டபத்துல தற்கொலை பண்ணிகிட்டாத சொன்னாங்களே அந்த பொண்ணா???” என ஹர்ஷா வினவ
“ ஹ்ம்ம் அதே பொண்ணுதாங்க. மூணு வருசத்துக்கு முன்னாடி திடீர்னு ஒரு நாள் தற்கொலை பண்ணிக்குச்சி. ஏன் பண்ணிச்சுன்னு யாருக்கும் தெரியல.
அந்த பொண்ணு செத்ததோட சின்ன ஐயாவும் மனநிலை சரி இல்லாம ஆகிட்டாங்க. அதோட எங்க ஐயாவும் ஒடைஞ்சுட்டாரு.
அதோட அந்த பொண்ணு மஞ்சரி கட்டுனா எங்க சின்ன ஐயாவதான் கட்டுவேன்னு சொல்லி இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க.
மூணு வருசத்துக்கு அப்புறம் இப்போ வனிதாம்மா கல்யாணம் ஏற்பாடு நடக்க ஆரம்பிச்சவுடன்தான் ஐயா முகத்துல ஒரு தெளிச்சி தெரியுது.
அந்த மயிலரசி பொண்ணு மட்டும் எங்க சின்ன ஐயா வாழ்க்கைல வராம போயிருந்தா எல்லாரோட வாழ்க்கையும் நல்லா இருந்துருக்கும்” என வேலு கூறிக்கொண்டிருக்கையில்,
“ டேய் வேலு நீ இங்குனதான் இருக்கியா சாமிக்கண்ணு அண்ணே உன்னைய தென்னந்தோப்புக்கு லோடு ஏத்த வரசொன்னாரு வெரசா வா” என சற்று தொலைவில் இருந்து கந்தன் கத்தினான்.
“ இதோ வந்துட்டேன் அண்ணே” என வேலு உரக்க கூறிவிட்டு
“ சரிங்கய்யா ரொம்ப நேரம் நானும் பேசிட்டு இருந்துட்டேன். போயிட்டு வரேங்க” என ஹர்ஷா மற்றும் கிஷோரிடம் வேலு விடைபெற்றான்.
வேலு சென்றபின் யோசனையில் இருந்த ஹர்ஷாவிடம்
“ என்ன மச்சி யோசிக்குற???” என கிஷோர் வினவ
“ இல்ல இந்த மயிலரசி இறப்புல எனக்கு சந்தேகமா இருக்கு”.
“ எதவச்சு சந்தேகப்படுறடா???”
“ சரியான காரணம் தோன மாட்டேங்குது. ஆனா இதுவரைக்கும் கேட்ட தகவல்களை வச்சு பார்குறப்போ சந்தேகம் வருது”.
“ அத அப்புறம் பார்க்கலாம். இப்போவே மணி 4.30 வனிதா எப்பிடியும் கிளம்பி வெளிய வர நேரம் தானே.
இப்போ போய் நாம சந்திக்க முடியுதான்னு பார்க்கலாம்” என கூறி கிஷோர் ஹர்ஷாவை அழைத்துக்கொண்டு பண்ணையாரின் வீட்டின் வாசலுக்கு செல்வதற்கும், வனிதா கிளம்பி வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
வனிதாவை பார்த்த ஹர்ஷா அவளை நெருங்கி
“ Excuse me. Miss vanitha..”என அழைக்க
பக்கத்தில் கேட்ட குரலில் திரும்பி ஹர்ஷாவை ஆராயும் பார்வையுடன் நோக்கி “ யார் நீங்க???” வனிதா என வினவ.
“ Miss vanitha நாங்க இங்க தோட்டத்துவீட்டுல தங்கி இருக்கோம். உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.` நான் கதிரவன்……” என ஹர்ஷா கூறவரையில்,
“ சாரி கதிரவன் எனக்கு இப்போ உங்ககிட்ட பேச நேரம் இல்ல. நான் வெளில கிளம்பிட்டு இருக்கிறேன் அப்புறம் பேசலாம் ” என அவசரமாக கூறிவிட்டு காரில் ஏறி வனிதா செல்ல,
“ டேய் என்னது கதிரவன் பேர கேட்டவுடன் அதிர்ச்சியா பார்ப்பான்னு பார்த்தா. இந்த பொண்ணு உன்னைய கதிரவன்னு சொல்லுது. இப்போ என்ன செய்றதுடா???” என கிஷோர் வினவ
“ வேற என்ன செய்றது. பின்தொடர்ந்து போலாம் வா” என ஹர்ஷா கூறி.
ஹர்ஷாவும் கிஷோரும் வனிதாவை வண்டியில் பின்தொடர்ந்தனர்.
ஹர்ஷாவின் சந்தேகம் சரியானதா???????
இனி???????.......